Sunday, April 22, 2018

பொன்மாலைப் பொழுதில் 20

149. என்னருமைக் காதலா,
எந்நாளுமெனக்குத் துணையாய் இருப்பாயா
நான் பயணிக்கையில் கூடவே பயணத்திடு.
உன்னோடு வருவேன், எனை அனுமதித்திடு.
உனக்கென்ன வேண்டுமோ சொல், எனக்கென்ன வேண்டுமென்றுக் கேள்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் எனையுன் நெஞ்சில் எண்ணிக்கொள்.
எனைக் கெஞ்சிக் கொஞ்சி ரசித்திடு நீ.
உனைப் பரவசத்தில் ஆழ்த்திப் பயனடைவேன் நான்.
தூக்கத்தில் எனைத் தொந்தரவு செய்
ஏக்கத்தில் இருக்கையில் ஆதரவு தா.
கோபத்தில் திட்டிடு, சல்லாபத்தில் தண்டனை பெற்றிடு.
கை இணைத்துக் கொள்
காதல் கவிதைகள் தினம் சொல்.
தினம் ஒரு பத்து நிமிடம் எந்தச் சிந்தனையும் நெஞ்சில் கொள்ளாது அமர்.
வாழ்க்கை முழுதும் கூட வரும் வரம் கொடு.
எல்லா உரிமைகளும் உனக்குண்டு உணர்ந்திடு.
இன்னும் கொஞ்சம் என்னுளுண்டு,
சின்னச் சின்னதாய்க் கோரிக்கைகள் செவிகொடு
*சிநேகிதனே ... சிநேகிதனே*

***

148. வானம் வாழ்த்தவே பூமி செழிக்கவே
மண்ணில் பொழியும் மழையே.

வயிறு நிறையவே பசி அடங்கவே
உடலை வளர்க்கும் உணவே.

வாசம் வீசவே நாசி நுகரவே
பூத்துக் குலுங்கும் மலரே.

வருக வருகவே கவிதை தருகவே
*சங்கத் தமிழ்க் கவியே*

***

147. கண்கள் மூடக் கனவில் தினமும்
காதல் வளர்க்கும் இரவே;
இரவில் நெருங்கி இதழில் தொடங்கி
பகலில் விலகல் சுகமே;
சுகமாய் இருக்கும் உந்தன் நெருக்கம் தினமும் வேண்டும் அன்பே;
அன்பில் கரைந்து அழகில் மயங்கி
மனதுள் ஒளிரும் நிலவே;
நிலவே உன்னைக் காணும் வரையில்
உறங்கா தெந்தன் விழியே;
*விழியில் விழுந்து இதயம் நுழைந்து*
*உயிரில் கலந்த உறவே*.

***

146. எனதருமைக் காதலா,
தனிமையில் எனைத்
தவிக்க விட்டுச் சென்றதேனடா ?
விவரமேதும் தெரிவிக்காது
விலகிச் சென்றதேனடா ?
*
ஆரம்பத்தில்
காதலிப்பதாய்ச் சொன்னாய்
கண்ணே என்றாய்,
உயிர் நீ என்றாய்
கவிதை சொன்னாய்
சிரிக்க வைத்தாய்
ரசிக்க வைத்தாய்;
*
இதனைத் தொடர்ந்து
காதலின் பெயரில்
கங்கையைக் கூவமாக்கினாய்.
வாசம் மட்டும் நுகர்ந்துவிட்டு
பூவைக் கசக்கி எறிந்து விட்டாய்.
மீன் சிக்கியதும் தூண்டிலை மறப்பதுபோல்
கன்னி சிக்கியதும் காதலை மறந்தாய்.
தழைவாழையிலையில் விருந்துண்டு எச்சிலிலையாயெனை வீசிவிட்டாய்.
*
இப்பொழுதெல்லாம்
நெருங்கும்போதெல்லாம் நழுவி,
காணாதது போல் நடித்து,
கண்டுகொள்ளாது தவிக்கவிட்டு,
காய்ந்த நிலமாய் நான் காத்திருக்க
*சற்று முன்புப் பார்த்த மேகம் மாறிப் போக ...*

***

145. இன்று எழும் போதே
நெஞ்சிலொரு பரவசம் புத்துணர்ச்சி.
நேற்றிரைத்தப் பச்சரிசியைத் தின்ன
புதிதாய் வந்திருக்கும் பச்சைக்கிளி.
காயத்தொடங்கியச் செடியில்
அழகாய்ப் பூத்திருக்கு மூன்று பூ.
கண்ணாடியில் கடிகாரத்தில்
காணும் எல்லாப் பொருளிலும்
~காதல~ கள்வனவன் திருமுகம்.
எந்த முயற்சியுமின்றி என்னுள்
எதுகை மோனையோடு கவிதை.
நான் யார் எங்கிருக்கிறேன் என்பதை
எனக்கு நானே ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.
என்ன செய்தாய் என்னை
ஏதுமறியாதிப் பெண்ணை ?
எப்படி எனைக் கவர்ந்தாய் ?
என்னுள் ஒரு...ஒரு
*நேற்று இல்லாத மாற்றம் என்னது ?*

***

144. வயதுக்கு வந்தாகிவிட்டாது
கன்னியரைக் கண்டதும்
கனவில் மனம் மிதக்க ஆரம்பித்துவிட்டது
நோக்கும் எல்லாவற்றின் மீதும்
நேசம் நெஞ்சில் நிறைகின்றது
காதலென்று இதைப்பெயரிட்டுக்கொள்ள ஆசையாயிருக்கிறது
கற்பனைக் குதிரையைக்
கொஞ்சம் சுண்டிவிட்டால் போதும்
கவிதை அருவியாய்க் கொட்ட வாய்ப்பிருக்கிறது.
எல்லாம் தயார்,
கூடக் கொஞ்சி விளையாட
ஜோடி மட்டும் வேண்டும்
மண்ணிலிருக்கும் எவரும்
எனை மதிப்பதில்லை, எனவே
*வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?*

***

143. ஈகை குணம் நெஞ்சில் நிறைய வேண்டும்
கொடுத்துப் பழக வேண்டும்
பெருவதை விட தருவதில் தான்
ஆனந்தம் அதிகம் என்பது புரிய வேண்டும்
எதைச் செய்தாலும் ஆர்வம் வேண்டும்
காமம் கருணையாய் மாறவேண்டும்
ஆசை நெஞ்சை அண்டாதிருக்க வேண்டும்
*மனதில் உறுதி வேண்டும்*
போதுமென்ற மனம் வேண்டும்

***

142. கவிதையின் பெயரில் கண்டதையும் எழுத
அதைப் படித்து வெறுத்தவர்க்கு நன்றி
படிக்காது தப்பித்தவர்க்கும் நன்றி
விமர்சனம் அளித்தவர்க்கு நன்றி
விமர்சிக்காது விலகிச்சென்றவர்க்கும் நன்றி
*
வண்ணங்கள் இறைத்து ஓவியம் என்றவுடன் ஒத்துக்கொண்டவர்க்கு நன்றி
ஓவியமா என்று கேட்க நினைத்தவர்க்கும் நன்றி
மாடர்ன் ஆர்ட் போலிருக்கு என்று மனதில்  நினைத்துக் கொண்டவர்க்கு நன்றி.
*
என் நக்கல் விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டவர்க்கு நன்றி
மனதில் கொள்ளாது மன்னித்தவர்க்கு நன்றி
மறக்க முடியாது ஆப்பு அடிக்கக் காத்திருக்கும் அனைவர்க்கும் நன்றி
*
இன்னும்...இன்னும்...சுருக்கமாய்
எது செய்தாலும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டவர்க்கு நன்றி
எது செய்தாலும் பாரபட்சமின்றி நிராகரித்தவர்க்கும் நன்றி
*
முக்கியமாய்
*நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி*
*

***

Thursday, April 19, 2018

பொன்மாலைப் பொழுதில் 19


141. மேகம் போலே வானின் மேலே
பறந்துக் கிடந்தேனடி
மழையாய் நீ பொழிந்து
எனக்குப் பெருமை சேர்த்தாயடி

மண்ணில் முளைக்கும் செடியாய்
நெஞ்சில் முளைத்ததுன் நேசமடி
பூவாய்ப் பூத்து வாசம் வீசி
என் மேல் பாசம் பொழிந்தது நீயடி

அலையின் இடையில் அலைகழித்துக் கிடந்தேனடி
காதலென்னும் விளக்கேற்றி கரைசேர்த்தது நீயடி

எழுத்துக்களை எடுத்து வைத்து என்ன எழுத என்று தெரியாது இருந்தேனடி
என் எண்ணங்களில் நுழைந்து
எழுத்துக்களை கவிதையாக்கியது நீயடி.

கண்ணாலே பேசியவள் உள்ளம் புரியாதா ?
விலகி இருப்பதன் விவரம் விளங்காதா ?
*வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா ?*

***

140. பாற்கடலில் பாம்பு மெத்தையில்
பள்ளி கொள்பவன்;
பாவங்கள் பரவும் பொழுதெல்லாம்
பாருலகைப் பாதுகாக்கப்
பிறவியெடுப்பவன்;
*
அயோத்தியில் அவதரித்து
அரசகுமாரனாய் வளர்ந்து
ஆரண்யம் புகுந்து
அத்திரம் தொடுத்து
அரக்கர்களை அழித்து
அனைத்தும் அழகுற
ஆண்ட ஆண்டவன்.
*
மயிற்பீலி சூடி
மாடு மேய்த்து
மாயம்பல புரிந்து
மங்கையர் மனங்கவர்ந்து
மாமனையே கொன்று
மகாபாரதத்தில் தேரோட்டி
மாகீதை சொன்னவன்.
*
ஸ்ரீநிவாசனாய் நாராயணனாய்
ராகவனாய் மதன கோபாலனாய்
கிருஷ்ணனாய் வெங்கடேசனாய்
கோவிந்தராஜனாய் ஆராவமுதனாய்
பெயர் எதுவான போதும்
பொருள் ஒன்றாய் விளங்கும் அந்த
*ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்குவோம்*


***

புரியவில்லை
எதற்கென்றுத் தெரியவில்லை
*
உன்னிடமிருந்து ஒரு தொடர்புமில்லை
மின்னஞ்சலில்லை
குறுஞ்செய்தியில்லை
*
என்ன கேட்டாலும் எறிந்து விழுவதைத் தவிர நல்லதாய் நீயாய் எதுவும் சொல்வதில்லை
*
கனவில் வரவில்லை
கவிதை பாராட்டுவதில்லை
கதை எதையும் படிக்க உனக்கு நேரமில்லை
*
இருந்தும்
எனக்குப் புரியவில்லை
எதற்கென்றுத் தெரியவில்லை
*
நெஞ்சமே
*இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே !*

***

139. என்னருமைத் தோழா,
என்னவாயிற்று என்று நீ சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாயடா ?
எதையும் இழக்கவில்லை நீ
இன்றில்லையேல் நாளை
வெற்றி உனைத் தேடிவரும் வேளை

தோல்வியில் துவள்வது உனக்கழகா?
என் தோள்பிடித்து எழு, வா
தோல்வி சொல்லித் தரும் பாடத்தைப் படி
போனதைப் பார்த்துப் புலம்புதலை விடு  வந்ததை வரவேற்று வாரியணைத்திடு

விடியாத இரவிருக்கா ?
முடியாதத் துயரிருக்கா ?
காலம் ஆற்றாத காயமிருக்கா ?
சோகம் மற, *கண்களில் என்ன ஈரமா ?*

***

138. எனக்கில்லை அருகதை, இருந்தும் கூட
அவளைப்பற்றியொரு அறிக்கை
நயனம் நோக்கினால் இளநகை
நங்கை நெஞ்சம் நிறைய ஈகை
மண்ணில் மலர்ந்த விந்தை
மங்கை மனதளவில் குழந்தை
உள்ளங்கையே மயிலிறக்கை
உள்ளத்தில் மலைமலையாய் மரியாதை
சிந்தையில் சிறிதுமில்லை மமதை
சிலைபோன்றதவள் ஆக்கை
சந்தன நிறத்தில் சிற்றிடை
சகலரும் விரும்பிடும் பூக்கடை
வஞ்சியைக் காணும் வரை வதை
வந்தபின் நெஞ்சிலெழும் வாஞ்சை
என் அபிமானத் தாரகை
*அவளொரு மேனகை*

***

137. மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவன்
மதம் பிடித்த மனிதர்கள் மத்தியில் அன்பையே மதமாக்கியவன்.

அன்று ஜெருசலத்தில் வசித்தவன்
இன்று ஜெகம் முழுதும் வாழ்பவன்

அன்னை மேரியின் அன்பில் வளர்ந்தவன்
ஆட்டை மேய்த்து வாழ்க்கை நடத்தியவன்

நம்பி வந்தாரைக் கரையேற்றியவன்
நாளும் ஒருதிரு நாடகம் நிகழ்த்தியவன்

சிலுவை சுமந்திடினும் சிந்தனை மாறாதவன்
ரத்தம் சிந்திடினும் தன் எண்ணம் கூறத் தயங்காதவன்

பாதம் பணிந்தவர் பாவம் போக்கியவன்
பார்வையாலேயே பரிசுத்தமாக்கியவன்

*அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே தோன்றியவன்*

***

136. ஆசைப்படலாம் அதற்காக உழைக்கலாம்
கிட்டவேண்டுமென்று கட்டாயமில்லை.
ஏன் கை கூடவில்லை என்ற கேள்வி எழும்.
சிலசமயம் சிரமம் ஏதுமின்றி ஈடேறும் காரியங்கள் ஆச்சரியமளிக்கும்.
எப்படியிது சாத்தியமானது என்று சந்தோசத்திலும் சந்தேகமெழும்.
எல்லாவற்றிலும் ஏதோவொரு சக்தி இருந்து கொண்டு இயக்குவது புரியும்.
எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது நடந்தேறுகிறது.
தடுக்கவும் முடியாது துணை புரியவும் தேவையிருக்காது.
அங்கே ஒருவன் இருந்துகொண்டு ஆட்டிவிக்கிறான்.
அவன் மேல் நம்பிக்கை வையுங்கள்
அவன் பாதம் பணியுங்கள்
கருணை கொண்டு காத்திடுவான்
*கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே*

***

135. நல்லொளி வீசும் நட்சத்திரங்கள் நாற்புரமும்
நங்கையுன் பொலிவைக் கூட்ட
மேகம் கொண்டு நெய்யப்பட்ட பஞ்சுமெத்தை
தேகம் நீட்டி தோழி நீ கண்ணுறங்க
நீ வரும் பாதையெங்கும் பூக்களால் நிரப்பி
பூவையுன்னை பரவசத்திலாழ்த்த
*வேறென்ன ... வேறென்ன வேணும்
ஒருமுறை சொன்னால் போதும்*

***

Monday, April 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 18

என்னெருமைக் காதலா,
சிலநாள் நீ சிரிப்பாய் நான் முறைப்பேன்;
பேச வருவாய் விலகிச் செல்வேன்.
சிலநாள் நான் சிரிக்க கண்பார்க்க மறுப்பாய்
தொலைபேசியில் அழைப்பாய்
தொல்லையோவென்று பேசத் தயங்குவேன்.
மறுநாள் நான் காத்திருப்பேன்
காணாததைப் போல் நீ எனைத் தவிர்ப்பாய்.
ஒருசிலநாள் சீக்கிரமே வந்து நீ நிற்பாய்
பாதை மாற்றி நான் பயணிப்பேன்.
சிலநாளே உன் சிறையில்,
பலநாள் திரை மறைவில்.
பாசத்தில் பிணைந்திருந்த  நாட்களை விட
கோபத்தில் விலகியிருந்த நாட்களே அதிகமெனினும் ... இன்னும்
மனம் விரும்புதே ... உன்னை ... உன்னை

***

எல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக்
கனி தரவேண்டுமென்பது கட்டாயமில்லை.
உடல் வளர உணவு உதவும் என்று
எந்த உத்திரவாதமும் இல்லை.
நித்திரையெல்லாம்  நிம்மதி தருமென்று
எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.
குளிகைகள் எல்லாவற்றிலும் குறை தீர்க்கும் குணம்
குடியிருக்குமென்று கூறமுடியாது
எல்லா வகையான நீரும்
தாகம் தணிக்கும் இயல்புடன் இருப்பதில்லை
காதல் இணையத்தான் வேண்டுமென்று
எந்த அவசியமுமில்லை.
நெஞ்சே ... நெஞ்சே ... மறந்து விடு

***

கண்ணால் காணும் முன்பே காதலிக்கத் தொடங்கியவள்.
பெற்ற அன்று மட்டும் பிள்ளை அழுகையில் ஆனந்தப்பட்டவள்.
கண்ணே மணியே என்று கொஞ்சி பொத்திப் பொத்தி வளர்த்தவள்.
விழிக்கையில் விழித்து சிரிக்கையில் ரசித்து அழுகையில் அரவணைத்து அல்லல் பல பொருத்து ஆளாக்கியவள்.
இல்லை என்று எப்பொழுதும் சொல்லாது இருப்பதை அள்ளித்தந்து மகிழ்பவள்.
எல்லாம் கிட்ட ஏற்பாடு செய்து விட்டு நீ  அனுபவிக்க அதைப்பார்த்து ஆனந்திப்பவள்.
அன்னை அருகிலிருந்தால் அதிர்ஷ்டம் இருப்பதாய் அர்த்தம்.
அவள் பாதம் தொட்டு வணங்க அனைத்துப் பலனும் தானாய்க் கிட்டும்
 ஆசை தீர அழைத்து மகிழுங்கள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே

***


அடியென் இனிய சிநேகிதி, சொல்கிறேன்
இந்த ராதையின் மனவருத்தம், கேளு நீ.

என் மடியில் படுத்திருந்தபடிக் குழலூதிய கோவிந்தனே இக்கோதையின் மணாளன் என்றெண்ணினேன்.

அவன் கண்களில் படாது தனித்து நான் இருக்கும் பொழுதெல்லாம் எனைக் காணாது கண்ணன் தவிப்பானோ என்று தவிப்பேன்.

அவன் கவிதைகளின் கருவாய், கனவுகளின் பொருளாய்  நானிருக்க ஆசைப்பட்டேன் 

பேசுவதும், வாய்மூடிக் கிடப்பதும், புலம்பலும் புரியாத பார்வையும், மயங்கிக் கிடப்பதும், எழுந்து சிரிப்பதும் எல்லாமந்த மாதவனின் மாயை என்று நம்பினேன்.

எனைக் காண வருவான், காயம் ஆற்றுவான் தனித்து எனைத் தவிக்கவிடாது துணை இருப்பான் என்றெண்ணினேன்.

இன்னும் ... இன்னும் என் நெஞ்சில்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

***

முன்பெல்லாம் காலையில் குறித்த நேரத்தில் எழுவதுண்டு
இப்பொழுதெல்லாம்  இமையின் இடையில் நீ இருக்க இல்லை உறக்கம்.
தினம் காலை ஓட்டப்பயிற்சி செய்வதுண்டு
இப்பொழுதெல்லாம் என் கூடவே நீயும் பறந்து வந்து வேர்வை துடைத்து விடுகிறாய்.
முன்பெல்லாம் கண்மூடி தியானத்தில் எனைமறந்து ஆழ்ந்ததுண்டு.
இப்பொழுதெல்லாம் விழிமூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் உன் திருமுகம் மட்டும் என்கண்முன் தெரிகிறது.
முன்பெல்லாம் நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்ததுண்டு
இப்பொழுதெல்லாம் உனை எண்ணிக் கிடப்பதே என் முழுநேரப்பணியாயிருக்கிறது
அனாயாசமாய்ச் செய்து முடித்த பல வேலைகளை இப்பொழுதெல்லாம் எங்கிருந்துத் தொடங்க எனப்புரியாது முழிக்கிறேன்.
ம்ம்ம் ...*ஒன்னும் புரியல சொல்லத்தெரியல*

***

பார்வையில் தெய்வீகம்
   பேச்சினில் சாத்வீகம்
நெஞ்சினில் சத்தியம் 
   நிறைய சாமர்த்தியம்
செய்வதெல்லாம் மகத்துவம்
   சிந்தனையில் தானதர்மம்
நாவசைந்தால் திருவாசகம்
   அகம் சுத்தம் முகம் கமலம்
நடையில் நிதானம்
   உடையில் உத்தமம்
கண்டதில்லை அகங்காரம்
   தேவையில்லை அலங்காரம்
செய்ததில்லை அதிகாரம்
   செய்வதெல்லாம் உபகாரம்
நடக்கும் நந்தவனம்
   அழகு  வதனம்
*காதல் ஓவியம்*
   *பாடும் காவியம்*

***

எல்லாப்பொழுதும் பாதுகாப்பாய் நிற்கிறாய்
நல்லதெது கெட்டதெது என்று புரிய வைக்கிறாய்
பசித்து உண்ணப் பழக்குகிறாய்
சிரித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறாய்
தோளில் தாங்கி ஆறுதல் அளிக்கிறாய்
பக்தி மணம் பரப்புகிறாய்
பரந்த மனம் கொண்டிருக்கிறாய்
நானெது செய்தாலும் ஏதாவதோர் வகையில் என் எண்ணத்துள் நுழைந்து விடுகிறாய்.
நீயில்லாது எதுவுமென்னால் முடியும் என்று தோன்றவில்லை
உனைப்பார்க்காதிருந்தால் என் நெஞ்சில் அமைதியில்லை
*என்னவோ என்னவோ என்வசம் நானில்லை*

***

Monday, April 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 17

அருமைச் சிநேகிதா,
என் நிலைமை உனக்குச் சொல்லவா ?
தினம் நான் காத்திருக்கிறேன்
உனைப் பார்க்கும் வரை தவிக்கிறேன்
நெஞ்சம் படபடக்க நிதானமின்றித் திரிகிறேன்
யார் என்ன கேட்டாலும் எரிந்து விழுகிறேன்
கண்படு தூரத்தில் நீ இருக்கையில் கவலை மறந்து சிரிக்கிறேன்
உன்னோடு கை கோர்த்து நடந்திட நான் ஏங்குகிறேன்
எனை ஆளப்பிறந்தவன் நீயா என்று எனையே நான் கேட்டுக்கொள்கிறேன்
நீயாளப் பிறந்தவள் நானேயென்று நம்புகிறேன்
உன்னுள்ளும் உண்டா இப்பரவசம் என்று புரியாதுத் தவிக்கிறேன்
சொல்லி விட ஏங்குகிறேன்
இதுதான் காதலா ? சொல்லவா ? இன்றா ?
இதுதானா ... இதுதானா ... எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

***

வான் மழை பொழியும் மூன்று மாதம்
சுடும் வெயில் தினம் சில மணி நேரம்
உண்ணும் வரை பசி இருக்கும்
காற்றில்லாப்பொழுது கொட்டும் வியர்வை
குளிர் இருக்கும் வரை போர்வை
அயர்ச்சியில் உறக்கம் ஆசையில் இறுக்கம் 
நமைச் சுற்றி நடக்கும் எல்லாமே
அவ்வப்பொழுது நடப்பவையே
உன் நினைவு மட்டும்
என்னோடு எல்லாப்பொழுதும் இருக்கிறதே
பிரகாசமாய் என்னுளமர்ந்து கொண்டு
எனை தினம் நீ பரவசப்படுத்துகிறாயே
நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே

***

என் அழகுச் சிநேகிதி
அழகனவன் அழகை வர்ணிக்கிறேன் கேளடி.
நீலப்பீதாம்பரத்தில் நின்றவன் கோலம்அழகு
நின்றபடியே வீசிய நேர்ப்பார்வை அழகு
பரவசத்தோடு பாசுரம் பாடியது அழகு
பதத்தோடு பாதமெடுத்து பரதமாடியது அழகு
நேற்றைய நாடகத்தில் அவன் நடிப்பு அழகு
சிரிப்பு அழகு, சிணுங்கியதெல்லாம் அழகு
கோதை ராதையின் கோபம் தீர்க்க பிரயத்தனப்பட்டது பரம அழகு
நயனம் திறவாது நடனமாடியது அழகு
கவர்ந்திழுக்குமவன் காந்தக் கண்ணுக்கு மை அழகு

***

Sunday, April 1, 2018

பொன்மாலைப் பொழுதில் 16


இப்போல்லாம் தினம் பல்துலக்குகிறேன்
தீவாளியோ பொங்கலோ மார்கழியோ
நாளெதுவாகினும் தினம் குளிக்கிறேன்.
எண்ணையில் ஊறவைத்துத் தலை சீவிக்கொள்கிறேன்.
அழகாய் உடுத்த ஆசைப்படுகிறேன்
இருப்பதை துவைத்துக் கசக்கி காயவைத்து
இடையிருக்கிக் கட்டிக்கொள்கிறேன்
இருப்பு ஏதுமில்லையென்றாலும்
ஈகை செய்வதில் முழுமனதோடு ஈடுபடுகிறேன்
மெல்லிசைப்பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கிறேன்
துள்ளிசைத் தகடுகளைத் தூக்கியெறிந்து விட்டேன்
நல்லவனாகவே இருந்து விடுகிறேன்,
இன்னொருமுறை ... இன்னும் ஒரு முறை...
மெல்..ல ... தலைசாய்த்து ... கண் சிமிட்டி ... கன்னத்தில் குழி விழ ...
ஒரு  சிறு புன்னகை
ஐயையோ நெஞ்சு அலையுதடி ஆகாசம் இப்போ வளையுதடி

***

இப்பொழுதெல்லாம் என் இதயம்
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது.
கண் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும்
காணும் காட்சி உன்முகமாகவே இருக்கிறது.
தூரத்திலிருந்த வட்ட நிலவு
வான் விட்டு என் ஐன்னல் பக்கம் வந்து நின்றுப் பேசுகிறது.
இதுநாள்வரை தழுவிக்கிடந்த உறக்கம்
எனைவிட்டு எங்கோ தூரம் சென்று விட்டது.
என் சிந்தனை, செயல், சொற்கள் எல்லாம்
இன்று உனைச்சுற்றியே இருக்கையில்
நேற்று வரை வேறென்னெல்லாம் செய்து வந்தேன்
என்று எனக்கேப் புரியாதிருக்கிறது
எல்லாம் காதல் செய்த மாயமோடி ?
நீ ஆனாய் என் உயிரடி, சந்தேகமா ?
ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்துக் கேளடி

***

கவலை எதற்கு கலக்கம் எதற்கு
எல்லாம் மாறும் என்பது தெரியாதா உனக்கு
ஏறியது இறங்குவதும்
இறங்கியது ஏறுவதும் இயற்கை
இதற்கிடையில் எதற்கு அழுகை ?
வென்றால் குதிக்காதே
தோற்றால் குமுறாதே
முயன்று செய் எதிர்பார்த்து ஏமாறாதே
உனைச் செய்யவைப்பவன் அவனே
நீ வெல்ல வழிசெய்துத் தருபவன் அவனே
தோற்றாயெனில் குழிவெட்டியவன் அவனே
உனக்கென்று ஒரு காலம் உண்டு
அக்காலத்தில் உனக்கு வெற்றி உண்டு
அதுவரை காத்திரு பொருமை கொண்டு.
கனவு கண்டிரு
கடவுளைத் துதித்திரு
காலம்கனியும் வரை கண்திறந்துக் காத்திரு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

***

பார்த்து ரசிக்க ஆளில்லையெனினும்
நீரில் தவழும் நிலவின் பிம்பம்

பறித்து நுகர ஆளில்லையெனினும்
மலர்ந்து மணம் வீசும் மலர்

கூட விளையாட ஆளில்லையெனினும்
தனக்குள் மகிழ்ந்து சிரிக்கும் குழந்தை

குதித்துப் பரவசப்பட ஆளில்லையெனினும்
கரைநோக்கி ஆடிவரும் அலைகள்

அருகில் நீ இல்லையெனினும்
அகலாது எனைச் சுற்றும் உன் நினைவு

கவிதை படிக்க ரசிக்க ஆளில்லையெனினும்
தினம் தினம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

***

காலை கண் திறக்கையில் கையில் காபியோடு நிற்கிறாய்
முத்தம் தர எத்தனித்தால் கெட்டவார்த்தை பலவோடு கண்டபடி திட்டுகிறான் அறை நண்பன்.

குளிக்கையில் கூடவே நனைகிறாய்
துடைத்து விட எண்ணுகையில் கதவு படபடவென்று அடிக்கப்பட திறக்கிறேன். வயிரைப் பிசைந்து கொண்டு உள்ளே ஓடுகிறான் நண்பன்.

உனக்கு ஊட்டி விட்டுக் கொண்டே உண்கிறேன் நான்
எனக்குக் கையிருக்குடா கபோதி என்கிறான் நண்பன்

இரவில் இருளில் ஏகாந்தமாய் நாமிருக்க
தொந்தரவு தாங்காது தரையில் படுக்கப் பழகிக்கொண்டான் நண்பன்

சரி விழி திறந்திருப்பதால் உன் உருவம் மட்டும் தெரிகிறதோ என் கண்ணே என்றெண்ணி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே

***

 என்னுள் ஒரு ஆனந்தம்
எனக்கேப் புரியாது எங்கிருந்து வந்தாய் ?

வார்த்தைகள் வரிசையில் தானே வந்தமருது
கவிதையின் உட்பொருளாய் நீ இருக்காய்.

அழகாய் உடுத்த ஆசையாய் இருக்கே
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்

திடீரென்று பூத்து மணக்கும் மல்லிகை
எதற்காக இதுவரை நீ காத்திருந்தாய் ?

எனைத்தேடி வந்திருக்கும் தேவதையே,
இதுநாள் வரை ஏனடி மறைந்திருந்தாய் ?

என்மேல் விழுந்த மழைத்துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

***