Thursday, February 6, 2020

கம்பராமாயணம் 29




வனம் புகு படலம்

2000. 
வெயில், இள நிலவே போல்
   விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன
   பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால்
   பூ அளவியது எய்த,
மயிலினம் தடம் ஆடும்
    வழி இனியன போனார்.

சூரியன் தன் கதிர்களை
நில ஒளி போல இடையிடையே வீச,
நெருங்கி வளர்ந்த மரங்கள் நிழல் தர,
மேகம் பனி போன்று குளிர்ந்த
மழைத்துளியைத் தர
பூக்களின் வாசத்தைச் சுமந்து
மெல்லியத் தென்றல் வீச,
மயில் கூட்டங்கள் நடனமாடும் வழியில்,
மூவரும் பயணப்பட்டனர்.


2018.
அருத்தியின் அகம் விம்மும் 
   அன்பினன், 'நெடு நாளில் 
திருத்திய வினை முற்றிற்று 
    இன்று' எனல் தெரிகின்றான்.
பரத்துவன் எனும் நாமப் 
   பர  முனி, பவ நோயின் 
மருத்துவன் அனையானை 
   வரவு எதிர்கொள வந்தான்.


மகிழ்ச்சியில் மனம் பூரிக்கின்ற 
அன்புடையவன்,
நீண்ட நாள் தவம் இன்று பூர்த்தியானது 
என்று புரிந்துகொண்டவன்,
பரத்வாஜன் என்ற திருநாமம் கொண்ட 
பெரிய முனிவன்,
பிறவிப் பிணி போக்கவல்ல இராமனை 
எதிர்கொண்டழைக்க வந்தான்.


2031.
'ஆவது உள்ளதே; ஐய! ;கேள்;
   ஐ-இரண்டு அமைந்த 
காவதப் பொழிற்கு அப் புறம் 
   கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்  
   விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர 
   கூடம் என்று உளதே'.

'சரி நீ சொல்லியபடி, ஐயனே கேள்;
பத்து காத தூரம் 
இச்சோலைக்கு அந்தப் பக்கம்,
தேவலோகத்தை விட இனிய இடம்,
நீங்கள் தங்க உகந்த இடம்;
தேவர்களும் வணங்கத் தகுந்த 
சித்திரக்கூட மலை ஆகும்'
என்று முனிவர் இராமனுக்கு 
வழி காட்டினார்.
 
சித்திரகூடப் படலம் 

2088.
மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும் 
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய 
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.

மாலை வேளை முடிந்த பின்,
இடை இல்லாத சீதையோடு,
கடல் தன் இடத்தை வந்தடைவது போல், 
அம்பு உமிழும் வில்லை உடைய தம்பி 
அமைத்த தவச்சாலையில், தங்கினான், 
தவம் செய்ய வனம் வந்த இராமன்.


( தொடரும் )





No comments:

Post a Comment