Saturday, March 7, 2020

கம்பராமாயணம் 57




மராமரப் படலம்


3865.
'ஏகவேண்டும் இந் நெறி' என
   இனிது கொண்டு ஏகி
'மாகம் நீண்டன குறுகிட
   நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று
   உருவ, நின் அம்பு
போகவே, என்தன் மனத்து இடர்
   போம்' எனப் புகன்றான்.

'இவ்வழியே வருக' என்று இனிய சொற்கள் பேசி
வழிநடத்திச் சென்றான்.
நீண்டதான ஆகாயமும் சின்னதாய்த் தோன்றுமாறு
உயர்ந்து வளர்ந்த மரங்கள் இருக்குமிடம்
அழைத்துச் சென்றான்.
'இந்த ஏழில் ஏதேனும் ஒன்றைத் துளைத்து
அம்பு விட வேணும்,
அப்பொழுதே என் துயர் தீரும்'
என்று சொன்னான் சுக்ரீவன்.



3880.
ஏழு மாமரம் உருவி, கீழ் 
   உலகம் என்று இசைக்கும் 
ஏழும் ஊடு புக்கு உருவி, 
   பின் உடன் அடுத்து இயன்ற 
ஏழ் இலாமையின் மீண்டது 
   அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்;
   ஒழிவது அன்று, இன்னும்.

ஏழு மரங்களையும் ஊடுருவி,
கீழ் உலகம் என்று சொல்லப்படும்,
ஏழு உலகங்களையும்^ ஊடுருவி 
அதன்பின் ஏழு என்று வேறேதும் 
இல்லாததால், திரும்பி வந்தது
இராமன் எய்திய அம்பு;
ஏழு என்ற தொகை கொண்ட பொருள் 
எதனையும் கண்டால் துளைத்திடும் இன்றும், 
துளைக்காது விடாது அந்த அம்பு.

^ - அதலம், விதலம், சுதலம், தராதலாம்,
ரசாதலம், மகாதலம், பாதாளம்.




கலன் காண் படலம் 


3903.
'உழையரின் உணர்த்துவது உளது'
   என்று உன்னியோ?
குழை பொரு கண்ணினாள் 
   குறித்தது ஓர்ந்திலம்;
மழை பொரு கண் 
   இணை வாரியோடு தன் 
இழை பொதிந்து இட்டனள்;
   யாங்கள் ஏற்றனம்.

'தூதர்களைப் போல உனக்கு உணர்த்தவேண்டும் 
என்று எண்ணியோ ?' நாங்கள் அறியவில்லை;
காதணி வரை நீண்ட கண்களையுடைய அவள்
மழை போல் கண்ணீர் சிந்தியபடி,
தன் ஆபரணங்களை ஒரு சேரக் கட்டி 
கீழே வீசியெறிந்ததை, 
நாங்கள் கைப்பற்றினோம் 
(என்று இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது 
நடந்ததை சுக்ரீவன் தெரிவித்தான்)



3918.
'என்னுடைச் சிறு குறை 
   முடித்தல் ஈண்டு ஒரீஇப் 
பின்னுடைத்து ஆயினும்   
   ஆக! பேதுறும் 
மின் இடைச் சனகியை 
   மீட்டு மீள்துமால் 
பொன்னுடைச் சிலையினாய்!
   விரைந்து போய்' என்றான்.

'என் சிறு குறையைத் தீர்ப்பதை 
இப்போது தவிர்ப்போம்,
அதைப் பற்றி பின்னர் யோசிப்போம்.
துன்பத்தில் கிடந்துத் துயர் படும் 
மின்னல் கொடி இடையாளை, சானகியை,
மீட்டுக் கொண்டு திரும்புவோம்,
அழகிய வில்லை ஏந்தியவனே,
விரைந்து செல்வோம்'
என்று சுக்ரீவன் சொன்னான்.



( தொடரும் )


No comments:

Post a Comment