Sunday, August 26, 2018

பொன்மாலைப் பொழுதில் 34


264. அடேய் அழகா, அற்புதா,
தினம் உனைக் காண, அது போதும்.
உன்னோடு கண்டபடி சிரித்துப் பேசிப் பழக, அது போதும்.
நீ செல்லுமிடமெல்லாம் உன் விரல் கோர்த்தப்படியே சுற்றுவது போதும்.
உன் கவிதைகளைப் படிக்கையில் பரவசம் பிறக்குதே, அது போதும்.
எங்குனை இழுத்துச் சென்றாலும் துணையாய் வருவாயே, போதும்.
சாப்பிடுகையில் 'ஊட்டிவிடவா?' என்று கேட்பாயே, அது போதும்.
வஞ்சியை வசீயம் செய்துவிட்ட
*வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்*

263. வாழ்க்கையிலுண்டு பல இக்கட்டு
அசந்தால் உன் திறமைகள் போகும் திருட்டு
கலங்காது போராடு
அயராது போட்டியிடு
நற்சிந்தனைகளை நெஞ்சில் புகட்டு
நீ முன்னேற முன்னேற தினம் கிட்டும் வசை தோல்வி திட்டு
காதில் கொள்ளாது காரியம் ஆற்றிடு
உன் உழைப்பைக் காட்டு
புது யுக்திகளைக் கடைபிடித்திடு
பாராட்டப் பார்க்கப் பணிந்திடு
வெற்றி கிட்டும், மகிழ்ந்திடு
கர்வம் கொள்ளாதிருந்திடு
நெஞ்சைக் கொஞ்சம் அமைதிப்படுத்திடு
காது குளிர மெல்ஸிசைப் பாட்டு
ஒருவகையில் இதுவும் தாலாட்டு
இதோ இன்று *நிலவே முகம் காட்டு*


262 திடீரென்றெனக்குப் பொறையேற
ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தாய், மகிழ்ச்சி.
நூலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு சில புத்தகங்கள் கேட்க,
தேடி எடுத்துத் தந்தாய், மகிழ்ச்சி.
நானெது சொல்லினும்
சிரித்த முகத்தோடு நீ  செய்வது கண்டு பெருமகிழ்ச்சி.
*
ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்க,
மெதுவாய் நீ என்னை நெருங்க
'முத்தம் தரணுமா ?' என்று நான் வினவ,
'மதி தெரிய, மழை பொழிய, மடியில் நீ கிடக்க ...' கவிதை மட்டும் பாடிவிட்டுப் போய்விட்டாய்.
*
இதோ ... இன்று ...
காத்திருக்கிறேன், ஏமாற்றாது வா.
எனை மீண்டும் மகிழ்ச்சியில் திழைத்திடச் செய், வா.
நீ சொன்னபடியே, இது மதி தெரியும்
*மாலை நேரம், மழை தூறும் காலம்*


261. இன்றென்ன சொல்ல என்றெண்ண
எதுகை மோனையோடு ஏழெட்டு வரிகள் எடுத்தியம்பினாய்.
எவ்வழி என்வழி என்று நான் தேடிக்கிடக்க
இவ்வழி நல்வழி என்று நீ அழைத்துச் சென்றாய்.
சோகத்தில் நான் துவண்டிருக்க
தோள் தந்தென் துயர் துடைத்தாய்.
தாகத்தில் தவித்தேன், பருக பானகம் தந்தாய்.
*நிழல் வேண்டி நின்றேன், மேகமென*

260. இதுவரை என் மனம் இப்படி சஞ்சலப்பட்டதில்லை.
பார்க்குமெல்லாவற்றிலுமொரு பரவசம் பிறந்ததில்லை.
உள்ளத்திலொரு புத்துணர்ச்சி, இதுவரை  உணர்ந்ததில்லை.
கனவுகள் கருப்பு வெள்ளையில் மட்டும் என்று படித்திருக்க,
என்னுறக்கத்தின் உட்புகுந்து உள்ளத்துணர்வுகளில் வர்ணமிறைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறேன்.
இசையிலார்வம் இருக்கெனினும்
ஸ்வர வரிசையிலிதுவரை சிந்தித்ததில்லை.
எதனாலிப்படியொரு மாற்றம் ?
இதெப்படி நிகழ்ந்திருக்குமென்று  யோசித்திருக்க,
இத்தனைக்கும் காரணமான அந்த *ஒரு பொன்மானை நான் காண ... தகதிமிதோம்*

259. தவறு தான், ஒத்துக்கொள்கிறேன்.
வேலை வேலை என்றோடி தேவையற்ற செயல் பல செய்தது தவறு தான்.
பணம் தேடும் பயணத்தில் பாவையுன் குணம்  மறந்துத் திரிந்தது தவறு தான்.
கன்னியுன் கட்டழகை வர்ணித்தக் காதல் வார்த்தைகள் காலப்போக்கில் காற்றில் கரையவிட்டது தவறு தான்.
சீற்றத்தில் சுடுசொற்கள் பலவற்றை சிந்திவிட்டு விலகி நின்றது தவறு தான்.
ஆப்பக்குழி கன்னத்தில் அதரம் பதித்தது மறந்து அறைந்தது தவறு தான்.
எல்லாமே என் தவறு தான், ஏற்றுக் கொள்கிறேன், என்னுயிரே ...
*ஆருயிரே எனை மன்னிப்பாயா ?*

258. பிடித்திருக்கு என்றால் ... அதற்குப் பத்து காரணங்கள் சொல்லி கன்னி மனதைக் குழப்பணுமா என்ன ? சண்டாளா;

வேதியல் மாற்றங்களை விலாவாரியாய் படித்திருக்க, இன்று கணக்குப் பரிட்சையாம். படுபாவி படுபாவி.

வெயிலில் சிரித்துக்கொண்டே தனியே நடுவீதியில் நின்றிருந்தேனாம், வத்தி வைத்து விட்டார்கள். இதற்கும் நீ தானடா காரணம்.

இன்று காலையில் 'குட்மார்னிங் அங்கிள்' என்று சொல்ல, தூக்கக் கலக்கம் என்று போகவேண்டியது தானே, அப்பப்பா காதில் ரத்தம் வரவர அறிவுரை, அப்பாவை அங்கிள் என்று அழைத்ததற்கு.

அடுத்து நீ என்னை என்ன செய்ய வைக்கப் போகிறாய் என்று பயந்தபடியே இருக்கிறேன், புரியாமலேயே எனைப் படுத்தி எடுக்கும்  இது, *என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?*

257. கந்தர்வ விவாகம் செய்து கொண்டு 'இல்லை' என்று பொய் சொல்லவில்லையா துஷ்யந்தன்;

'தலைமுடியைக் கண்டேன், தாளம்பூவே சாட்சி' என்று பொய் சொல்லவில்லையா நான்முகன்;

தான் க்ஷத்ரியன் இல்லை என்று பொய்  சொல்லி வில் வித்தை கற்கவில்லையா  கர்ணன்;

மண்ணை நான் திங்கவில்லை என்று பொய் சொல்லவில்லையா மாயக் கண்ணன்;

நீ மட்டும் தயங்குவதேனடி பெண்ணே?
உன் காதலன் நான் தானென்று
*ஒரு பொய்யாவது சொல் கண்ணே*

Tuesday, August 21, 2018

பொன்மாலைப் பொழுதில் 33


256. அருந்தவத்தில் அமர்ந்திருக்கையில்
ஆக்கையில் அபூர்வ அதிர்வலைகள் அனுபவித்தேனே,
ஆண்டவன் அருள் அளித்துவிட்டானோ ?

எழுதத் தொடங்கையில்
கோவில் மணியோசை காதில் கேட்குதே,
இன்றிதை யாரேனும் படித்துப் பாராட்டிவிடுவார்களோ ?

இன்னும் இரு வரி எழுதலாம் என்றால்
கற்பனைக் குதிரை பாய்ந்தோட மறுக்குதே,
காதல் மை தீர்ந்துக் காய்ந்துப் போயிருக்குமோ ?

ஆகா, அதோ அங்கே,
*தோகை இளமயில் ஆடி வருகுதே,
வானில்  மழை வருமோ ?*

255. காலையில் விழித்து
'முருகா, க்ருஷ்ணா' என்று தெய்வ நாமம் சொல்லியழைத்து,
சிவபுராணம் ஒலிக்கவிட்டு, தொடர்ந்து பாடி
அம்மாவைக் கொஞ்சி காபி குடித்து
அமைதியாய் யோகா செய்து
மெல்லக் குளித்து அழகாய் உடுத்தி ... இதெல்லாம் அப்போது;
கிமு கிபி போல் உமு உபி; உனைப் பார்க்குமுன், பார்த்து பழகிய பின்.
இப்பொழுதெல்லாம் இமையின் இடையில் நீ நின்றிருக்க,
எங்கிருந்து நான் உறங்க?
'எந்திரி.. டீ எருமை' என்று யாரோ தொடர்ந்து கத்துவதைக் கேட்டுக் கனவு கலைகிறது.
'எவ்ளோ நேரம் குளிப்பே, காஃபி ஆறுதுல்ல ?' என்ற சத்தம் பலமுறை கேட்கிறது.
எதை உடுத்த என்று குழம்பி, நீ என்ன நிறத்தில் உடுத்தியிருப்பாய் என்று யோசித்து ...
உனக்காகக் காத்திருந்து,
நீ பார்க்காது போனால் வருந்தி, பேசாதிருந்தால் உள்ளே அழுது ...
முன்பெல்லாம் நான் உண்டு என் வேலையுண்டு என்றிருந்த என்னை இப்பொழுதெல்லாம் உனைப் பற்றி எண்ணி இருப்பதே வேலையாகி,
என்னை இப்படி தலைகீழாய் மாற்றிவிட்ட நீ
*எங்கிருந்து வந்தாயடா ?*

254. கொஞ்சம் நீளம் தான், கவிதையைச் சொன்னேன்.
இது எப்போது நடந்தது என்றால், சரி அது  கடைசியில்.
ஹாஸ்டலில் அறையில் இரவில்
தடையின்றி துயிலத் தயாராக,
கதவு மெதுவாய் சுரண்டப்பட அவசரமாய் ஒரு துண்டை எடுத்து சுற்றிக்கொண்டு திறக்க,
என்னவள் என் கற்பனைகளுக்கும் கவிதைகளுக்கும் சொந்தக்காரி, சட்டென்று உள்ளே நுழைந்தாள்.
'என்னடி இந்நேரத்துல?' என்றேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரில டவுட்டு' என்றாள், சொல்லித் தந்தேன்.
H2SO4 க்கும் CuSO4 க்கும் வேறுபாடு கேட்க, சொன்னேன்.
ட்ரான்சிஸ்டருக்கும் கசின் சிஸ்டருக்கும் வித்யாசம் வினவ விளக்கினேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே பையிலிருந்து அதை எடுத்தாள்.
எதை என்று சொல்லிவிட்டால் இந்தக் கவிதைக்கு 18+ முத்திரை குத்தவேண்டியிருக்கும், எனவே உங்கள் கற்பனைக்கு அதை விட்டு விடுகிறேன். 
'இது என்னடி?' என்று கேட்டேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பொளந்து கட்டுற, அத்தியாவசியமான இது என்னன்னு தெரியாது ?' கேட்டாள்.
'தெரியும், இப்போ இங்கே எதுக்கு ?' என்று நான் கேட்க,
'மூடிக்கோ' என்றவள் சமிக்ஞையில் பதில் தர,
அதையும் தொடர்ந்து அமெரிக்க அணு ஆயுதக் கொள்கையையும் ஐரோப்பாவின் வளர்ச்சியையும் கலந்தாலோசித்து ...
இதெல்லாம் நடந்தேறியது
*ஏப்ரல் மாதத்தில், ஓர் அர்த்த ஜாமத்தில்...*


253. இப்பொழுதெல்லாம் நீ என்னிடம் விரும்பிப் பழகுவதில்லை.
சரியாய் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.
ஏன் பல நாட்கள் பேசாதே தவிர்த்துத் தனித்திருக்கிறாய்.
என் தேவை தீர்ந்திட்டதோ ? எனை வெறுக்கத் தொடங்கி விட்டாயோ ?
ஆனால் என்னால் உனை மறக்கவோ தவிர்க்கவோ முடியாது.
நீ ஒட்டாதிருந்தாலும் நான் உனை விட்டு விலகாதிருப்பேன்.
நீயாய் எனை நாடி வரும் வரை உனக்காகக் காத்திருப்பேன்.
எனக்குத் துணையாய் பழைய நினைவுகளும் உன் கவிதைகளும்.
கூடவே அடிக்கடி நாம் விரும்பிக் கேட்கும்  சில பல பாடல்களும்.
இப்போது கூட எங்கோ ஒலிக்கிறது.
இங்கிருந்தே கேட்டு மகிழ்கிறேன் 
என் நெஞ்சக் குமுறலை ஆற்றியபடி எங்கிருந்தோ
*எவனோ ஒருவன் வாசிக்கிறான்*

252. சிறிது சிறிதாக அரிக்கப்பட்ட முள்ளங்கி, வெள்ளை நிலா
நெய் வாசத்தோடு சூடான சாம்பாரில் மிதக்குதே, இட்லி நிலா
~நீ கூடத் தான் இழுத்து அடக்கி வைத்திருக்கிறாய், இரண்டு அழகிய~
உன் கண்ணில் வெள்ளை மேகங்களிடையில் மிளிருதே, கருப்பு நிலா
நீ வெட்டி எறிந்த நகங்களெல்லாம் பிறைநிலா
சைவம் என்ற போதிலும் கணக்கில் எனக்குக் கிடைத்ததோ, முட்டை நிலா
பெருமாளைப் பார்த்த பரவசம் நீங்குமுன் பரிசாய் லட்டு நிலா
தலையைத் தூக்கிப் பார்க்கத் தெரியும்
*நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* 

251. இலக்கில்லாது சிட்டுக்குருவியாய் இங்கங்கு எனச் சுற்றினேன்.
விசை ஏற்றி பருந்தாய் எனை மாற்றிப் பல திசையிலும் பறக்கக் கற்றுத் தந்தாய்.

கருப்பில் கோடு வரைந்து ஓவியமென்று உளறி வந்தேன்.
வர்ணங்களை இரைத்து வரையக் கற்றுத் தந்தாய். 

எதையோ தட்டி இசை என்று சொல்லி பாட முயற்சித்தேன்.
சரிகமபதநி யும் ஸ்வரம் பிரிக்கவும் கற்றுத் தந்து மெல்லிசையை மெல்ல எனை உணர வைத்தாய்.

இன்று எங்கோ காண முடியாத தூரத்தில் மறைந்து நிற்கிறாய்.
ஒரு முறை எனக்குன் தரிசனம் தா.
*உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான்  எழுதுவேன் காற்றில் தானே*

Monday, August 6, 2018

பொன்மாலைப் பொழுதில் 32


250. புடவை கட்டி, பூ பொட்டு வைத்து
'தேவதையாய்த் தெரிகிறாய்' என்றால்
மூன்று முறை கண் சிமிட்டிச் சிரிக்கிறாய்.
*
'காபி சாரி சாரி டீ ப்ரமாதம்' என்றால்
'அது பாயாசம்' என்று சொல்லி எனை பயமுறுத்துகிறாய்.
'ஹிஹி முந்திரி காணும்' என சமாளிக்க எண்ண முறைக்கிறாய்.
*
சங்க கால வார்த்தைகளை
இங்கு அங்கு தூவி கவிதை சொன்னால்,
கை தட்டி பாராட்டி முத்தம் தருகிறாய்
*
திரைப்படத்தில், (என்) தொடையில் தட்டி சிரித்து மகிழ்கிறாய்.
என் விரலை வளைத்து உன் வாயில் வைத்து விசிலடிக்கிறாய்.
துணிக்கடையில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு 'பின்னாலேயே வந்துடாதே' என்று ஞாபகப்படுத்தி விட்டு உடை மாற்றச் செல்கிறாய்.
*
மொத்தத்தில்
உன் தூண்டில் விழிகளால்
கண் பேசும் மொழிகளால்
எனை மொத்தமாகத்
*திருடுகிறாய் ... திருடுகிறாய்*

249. மிகவும் கட்டுப்பாடோடு தான் வாழ்ந்து வந்தேன்.
கல்லாய், அலை பாயாது நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்தேன்.
என்றுனைப் பார்த்தேனோ, மீசையில்லா பாரதியாய்த் தெரிந்தாய்.
அகந்தை ஆணவம் அணுவளவும் அண்டாது அளவாடினாய்.
அழகாய் நீ பாட, அதற்கு நான் அர்த்தம் சொல்ல அமைதியாய் நீ செவி மடிக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் என் நெஞ்சைக் களவாடிவிட்டாய்.
காதலை மறைக்க விரும்பினேன்
கோபத்தைத் துணைக்கு அழைத்துக்  கொண்டேன்.
காணாது மறைந்து நின்றேன்.
கொதித்துக் கிடக்கும் எனைக் குளிர்விக்க நினைத்தாயோ, காதலே ?
மெல்லக் கதவு திறந்து, தென்றலாய்க்  *காற்றே என் வாசல் வந்தாய்*.

247. இதோ இதோ கிளம்பிவிட்டேன்.
ஒரு நாழிகையும் இனி காலம் தாழ்த்தாது துள்ளிக் குதித்துச் செல்லப் போகிறேன்.
அவனின் நீல வர்ணத்திற்கேற்றார் போல் நானும் நீல அட்டிகை அணிந்துகொண்டேன்.
அவன் குரலுக்குத் தேனும் குழலுக்குக் குஞ்சலமும் எடுத்துக் கொண்டேன்.
அரையில் அவன் அணிய அழகுப் பட்டாடை ஒன்று என் பரிசாய்த் தரப் போகிறேன்.
போனமுறை தான் இடையில் அவன் என்னவோ எழுத ஆடை நெகிழ்ந்து, இந்த முறை கவனமாய் இறுக்கி அணிந்து கொண்டேன்.
ஏராளமானோர் அவனுக்காய் காத்திருக்க,
சந்தோஷமாயிருக்கிறது எனக்காகக்
*காத்திருப்பான் கமலக் கண்ணன்*


246. இதுதான் காதல் என்றுப் புரிந்துப் போனது.
இனி எல்லாம் நீ தானென்றுத் தெரிந்துப் போனது.
தினம் தினம் இருவரும் சேர்ந்தே சுற்ற, பேசிச் சிரித்துப் பழக முடிகிறது.
இப்போது தானே விடிந்ததென்று இருக்கும், ஆனால் அதற்குள் இருள் சூழ்ந்து நமைப் பிரிக்கும்.
இரவெல்லாம் நீ அருகில் இல்லாது ஏக்கமாயிருக்கும்.
முன்பெல்லாம் உறக்கம் வரும், உறங்கக் கனவு வரும், கனவில் நீ வருவாய்.
இப்போல்லாம் உறங்கினால் தானே கனவு வர; எப்போது விடியும் என்று நான் காத்திருக்க;
எனக்கு உன்னைப் பார்க்கணும், அதற்கு இரவு முடியணும், பொழுது விடியணும்.
அதனால் *அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவிடச் சொல்லுகிறேன்*

245. பெண்ணைப் பார்த்ததும் பரவசம் பொங்கணுமாம்,
எனக்கு எந்த பெண்ணைப் பார்த்தாலும் ... அதை விடுங்க,
அழகாயிருந்தாள், சேலை சுற்றிய சோலை, பூ சூடிய பூவை.
நளினம் அடக்கம் அமைதி அனைத்து நல்ல பழக்கங்களும்.
சிரித்தேன், மெல்லச் சிரித்தாள்,
பெயர் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கொஞ்ச நாள் பழகியாச்சி
அவளுக்கும் பிடித்திருக்காம், சுற்றி வளைக்காது சொல்லி விட்டாள்.
இப்பொல்லாம் ஒன்றாய்த் தின்று அருகருகில் அமர்ந்து படம் பார்த்து;
இன்று மாலை ... முதல் முத்தம் .... உங்க வாழ்த்து வேண்டி;
சம்மதம் சொல்லணும்னு சாமிகிட்ட
*நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சி*


244. இன்னும் எத்தனை நாள் விழித்து கழித்து உண்டு உறங்கிக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் கண்டு ரசித்து சுகித்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் உழைத்து களைத்து அயர்ந்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பாவப் பொருள் ஈட்டி, சுமந்துத் திரியப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் ஏய்த்து, பிடுங்கித் தின்று உயிர் வாழப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பொய்யாய் மெய்யைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழப் போகிறேன்?
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்துப் பட்ட கடனைத் தீர்க்கப் போகிறேன்?
பலவித பித்தலாட்டங்களோடு வாழும் நானொரு பொய்யனே.
கருணை காட்டு மெய்யனே
*பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே*


243. பரிசுதான், அதற்காக இத்தனைப் புடவையா?
பாவி நீ தான் ஆடை அணியவே விடுவதில்லையே, பொறம்போக்கு.
அறத்துப்பால் பொருட்பால் வித்தியாசம் தெரியாது உனக்கு,
காமத்துப்பாலை மட்டும் கசடறக் கற்று, கற்பிக்கிறாயே, எப்படியடா ?
உன் வாய் சுவைப்பது சைவமென்ற போதினும் உமிழ்வதென்னவோ சுத்த அசைவமேயாம்.
தனிமையில் படிக்கையிலேயே வெட்கம் வெட்கமாய் இருக்கிறதே, இப்படியெல்லாமா வர்ணிச்சி எழுதுவாய்ங்க எருமை.
இப்படிப் பட்டக் கவிதைகளைப் படிச்சிட்டு இனி எப்படி உறங்க ?
என்னுள்ளும் கவிதை பொங்க !
மண்டு
நீ இப்பூவைச் சுற்றும் வண்டு
கனவில் வந்து நோண்டும் நண்டு
உன் நினைவில் *தூங்காத விழிகள் ரண்டு*