Saturday, February 29, 2020

கம்பராமாயணம் 50



3461.
வஞ்சியை அரக்கனும்
   வல்லை கொண்டுபோய்,
செஞ்செவே திரு உருத்
   தீண்ட அஞ்சுவான்,
நஞ்சு இயல் அரக்கியர்
   நடுவண், ஆயிடை,
சிஞ்சுப வனத்திடை
   சிறைவைத்தான் அரோ.

சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு
விரைந்து சென்றான்.
எனினும் அவள் திருவுருவை
நேராகத் தீண்ட அஞ்சினான்.
கொடிய அரக்கியர் பலரின் மத்தியில்
அசோகவனத்தினிடையில்
சிறைக் காவலில் வைத்தான்.



(இதற்கிடையில் இராம இலக்குவன் ஒருவரை ஒருவர் காண)

3469.
"'ஏகாது  நிற்றிஎனின், யான் நெருப்பினிடை 
   வீழ்வென்' என்று முடுகா 
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் 
   அஞ்சி வஞ்ச வினையேன்,
போகாது இருக்கின், இறவாதிருக்கை 
   புணராள் எனக்கொடு உணரா 
ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு 
   இவண் வந்தது" என்ன, அமலன்,

( இராமனின் குரல் கேட்கிறது, 
என்ன என்று நீ சீக்கிரம் போய் பார் )
'போகாது இங்கேயே நிற்பாயெனில் 
நான் தீக்குள் இறங்கி மடிவேன்' என்றும் சொன்னார்கள்.
விரைவாய் கானகத்தினுள் ஓடத் தொடங்கினார்கள்.
நான் பயந்து போனேன்; வஞ்சம் நிறைந்தவன் ஆனேன்; 
அங்கிருந்து நகராதிருந்தால், அன்னை தன் முடிவை 
மாற்றிக்கொள்ளார் என்று உணர்ந்தேன்;
அவ்வாறு சீதை இறந்தால் 
அது அறம் ஆகாது என்பதை அறிவேன்;
அதனாலேயே நான் தங்களைத் தேடி வந்தேன்'
என்று இலக்குவன் இராமனிடம் எடுத்துரைத்தான்.



3478.
'தேரின் ஆழியும் தெரிந்தனம்;
   தீண்டுதல் அஞ்சிப் 
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் 
   பார்த்தனம்; பயன் இன்று 
ஓரும் தன்மை ஈது என் என்பது,
   உரன் இலாதவர் போல்;
தூரம் போதல்முன் தொடர்தும்' 
   என்று இளையவன் தொழலும்

(சீதையைக் காணாது இருவரும் திகைக்க)
'தேரின் சக்கரத் தடம் தெரிகிறது;
அன்னையைத் தீண்ட பயந்து 
நிலத்தோடு பெயர்த்தெடுத்த அடையாளம் இருக்கிறது;
வலிமையில்லாதவர் போல், இது எப்படி நடந்தது என்று 
எண்ணிக்கொண்டிருப்பதில் பயனில்லை;
அவர்கள் நெடுந்தூரம் போய் விடுவதற்கு முன் 
தொடர்ந்திடுவோம்' என்று சொல்லி 
வணங்கி நின்றான் இலக்குவன்.



3482.
'ஆகும்; அன்னதே கருமம்' 
   என்று அத்திசை நோக்கி 
ஏகி, யோசனை இரண்டு 
   சென்றார்; இடை எதிர்ந்தார்,
மாக மால் வரை கால் 
   பொர மறிந்தது மான 
பாக வீணையின் கொடி 
   ஒன்று கிடந்தது பார்மேல்.


(தேர் சென்ற பாதையில் 
தென் திசை நோக்கிச் செல்வோம் என்று 
இலக்குவன் சொல்ல)

'ஆம் அவ்வாறே செய்வோம்' என்று 
இராமன் ஆமோதித்து, 
இருவரும் இரண்டு யோசனை தூரம் சென்றனர்.
கொஞ்ச தூரத்தில் 
மலை ஒன்று பெருங்காற்று வீசியதால் 
பெயர்ந்து நிலத்தில் விழுந்தது போல்,
வீணைக்கொடி ஒன்று தரையில், 
கிழிந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.


( தொடரும் )

Friday, February 28, 2020

கம்பராமாயணம் 49


சடாயு உயிர் நீத்த படலம் 


3403.
என்னும் அவ்வேலையின்கண், 'எங்கு
   அடா போவது?' என்னா
'நில் நில்' என்று, இடித்த சொல்லன்
   நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்;
மின் என விளங்கும் வீரத்
   துண்டத்தன்; மேரு என்னும்
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே
   பொருவும் மெய்யான்;

இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு
பறக்கும் அவ்வேளையில்,
சீதை உதவி கேட்டு ஓலமிட்ட அவ்வேளையில்,
'அடேய், எங்கு போகிறாய்?' என்று கேட்டபடி,
'நில் நில்' என்று சத்தமாய்க் கத்தியபடி,
கண்ணில் கனல் பறக்க,
மின்னலைப் போன்று,
வலிமையான அலகை உடைய,
மேரு மலை போன்ற குன்று
வானில் பறந்து வருவது போன்ற உடலை உடைய
சடாயு அங்கு தோன்றினான்.



3411.
'பேதாய்! பிழை செய்தனை;
   பேர் உலகின்
மாதா அனையானை
   மனக்கொடு, நீ
யாது ஆகா நினைத்தனை?
    எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி
   யார் உளரோ?'

முட்டாளே, தவறு செய்கிறாய்
இவ் உலகத்து உயிர்கட்கெல்லாம்
தாய் போன்றவளை
யார் என்று நீ மனதில் எண்ணியிருக்கிறாய்.
சிந்தனை சரியில்லை உனக்கு ?
பாவம் செய்யும் உனக்கு, இனி
பக்க பலமாய் யாரிருப்பார்?



3420.
'வரும் புண்டரம்! வாளி
   உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவாவகை
   பேருதி நீ;
இரும்பு உண்ட நீர்
   மீளினும், என்னுழையின்
கரும்பு உண்ட சொல்
   மீள்கிலள்; காணுதியால்'

'என் பாதையில் குறுக்கிடும் கழுகே
உன் மார்பினை என் அம்பு ஊடுருவி
பெரிய புண்ணாகிப் போகும் முன், நீ
இவ்விடம் விட்டு விலகு;
காய்ச்சிய இரும்பில் பட்ட தண்ணீர் கூட மீளலாம்,
கரும்பு போன்ற இனிய சொற்களைப் பேசக்கூடிய
இவள் என்னிடமிருந்து மீள முடியாது;
பார்க்கிறாயா ?'
என்றுரைத்தான் இராவணன்.



3423.
இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ்
   சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு,
   முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தரும்
   நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து, உயர்
   வானவர் ஆசி கொண்டான்.


சடாயு -
இடி போன்ற ஓசை எழுப்பினான்.
தன் இரு பெரும் சிறகுகளை வீசி அடித்தான்.
இராவணனின் கிரீடங்களை தரையில் தள்ளினான்.
அவன் தலையை தன் வலிய அலகால்
துண்டாக்க எண்ணி வேகமாய்ப் பறந்து வந்தவன்,
தேரின் மேலிருந்த வீணைக் கொடியைப் பற்றி ஒடித்தான்.
தேவர்களின் வாழ்த்தைப் பெற்றான்.



3444.
வலியின்தலை தோற்றிலன்; மாற்ற
   அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும்
   வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது; ஆகலின்,
   விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஓர்
   குன்றின் வீழ்ந்தான்.

இதுவரை யாரிடமும் தோற்காத சடாயு,
வயது முதிர்ந்து இறுதிக் காலம் வந்துவிட்டதால்,
தடுப்பதற்கு அரிய தெய்வம் தந்த வாளை,
எதிரியின் தலை தவறாது அழிக்கும் வாளை,
வேந்தன் இராவணன் அவ்வச்சிர வாளை வீசி
சிறகை வெட்ட, மலை போல் வீழ்ந்தான் சடாயு.


3448.
'அல்லல் உற்றேனை, வந்து 'அஞ்சேல்'
   என்ற இந்
நல்லவன் தோற்பதே ?
   நரகன் வெல்வதே?
வெல்வதும் பாவமோ?
   வேதம் பொய்க்குமோ ?
இல்லையோ அறம்?' என
   இரங்கி ஏங்கினாள்.

துன்பத்தில் துவண்டிருந்தவளை
'கலங்க வேண்டாம்' என்று ஆறுதல் சொன்ன
நல்லவன் சடாயு தோற்பதா ?
நரகம் சேரப்போகும் இவ்வரக்கன் வெல்வதா?
பாவம் வெல்லுமா ?
வேதம் சொல்லும் அறம் தோற்குமா ?
இவ்வுலகில் தருமம் இல்லையோ ?
என்று மனம் கலங்கிப் புலம்பினாள் சீதை.


( தொடரும் )

Wednesday, February 26, 2020

கம்பராமாயணம் 48




3347.
சேயிதழ்த் தாமரைச் சேக்கை
   தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற
   மேனி காணுதற்கு
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு
   இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை!' என்று
   அல்லல் எய்தினான்.


'சிவந்த இதழுடைய தாமரை மலரின்
இருக்கையை விட்டு,
இங்கு வந்துலவும் திருமகள் சீதையின்
இரத்தினம் போன்ற சிவந்த மேனியழகைக்
கண்டு ரசிக்க
இருபது கண்கள் எப்படிப் போதும்?
இமைக்காத கண்கள் ஆயிரம் அல்லவா வேணும்!
என்று எண்ணி வருந்தினான் இராவணன்.



3357.
'அனக மா நெறி படர் 
   அடிகள்! நும் அலால் 
நினைவது ஓர் தெய்வம் வேறு 
   இலாத நெஞ்சினான் 
சனகன் மா மகள்; பெயர் 
   சனகி; காகுந்தன் 
மனைவி யான்' என்றனள்,
   மறு இல் கற்பினாள்.

'குற்றமில்லாத சிறந்த அறவழியில் செல்லும் 
பெரியவரே,
உம்மைப் போன்றவரை அல்லாது வேறு யாரையும் 
தெய்வமெனத் தொழாத, 
ஜனகனின் பெண் நான்,
பெயர் ஜானகி யாம்.
காகுந்தன் குலத்திலுதித்த இராமனின் மனைவி'
என்றாள் குற்றமற்ற கற்புடைய சீதை.

 

3378.
'மேருவைப் பறிக்க வேண்டின், 
   விண்ணினை இடிக்க வேண்டின்,
நீரினைக் கலக்க வேண்டின்,
   நெருப்பினை அவிக்க வேண்டின்,
பாரினை எடுக்க வேண்டின்,
   பல வினை, சில சொல் ஏழாய்
யார் எனக் கருதிச் சொன்னாய்?
   இராவணற்கு அரிது என்?' என்றான்.

'மேரு மலையைப் பெயர்த்தெடுக்க வேண்டுமென்றாலும்,
வானை இடிக்க விரும்பினாலும்,
கடல் நீரைக் கலக்க வேண்டுமென்றாலும்,
நெருப்பினை பொசுக்க நினைத்தாலும் 
உலகத்தையே தூக்க விரும்பினாலும் 
இது போல் பல செயல்களை செய்ய வல்லவனை 
சிறுமைப்படுத்துகிறாயே பேதைப் பெண்ணே,
யார் என்று எண்ணுகிறாய் இராவணனை,
அவனால் செய்ய முடியாதது எது ?'
என்று வினவினான்.



3390.
ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத் 
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா; 
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் 
கீண்டான் நிலம்; யோசனை கீழோடு மேல்.

அப்பொழுது அவ்விடத்தில் அத்தீயவன் 
பிரம்மன் முன்னம் தந்த சாபத்தை நினைவில் கொண்டு 
அணிகலன்கள் அணிந்த சீதையைத் தொடாது,
கல்தூண்கள் போன்ற அவன் தோள் வலிமையால் 
சீதையிருந்த அந்நிலத்தை, ஒரு யோஜனை^ தூரம் 
கீழ் பக்கமும், அருகிலிருந்தும் பெயர்த்தெடுத்தான்.

^ ஒரு யோஜனை - 14 KMs


( தொடரும் )

Tuesday, February 25, 2020

கம்பராமாயணம் 47




இராவணன் சூழ்ச்சிப் படலம்

3322.
'குற்றம் வீந்த குணத்தின்
   எம் கோமகன்
மற்று அவ் வாள் அரக்கன்
   புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும்
   என் அயல்
நிற்றியோ, இளையோய் ! ஒரு
   நீ?' என்றாள்.

'குற்றம் இல்லாத நற்பண்புகளையே உடையவன் 
என் தலைவன்
அவ்வாறில்லாத அந்த அரக்கன் என்னோவோ
மாயம் செய்ய
அதனால் உயிரற்று வீழ்ந்தான்,
அவன் குரல் கேட்டபின்னும்
இன்னும் இங்கேயே என் அருகில் நிற்கின்றாயே,
அவன் தம்பியா நீ?'
என்று சீதை இலக்குவனைப் பார்த்துச் சொன்னாள்.



3325.
'பார் என, புனல் என,
   பவன, வான், கனல்,
பேர் எனைத்து அவை அவன்
   முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக்
   கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ்
   இடரின் ஆழ்கின்றீர்?'


'பூமி நீர் காற்று வான் நெருப்பு இன்னும்
பெயருள்ள எத்தனைப் பொருட்கள் உள்ளனவோ
அவை யாவும்,
இராமன் சினத்து நோக்கினால் நிலை மாறும்.
மேகம் போன்று கருநிறத்தவனை
தாமரைக் கண்கள் கொண்டவனை
யார் என்று எண்ணி
இத்துன்பக் கடலில் கிடக்கின்றீர்?'
என்று சீதைக்கு ஆறுதல் சொன்னான் இலக்குவன்.


3230.
என்று அவன் இயம்பலும்
   எடுத்த சீற்றத்தள்,
கொன்றன இன்னலள்,
   கொதிக்கும் உள்ளத்தள்,
'நின்ற நின் நிலை, இது நெறியிற்று
   அன்று' எனா,
வன் தறுகண்ணினள்
   வயிர்த்துக் கூறுவாள்;

இலக்குவன் இவ்வாறு இயம்பியதும்
கோபம் கொண்டாள்; தன்னையே
கொன்றது போல் துடிதுடித்தாள்;
கொதிக்கும் மனமுடையவள் ஆனாள்;
'நீ இங்கு இவ்வாறு நின்றிருக்கும் நிலை
சரியன்று' என்று
அஞ்சா நெஞ்சினாள் சீதை
இலக்குவனிடம் சண்டையிட்டாள்.



3338.
இளையவன் ஏகலும் 
   இறவு பார்க்கின்ற 
வளை எயிற்று இராவணன் 
   வஞ்சம் முற்றுவான் 
முளை வரித் தண்டு ஒரு 
   மூன்றும் முப் பகைத் 
தளை அரி தவத்தவர் 
   வடிவம் தங்கினான்.


இலக்குவன் இராமனைத் தேடிச் சென்றான்.
அதற்காகவே காத்திருந்த, 
வளைந்த பற்களையுடைய இராவணன் 
அங்கே தோன்றினான்.
தான் எண்ணியிருந்த வஞ்சகச் செயலை 
செய்து முடிக்க தீர்மானித்தான்.
கையில் மூன்று மூங்கில் தண்டுகளை 
எடுத்துக்கொண்டான்.
தவ வேடம் தரித்துக் கொண்டான். 



3343.
தோகையும் அவ்வழி, 'தோம் 
   இல் சிந்தனைச் 
சேகு அறு நோன்பினர்'
   என்னும் சிந்தையால்.
பாகு இயல் கிளவியாள், பவளக் 
   கொம்பர் போன்று 
'ஏகுமின் ஈண்டு' என 
   எதிர்வந்து எய்தினாள்.

சீதையும் அவ்விடத்தில் 
'குற்றமற்ற மனத்தை,
குற்றமற்ற விரதத்தை ஏற்றவர்' என்றெண்ணி,
பாகு போன்ற சொற்களைப் பேசுபவள் 
பவளக் கொம்பு போன்று அழகானவள்,
'இங்கு எழுந்தருள்க' என்று எதிர்நின்று வரவேற்றாள். 

( தொடரும் )

Monday, February 24, 2020

கம்பராமாயணம் 46



3288.
'காயம், கனகம்; மணி,
   கால், செவி, வால்;
பாயும் உருவோடு இது
   பண்பு அலவால்;
மாயம் என்னால் அன்றி,
   மனக் கொளவே
ஏயும்? இறை மே அல'
   என்ற அளவே.

'உடலோ பொன்,
காலும் காதும் வாலும் மாணிக்கம்;
வேகமாய்ப் பாய்ந்தோடும் விதத்திலுள்ளது;
இயற்கைப் பண்போடு இல்லை இது;
இது மாயமான் என்று உணருதலே முறை,
வேறெந்த விதத்திலும் எண்ணுவது பிழை;
என் தலைவனே,
எவ்வகையிலும் இது உண்மையானது இலை'
என்று இலக்குவன் உரைக்க ...


3299.
'மாயமேல் மடியும் அன்றே
   வாளியின்; மடிந்தபோது
காய் சினத்தவரைக் கொன்று கடன்
   கழித்தோமும் ஆதும்;
தூயதேல் பற்றிக் கோடும்; சொல்லிய
   இரண்டின் ஒன்று
தீயதே? உரைத்தி' என்றான் தேவரை
   இடுக்கண் தீர்ப்பான்.

மாயமான் என்றால் என் அம்பிற்கு இரையாகும்.
அவ்வாறு மரணமுற்றால் கொடிய அரக்கரைக்
கொல்லும் நம் கடமை நிறைவேற்றியதாகும்;
உண்மையான மான் என்றால்,
பிடித்துக் கொண்டு வருவோம்.
இப்போது சொல்லிய இந்த இரண்டில்
தீயது ஏதும் உண்டோ? சொல்' என்றான்
தேவர்களின் துயர் தீர்க்கும் இராமன்.



3303.
ஆயிடை அன்னம் அன்னாள் 
   அமுது உகுத்தனைய செய்ய 
வாயிடை மழலை இன்சொல் 
   கிளியின் குழறி மாழ்கி 
'நாயக! நீயே பற்றி 
   நல்கலைபோலும்' என்னா 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
   சீறிப் போனாள்.

(சரி மானை நான் கொன்று இல்லை பிடித்து வருகிறேன் 
என்று இலக்குவன் சொல்ல)

பேச்சுக்களின் இடை புகுந்து 
அன்னம் போன்ற சீதை
அமுது சிந்தினாற் போன்ற 
மழலைச் சொற்களால்
கிளி மொழிவது போல், வருத்தத்துடன் 
'தலைவ! நீயே இம் மானைப் பிடித்துத் தரமாட்டாயா?'
என்று சொல்லி,
மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிந்த,
கோபங்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.



3313.
நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் 
பட்டது; அப்பொழுதே பகு வாயினால் 
அட்ட திக்கினும் அப்புறமும் புக 
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்.

நெடிய இலை வடிவ அம்பு 
வஞ்சகன் நெஞ்சைத் தாக்கியது;
அக்கணமே தன் வாயினை அகலத்திறந்து 
எட்டு திசைகளும், அதற்கப்பாலும் கேட்கும்படி 
இராமன் குரலில் (சீதா லக்ஷ்மணா என்று) அழைத்து 
குன்று போன்று கீழே விழுந்தான் மாரீசன்.



3318.
'மாள்வதே பொருள் 
   ஆக வந்தான்அலன்;
சூழ்வது ஓர் பொருள் உண்டு;
   இவன் சொல்லினால் 
மூள்வது ஏதம்;
   அது முடியாமுனம் 
மீள்வதே நலன்' என்று 
   அவன் மீண்டனன்.

இறக்கும் எண்ணத்தில் மட்டும்  
இவன் இங்கு வந்தவனாகத் தோன்றவில்லை;
இதற்கு பின் ஏதோ நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது,
இவனின் கூக்குரலின் பின் ஏதோ தீங்கு நிகழப்போகிறது;
அது நடப்பதற்கு முன், நான் பர்ணசாலை அடைவது நல்லது'
என்று எண்ணி இராமன் தன் இருப்பிடம் விரைந்தான்.


( தொடரும் )


Sunday, February 23, 2020

கம்பராமாயணம் 45



3253.
'எம்பிக்கும் என் அன்னைதனக்கும்
   இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி தனக்கும்
   அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை
   தவிர்ந்தே தளர்வுற்றேன்;
கம்பிக்கும் என் நெஞ்சு அவன்
   என்றே; கவல்கின்றேன்';

'என் தம்பி சுபாகுவும் 
என் அன்னை தாடகையும்
இறக்கக் காரணம் அந்த இராம பானம் தான்.
போர் புரியும் பேராற்றல் படைத்த அவன்,
அவன் தம்பி இலக்குவன் இருவருக்கும் முன்
நான் வீரம் இல்லாதவன்;
அவனே உன் எதிரி என்பதைக் கேட்டதும் 
அச்சம் கொள்கின்றேன், கவலைப்படுகின்றேன்'
என்றான் மாரீசன்.



3259.
'யாதும் அறியாய்; உரை கொளாய்;
   இகல் இராமன்
கோதை புனையாமுன் உயிர்
   கொள்ளைபடும் அன்றே;
பேதை மதியால், 'இஃது ஓர் பெண்
   உருவம்' என்றாய்;
சீதை உருவோ? நிருதர் தீவினை
   அது அன்றோ?'

'நீ இராமனைப் பற்றி முழுதும் அறியாதவன்;
எடுத்துச் சொன்னாலும் உணர மறுப்பவன்;
இராமன் மாலை சூடி போருக்குக் கிளம்புமுன்
பகைவர் ரை சூறையாடுபவன்;
அறிவின்மையால் நீ சீதையை
பெண் என்று சொல்லிவிட்டாய்;
அவள் என்ன வெறும் பெண்ணுருவமா ?
அரக்கர்கள் இழைத்த பாவத்தின் உருவம் அன்றோ?'
 என்றான் மாரீசன்.


3266.
'மறுத்தனை எனப் பெறினும்,
   நின்னை வடி வாளால்
ஒறுத்து, மனம் உற்றது
   முடிப்பென்; ஒழிகல்லென்;
வெறுப்பான கிளத்தலுறும் இத்
   தொழிலை விட்டு என்
குறிப்பின்வழி நிற்றி, உயிர்கொண்டு
   உழலின்' என்றான்.

'நான் சொல்வதை செய்ய மறுத்தால்
என் கூர்மையான வாளால் உனை வெட்டி,
பின் நான் நினைப்பதை செய்து முடிப்பேன்.
எடுத்த முடிவை திருத்த மாட்டேன்;
நான் வெறுக்கும் அறிவுரைகளை உரைப்பதை நிறுத்து;
என் எண்ணத்தின் வழி நின்று செயல்படு;
அதுவே நீ உயிர்பிழைக்க ஏற்றது'
என்று இராவணன் உரைத்தான்.




3275.
'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது?
   இயம்புக' என்றான்,
'பொன்னின் மான் ஆகிப் புக்கு,
   பொன்னை மால் புணர்த்துக' என்ன,
'அன்னது செய்வென்' என்னா,
   மாரீசன் அமைந்து போனான்;
மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு
   ஒரு நெறியில் போனான்.

'என்ன மாயம் நான் செய்யட்டும்,
அதையும் நீயே சொல்லணும்' என்றான் மாரீசன்.
'பொன் மானாய் உருமாறி  காட்டினுள் நுழை,
பொன் போன்ற சீதை பார்க்கும்படி
உன்மேல் ஆசை கொள்ளும்படி திரி'
என்று திட்டம் தீட்டித் தந்தான் இராவணன்.
'அவ்வாறே செய்கிறேன்' என்றான் மாரிசன்.
ஒளிவீசும் வேலேந்திய இராவணன்
அங்கிருந்து அகன்று தன்வழி சென்றான்.



3284.
நெற்றிப் பிறையாள் 
   முனம் நின்றிடலும் 
முற்றிப் பொழி 
   காதலின் முந்துறுவாள் 
'பற்றித் தருக என்பென்'
   எனப் பதையா 
வெற்றிச் சிலை 
   வீரனை மேவினனால்.

இளம் பிறை போன்ற நெற்றி உடைய சீதை முன் 
பொய் பொன் மான் வந்து நின்றது.
அந்த மானைக் கண்டதும் சீதையின் நெஞ்சில் 
ஆசை வந்தது;
'இம் மானைப் பிடித்துத் தர வேண்டும்' என்று 
இராமனைக் கேட்கலாம் என்ற எண்ணம் உதித்தது.
ஆசை அவளை உந்தி,
வெற்றி வில்லை ஏந்தி நிற்கும் 
வீரன் இராமன் அருகில் கொண்டு போய் நிறுத்தியது.

( தொடரும் )

Saturday, February 22, 2020

கம்பராமாயணம் 44


3155.
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு
   பேர் அமளிப் பங்கர்
தேவிமார் குழுவும் நீங்கச்
   சேர்ந்தனன்; சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும்
   குயமும், புக்குப்
பாவியா கொடுத்த வெம்மை
   பயப்பயப் பரந்தது அன்றே.

மனைவியரை விட்டகன்று
மலர்களைப் பரப்பி அமைக்கப்பட்ட
மஞ்சத்தில் வந்தமர்ந்தான் இராவணன்.
அவ்வாறு அமர்ந்ததும்
நறுமணம் வீசும் கூந்தலையுடைய,
மான் போன்ற சீதையின்
கண்களும் மார்புகளும்
மனதுள் புகுந்து பல்வேறு எண்ணங்களை எழுப்பக் கண்டான்.
அந்த எண்ணங்கள்  தந்த வெப்பம்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகுவதை உணர்ந்தான்.



3167.
மாதிரத்து இறுதிகாறும் தன் மனத்து 
   எழுந்த மையல் 
வேதனை வெப்பம் செய்ய வேனிலும் 
   வெதுப்பும் காலை 
'யாது இது இங்கு? இதனின் முன்னைச் 
   சீதம் நன்று; இதனை நீக்கி 
கூதிர்ஆம் பருவம் தன்னைக் கொணருதிர் 
   விரைவின்' என்றான்.


மனதுள் எழுந்த காமம்
எல்லா திசைகளின் எல்லைகளையும் எட்ட,
அவ் வேதனை தந்த துன்பம் அதிகரிக்க 
வேனிற் காலமும் அவனைச் சுட, 
'என்ன பருவம் இது? 
இதற்கு முன்னிருந்த குளிர்காலமே தேவலையே;
இவ் வேனிற் காலத்தை நீக்கிவிட்டு 
*கூதிர்கால தட்பவெப்பநிலை நிலவட்டும், சீக்கிரம்'
என்று ஆணை பிறப்பித்தான்.


கூதிர்கால - autumn


3236.
வந்த மந்திரிகளோடு மாசு அற 
   மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் 
    தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் 
   விமானத்தில் ஆரும் இன்றி 
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் 
   இருக்கை சேர்ந்தான்.


இராவணனின் கட்டளைப்படி 
அவன் இருப்பிடம் வந்தனர் அமைச்சர்கள்;
குற்றம் குறைகள் இன்றி ஆலோசனை செய்தனர்;
தெளிவு ஏதும் பிறக்காத காரணத்தால் 
தான் எண்ணியதையே செய்யும் கொள்கை உடைய 
இராவணன்,
விண்ணில் பறந்து செல்லும் விமானத்தில் ஏறி 
புலன்களை அடக்கி தவம் புரியும் மாரீசன் 
இருப்பிடம் போய்ச் சேர்ந்தான்.


மாரீசன் வதைப் படலம் 

3242.
'வெப்பு அழியாது என் நெஞ்சும் 
   உலர்ந்தேன், விளிகின்றேன் 
ஒப்பு இலர் என்றே, போர் செயல் 
   ஒல்லேன்; உடன் வாழும் 
துப்புஅழி செவ் வாய் வஞ்சியை 
   வௌவ துணை கொண்டிட்டு 
இப் பழி நின்னால் தீரிய வந்தேன் 
   இவண்' என்றான்.


'நெஞ்சின் வெப்பம் நீங்காது 
வாடி வதங்குகின்றேன்;
எனக்கு சமம் இல்லை என்பதால் 
போரைத் தவிர்க்கிறேன்;
அவர்களுடன் வாழும் 
பவளம் போன்ற சிவந்த வாயுடைய 
வஞ்சியை தூக்கிக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன்;
எனக்கு நேர்ந்த அவமானத்தை 
தீர்த்துக்கொள்ள எண்ணுகின்றேன்;
அதற்கு உன் துணை நாடி வந்திருக்கின்றேன்'
என்றான் இராவணன்.



( தொடரும் )

Friday, February 21, 2020

கம்பராமாயணம் 43


3065.
'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ்
   ஆசை என்
மூக்கினோடு முடிய,
   முடிந்த திலேன்
வாக்கினால், உங்கள்
   வாழ்வையும் நாளையும்
போக்கினேன்; கொடியேன்'
   என்று போயினாள்.


'என் மனத்துள் ஆசை வளர்த்தேன்;
அந்த ஆசையானது என் மூக்கு
அறுபட்டதோடு அகல,
இன்னும் நான் இறக்கவில்லை,
கண்டபடி பழி சொல்லி, உங்கள்
வாழ்க்கையை, வாழ்நாளை நாசமாக்குவேன்.
அத்தகைய கொடிய நெஞ்சம் படைத்தவள் நான்'
என்று சூளுரைத்துவிட்ட அங்கிருந்து கிளம்பினாள்



சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 

3090.
தங்கையும், அவ் வழி,
   தலையில் தாங்கிய 
செங் கையள் சோரியின் 
   தாரை சேந்து இழி 
கொங்கையள், முக்கிலள்,
   குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத் 
   திறந்த வாளினள்.

(இராவணன் அமர்ந்திருந்த அரசவையில்)
அவ்விடத்தில் அவன் தங்கை 
தன் செங்கையைத் தலை மேல் குவித்து 
இரத்த வெள்ளத்தில், 
மார்பு வெட்டப்பட்ட நிலையில், 
மூக்கு அறுபட்ட நிலையில்,
குழையணிந்த காதுகள் இல்லாது,
இடி முழக்கம் தோற்கும்படி,
ஓலமிட்ட திறந்த வாயுடன் நுழைந்தாள்.



3115.
மடித்த பில வாய்கள்தொறும் 
   வந்து புகை முந்த 
துடித்த தொடர் மீசைகள் 
   சுறுக்கொள உயிர்ப்ப 
கடித்த கதிர் வாள் எயிறு 
   மின் கஞல, மேகத்து 
இடித்த உரும் ஒத்து உரறி 
   'யாவர் செயல்?' என்றான்.

உதடு மடித்து, சினத்தால்  
வாய்களிலெல்லாம் புகை எழ,
அடர்ந்த மீசைகள் துடிதுடிக்க 
பொசுங்கிப்போகும்படி பெருமூச்சு வெளிபட,
இறுக மென்ற கூரிய வெண் பற்கள் 
மின்னல் போல் ஒளி வீச,
மேகங்கள் இடித்து எழும் ஓசை போல 
'இது யாருடைய செயல்?' என்று கர்ஜித்தான்.




3132.
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய 
   துன்பம் மாறி 
தீயிடை உகுத்த நெய்யின் 
   சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய 
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
   நின்னை, இன்னே 
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து 
   அவர் கொய்ய?' என்றான்.

(சூர்ப்பணகை சொன்னதைக் கேட்டதும்)
அவ்வமயம் 
சீற்றத்தால் எழுந்த துயரம் குறைந்தது,
நெருப்பிலே இட்ட நெய் போல, 
கோபத்தின் வலிமை கூடியது,
'நீ என்ன தவறு செய்தாய்,
அவர் உன்னை இங்ஙனம் மூக்கும் காதும் 
அறுத்திட்டார் ?' என்று கேட்டான்.



3147.
'அன்னவள் தன்னை நின்பால் 
   உய்ப்பல் என்று எடுக்கலுற்ற 
என்னை, அவ் இராமன் தம்பி 
   இடைப் புகுந்து இலங்கு வாளால் 
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது 
   என் வாழ்வும்; உன்னின் 
சொன்னபின் உயிரை நிப்பான் துணிந்தனென்'
   என்னச் சொன்னாள்.

(சீதையின் அழகைப் புகழ்ந்து)
'அப்படிப்பட்ட அழகிய பெண்ணை 
உன்னிடம் சேர்க்க, எடுத்துவர முயற்சித்தேன்.
அந்த இராமன் தம்பி இடையில் நுழைந்து 
ஒளி வீசும் தன் வாளால் என் மூக்கு அறுத்தான்,
என் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
உன்னிடம் இதை சொன்ன பிறகு 
உயிர் மாய்த்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன்'
என்று சொன்னாள் சூர்ப்பணகை.


3149.
கரனையும் மறந்தான்; தங்கை
   மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும்
   மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
   அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட
   மங்கையை மறந்திலாதான்;

இராவணன்,
கரன் இறந்துப் போனதை மறந்துபோனான்,
தங்கையைக் காயம் செய்தவன் வீரம் மறந்துபோனான்;
அதனால் தனக்கு நேர்ந்த பழியை மறந்துபோனான்;
முன்பு தான் பெற்ற வரத்தை மறந்துபோனான்;
சிவபெருமானையும் வெற்றி கண்ட
மன்மதனின் மலரம்பினால்
காதால் கேட்ட மங்கையை மட்டும்
மறுக்கமுடியாதுத் தவித்தான்.


( தொடரும் )

Wednesday, February 19, 2020

கம்பராமாயணம் 42




2969.
அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர்,
   அழித்தார் சிலர், கழிந்தார்;
உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர்,
   உருண்டார் சிலர், புரண்டார்;
குழைத் தாழ் திரைக்கு குருதிக் கடல்
   குளித்தார் சிலர், கொலை வாய்
மழைத் தாரைகள் படப் பாரிடை
   மடிந்தார் சிலர், உடைந்தார்.

'ஐயோ அம்மா' என்று அலறினர் சிலர்;
சோர்ந்து போனர் சிலர்;
செத்து ஒழிந்தனர் சிலர்;
ஓடித் தப்பித்தனர் சிலர்;
வருந்தி அழுதனர் சிலர்;
பெருமூச்சு விட்டனர் சிலர்;
தரையில் உருண்டு, புரண்டனர் சிலர்;
ஆறாய் ஓடும் குருதிக் கடலில்
சேறாய் மூழ்கிப் போனர் சிலர்;
பகைவரைக் கொல்லும் நோக்குடன்
எய்திய இராமனின் கணைகள்
மழைத் துளிகள் போல் பாய
தரையிலேயே விழுந்து உயிர்விட்டனர் சிலர்;
மன உறுதி அகல, ஓடினர் சிலர்;



3010.
திரிசிரா எனும் சிகரம் மண் 
   சேர்தலும், செறிந்த 
நிருதர் ஓடினர், தூடணன் 
   விலக்கவும் நில்லார்;
பருதி வாளினர், கேடகத் தடக் 
   கையர், பரந்த 
குருதி நீரிடை, வார் கழல் 
   கொழுங் குடர் தொடக்க.


கரனின் படைத்தலைவன் திரிசிரன், 
தோற்று மண்ணில் சரியவும்
இன்னொரு சேனைத்தலைவன் தூடணன் 
தடுத்தும் நில்லாது
முன்பு நெருங்கி நின்றிருந்த அரக்க வீரர்கள், விலகி ஓடினர்;
கதிரவன் போன்று ஒளிவீசும் வாள் படையினர்,
கேடயங்களை ஏந்திய வலிய கையினர்,
பரந்த இரத்த வெள்ளத்தில் மிதக்கும் கொழுத்த குடல்கள் இடர
ஓடினர்;


3035.
தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள்
   திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல்
   முழக்கு என ஒங்க,
'கா அடா இது, வல்லையேல், நீ'
   என கணை ஒன்று
ஏவினான்; அவன் எயிறுடை
   நெடுந் தலை இழந்தான்.


தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்ய,
முனிவர்கள் எல்லா திக்குகளிலும் நின்று
வாழ்த்தும் ஒலி, கடலலை போல் ஓசையெழுப்ப
'நீ அவ்வளவு தைரியம் உடையவன் எனில்,
இந்தக் கணையிலிருந்து உன்னைக் காத்துக்கொள்'
என்று இராமன் ஒரு அம்பு எய்த,
அரக்கன் தூடணன் தன் தலை இழந்தான்.



3052.
கண்டு நின்று கருத்து 
   உணர்ந்தான் என 
அண்டர் நாதன் தடக் 
   கையில் அத் துணை 
பண்டு போர் 
   மழுவாளியைப் பண்பினால் 
கொண்ட வில்லை 
   வருணன் கொடுத்தனன்.


(கரனுடன் சண்டையிடுகையில்)
வான் வழியே 
போரினைக் காண நின்றிருந்தான் (வருணன்),
(இராமன் வில் உடைய)
குறிப்புணர்ந்தான், 
இராமனின் நெடிய கரத்தில்,
அச்சமயத்தில், 
முன்னம் பரசுராமனிடமிருந்து  பெற்று,
பாதுகாத்திடு - என்று தந்த விஷ்ணுதனுசை 
வருணன் இச்சமயத்தில் திருப்பித் தந்தான்.



3058.
விராவரும் சுடு வெள் 
   எயிறு இற்றபின் 
அரா அழன்றது அனைய 
   தன் ஆற்றலால் 
மரா மரம் கையில் வாங்கி 
   வந்து எய்தினான்;
இராமன் அங்கு ஓர் 
   தனிக் கணை ஏவினான். 

விடத்தைக் கொண்ட வெண் பற்களை இழந்த பின்னும் 
சீறிவரும் நாகப்பாம்பு போல,
ஒரு கை இழந்த பின்னும், தனது வல்லமையால்,
ஒரு பெரிய மரத்தையே பெயர்த்துக்கொண்டு 
அருகில் வந்தான், கரன்.
அவனைக் கொல்லும் வலிமையுள்ள 
ஒரு பானத்தை எய்தான், இராமன்.


( தொடரும் )

Tuesday, February 18, 2020

கம்பராமாயணம் 41


கரன் வதைப் படலம்

2878.
இருவர் மானிடர்;
   தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்;
   மன்மதன் மேனியர்;
தரும நீரா;
   தயரதன் காதலர்;
செருவில் நேரும்
   நிருதரைத் தேடுவார்;

(கரனிடம் வந்தாள், தனக்கு நேர்ந்ததைச் சொன்னாள்)
இரண்டு மனிதர்கள்,
தவ வேடத்தில் இருப்பவர்கள்;
கையில் வில்லையும் வாளையும் உடையவர்கள்;
அழகாய் இருக்கின்றார்கள்;
தருமநெறியைக் கடைபிடிப்பவர்கள்;
தயாரதனின் குமாரர்கள்;
எதிர்ப்படும் அரக்கர்களுடன் போரில் ஈடுபடுபவர்கள்
என்றாள் சூர்ப்பணகை.



2884.
'வருக தேர்!' எனும் 
   மாத்திரை, மாடுளோர் 
இரு கை மால் வரை 
   ஏழினொடு ஏழ் அனார்,
ஒரு கையால் உலகு 
   ஏந்தும் உரத்தினார் 
'தருக இப் பணி எம்வயின் 
   தான்' என்றார்.

'தேர் வரட்டும்' என்று கரன் சொன்னவுடன்,
அவனருகில் இருந்த, 
இரண்டு கைகளுடைய பதினான்கு மலைகளைப் போன்ற,
ஒரு கையாலேயே உலகம் முழுவதையும் தாங்கும் வலிமையுடைய, 
படைத் தலைவர் பதினான்கு பேரும்   
'(இராம இலக்குமன ரோடு போர் புரியும்)
 இப் பணியை எங்கட்குத் தந்தருளவேணும்' என்றனர்.



2894.
மரங்கள்போல் நெடு 
   வாளொடு தோள் விழ 
உரங்களான் அடர்ந்தார் 
   உரவோன் விடும் 
சரங்கள் ஓடின 
   தைக்க, அரக்கர்தம் 
சிரங்கள் ஓடின;
   தீயவள் ஓடினாள்;

வெட்டப்பட்ட மரங்கள் போல, 
வாளோடு பெரிய தோள்களுடைய அரக்கர்கள் விழ,
மார்பின் வலிமை கொண்டு தொடர்ந்து போர் புரிய
அவ்வரக்கர்கள் எழ,
வலிமையான இராமன் எய்திய அம்புகள் 
அவர்தம் தலைகளை வெட்டி வீழ்த்த,
கொடியவள் (சூர்ப்பணகை) மீண்டும் அஞ்சி ஓடினாள்.


2931.
தூரியக் குரலின், வானின் 
   முகிற் கணம் துணுக்கம்கொள்ள;
வார் சிலை ஒலியின் அஞ்சி 
   உரும் எலாம் மறுக்கம்கொள்ள;
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி 
   அசைவுற; அரக்கர் சேனை 
போர் வனத்து இருந்த வீரர் 
   உறைவிடம் புக்கது அன்றே.

வாத்தியங்களின் முழக்க ஒலியில் 
ஆகாயத்தின் மேகக் கூட்டம் அஞ்சி நடுங்க,
நீண்ட வில் பல எழுப்பிய நாணொலியால் 
இடிகள் எல்லாம் பயந்து கலங்க,
வீரர்களின் ஆரவாரத்தால் 
அலை கடல்களுக்கும் உதறல் எடுக்க,
கரனின் அரக்க சேனை,
காட்டில், போரில் வல்ல வீரர்கள் 
தங்கியிருந்த இருப்பிடம் வந்தடைந்தது.




2941.
கண்டனன், கனகத் தேர்மேல் 
   கதிரவன் கலங்கி நீங்க 
விண்டனன் நின்ற வென்றிக் 
   கரன் எனும் விலங்கல் தோளான்;
'மண்டு அமர் யானே செய்து, இம் 
   மானிடன் வலியை நீக்கி,
கொண்டனென் வாகை' என்று 
   படைஞரைக் குறித்துச் சொன்னான்.

பார்த்தான்,
தன் பொன்மயமான தேரின் மீதிருந்து,
கதிரவன் கலங்கி நிற்க, பகைத்து நின்று
வெற்றியையே இதுவரை பார்த்திருந்த,
மலை போன்ற தோளை உடைய 
வீரன் கரன், இராமனைப் பார்த்தான்.
'நான் ஒருவனே இந்தப் போர் புரிந்து 
இந்த மானிடன் வீரத்தை அழித்து 
வெற்றிவாகை சூடுவேன்' என்று 
தன் படைவீரர்களை நோக்கிச் சொன்னான்.



( தொடரும் )

Monday, February 17, 2020

கம்பராமாயணம் 40



2825.
'ஊக்கித் தாங்கி விண் படர்வென்'
   என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில், 'வெய்து
   இழையேல்' என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண்
   முலைக் கண்களும், முறையால
போக்கி, போக்கிய சினத்தோடும்
   புரி குழல் விட்டான்.

(சீதையின் பின்னே சூர்ப்பணகை செல்வதைப் பார்த்து,
இலக்குமன் தடுக்க)

'முயற்சித்து இவனையும் பிடித்து வான்வழி போவேன்'
என்று எழுந்த சூர்ப்பனகையை
எளிதில் கீழே தள்ளி,
'கொடுந்தொழிலைச் செய்யாதே' என்று கூறி
அவள் மூக்கையும், காதுகளையும்
வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய்
தன் உடைவாளால் அறுத்தெறிந்து,
பின்னர் சினம் நீங்கி,
அவள் கூந்தல் பிடி தளர்த்தினான் - இலக்குவன்.



2832.
'நிலை எடுத்து, நெடு நிலத்து
   நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது
   அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே!
   தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே!
   இவை காண வாராயோ?

இந்த உலகில் நிலை பெற்று பெரும் புகழ் பெற்ற
நீ இருக்க,
தவம்புரிய வந்தோர் வில் ஏந்தி நடமாடுவது
உனக்கு இழுக்கன்றோ ?
(இவ்வாறு இவர்கள் தைரியமாக நடமாடினால்)
தேவர்கள் எதிர்நின்று தலை குனிந்து
வெட்கி நிற்பது என்பது நடக்குமா ?
கையில் தீயை ஏந்திய சிவனின்
கைலாய மலையைப் பெயர்த்த
மலை போன்றவனே (இராவணா),
எனக்குநேர்ந்த இந்த கொடுமையைக் காண வாராயோ?



2857.
'வான் காப்போர், மண் காப்போர்,
   மாநாகர் வாழ் உலகம் 
தான் காப்போர், இனி தங்கள் தலை 
   காத்து நின்று, உங்கள் 
ஊன் காக்க உரியார் யார்?
   என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ் 
   இராவணனார் உளர்!' என்றாள்.

(இங்கிருந்து ஓடிவிடு என்று இராமனும் சொல்ல)
'வானுலகைக் காக்கும் தேவர்களும் 
மண்ணைக் காக்கும் மன்னர்களும் 
நாக லோகத்தைக் காப்போர்களும் 
தம்தமது தலையை முதலில் காப்பாற்றிக்கொண்டு 
பிறகல்லவா உங்களைக் காப்பாற்ற முடியும்?
என் ஆசையை நிறைவேற்றி என்னுயிர் நீர் காத்தால்,
உங்களை நான் காப்பேன்;
இல்லையெனில் இராவணன் இருக்கிறான்' - என்றாள்.




2874.
'ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும்,
   முலை இரண்டும், இழந்தும் வாழ 
ஆற்றுவனே?வஞ்சனையால் உமை உள்ள 
   பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானை, 
   கொடியானை, கரனை, உங்கள் 
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்'
   என்று சலம்கொண்டு போனாள்.

அழகான நீண்ட என் மூக்கையும், காதுகளையும் 
கொங்கைகளையும் இழந்து பின்னும்,
இன்னும் வாழ எண்ணுவேனா நான் ?
வஞ்சனையால், உம் உள்ளத்தில் உள்ள 
(அரக்கர்களை அழிக்கவேண்டும் என்ற)
கருத்தை அறிந்துகொண்டேன்.
காற்றையும் தீயையும் விட ஆற்றல் உடையவனை,
கொடியவனை, கரன் என்ற பெயருடையவனை,
உங்கள் யமனை,
இக்கணமே இங்கே அழைத்து வருகிறேன்'
என்று கூறி தணியாத கோபத்துடன் சென்றாள்.


( தொடரும் )


Sunday, February 16, 2020

கம்பராமாயணம் 39


2770.
'பூவிலோன் புதல்வன் மைந்தன்
   புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன்
   தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை
   எடுத்து உலகம் மூன்றும் 
காவலோன் பின்னை; காமவல்லி ஆம்
   கன்னி' என்றாள்.

'பிரம்மனின் மகனாம்
புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் நான்;
திரிபுரங்களை எரித்த சிவபெருமானின் நண்பன்
சிவந்த கைகளை உடைய குபேரனின் தங்கை நான்;
எட்டுத் திசைகளில் உள்ள யானைகளைத் தோற்கடித்து
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்து
மூன்று உலகங்களையும் காக்கும் திறம்படைத்த
இராவணன் பின் பிறந்த தங்கை நான்;
காமவல்லி என்னும் பெயருடைய கன்னி நான்'
என்றாள் சூர்ப்பணகை.



2776.
'தாம் உறு காமத் தன்மை தாங்களே 
   உரைப்பது என்பது 
ஆம் எனல் ஆவது அன்றால் அருங் குல 
   மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன் ?
   யாரும் இல்லேன்;
காமன் ஒருவன் செய்யும் வன்மையைக் 
   காத்தி' என்றாள்.

'தாம் கொண்ட காம வேட்கையின் தன்மையை 
தாங்களே வெளிப்படையாகக் கூறுவது 
அரிய குலத்தில் பிறந்த பெண்கட்கு அரிது;
எல்லா இன்பத்தையும் தரக்கூடிய உயிரோடு 
கூடி வாழ முடியாது தினம் வருந்துவேன்;
வேறென்ன செய்ய? துணைக்கு யாருமில்லையே ?
காமனின் கணைகளிலிருந்து எனைக் காத்தருள்'
என்றாள்.




2780.
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்;
   வினை மற்று எண்ணி 
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் 
   மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் 
   துணிவிற்று அன்றால்
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் 
   வந்தேன்' என்றான்.

'எல்லோரும் பழிக்கக்கூடிய அரக்கி இவள்,
நியாய நெறியில் நில்லாதவள் இவள்;
வேறேதோ தீய வேலையாக வந்திருக்கிறாள் இவள்'
என்று எண்ணிய இராமன்,
'அழகிய பெண்ணே! சாதி மரபு முறைக்கு ஏற்றதன்று
தொன்று தொட்ட ஒழுக்க நெறிக்கு புறம்பானது,
அதுமட்டுமன்றி,
நீ அந்தண வம்சம், நான் அரச வம்சம்'
என்றான் இராமன்.




2794.
'வரும் இவள் மாயம் வல்லள்;
   வஞ்சனை அரக்கி; நெஞ்சம் 
தெரிவு இல; தேறும் தன்மை சீரியோய்!
   செவ்விது அன்றால்;
உரு இது மெய்யது அன்றால்; ஊன் 
   நுகர் வாழ்க்கையாளை 
வெருவினென்; எய்திடாமல் விலக்குதி,
   வீர!' என்றாள்.

(இராமன் அருகில் வந்து நின்ற சீதையைப் பார்த்ததும்)
உன்னிடம் வந்து நிற்கும் இப்பெண் மாயம் செய்வதில் 
வல்லவள்;
வஞ்சகத் தன்மை நிறைந்த அரக்கி ஆவாள்;
இவள் எண்ணங்கள் அறியமுடியாதவள்;
இவளை நல்லவள் என நினைப்பது,  நல்லது அன்று,
நற்பண்புகள் நிறைந்தவனே;
இவளின் இந்த உருவம் உண்மையானது அன்று;
உடலை உண்டு வாழும் இவளைக் கண்டு அஞ்சுகிறேன்;
உன்னிடம் நெருங்க விடாது இவளை விலக்கி வை, வீரனே' 
என்றாள் சூர்ப்பணகை.



2821.
விடியலின் காண்டலின், ஈண்டு தன்  
   உயிர் கண்ட வெய்யான் 
'படி இலான் மருங்கு உள்ள அளவு 
   எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக் 
   கரந்து, அவள் காதல் 
விடிவினானுடன் வாழ்வதே 
   மதி' என மதியா,

பொழுது விடிவதைப் பார்த்தாள்,
தனக்கு இன்னும் உயிர் இருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டாள் ;
சீதை இருக்கும்வரை தன்னை இராமன் 
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான் என்று புரிந்து கொண்டாள்.
விரைவாகச் சென்று அவளைக் கடத்தி மறைத்து வைத்து,
பின் அவள் காதலனுடன் (இராமன்)கூடி வாழ்வதே சிறந்தது
என்று எண்ணினாள் - சூர்ப்பணகை.

( தொடரும் )




Saturday, February 15, 2020

கம்பராமாயணம் 38



சூர்ப்பணகைப் படலம்

2741.
வெய்யது ஒர் காரணம்
   உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ்
   வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம்
   நுழையும் நோன்மையாள்
எய்தினள், இராகவன்
   இருந்த சூழல்வாய்.

கொடியதான ஒரு காரணத்தை உள்ளத்துள் கொண்டிருந்தாள்.
அக்காட்டினில் தனியே வாழ்ந்து வந்தாள்.
உலகெங்கும் விரைவாகப் புகுந்து செல்லும் ஆற்றல் கொண்டவள்.
இராமன் தங்கியிருந்த பூஞ்சோலை பக்கம் வந்தாள்
(சூர்ப்பணகை).


2749.
'எவன் செய்ய, இனிய இவ்
   அழகை எய்தினோன்?
அவன் செயத் திரு உடம்பு
   அலச நோற்கின்றான்;
நவம் செயத்தகைய இந்
   நளின நாட்டத்தான்
தவம் செய, தவம் செய்த தவம்
  என்?' என்கின்றாள்.

'எதைப் பெறுவதற்காக,
இத்தனை அழகை அடைந்த இவன்,
வீணாக, தன் உடலை வருத்தித் தவம் செய்கின்றான்?
புதுமை பல புரியக்கூடிய
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இவன்,
தவம் செய்ய,
அந்தத் தவம், முன்னம் என்ன தவம் செய்திருக்குமோ?'
என்று எண்ணி வியந்தாள்.



2760.
' "எயிறுடை அரக்கி, எவ் 
      உயிரும் இட்டது ஓர் 
   வயிறுடையாள்" என  
      மறுக்கும்; ஆதலால் 
   குயில் தொடர் குதலை, ஒர் 
      கொவ்வை வாய், இள 
   மயில் தொடர் இயலி ஆய், மருவல்
    நன்று' எனா,


'கோரப்பற்களை உடைய அரக்கி,
எல்லா உயிரையும் தன் வயிற்றிலிட்டு நிரப்பிக்கொள்ளும் ஒருத்தி"
எனச் சொல்லி தனை வெறுக்கலாம் என்று எண்ணி,
'குயிலைப் போன்று கொஞ்சிப் பேசுபவளாய்,
கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயுடையவளாய்,
இளம் மயில் போன்ற உருவம் கொண்டவளாய் 
தனை வடிவமைத்துக் கொள்வது நன்று' என்று எண்ணினாள்.



2769.
'தீது இவ் வரவு ஆக, திரு! நின் 
   வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் 
   புண்ணியம்அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
   உறவு?' என்றான்.
வேத முதல்; பேதை அவள் தன் 
   நிலை விரிப்பாள்;

'உன் வருகை நல்வருகை ஆகட்டும்,
திருமகள் போன்றவளே,
செந்நிறமுடையவளே,
நீ இங்கு வந்தது ஒரு புண்ணியம் அல்லவா?
எது உன் ஊர் ? என்ன உன் பெயர்?
யார் உன் உறவினர்?' என்று கேட்டான்,
வேதங்களுக்கெல்லாம் மூலமான இராமன்,
பெண் தன் தன்மையை விளக்கிச் சொல்லலானாள்.


( தொடரும் )

Friday, February 14, 2020

கம்பராமாயணம் 37


சடாயு காண் படலம்

2690.
நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
    கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின;
    சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
    கழுகின் வேந்தையே;

(சீதையோடு இராம இலக்குமணன்)
நடந்தனர் பல காத தூரம்,
கடந்தனர் புனித நதிகள் பல,
தொடர்ந்து நின்றிருந்த மலைகள் பலவற்றை
மலைக்காது தொடர்ந்தனர்,
கடந்தனர் அம் மலைகள் சூழ்ந்திருந்த காடுகளை,
அவ்வமயம்
கண்டனர் சாடாயுவை, கழுகின் காவலனை.


2700.
வனை கழல் வரி சிலை 
   மதுகை மைந்தரை,
அனையவன்தானும் கண்டு 
   அயிர்த்து நோக்கினான்,
'வினை அறு நோன்பினர் 
   அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்;
   புலவரோ ?' எனா 

கட்டிய வீரக்கழல், வில், வலிமை நிறைந்த மக்கள் 
அனைத்தையும் ஜடாயு கண்டான் .
யாராயிருக்கும் என்று ஐயமுற்றான்.
'செய்த வினைகளைப் போக்க விரும்பும் 
தவ முனிவர்கள் அல்லர்;
கையில் வில்லை வைத்திருக்கின்றனர்;
சடைமுடி தரித்திருக்கின்றனர்;
ஒருவேளை ... தேவர்களோ?' என்று எண்ணினான்.



2706.
வினவிய காலையில் 
   மெய்ம்மை அல்லது 
புனை மலர்த்
   தாரவர் புகல்கிலாமையால் 
'கனை கடல் நெடு நிலம் 
   காவல் அழியான் 
வனை கழல் தயரதன் 
   மைந்தர் யாம்' என்றார்.

'யார்?' என ஜடாயு கேட்ட பொழுது 
உண்மையல்லாத எதையும் சொல்லாத,
பூ மாலை அணிந்த இராம இலக்குமணர் 
கடலாற் சூழ்ந்த உலகம் யாவையும் 
காக்கும் வல்லமையுடைய, 
வீரக் கழல்கள் அணிந்த 
தயரதன் மைந்தர் நாங்கள்' என்றனர்.



2714.
'அருணன்தன் புதல்வன்யான்; அவன் படரும் 
   உலகு எல்லாம் படர்வேன்; ஆழி 
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் 
   உயிர்த்த துணைவன்; இமையோரோடும் 
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே 
   வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;
தருணம்கொள் ஒளியீர்!
   சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான்.

அருணனது மகன் நான்;
அவன் சொல்லுமிடமெல்லாம் செல்லும் ஆற்றலுடையவன்.
தன் அரசாட்சியில் அனைத்து பகைவர்களையும் அழித்த 
தயரதனின் உற்ற நண்பன்;
தேவர்களோடு மற்ற சாதியினரை வகைப்படுத்துகையில் 
நான் பிறந்தேன்;
கழுகுகளுக்கெல்லாம் அரசன்;
இளமையோடு ஒளி நிறைந்திருப்பவர்களே,
சம்பாதி என்பவனுக்குத் தம்பி, சடாயு!' என்று 
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.



2729.
'பெரிதும் நன்று; அப் பெருந் 
   துறை வைகி, நீர் 
புரிதிர் மா தவம்; போதுமின்;
   யான் அது 
தெரிவுறுத்துவென்' என்று அவர் 
   திண் சிறை 
விரியும் நிழலில் செல்ல,
   விண் சென்றனன்.


(பஞ்சவடி செல்லும் திட்டத்தைக் கேட்டு)
'மிகவும் சரி;
நீங்கள் அங்கே நீர்த்துறையில் தங்கி 
தவம் புரிய ஏற்ற இடம்;
வாருங்கள் போவோம், 
நான் பாதை காட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டு 
தன் இறக்கைகள் விரித்து,
அந் நிழலில் மூவரும் நடக்க,
வானில் பறந்தான் - ஜடாயு.

( தொடரும் )

Thursday, February 13, 2020

கம்பராமாயணம் 36



அகத்தியப் படலம்

2633.
பண்டைய அயன்
   தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும்
   முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை
   தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை
   களிக்கும் சிந்தையார்.

முதன்முதலில் தோன்றிய பிரம்மானது
புதல்வர்கள் பாலகில்லரும்,
தலை முடி மழித்து தவம் செய்பவர்களும்
மௌன விரதம் மேற்கொண்டவர்களும்
அந்த தண்டக்காரணியம் எனும் காட்டில்
வாழ்கின்ற மற்ற முனிவர் அனைவரும்
இராமனைப் வருவதைப் பார்த்ததும்
பரவசமடைந்தார்கள்.


2656.
ஐந்தும் ஐந்தும் அமைதியின்
   ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர்
   வைகினார்; மா தவர்
சிந்தை எண்ணி, 'அகத்தியற் 
   சேர்க' என,
இந்து-நன்னுதல்
   தன்னொடும் ஏகினார்.

(தண்டக வனத்தில்)
பத்து ஆண்டுகள் துன்பமேதுமின்றி
இராம இலக்குமணர் அமைதியாக வாழ்ந்தனர்.
பெரிய தவ சீலர்களாகிய அம் முனிவர்கள்
ஆலோசித்து 'அகத்தியனைக் காண்க'
எனச் சொல்ல,
பிறைமதி போன்ற நெற்றியுடைய
சீதையுடன் புறப்பட்டனர்.



2685.
'விழுமியது சொற்றனை; இவ் வில் இது 
   இவண், மேல்நாள் 
முழுமுதல்வன் வைத்துளது;
   மூஉலகும் யானும் 
வழிபட இருப்பது; இத்தன்னை 
   வடி வாளிக் 
குழு, வழு இல் புட்டிலோடு கோடி'
 என நல்கி,

(தென் திசை நோக்கிச் செல்ல இருப்பதை இராமன் கூற)
நல்லதே  நீ சொன்னது,
இதோ இங்கிருக்கும் இந்த வில்,
முற்காலத்தில் திருமாலிடம் இருந்தது,
மூன்று உலகும் நானும் தினம் வழிபடுவது;
இது இனி, கூர்மையான அம்புகளோடு 
அம்புப் புட்டிலோடு - உன்னிடம் இருக்கவேண்டியது.
என்று அகத்தியர் இராமனுக்குக் கொடுத்தார்.


2687.
ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி,
    மணல் ஓங்கி,
பூங் குலை குலாவு குளிர் சோலை
    புடை விம்மி,
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓரி
    குன்றின்
பாங்கர் உளதால் உறையுள்
    பஞ்சவடி-மஞ்ச !

உயர்ந்து வளர்ந்த மரங்கள் உண்டு,
பெரிய பெரிய மலைகள் உண்டு,
மணற்குன்றுகள் நிறைய உண்டு,
பூக்கொத்துகள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் உண்டு,
குதித்து ஓடும் அலைகள் நிறைந்த ஒரு ஆற்றின் அருகில்,
மலையின் பக்கத்தில்
பஞ்சவடி எனும் உறைவிடம் உண்டு, மகனே;
(இனி அங்கு போய் இரும் என்று அகத்தியர் சொன்னார்)


( தொடரும் )


Wednesday, February 12, 2020

கம்பராமாயணம் 35


ஆரணிய காண்டம்

விராதன் வதைப் படலம்


2517.
முத்து இருத்தி அவ் இருந்தனைய
   மொய்ந் நகையொடும்
சித்திரக் குனி சிலைக் குமரர்
   சென்று அணுகினார் -
அத்திரிப் பெயர் அருந்தவன்
   இருந்த அமைதி
பத்திரப் பழுமரப் பொழில்
   துவன்று பழுவம்.


முத்துக்கள் ஒன்றை ஒன்று நெருங்கி இருப்பது போன்ற
பல்வரிசையுடைய சீதையுடன்
அழகிய வளைந்த வில்லை ஏந்திய
இராம இலக்குமனர்
அடுத்து சென்று சேர்ந்தது,
அத்திரி என்ற பெயருடைய பெரிய தவ முனிவன்
வாழ்ந்து வந்த, இலையும் பழமும் நிறைந்த
சோலை பல நெருங்கியிருக்கும் வனம்.



2534.
சார வந்து அயல் விலங்கினன் 
   மரங்கள் தரையில் 
பேர, வன் கிரி பிளந்து உக 
   வளர்ந்து இகல் பெறா 
வீர வெஞ் சிலையினோர் எதிர் 
   விராதன் எனும் அக் 
கோர வெங் கண் உரும்ஏறு அன
   கொடுந் தொழிலினான்.


மரங்கள் தரையிலிருந்து பெயர்ந்து விழுமாறு,
பெரிய மலைகள் பிளந்து சிதறுமாறு,
பேருருவம் கொண்டு வளர்ந்து,
கொடிய வீர வில்லை ஏந்திய இராம  இலக்குமனர்
முன் வந்து குதித்து வழிமறித்து நின்றான்,
கோரமான உருவம், அச்சமூட்டும் கண்கள் 
காண்போரைத் துன்புறுத்தும் 
கொடிய தொழில் புரியும் 
விராதன் எனும் ஒருவன்.


2537.
'ஆதி நான்முகன் வரத்தின் எனது 
   ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு 
   யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர் 
   தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது'
   என்று புகல 

நான்முகன் தந்த வரம் உண்டு,
அவ்வரத்தால் என் உயிர் போகாது எனை விட்டு,
எந்த ஆயுதமும் தேவையில்லை எனக்கு, 
இந்த உலகே எதிர்த்துப் போரிட வந்தாலும் 
எனை வெல்வது முடியாத ஒன்று;
அற்பர்களே, உயிர்ப்பிச்சை தந்தேன் உங்கட்கு;
இப்பெண்ணை மட்டும் இங்கு விட்டுவிட்டு 
உடனே போவது உங்கட்கு நல்லது'
என்றான்.


2562.
பொறியின் ஒன்றி, அயல்சென்று 
   திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற 
   நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு 
   உடைய பெற்றிதனினும் 
அறிவு வந்து உதவ, நம்பனை 
    அறிந்து,பகர்வான்.


ஐம்பொறிகளின் இடையில் அகப்பட்டு 
புறத்தே உள்ள சுகங்களை எண்ணித் திரிந்து 
அறிவுக்கெட்டாது அலைந்து திரிந்து,
(இராமன் அருளால்)
நல்வழியில் செல்லும் நிலை உண்டானதால் 
பிரிதல் இல்லாத பக்தி, முன் மிகக் கொண்டிருந்ததால் 
உண்மையான ஞானம் துணை புரிய 
இராமனை உணர்ந்து துதித்து நற்கதி அடைந்தான்
விராடன்.


2584.
திறத்தின் வந்த தீது எலாம் 
அறுத்த உன்னை ஆதனேன் 
ஒறுத்த தன்மை ஊழியாய்!
பொறுத்தி! என்று போயினான்.


என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த தீவினைகளை 
அழித்த உன்னை, மூடன் நான் 
எதிர்த்துச் செய்தவற்றை பொறுத்தருள்க
என்று சொல்லிவிட்டு, விராடன் வானுலகம் சென்றான்.

( தொடரும் )

Tuesday, February 11, 2020

கம்பராமாயணம் 34


2455.
புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,
முக்  கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஓக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்.

நதியில் இறங்கி தலை முழுகினான்,
வேதங்களை நன்கு கற்றுணர்ந்த வசிட்டன் சொல்படி,
கையினால் மூன்று முறை நீரை வார்த்தான்,
ஒரே முறையில் எல்லா உயிர்களுக்கும் அருள் புரியும் புரியும்
பரம்பொருளான இராமன்.


2507.
'ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்
கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்'.

(நான் வரும்வரை அரசனாயிரு என்று இராமன் சொல்ல)
'அப்படியெனில், ஐயா,
பதினான்கு ஆண்டுகள் கழித்து தாங்கள்
பெரிய அகழியுடைய அயோத்தி நகரம் வந்துவிட வேண்டும்,
நாட்டை ஆளும் பணி ஏற்றுக்கொள்ள வேண்டும்,
அவ்வாறில்லாதுபோனால்
தீயில் விழுந்து நான் சாக நேரும்,
இது சத்தியம் ஆகும்,
உம் மேல் ஆணையாகும்' என்றான் பரதன்.

 
2509.
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், 'அரிது' என எண்ணி, ஏங்குவான்,
'செம்மையின் திருவடித்தலம் தந்தீக' என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அழுதான்,
வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டான்,
இராமனை பிரிந்திருத்தல் அரிது என்பதையும்  உணர்ந்தான்,
திருவடி நிலைகள் இரண்டையும் எமக்குத் தந்தருளவேண்டும்'
என்று கேட்டான்.
எல்லாவற்றையும் தந்தருளும் இராமன் தன் இரு
திருவடி நிலைகளையும் தந்தருளினான்.


2514.
நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

(அயோத்தியினுள் நுழையாது, எல்லையில்)
நந்திக் கிராமத்தில் இருந்தபடி
இராமனின் பாதுகைகளை முன்வைத்து
செங்கோல் கொண்டு
சிந்தையில் ஐம்பொறிகளையும் அடக்கி
அங்கேயே தங்கியிருந்து ஆட்சி செய்தான்.
இரவும் பகலும் கண்ணில் நீர் வற்றாது - பரதன்.


2515.
'குன்றில் இருந்தனன்' என்னும் கொள்கையால்,
நின்றவர் நலிவரால், நேயத்தால்' எனா,
தன் துணைத் தம்பியும் தானும் தையலும் 
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான்.


சித்திரக்கூட மலையில் இருப்பதை அறிந்தபடியால்,
அயோத்தி மக்கள் அடிக்கடி வந்து வருந்துவர், அன்பினால்  
என்ற இராமன் கருதி, 
தம்பியோடும், தன் மனைவியோடும் 
தென் திசை நோக்கி நகரத் தொடங்கினான்.



அயோத்தியா காண்டம் முற்றிற்று 

( தொடரும் )

Monday, February 10, 2020

கம்பராமாயணம் 33


திருவடி சூட்டு படலம்

2376.
'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான்.

(குகனை அடுத்து பரத்துவாச முனிவனை சந்தித்தான் பரதன்)

உயர்ந்த திருமுடி சூடி,
உன்னிடம் தானே வந்து சேர்ந்த அரசினை ஆட்சிசெய்யாது,
ஐயா, இப்படி சடைமுடி வளர்த்து
மரவுரி அணிந்துகொண்டு
வனத்தின் பக்கம் வந்த காரணம் செப்பும்
எனக் கேட்டான் பரத்துவாச முனிவன்.


2402.
குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ
மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;
'மிதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான்.

(சித்திரக்கூட மலை மேலிருந்து படை சூழ பரதன் வருவதைக்
கண்ட இலக்குமன் கோபம் கொண்டான்)

குன்று  பொடியாகும்படி உச்சியிலிருந்து
கீழே குதித்தான்
இராமனை நோக்கி விரைந்து வந்தான்.
'உனை மதிக்காது, மதில் சூழ்ந்த நகரத்துப்
படையோடு வருகிறான் பரதன்' என்றான்.


2419.
'பெருமகன் என்வயின் பிறந்த காதலின் 
வரும் என நினைகையும், மண்ணை என்வயின் 
தரும் என நினைகையும்'  தவிர 'தானையால் 
பொரும்' என நினைகையும் புலமைப்பாலதோ?

( இராமன் இலக்குமனனிடம்)
'பரதன் என்மேல் கொண்ட அன்பினால் காண வரலாம் என நினை;
அரசுரிமையை எனக்குத் தர வரலாம் என நினை';
இதை விடுத்து 
'போருக்கு வருகிறானோ ?' என்று எண்ணுவது 
அறிவுள்ளோர் செய்வதா ?


2427.
'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலரடி வந்து வீழ்ந்தனன் 
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே,

'அரசு ஏற்றுக்கொள்ளுதல் அறம்தான் என்று நீ 
எண்ணவில்லை;
இரக்கம் அற்றவனாய் இருந்துவிட்டாய்;
முறை எது என்பதையும்  மறந்து துறந்துவிட்டாய்'
என்று கூறியவனாய் 
தன்னை மறந்து இராமன் பாதங்களில் விழுந்தான்.
இறந்துபோன தந்தையை எதிரில் கண்டவனாய் 
இராமனைக் கண்டான் - பரதன்.


2431.
அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின் 
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் 
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு 
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான்.

அறிதர்கரிய இராமன் தந்தையின் நலம் வினவ,
பரதன், 'ஐயா ! உன் பிரிவு தந்த நோயினால்,
எனைப் பெற்றக் கொடியவள் பெற்ற வரம் எனும் யமனால் 
சத்தியத்தை இவ்வுலகில் நிலைநிறுத்திவிட்டு,
வானுலகம் சென்றுவிட்டான்' - என்றான்.
 

( தொடரும் )


Sunday, February 9, 2020

கம்பராமாயணம் 32



கங்கை காண் படலம்


2308.
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
'துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?' என்று எடுத்த சீற்றத்தான்.

பரத சேனை, கங்கைக் கரையை நெருங்கிய பொழுது
'பவளம் உடைய கடலிலிருந்து நீரை முகந்த கரு மேகத்தைப்
போன்ற அண்ணன் இராமனோடு போர் செய்யவோ
இப்படை வந்திருக்கு?' என்று எண்ணி கோபப்பட்டான் - குகன்.


2311.
கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
'கிட்டியது அமர்' எனக் கிளரும் தோளினன்.

குகன் - .இடைக்கச்சில் உடைவாளை சொருகியவன்,
பற்களால் உதட்டை கடித்துக் கொண்டிருப்பவன்;
கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்;
விழியிலிருந்து தீப்பொறி பறக்க, பார்ப்பவன்,
உடுக்கையை உடையவன்,
ஒலி எழுப்ப ஊது குழலை வைத்திருப்பவன்;
'அருகில் வந்தது போர்' என்று எண்ணி மகிழ
எழும்பும் தோள்களை உடையவன்.


2332.
'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்
    அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கிறான்; தவ வேடம்
   தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
   திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
   இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.

'இவன் (பரதன்) என் நாயகன்
இராமனைப் போலவே இருக்கின்றான்,
அவன் அருகில் நிற்பவன் (சத்துருக்கனன்)
இலக்குவனைப் போல் இருக்கின்றான்;
தவ வேடத்தில் வேறு இருக்கின்றான்;
முடிவில்லாத துன்பத்தில் இருக்கின்றான்,
இராமன் சென்ற திசை நோக்கி வணங்குகிறான்.
பெருமான் இராமன் பின் பிறந்த தம்பியர்
தவறு செய்வாரோ ?' என்றெண்ணினான்.


2366.
கற்றத்தார் தேவரோடும் தொழ நின்ற
   கோசலையைத் தொழுது நோக்கி
'கொற்றத் தார்க் குரிசில் இவர் ஆர்?' என்று
   குகன் வினவ, 'கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
   உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றதால் பெறும் செல்வம், யான்
   பிறத்தலால் துறந்த பெரியாள்' என்றான்.

உறவினர்களும் தேவர்களும் வணங்க,
அங்கு நின்றிருந்த கோசலையை நோக்கி
'வெற்றிமாலை சூடிய பரதா, இவர் யார்?' என்று கேட்க,
'அரசர்கெல்லாம் அரசன் தசரதனின் முதல் மனைவி,
மூன்று உலகையும் படைத்த பிரம்மதேவனைப்
படைத்தவனைப் பெற்றெடுத்தவள்;
இவள் பெற்றிருக்க வேண்டிய பெருஞ்செல்வத்தை
நான் பிறந்ததால் இழந்த பெருமையுடையவள்'
(என்று பரதன் கோசாலையை குகனுக்கு அறிமுகம் செய்தான்)


( தொடரும் )

Saturday, February 8, 2020

கம்பராமாயணம் 31



2190.
ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்,
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ!

ஆணழகன் பரதன் கைகேயி யின் இருப்பிடம் விட்டகன்று
கோசலை இருக்குமிடம் வந்தான்.
தரை பிளவுபடும்படி கீழே விழுந்து,
நிறம் மிக்க நீண்ட கைகளால்
கோசலையின் தாமரைப் பாதங்களைப் பற்றினான்.
கீழேயே கிடந்து அழுது புலம்பினான்.



2218.
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால், அழுது புல்லினாள்.

தன் மனத் தூய்மையை எடுத்துச் சொன்ன பரதனை,
அரச போகத்தைத் துறந்து
கானகம் நோக்கிப் போன இராமன்
திரும்பி வந்தது போன்று எண்ணி மகிழ்ந்தாள்.
அந்த இராமனிடத்தே வைத்த அன்போடு,
பரதனை அழுது தழுவிக்கொண்டாள்.


2231.
என்னும் வேளையில் எழுந்த வீரனை 
'அன்னை தீமையால் அரசன் நின்னையும் 
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே' என முனிவன் கூறினான்.

ஈமக் கடன் செய்யும் பொருட்டு எழுந்த பரதனை 
'உன் அன்னை செய்த தீமையால்,
துன்பம் மிகுதியால்,
அரசன் உன்னையும் துறந்து,
மகன் இல்லை என்று கூறிவிட்டு இறந்தான்'
என வசிட்டன் சொன்னான்.


ஆறு செல் படலம் 

2255.
'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச் 
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும் 
'நஞ்சினை நுகர்' என நடுங்குவாரினும் 
அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணினான்.

'இந்த உலகம் உன் அடைக்கலம்,
அரசபாரம் இனி நீ சுமக்கணும்'
 என வசிட்டன் சொன்னதும் 
'விடத்தை அருந்து' எனச் சொல்ல, 
அதைக் கேட்டவரை விட 
அதிகம் நடுங்கினான்,
பயந்து சோர்ந்தான்.
அருவி போல் கண்ணில் நீர் ஒழுக நின்றான் (பரதன்).


2264.
குரிசிலும் தம்பியைக் கூவி 'கொண்டலின் 
முரசு அறைந்து, 'இந் நகர் முறைமை வேந்தனைத் 
தருதும் ஈண்டு' என்பது சாற்றி, தானையை 
'விரைவினில் எழுக!' என விளம்புவாய்' என்றான்.

பரதன், தம்பி சத்ருக்கனனை அழைத்தான்.
மேகம் போன்று இடியென முழங்கும் 
முரசு அடிக்கச் சொன்னான்.
'இந்நகரின் மரபு படி வேந்தனாக வேண்டிய இராமனை 
அழைத்து வரப்போகிறோம்' என அறிவிக்கவும் சொன்னான்.
'சேனைகளை விரைவாகப் புறப்படும்படி சொல்'
என்றும் சொன்னான்.

( தொடரும் )





Friday, February 7, 2020

கம்பராமாயணம் 30



பள்ளிபடைப் படலம்

(இதற்கிடையில் இராமனின் முடிசூட்டு விழா செய்தியோடு
தூதுவர் பரதனை சந்தித்தனர்)

2109.
'எழுக சேனை' என்று ஏவினன்; எய்தினன்
தொழுது; கேகேயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியோடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.

'தன்னுடன் வந்த சேனை யாவும் அயோத்தி கிளம்புக'
என்று கட்டளையிட்டவனாய்,
கேகேய மன்னன் யுதாசித்தை வணங்கி தொழுது
அவர் சொன்ன செய்தியோடு,
குதிரைகள் பூட்டிய தேரில்
நல்ல நாள், நேரம் என்றெதைப் பற்றியும் சிந்திக்காது,
தம்பி சத்ருக்கனனோடு கிளம்பினான், பரதன்.

2120.

ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோல்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே.

வயல்களில் கலப்பைகள் இல்லை;
இளைய ஆடவர் தோள்களில்
மலர்மாலைகள் இல்லை;
குளிர்ந்த வயல்களில் நெற்கதிர்கள் இல்லை;
நீர் இல்லாததால் தாமரை இல்லை;
தாமரை இல்லாததால், திருமகள்
கோசல நாட்டை விட்டகன்றாள்.


2145.
ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,
'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கை தொழ
வானகம் எய்தினான்; வருந்தல் நீ' என்றாள்.

(கோசலநாடு களையிழந்து இருப்பது கண்டு)
பரதன் வினவ,
எதற்கும் கலங்காத திட சித்தம் கொண்ட கைகேயி
'அசுரர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய சேனை உடைய,
தேன் சொட்டும் மலர்மாலை அணிந்த தசரதன்,
தேவர்கள் கை கூப்பித் தொழ
விண்ணுலகத்தை அடைந்தான்,
நீ இதைக் கேட்டு வருந்த வேண்டாம்' என்றாள்.



2160.
அவ் உரை கேட்டலும், அசனிஏறு என 
வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
'தெவ் அடு சிலையினாய்! தேவி தம்பி என்று 
இவ் இருவோரோடும் கானத்தான்' என்றாள்.

(இராமனைக் காண வேண்டும் என்று பரதன் கூற)
பரதன் சொன்னதைக் கேட்டதும் 
பேரிடி போல இருந்ததை உணர்ந்து,
கொடுஞ்சொற்களைக் கூற வல்ல கைகேயி 
தொடர்ந்து  பேசினாள்,
'பகைவரைக் கொல்லும் வில்லுடைய பரதா!
தன்  மனைவி, தம்பி இருவரோடும் 
இராமன் காட்டில் இருக்கிறான்' என்றாள்.



2167.
சூடின மலர்க் கரம் சொல்லின் முன் செவி 
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று 
ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் 
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!

(கைகேயி தான் பெற்ற வரங்களைக் கூற)
தலை மேல் குவித்து வணங்கிய கைகள் 
காதினைப் பொத்திக்கொண்டன;
புருவங்கள் வளைந்து ஏறி இறங்கி கூத்தாடின;
மூச்சிலிருந்து நெருப்புக் காற்று வெளி வந்தன;
கண்கள் இரத்தத்தைக் கக்கின;

2187.
'ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித் 
 தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர 
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம் 
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன்'. 

'உடன்பட்டு, பாவியான உன் வயிற்றில் பிறந்த 
தீராப் பாவம் நீங்க,
என் துயரம் போக்கிக்கொள்ள,
அந்த அறக்கடவுளே சாட்சியாகும்படி 
மூன்று லோகங்களும் காணும்படி 
நான் அருந்தவம் செய்ய இருக்கின்றேன்'
என்றான் பரதன். 

( தொடரும் )




Thursday, February 6, 2020

கம்பராமாயணம் 29




வனம் புகு படலம்

2000. 
வெயில், இள நிலவே போல்
   விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன
   பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால்
   பூ அளவியது எய்த,
மயிலினம் தடம் ஆடும்
    வழி இனியன போனார்.

சூரியன் தன் கதிர்களை
நில ஒளி போல இடையிடையே வீச,
நெருங்கி வளர்ந்த மரங்கள் நிழல் தர,
மேகம் பனி போன்று குளிர்ந்த
மழைத்துளியைத் தர
பூக்களின் வாசத்தைச் சுமந்து
மெல்லியத் தென்றல் வீச,
மயில் கூட்டங்கள் நடனமாடும் வழியில்,
மூவரும் பயணப்பட்டனர்.


2018.
அருத்தியின் அகம் விம்மும் 
   அன்பினன், 'நெடு நாளில் 
திருத்திய வினை முற்றிற்று 
    இன்று' எனல் தெரிகின்றான்.
பரத்துவன் எனும் நாமப் 
   பர  முனி, பவ நோயின் 
மருத்துவன் அனையானை 
   வரவு எதிர்கொள வந்தான்.


மகிழ்ச்சியில் மனம் பூரிக்கின்ற 
அன்புடையவன்,
நீண்ட நாள் தவம் இன்று பூர்த்தியானது 
என்று புரிந்துகொண்டவன்,
பரத்வாஜன் என்ற திருநாமம் கொண்ட 
பெரிய முனிவன்,
பிறவிப் பிணி போக்கவல்ல இராமனை 
எதிர்கொண்டழைக்க வந்தான்.


2031.
'ஆவது உள்ளதே; ஐய! ;கேள்;
   ஐ-இரண்டு அமைந்த 
காவதப் பொழிற்கு அப் புறம் 
   கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்  
   விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர 
   கூடம் என்று உளதே'.

'சரி நீ சொல்லியபடி, ஐயனே கேள்;
பத்து காத தூரம் 
இச்சோலைக்கு அந்தப் பக்கம்,
தேவலோகத்தை விட இனிய இடம்,
நீங்கள் தங்க உகந்த இடம்;
தேவர்களும் வணங்கத் தகுந்த 
சித்திரக்கூட மலை ஆகும்'
என்று முனிவர் இராமனுக்கு 
வழி காட்டினார்.
 
சித்திரகூடப் படலம் 

2088.
மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும் 
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய 
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.

மாலை வேளை முடிந்த பின்,
இடை இல்லாத சீதையோடு,
கடல் தன் இடத்தை வந்தடைவது போல், 
அம்பு உமிழும் வில்லை உடைய தம்பி 
அமைத்த தவச்சாலையில், தங்கினான், 
தவம் செய்ய வனம் வந்த இராமன்.


( தொடரும் )





Wednesday, February 5, 2020

கம்பராமாயணம் 28


குகப் படலம்

1953.
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

( இராமன் முனிவர்களோடு அமர்ந்திருக்கையில் )
அந்த நேரத்தில்,
ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்
போர் புரிவதில் வல்லவன்,
குகன் என்ற பெயருடையவன்,
தூய்மையான கங்கையில்
வெகுகாலமாய் படகு செலுத்தும் வேலை செய்பவன்
பகைவர்களை அழிக்கும் வில்லை ஏந்தியவன்;
கல் போன்ற திரண்ட தோள் உடையவன்
( அவன் இராமனைக் காண வந்தான்)


1963.
கூவாமுன்னம் இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

அழைக்கும் முன்னே, குகன் வந்துகொண்டிருக்கும்போதே
இலக்குவன் அவனிடம் 'நீ யார்?' என்று வினவினான்.
குகன் அன்போடு வணங்கினான்.
'தெய்வமே ! உன் திருவடிகளை வணங்க வந்தேன்,
கங்கையைக் கடக்க, ஓடம் செலுத்துபவன்,
வேட்டுவச் சாதியினன்,
நாய் போன்று,   நான் உம் அடிமை' என்றான்.


1964.
'நிற்றி ஈண்டு' என்று,  புக்கு 
     நெடியவன் - தொழுது, தம்பி 
'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
      நிமிர்ந்த கூட்டச் 
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
    தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் 
     ஒருவன்' என்றான்.

'இங்கேயே இரு' என்று குகனிடம் சொல்லிவிட்டு,
இலக்குவன் உள்ளே சென்றான்.
இராமனை வணங்கினான்.
அரசே, உன்னைக் காண ஒருவன் வந்திருக்கிறான்,
நிறைய சொந்த பந்தம் சூழ நிற்கிறான்,
உள்ளத்தால் தூயவன்;
தாயை விட நல்லவன்; 
கரைபுரண்டோடும் கங்கையைக் கடக்க உதவும் 
மரக்கலங்களுக்குத் தலைவன் 
குகன் என்ற பெயருடையவன்'
என்று சொன்னான்.


1967.
'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து 
   அன்பினால் அமைந்த காதல் 
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
   அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய எண்ணின் 
   பவித்திரம்; எம்மனோர்க்கும் 
உரியன; இனிதின் நாமும் 
   உண்டனெம் அன்றோ?' என்றான்.

அருமையானபொருட்கள்,
மகிழ்ச்சி பொங்க,
உள்ளத்து அன்பை உணர்த்துமாறு 
கொண்டுவந்துத் தருகிறாய் எனில்,
அவை அமிர்தத்தையும் விட சிறந்தவையன்றோ?
அன்பினால் தரப்படும் எதுவும் புனிதமானதே.
எம்போன்ற தவநெறி மேற்கொண்டவர்க்கும் ஏற்புடையதே;
நாமும் இதை ஏற்றுக்கொண்டு உண்டோமே, இல்லையா?
என்றான்.


1985.
'துன்பு உளதுஎனின் அன்றோ 
   சுகம் உளது? அது அன்றிப் 
பின்பு உளது; 'இடை மன்னும் 
   பிரிவு உளது' என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்;
   முடிவு உள்ளது என உன்னா 
அன்பு உள, இனி, நாம் ஓர் 
   ஐவர்கள் உளர் ஆனோம்;


'துன்பம் இருப்பதனால் தானே 
அதைத் தொடர்ந்து இன்பம் இருக்கிறது.
அதனால், இப் பிரிவிற்குப் பின்னர் 
இன்பம் இருக்கு;
இப்பிரிவையே மனதில் எண்ணியிருக்காதே;
முன்னர் இருந்தோம் நாங்கள் நால்வர்;
அன்பு இன்னும் தொடர்ந்திட, உன்னையும் சேர்த்து  
இன்றோடு ஐவர் ஆனோம்'
என்றான் இராமன். 



( தொடரும் )



Tuesday, February 4, 2020

கம்பராமாயணம் 27




தைலம் ஆட்டு படலம்

1857.
'பூண்ட பேர் அன்பினாரைப்
     போக்குவது அரிது; போக்காது
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது;
     எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை
     ஓர்ந்து என்னை, "அங்கே
மீண்டனன்" என்ன மீள்வர்; இது
     நின்னை வேண்டிற்று' என்றான்.

(தமைப் பின்தொடர்ந்து வந்த நகர மக்கள் இரவில் உறங்குகையில்)
'நம்மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களை
திரும்பப் போகச் சொல்வது கடினம்,
இவர்கள் இன்னும் தொடர்ந்து வனத்தினுள் வர,
ஏதேனும் நேரும் துயரம்;
என் தந்தை போன்ற சுமந்திரனே,
நீ இப்பொழுதே தேரைத் திருப்பவேணும்.
தேர் சக்கரம் திரும்பின தடம் பார்த்து
நாம் நாட்டிற்குத் திரும்பிவிட்டோம் 
என்றிவர்கள் எண்ணக்கூடும்.
அதனால் இவர்களும் நாடு திரும்பக்கூடும்;
இந்த உதவியை நீங்கள் செய்யவேணும்'
என்றான் இராமன்.



1898.
நாயகன் பின்னும் தன் தேர்ப் 
   பாகனை நோக்கி, 'நம்பி
சேயனோ? அணியனோ?' என்று
   உரைத்தலும், தேர் வலானும்,
'வேய் உயர்  கானம், தானும்,
   தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன் என்றான்; என்ற
   போழ்தத்தே ஆவி போனான்.

தசரதன் தன் சாரதி சுமந்திரனைப் பார்த்தான்.
'இராமன் தூரத்தில் வருகிறானா, இல்லை அருகில்
வந்துவிட்டானா?' என்று கேட்டான்.
'மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்குள்
தம்பியோடு, மைதிலையோடு சென்று விட்டான்'
என்று சுமந்திரன் சொன்னான்.
அந்நிமிடமே மன்னன் உயிர் நீத்தான்.


1914.
'செய்யக் கடவ செயற்கு உரிய   
    சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது 
    இகவா' என்ன, இயல்பு எண்ணா 
'மையற் கொடியாள் மகன் ஈண்டு 
    வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து அவனைத் 
    தயிலக் கடலின்தலை உய்த்தான்.

(தசரதன் இறந்தபின்)
செய்தற்குரிய கடமைகளைச் செய்வதற்கு 
உரிமை உள்ள குமாரர்கள் இங்கு இல்லை;
வர வேண்டியது வராது போகாது என்ற 
இயல்பைக் கருத்தில் கொண்டு,
மன மயக்கம் கொண்ட 
கொடியவள் கைகேயி யின் மகன் வந்தபின் 
செய்யவேண்டியவைகளை செய்து முடிப்போம்
என்று எண்ணி, அதுவரை 
பெண்கள் கடலில் கிடந்த தசரதனை 
தயிலக்கடலில் இட்டு பத்திரப்படுத்தினான் வசிஷ்டன்.


கங்கைப் படலம் 

1937.
எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்;
வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை 
கதிர் கொள் தாமரைக் கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார்.

(காட்டினுள் வரும் சீதை, இராமன், இலக்குமணனை)
மூங்கிலால் ஆன தண்டத்தையுடைய முனிவர்கள்
எதிர்கொண்டு வரவேற்றனர்,
துதித்து, இனிய இசை பாடி ஆடினர்;
வீரன் இராமனை, 
ஒளி படைத்த தாமரைக் கண்களை உடையவனை,
பாற்கடல் தந்த அமுதத்தை 
தம் கண்களால் பருகினர்.


1945.
வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு 
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன 
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.

அவள் சிற்றிடைக்கு முன் தோற்று 
வஞ்சிக்கொடி நாணி ஒதுங்க,
அழகிய அவள் நடைக்கு அன்னப்பறவை 
தோற்று பயந்து பின்னடைய 
பாதம் போன்ற தாமரை தண்ணீரில் ஒளிந்துகொள்ள 
கயல் மீன்கள் மறைய 
பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய 
சீதை கங்கையில் நீராடினாள்.

( தொடரும் )