Monday, February 3, 2020

கம்பராமாயணம் 26



1727.
மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு
    விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த
     தடக் கையானை,
'என் அத்த! என் நீ இமையோரை
    முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துவதற்கு
   ஏது?' என்றான்.

மின்னல் போன்று கோப நெருப்பு பிரகாசிக்க
பொன் நிற மேனியையும்
மேகம் போன்று வாரி வழங்கும்  கையினையும்
உடைய இலக்குவனை நோக்கி
'என் தலைவ,
(நடந்ததெல்லாவற்றுக்கும் காரணமான) தேவர்களை இகழாதே,
யுத்த முனைப்புடன் வில்லேந்தி நிற்கும்படி
இப்போது என்ன ஆயிற்று?'
என்று இராமன் இலக்குவனைக் கேட்டான்.



1734.
'நதியின் பிழை அன்று 
   நறும் புனல் இன்மை; அற்றே 
பதியின் பிழை அன்று;
   பயந்து நமைப் புரந்தாள் 
மதியின் பிழை அன்று;
   மகன் பிழை அன்று; ,மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு 
   என்னை வெகுண்டது?' என்றான்.

ஆற்றில் சில காலம் நீரில்லை எனில் 
அது நதியின் பிழை இல்லை;
அதுபோலவே,
(எனைக் காடு போகச் சொன்னது)
தந்தையின் பிழை இல்லை,
பெற்று நமை வளர்த்த கைகேயி யின் 
அறிவின் பிழை இல்லை;
அவள் மகன் பரதனின் பிழை இல்லை;
விதியால், ஊழ்வினையால் விளைந்த பிழை இது;
இதற்காக இவர்களை நீ கோபிப்பது எதற்கு?
என்றான் இராமன்.


1827.
'பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது 
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும் 
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின் 
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?' என்றாள்.

'இரக்கம் இல்லாது, மனதில் ஒரு அன்பு இல்லாது 
எனை விட்டு விலகிச் செல்கின்றாய்;
பிரளய காலத்து சூரியன் சுடுவான் என்பது 
எவ்விடத்துள்ளது ?
இங்கே உனைப் பிரிந்து, தவித்து,
தனிமையில் ஏங்கி, மெத்தை சுட்டு 
இதைவிட சுடுமோ அந்த பெருங்காடு ?' 
எனக் கேட்டாள் சீதை.


1835.
சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் 
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?

மரவுரி அணிந்து சீதை பின்னே செல்ல,
கையில் வலிய வில்லேந்தி இலக்குவன் முன்னே செல்ல,
கார் மேக வண்ணன் இராமன் போவதைப் பார்த்து 
அவ்வூர் மக்கள் அடைந்த துன்பத்தை 
எடுத்துக் கூறவும் இயலுமோ?



( தொடரும் )

No comments:

Post a Comment