Saturday, February 1, 2020

கம்பராமாயணம் 24




1522.  'கண்ணே வேண்டும்' எண்ணினும்
                 ஈயக் கடவேன்; என்
           உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே
                 உனது அன்றோ?
           பெண்ணே! வன்மைக் கேகேயன் மானே
                 பெறுவாயேல்
           மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
                 மற' என்றான்.

'கண்களைக் கேள் தருகிறேன்,
என் உடலின் உள்ளே உள்ள உயிர் வேண்டுமெனினும் 
இப்பொழுது அதை உன் வசம் ஆக்குவேன்,
பெண்ணே! வள்ளல் கேகேயன் மகளே,
நீ பெற விரும்பும் மண்ணை
இப்பொழுதே எடுத்துக்கொள்.
மற்றொரு வரத்தை மறந்துவிடு' என்றான் தசரதன்.



1538.   'வீய்ந்தாளே இவ் வெய்யவள்' என்னா 
                    மிடல் வேந்தன் 
             'ஈந்தேன்! எந்தேன்!' இவ்வரம்;
                     என் சேய் வனம் ஆள
            மாய்ந்தே நான் போய் வான் உலகு 
                    ஆள்வென்; வசை வெள்ளம் 
            நீந்தாய், நீந்தாய், நின் 
                  மகனோடும் நெடிது!' என்றான்.

'கேட்டது கிடைக்காவிட்டால் உயிர் விடுவேன்' என்றதால் 
வலிமை பொருந்திய தசரதன்,
'தந்தேன் தந்தேன், நீ கேட்ட வரம்;
என் மகன் காடு புக 
நான் வானம் புகுவேன்;
இந்த உலகம் எனும் பழிக்கடலைக்  
கடக்க முடியாது,
நெடுங்காலம் 
 நீ, உன் மகனோடு 
நீந்தி நீந்திக் கிடப்பாய்' என்றான்.



1601.   " 'ஆழி சூழ் உலகம் எல்லாம் 
                   பரதனே ஆள, நீ போய்த் 
             தாழ் இருஞ் சடைகள் தாங்கி 
                   தாங்க அருந் தவம் மேற்கொண்டு 
             பூழி வெங் கானம் நண்ணி 
                   புண்ணியத் துறைகள் ஆடி,
             ஏழ்-இரண்டு ஆண்டின் வா' என்று 
                   இயம்பினன் அரசன்" என்றாள்.

'கடல் சூழ்ந்த இந்த உலகை 
பரதன் அரசனாயிருந்து ஆள,
நீ சடை முடி வளர்த்து 
அருந்தவம் மேற்கொண்டு 
புழுதி நிறைந்த வனத்தில் தங்கி 
புண்ணியத் தலங்களில் நீராடி 
பதினான்கு ஆண்டுகள் கழிந்து வா 
என்று அரசன் சொன்னான்' என்றாள்.


1604.   'மன்னவன் பணி அன்றாகின்,
                 நும் பணி மறுப்பெனோ? என் 
            பின்னவன் பெற்ற செல்வம் 
                 அடியனேன் பெற்றது அன்றோ?
            என் இனி உறுதி அப்பால்?
                  இப் பணி தலைமேல் கொண்டேன்;
            மின் ஒளிர் கானம் இன்றே 
                  போகின்றேன்; விடையும் கொண்டேன்;

'அரசன் கட்டளையோ,
அன்னை தங்கள் கருத்தோ, மறுப்பேனா ?
என் தம்பி பரதன் பெற்றது, நான் பெற்றதன்றோ?
இதை விட நன்மை வேறு எது?
இந்தக் கட்டளையை தலைமேல் கொள்வேன்
மின்னல் போல் ஒளி வீசும் காட்டிற்கு 
இப்பொழுதே போகிறேன்;
விடை பெற்றுக் கொண்டேன்'
என்றான் இராமன்.


( தொடரும் )

No comments:

Post a Comment