Monday, February 10, 2020

கம்பராமாயணம் 33


திருவடி சூட்டு படலம்

2376.
'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான்.

(குகனை அடுத்து பரத்துவாச முனிவனை சந்தித்தான் பரதன்)

உயர்ந்த திருமுடி சூடி,
உன்னிடம் தானே வந்து சேர்ந்த அரசினை ஆட்சிசெய்யாது,
ஐயா, இப்படி சடைமுடி வளர்த்து
மரவுரி அணிந்துகொண்டு
வனத்தின் பக்கம் வந்த காரணம் செப்பும்
எனக் கேட்டான் பரத்துவாச முனிவன்.


2402.
குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ
மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;
'மிதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான்.

(சித்திரக்கூட மலை மேலிருந்து படை சூழ பரதன் வருவதைக்
கண்ட இலக்குமன் கோபம் கொண்டான்)

குன்று  பொடியாகும்படி உச்சியிலிருந்து
கீழே குதித்தான்
இராமனை நோக்கி விரைந்து வந்தான்.
'உனை மதிக்காது, மதில் சூழ்ந்த நகரத்துப்
படையோடு வருகிறான் பரதன்' என்றான்.


2419.
'பெருமகன் என்வயின் பிறந்த காதலின் 
வரும் என நினைகையும், மண்ணை என்வயின் 
தரும் என நினைகையும்'  தவிர 'தானையால் 
பொரும்' என நினைகையும் புலமைப்பாலதோ?

( இராமன் இலக்குமனனிடம்)
'பரதன் என்மேல் கொண்ட அன்பினால் காண வரலாம் என நினை;
அரசுரிமையை எனக்குத் தர வரலாம் என நினை';
இதை விடுத்து 
'போருக்கு வருகிறானோ ?' என்று எண்ணுவது 
அறிவுள்ளோர் செய்வதா ?


2427.
'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலரடி வந்து வீழ்ந்தனன் 
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே,

'அரசு ஏற்றுக்கொள்ளுதல் அறம்தான் என்று நீ 
எண்ணவில்லை;
இரக்கம் அற்றவனாய் இருந்துவிட்டாய்;
முறை எது என்பதையும்  மறந்து துறந்துவிட்டாய்'
என்று கூறியவனாய் 
தன்னை மறந்து இராமன் பாதங்களில் விழுந்தான்.
இறந்துபோன தந்தையை எதிரில் கண்டவனாய் 
இராமனைக் கண்டான் - பரதன்.


2431.
அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின் 
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் 
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு 
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான்.

அறிதர்கரிய இராமன் தந்தையின் நலம் வினவ,
பரதன், 'ஐயா ! உன் பிரிவு தந்த நோயினால்,
எனைப் பெற்றக் கொடியவள் பெற்ற வரம் எனும் யமனால் 
சத்தியத்தை இவ்வுலகில் நிலைநிறுத்திவிட்டு,
வானுலகம் சென்றுவிட்டான்' - என்றான்.
 

( தொடரும் )


No comments:

Post a Comment