Friday, January 31, 2020

கம்பராமாயணம் 23


1488.   'இரு வரத்தினில், ஒன்றினால்
                 அரசு கொண்டு, இராமன்
             பெரு வனத்திடை ஏழ் - இரு
                  பருவங்கள் பெயர்ந்து
             திரிதரச் செய்தி, ஒன்றினால்;
                   செழு நிலம் எல்லாம்
             ஒருவழிப்படும் உன் மகற்கு
                   உபாயம் ஈது' என்றாள்.

(சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தில்
தசரதனுக்கு தேரோட்டி அவனைக் காத்ததால்
இரண்டு வரம் தந்தானல்லவா)
'அந்த இரண்டு வரங்களைக் கேள்,
அவற்றை இப்போது தரச் சொல்,
ஒரு வரத்தால், அரசுரிமை கொள்,
பரதனை சிம்மாசனத்தில் அமர்த்து.
இன்னொரு வரத்தால் இராமனை
ஏழு இரண்டு வருடங்கள் காட்டுக்கு அனுப்பு.
இங்கிருந்து கிள ப்பி  எங்கோ திரியச் செய்.
அதற்குள் இந்த செழிப்பான நிலமெல்லாம்
உன் மகன் வசப்படும்,
இதுவே உபாயம்' என்றாள் கூனி.


கைகேயி சூழ்வினைப் படலம்

1493.   தா இல் மா மணிக் கலன் மற்றும்
                தனித் தனி சிதறி,
            நாவி ஓதியை நானிலம்
                தைவரப் பரப்பி
            காவி உண் கண் அஞ்சனம்
                கான்றிடக் கலுழா
           பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப்
                புவிமிசைப் புரண்டாள்.

நல்ல தரமான மணிகளால் ஆன அணிகலன்களை
வேறு வேறாக பிய்த்து சிதைத்து எறிந்தாள்.
நல்ல நெய் பூசி அலங்கரிக்கப்பட்ட கூந்தலை
விரித்து தரையில் புரளுமாறு பரப்பிக்கொண்டாள்.
நீலமலர் போன்ற வசீகரிக்கும் கண்களிலிருந்து
மை கரையும்படி சிந்தும்படி அழுதபடிக் கிடந்தாள்.
மலர்களை எல்லாம் இழந்துவிட்ட ஒரு குச்சி போல்
தரையில் விழுந்து புரண்டாள்.


1498.   நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி
            மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
            ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்
            மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள்.

மணம் கமழும் மலர்மாலை அணிந்த மன்னவனின்
உயிருக்கு உயிரான கைகேயி,
தன் எண்ணத்தில் உறுதியாய் இருந்தாள்.
தொட நெருங்கிய கையைத் தடுத்தாள்.
மின்னற்கொடி துவண்டு வீழ்தல் போல் தரையில் வீழ்ந்தாள்.
வேறெதுவும் சொல்லாது, பெருமூச்சு விடத் தொடங்கினாள்.


1505.   நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த 
            சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா 
            ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் 
            வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

பாம்பு போன்ற கைகேயி நாக்கிலிருந்து வந்த
விடம் போன்ற வரங்கள் தனைப் பற்றிக்கொள்ள 
 உடல் நடுங்கி, வெந்து சோர்ந்து
நஞ்சுடைய நாகம் கடித்த யானை போல 
தரையில் விழுந்தான்.


( தொடரும் )

Thursday, January 30, 2020

கம்பராமாயணம் 22



மந்தரை சூழ்ச்சிப் படலம்


1402.   மன் நெடுங் கழல் வந்து வணங்கிட
            பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!' என
            நின் நெடும் புதல்வன்தனை, நேமியான்
            தொல் நெடும் முடி சூட்டுகின்றான்' என்றார்.

'எல்லா அரசர்களும்,
வீரக் கழல் அணிந்த உன் பாதம் பணிந்திட,
பல காலம் இந்த மண்ணுலகை ஆள்வாய்'
என வாழ்த்தி, தசரதன், உன் மகன் இராமனுக்கு,
பழமை வாய்ந்த திருமுடியை,
அணிவிக்கப்போவதாகக் கூறினார்
(என்று மங்கையர் ஓடிவந்து கோசாலையிடம் தெரிவித்தனர்)


1411.   ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல் 
            மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
            'புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
            நல்கும் நானிலம் நாளை நினக்கு' என்றான்.

தளர்ச்சி இல்லாது, தவ நெறி நிறைந்த நல்லவன் வசிட்டன்,
கற்க வேண்டியவற்றைக் கற்று, நிறைய  
கேள்வி ஞானம் நிறைந்த வள்ளல் இராமனைப் பார்த்து 
'போரில் வல்லவனே, 
உன் மேல் நிறைய அன்பு வைத்திருக்கும் தசரதன்,
உனக்கு அரசாட்சியை நாளை தருவான்' 
என்று தெரிவித்தான்.


1445.   அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
            பொன்னகர் இயல்பு எனப் பொலியும் எல்லையில்
            இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
            துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.


அயோத்தி நகரம்
அழகு படுத்தப்படும் ஆரவாரத்தால்,
தேவர்களின் அமராவதியோ என்று
எண்ணப்படும் தருணத்தில்,
துன்பம் தரும் இராவணன் புரிந்து தீமை
உருவம் கொண்டு வந்தது போல்,
கொடிய மனம் கொண்ட கூனி
வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.



1459.   தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
            விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
            அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
            குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே.

கத்தினாள், அதட்டினாள்,
கண்ணில் பொறி பறக்க முறைத்தாள்;
திட்டினாள்; வெப்ப மூச்சு விட்டாள்;
தன் கோலத்தை அலங்கோலமாக்கிக்கொண்டாள்;
அழுதாள்; சேதி சொன்னதும், மகிழ்ந்து 
கைகேயி பரிசாய்த் தந்த பொன்மாலையை
நிலத்தில் குழி விழும் படி வீசினாள் -
கொடிய நெஞ்சை உடையக் கூனி.


1483.   தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி 
            தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் 
            மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் 
            ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

கொடுமை நிறைந்த சொற்களை கூனி கூறவும் 
தேவி கைகேயி யின் நற்சிந்தனை மாறியது.
(மாறியதற்கு இன்னொரு காரணம்) 
தேவர்களின் சூழ்ச்சி மாயையும்,
அவர்கள் ஏற்கனவே வரம் பெற்றிருந்ததாலும் 
தூயவர்கள் செய்த கடும் தவத்தாலும்,
கைகேயி யின் மனம் மாறியது.


( தொடரும் )

Wednesday, January 29, 2020

கம்பராமாயணம் 21


1343.   ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
            பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
            மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
            யாது நும் கருத்து?' என இனைய கூறினான்.

(தசரதன் அரசவையில் தன் எண்ணங்களைச் சொல்லி)
ஆதலால், இராமனை அரசனாக்கிவிட்டு
அறியாமையை தரும் இப் பிறப்பு நோய் விட்டகல
அரிய தவம் கானகத்தில் செய்யப்போகிறேன்
அவையோரே, என்ன உங்கள் கருத்து என்று கேட்டான்.


1361.   அலங்கல் மன்னனை அடிதொழுது 
                    அவன் மனம் அனையான் 
            விலங்கல் மாளிகை வீதியில் 
                    விரைவொடு சென்றான் 
            தலங்கள் யாவையும் பெற்றனன் 
                    தான் எனத் தளிர்ப்பான் 
            பொலன் கொள் தேரோடும்  
                    இராகவன் திருமனை புக்கான்.

மாலை அணிந்த மன்னவனை வணங்கி 
அவன் மனதை ஒத்த சுமந்திரன் 
உலகம் யாவும் தனக்கே கிட்டியது போல் மகிழ்ந்து 
மலை போன்ற மாளிகைகள் நிறைந்த அரச வீதியில் விரைந்து
பொன்மயமான தேரினில் இராமன் இல்லம் அடைந்தான்.


1382.   தாதை அப் பரிசு உரைசெய 
                 தாமரைக் கண்ணன் 
            காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
                 'கடன் இது' என்று உணர்ந்தும் 
            'யாது கொற்றவன் ஏவியது 
                   அது செயல் அன்றோ 
            நீதி ஏற்கு?' என நினைந்தும் 
                    அப் பணி தலைநின்றான்.

தந்தை தன் எண்ணத்தை உரைத்தும் 
தாமரைக் கண்ணனோ, அதுவரை 
அரசாட்சியை விரும்பியதுமில்லை, 
வெறுத்து ஒதுங்கியதுமில்லை. 
இது தன் கடமை என்றே கருதினான்.
அரச ஆணை எதுவோ 
அதை நிறைவேற்றுவதே நியாயம் என்று எண்ணி 
பதவி ஏற்க சம்மதித்தான்.



1394.   ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர் 
             பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும் 
             கார் மழை பொழியவும் கழனி பாய் நதி 
             வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்?

ஊர் மக்கள் குடிக்க பயன்படுத்தும் நீர்நிலை நிறைய 
பலருக்கும் உதவும் வகையில் மரம் வளர்ந்து பழுத்திருக்க 
கார்காலத்தில் மழை பொழியவும் 
வயல்களில் பாய்கிற ஆறு நீர் நிறைந்திருக்கவும் 
யாராவது வேண்டாமென்பார்களா ?
(அதுபோல் இராமன் அரசனாக மறுப்பார்களா?)

 
( தொடரும் )




Tuesday, January 28, 2020

கம்பராமாயணம் 20


1253.   கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
            தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா
            ஆய தன் அன்னை அடித் துணை சூடி
            தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

கேகயன் மகளான கைகேயி யின்
ஒளிமிகுந்த பாதங்களை
தாய் கோசலை யிடம் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும்
அன்போடு தாழ்ந்து வணங்கி,
அன்னை கோசலையின் அடிகளை தலையில் சூடி,
உள்ளத்தில் ,தூயவளான சுமித்திரையை வணங்கினர்
இராமனும் சீதையும்.


1259.    வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
             எள்ளல் இல் கொற்றவன் 'எம்பி அளித்த
             அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
             கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான்.

அள்ளித் தரும் வள்ளல் இராமனின் தம்பியர்க்கு 
தவறேயிழைக்காத ஜனகன்
'என் தம்பியரின், செந்தாமரை மலரொத்த மங்கையரை 
மணம் செய்துகொள்ளும்' என்று
தசரதன் முதலிய உறவினர்களோடு நிச்சயித்தான்.


பரசுராமப் படலம் 

1266.   முன்னே நெடு முடி மன்னவன் 
                முறையில் செல, மிதிலை
            நன் மா நகர் உறைவார் மனம்
                நனி பின் செல, நடுவே
            தன் ஏர் புரை தரு தம்பியர்
                தழுவிச் சேலை மழைவாய்
            மின்னே புரை இடையாளொடும்
                இனிது ஏகினன் வீரன்.

முறைப்படி மகுடம் சூடிய தசரதன் முன்னே செல்ல,
மிதிலை நகர் மக்கள் மனம் பின்னே தொடர,
நடுவில், தன் அலகையொத்த தம்பியர் அருகில் தொடர
மின்னலிடையாள் ஜானகியோடு
மாவீரன் இராமன் அயோத்தி நோக்கி புறப்பட்டான்.


 1280.  'இற்று ஒடிய சிலையின் திறம் 
                  அறிவென்; இனி யான் உன் 
             பொன் தோள் வலி நிலை சோதனை 
                   புரிவான் நசை உடையேன்;
              செற்று ஓடிய திரள் தோள் உறு 
                    தினவும் சிறிது உடையேன்;
             மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது 
                  என் வரவு' என்றனன் உரவோன்.

ஏற்கனவே உடைந்த பழைய வில் அது என்பதை அறிவேன்;
உன் தோள் வலிமையை சோதிக்க விரும்புகிறேன்;
பல அரசர்களை வென்று கொன்ற திமிர் உடையவன்;
வேறு வேலை ஏதுமில்லை, இங்கு வந்ததற்கு இதுவே நோக்கம்,
என்றுரைத்தான் வலிமை நிறைந்த பரசுராமன்.


1297.   என்றனன் என்ன, நின்ற 
                   இராமனும் முறுவல் எய்தி 
             நன்று ஒளிர் முகத்தன் ஆகி     
                  'நாரணன் வலியின் ஆண்ட 
             வென்றி வில் தருக!' என்ன 
                 கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத் 
            துன்று இருஞ் சடையான் அஞ்ச 
                  தோளுர வாங்கி, சொல்லும்:

பரசுராமன் போருக்கு சூளுரைக்க  
அத்தனையும் கேட்டு, 
இராமன் ஒரு புன்னகை பூக்க  
முகம் பொலிவு பெற,
'நாராயணன் தன் வலிமையினால் பயின்றந்த 
வில்லைத் தருக' எனக் கேட்க,
பரசுராமனும் தர,
அதனை வாங்கிக்கொண்டு 
சடைமுடி அணிந்த பரசுராமன் அஞ்சுமாறு 
தோள் வரை இழுத்து, வளைத்து 
இலக்கு கேட்டான்.


1307.   பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
            வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை 
            சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ 
            நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்.

(பரசுராமன் அங்கிருந்து அகன்றதும்)
பூ மழை பொழிந்தனர் அங்கு வந்த தேவர்கள் அனைவரும்.
அழகிய வேற்படையுடைய வருண தேவனை நோக்கி 
'பெருமையுடைய இந்த வில்லை பாதுகாத்திடு' என்று இராமன் கூறி,
சேனைகளின் ஆரவாரத்திற்கிடையில் 
தூய நீர் வளம் நிறைந்த அயோத்தி மாநகரம் வந்து சேர்ந்தான்.


பாலகாண்டம் நிறைவுற்றது 

( தொடரும் )

Sunday, January 26, 2020

கம்பராமாயணம் 19




கடிமணப் படலம்


1162.  "'உரவு ஏதும் இலார் உயிர் ஏதும்' எனா
           கரவே புரிவார் உளரோ? கதிரோன்
           வரவே, எனை ஆள் உடையோன் வருமே!
           இரவே! கொடியாய் விடியாய்" எனுமால்.

வலிமையற்ற பெண்ணிற்கு
வாழ்வளிப்போம் என்றெண்ணாது
வஞ்சனை செய்வார் உன்னைப்போல் வேறார்?
கதிரவன் துயிலெழ
எனையாளும் எம்பெருமான் என்னிடம் வந்திடுவான்.
கொடிய இரவே,
சீக்கிரம் விடியாய்.


1167.   'தெருவே திரிவார், ஒரு சேவகனார், 
            இரு போதும் விடார், இது என்னை கொலாம்!
            கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால் 
            வருவார் உளரோ, குல மன்னவர்?

வீரர் ஒருவர், தெருவில் திரிகின்றார் 
காலை மாலை எந்நேரமும் 
எனை விட்டும் அகல்வதில்லை,
இது என்ன மாயம் ? எப்படி சாத்தியம் ?
கரு முகில் நிறத்தவர்,
மன்னர் குலத்தவர்,
இப்படி கன்னியர் பால் வந்து செல்வர் உளரோ ?



1169.  பண்ணோ ஒழியா, பகலோ புகுதாது;
           எண்ணோ தவிரா, இரவோ விடியாது;
           உள் நோவு ஒழியா, உயிரோ அகலா;
           கண்ணோ துயிலா, இதுவோ கடனே?

பாடல் இசை நிற்காது,
பகல் விடியாது 
எண்ணங்கள் எனை விட்டு நீங்காது 
இரவும் முடியாது 
உள்ளத்தின் ஏக்கங்கள் ஒழியாது 
உயிரும் போகாது 
உறக்கம் வராது, 
பெண்ணாய்ப் பிறந்ததே இங்ஙனம் துன்பப்படத்தானோ ?



1244.    மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
             வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து 
             இன் துணைஅன்னமும், எய்தி இருந்தார்;
             ஒன்றிய போகமும் யோகமும் ஓத்தார்.

இராமனும் 
மண்டபம் வந்து, 
திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி
பல பெருமைகளுடைய வெற்றி வீரன் இராமனும் 
அவன் இனிய துணையான அன்னம் போன்ற சீதையும் 
அருகருகே நெருங்கி அமர்ந்திருந்தார்கள்.
ஒன்றோடொன்று இணைந்த பேரின்பமும், 
அதற்குபாயமான யோக நிலையினையும் ஓத்திருந்தார்கள்.


1248.   வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்          
            மை அறு மந்திரம் மும்மை வழங்கா 
            நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான் 
            தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.

சுடும் தீயின் முன் 
வீரன் இராமன் அவ்வமயம் 
தவறின்றி மூன்று முறை மந்திரங்களைச் சொல்லி 
நெய்யோடு கூடிய அவிர்பாகங்களை தீயிலிட்டான்.
அதன்பின் சீதையின் தளிர் போன்ற மெல்லிய கரத்தினை 
தன் அகன்ற திருக்கரத்தால் பற்றினான்.


( தொடரும் )


Friday, January 24, 2020

கம்பராமாயணம் 18


1045.    எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்
             மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
             கையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;
             ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான்.

தசரதன் தேர் அருகே வந்து,
தன் அழகிய பெரிய தேரிலிருந்து இறங்கி
வலு கொண்ட சேனை பின்னே தள்ளி நிற்க,
ஜனகன் முன் செல்ல
தசரதன் கையை நீட்டி 'தேரில் ஏறிக் கொள்' என்றதும்
விரைந்து வந்து அவ்வண்ணமே செய்தான்.
தசரதனும் அகம் முகம் மலர
ஜனகனை ஆரத் தழுவிக்கொண்டான்.


1105.   திருவின் நாயகன் மின் திரிந்தாலெனத் 
            துருவு மா மணி ஆரம் துயல்வர 
            பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து 
            இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.


திருமகளின் நாயகன் 
மின்னல் உலாவுவது போல் 
மார்பில் அணிந்த மணி மாலைகள் ஒளிவீச 
கார் மேகம் தரையில் படிந்தது போல தாழ்ந்து 
வசிட்டன் விசுவாமித்திரன் இரண்டு முனிவர்களின் 
திருவடிகளை வணங்கினான்.


கோலங் காண் படலம் 

1117.  தேவியர் மருங்கு சூழ 
               இந்திரன் இருக்கை சேர்ந்த 
           ஓவியம் உயிர் பெற்றென்ன  
                உவந்து அரசு இருந்தகாலை 
           தா இல் வெண் கவிகைச் செங்கோல் 
                 சனகனை இனிது நோக்கி 
          'மா இயல் நோக்கினாளைக் 
                கொணர்க!' என வசிட்டன் சொன்னான்.

உயிர்பெற்ற ஓவியம் போன்ற 
மனைவியர் சூழ, 
தேவேந்திரன் போன்ற தசரதன் 
மகிழ்ச்சி பொங்க ஆசனத்தில் அமர்த்திருக்கும் போது,
வெண்கொற்றக் குடையின் கீழ் 
செங்கோல் தாங்கி அமர்ந்திருக்கும் சனகனைப் பார்த்து 
'மான் விழி மங்கை சீதையை அழைத்து வருக'
என வசிட்ட மாமுனி சொன்னான்.


1144.   பொன்னின் ஒளி, பூவின் வெறி 
                   சாந்து பொதி சீதம்,
            மின்னின் எழில், அன்னவள்தன்
                   மேனி ஒளி மான,
            அன்னமும், அரம்பையரும்
                   ஆர் அமிழ்தும், நாண
            மன் அவை இருந்த மணி
                   மண்டபம் அடைந்தாள்.


பொன்னின் ஒளியையும்,
பூவின் மணத்தையும்,
சந்தனத்துக் குளிர்ச்சியையும்
மின்னலின் அழகையும்
ஒப்புச் சொல்லுமாறு
சீதையின் மேனி எழில் இருக்க,
அன்னப்பறவை நடையில் தோற்று நாண
தேவ மங்கையர் அழகில் தோற்று நாண
அரிய அமுதம் இனிமையில் தோற்று நாண
அரசவை மணி மண்டபம் வந்தாள்.


1153. எய்ய வில் வளைத்தும், இறுத்ததும் உரைத்ததும் 
          மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடாலுற்றாள்,
          ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும் 
          கைவளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்.

இலக்கை அடைய வில்லை வளைத்தும், 
அது முறிந்தது என பிறர் உரைக்கக் கேட்டும் 
உண்மையாக இருந்ததால் 
கன்னிமாடத்திலிருந்து கண்டவன் இவன் என்ற 
முதல் சந்தேகம் தீர,
அன்று முதலே தன்னுள் இராமனின் உருவத்தை 
தரிசித்து வந்தவள்
இன்று, நேருக்கு நேர் காண முடியாது 
கைவளையலை சரிசெய்யும் விதமாய் 
கடைக்கண்ணால் கண்டு மகிழ்ந்தாள்.

( தொடரும் )

Thursday, January 23, 2020

கம்பராமாயணம் 17


எழுச்சிப் படலம்

733.   முகந்தனர் திருவருள், முறையின் எய்தினார்;
          திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
          புகழ்ந்தனர்; 'அரச! நின் புதல்வர் போய பின்
          நிகழ்ந்ததை இது' என, நெடிது கூறினார்.

அயோத்தி வந்த மிதிலை தூதுவர்
அரசனின் அனுமதி பெற்று
கண்டு, தொழுது, அவன் அடி  வணங்கி,
'அரசே உன் மைந்தர் இங்கிருந்து கிளம்பிய பிறகு
நடந்தது இது' என்று விரிவாக உரைத்தனர்.



803.  நித்திய நியமம் முற்றி
             நேமியான் பாதம் சென்னி 
         வைத்த பின், மறை வல்லோர்க்கு 
             வரம்பு அறு மணியும் பொன்னும் 
         பத்தி ஆன் நிரையும் பாரும் 
              பரிவுடன் நல்கி போனான் 
         முத்து அணி வயிரப் பூணான் 
              மங்கல முகிழ்த்த நல் நாள்.

தினப் பூஜைகளை முடித்துவிட்டு,
சக்கரம் தாங்கிய திருமாலின் பாதங்களில் 
தலை வைத்து வணங்கிவிட்டு 
வேதங்களைக் கற்றறிந்தவர்களுக்கு 
வரம்பின்றி மணியும் பொன்னும், 
பசுக்கூட்டங்களையும் நிலங்களையும் 
மகிழ்வுடன் தானம் தந்த பின்,
முத்துக்களும் வைரங்களும் 
ஆபரணமாய் அணிந்த தசரதன் 
மங்கள நாளில் மிதிலை நோக்கிப் பயணப்பட்டான்.


எதிர்கொள் படலம்

1029.    அடா நெறி அறைதல்செல்லா 
                   அரு மறை அறைந்த நீதி 
            விடா நெறிப் புலமைச் செங்கோல் 
                   வெண்குடை வேந்தர் வேந்தன் 
           படா முக மலையில் தோன்றிப் 
                   பருவம் ஒத்து அருவி பல்கும் 
             கடா நிறை ஆறு பாயும் 
                   கடலொடும் கங்கை சேர்ந்தான்.

தவறான வழி என்று 
வேதங்கள் உரைத்த வழியில் செல்லாது 
சரியானது என்று சொன்னவற்றை விலக்காது 
வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் 
மன்னர் மன்னன் கடல்  போன்ற தன் சேனைகளுடன் 
கங்கை வந்து சேர்ந்தான்.


1032.  'வந்தனன் அரசன்' என்ன 
              மனத்து எழும் உவகை பொங்க 
           கந்து அடு களிறும் தேரும் 
                கலின மாக் கடலும் சூழ 
            சந்திரன் இரவி தன்னைச் 
                  சார்வது ஒரு தன்மை தோன்ற 
           இந்திர திருவன் தன்னை 
                 எதிர் கொள்வான் எழுந்து வந்தான்.

'தசரதன் வந்துவிட்டான்' என்று செய்து கேட்டான் ஜனகன்.
மனதுள் ஆசை இன்பம் பொங்கக் கண்டான்.
தடைகள் யாவையும் உடைக்க வல்ல யானைகளும் 
தேரும் குதிரைகளும் கடல் போல் சூழக் கிளம்பினான். 
சந்திரக்குலத்தவன் சூரியக்குலத்தவனைக் காணக் கிளம்பினான்.
இந்திர லோகத்து செல்வங்களை ஒத்துடைய 
தசரதனை வரவேற்க கிளம்பினான்.


( தொடரும் )


Wednesday, January 22, 2020

கம்பராமாயணம் 16


690.  நினைந்த முனி பகர்ந்த எலாம்
              நெறி உன்னி, அறிவனும் தன்
         புனைந்த சடை முடி துளக்கி
              போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
         வனைந்தனைய திருமேனி 
              வள்ளலும், அம் மா தவத்தோன்
         நினைந்த எலாம் நினைந்து, அந்த
              நெடுஞ் சிலையை நோக்கினான்.

சதானந்த முனி வில்லின் பெருமையையெல்லாம் கூறியது கேட்டு,
ஞானி விசுவாமித்திரன் சிந்தித்து
தன் சடைமுடி நெறிப்படுத்தியபடியே
போர்த் திறம் மிகுந்த , காளை ராமனைப் பார்க்க,
வரைந்த ஓவியம் போன்ற இராமன்
முனிவன் பார்வையைப் புரிந்து கொண்டு
நெடிய அந்த சிவதனுசை
நோக்கினான்.


699.  தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் 
         மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
         கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் 
         எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

இமை மூடித் திறப்பதற்கும் மறுத்து 
சபையிலிருந்தோர் அமர்ந்திருந்தனர். 
இராமன் தன் திருவடியை 
வில்லின் ஒரு முனையில் வைத்து 
மற்றொரு முனையில் நாண் ஏற்றிய வேகத்தைக் 
காண முடியாது பரிதவித்தனர்.
இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்று 
யோசிக்கும் திறனில்லாது வருந்தினர்.
வில்லை இராமன் கையில் எடுத்ததைப் பார்த்தனர்.
அது முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டனர்.

 
 
722.  வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்; 
         அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினள்;
          'சிந்தையுள் மகிழ்ச்சியும், புகுந்த செய்தியும் 
         சுந்தரி! சொல்' என, தொழுது சொல்லுவாள்.


(வில்லுடைந்த சேதி சொல்ல நீலமாலை என்ற தோழி ஓடிவந்தாள்)

வந்தவள் சீதையின் அடி விழுந்து வணங்கவில்லை;
ஆரவாரம் செய்தாள் 
எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாய் 
ஆடினாள், பாடினாள்;
'அடி அழகானவளே, 
உன் மட்டற்ற மகிழ்ச்சியின் காரணத்தை,
கொண்டுவந்த சேதியைச் சொல்' 
என்று சீதை கூறியதும் 
தோழி, தொழுது பேசத் தொடங்கினாள்.



728.  'இல்லையே நுசுப்பு' என்பார் 
               'உண்டு, உண்டு' என்னவும் 
         மெல்லியல் முலைகளும் 
               விம்ம விம்முவாள்;
         'சொல்லிய குறியின், அத் 
               தோன்றலே அவன்;
         அல்லனேல் இறப்பேன்' என்று 
                அகத்துள் உன்னினாள்.

(செய்தி கேட்டதும் மகிழ்ந்த சீதை)
இடை இல்லை என்று சொன்னவர்,
இப்பொழுது மகிழ்ச்சியில் இடை பெருக்க, 
உண்டு என்று ஒப்புக் கொள்ளவும்,
தனங்கள் பருக்க, உடல் பூரிக்க,
நீலமாலை சொன்ன அடையாளங்களால் 
வில்லை முறித்தவன், கன்னி மாடத்திலிருந்து கண்டவன் 
அப்படி இல்லாதிருந்தால் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன் 
என்று மனதில் உறுதி கொண்டாள்.



( தொடரும் )

Tuesday, January 21, 2020

கம்பராமாயணம் 15



631. பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின்
               பொருள் வயினின் பிரிந்து போன
          வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய   
                கொழுநர் வர மணித் தேரோடும்
          கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து
                மெலிவு அகலும் கற்பினார்போல்,
          புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து
                பொலிந்தன - பூம் பொய்கை எல்லாம்.

தலைவியைப் பிரியும் முன்
திரும்பி வரும் நாள் உரைத்து,
போருக்கோ, பொருள் தேடவோ
பிரிந்து சென்ற தலைவன்
வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்து
தேரின் மீதமர்ந்து உயிருக்குயிரான
தலைவன் திரும்புகையில்
மனம் மகிழ்ந்து தளர்வு நீங்கி பொலிவு கூடும்
கற்புள்ள மங்கையர் போல்
காலையில் குதிரையின் மீதமர்ந்து
கதிரவன் திரும்ப வர,
தாமரை மலர்கள் மலர
அழகிய பொய்கைகள் மீண்டும் பொலிவுற்றன.



636.   இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் 
                முகந்து அழகு பருக நோக்கி,
          அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்?
                உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
           'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி 
                   காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
            பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என,
                   அவர் தகைமை பேசலுற்றான்.


தன் அருகில் அமர்ந்திருந்த 
இரு குமரர்களின் அழகைக் 
கண்களால் பருகியபடி 
தவமுனியை வணங்கி 'யார் இவர்கள்' என்று ஜனகன் கேட்க,
'உன் பக்கம் புதியவர்கள்,
வேள்வி காண வந்தவர்கள்,
உன் சிவதனுசு வில்லையும் காண்பார்கள்
பெரும் பண்புள்ள தசரதன் புதல்வர்கள்'
என்று கூறி ராமனின் பெருமைகளை 
உரைக்கத்தொடங்கினான் முனிவன்..


கார்முகப் படலம் 

*கார்முகம் - வில் 


666.  'மாற்றம் யாது உரைப்பது?
               மாய விற்கு நான் 
          தோற்றனென் என  
                மனம் துளங்குகின்றதால்; 
          நோற்றனள் நங்கையும் 
                 நொய்தின் ஐயன் வில் 
          ஏற்றுமேல், இடர்க் கடல் 
                  ஏற்றும்' என்றனன்.

'தங்கள் வார்த்தைக்கு மாற்று இல்லை;
தாங்கள் கூறியபிறகு நான் பேச ஏதுமில்லை;
மாய வில்லை திருமணத்திற்கு காரணமாய் வைத்து தோற்று 
வருந்துகின்றேன், மனம் கலங்குகின்றேன், வேறு குறை இல்லை;
வியத்தகு பண்புகளுடைய இக் குமரன் 
விரைவாய் வில்லை வளைத்து நாணேற்றினால் 
என் துயர் தீரும்,  சந்தேகமில்லை; 
என் மகளும் தவப்பேறு பெறுவாள், ஐயமில்லை'
என்று கூறினான் ஜனகன்.


679.  தாளுடை வரி சிலை, சம்பு உம்பர்தம் 
         நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இக் 
         கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய 
         வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.


( தன் மனைவியை அவமதித்த தட்சனின் வேள்வியை அழித்து)
வலிய அடித்தண்டுடைய தன் கை வில்லை, 
சிவன், தேவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்து, 
மனம் மாறி சினம் தணிந்து 
காளை போன்ற சனகன் குலத்தில் பிறந்த 
வலிய  வாள் உடைய, ஏர் கொண்டு உழும் ஒரு மன்னனிடம் கொடுத்தான்.
(என்று சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவன் உரைத்தான்)


( தொடரும் )

Monday, January 20, 2020

கம்பராமாயணம் 14


521. நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
        ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள்;
        காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனள்
        வேம் ஏரி அதனிடை விறகு இட்டென்னவே.

(கண் பார்வையிலிருந்து ராமன் அகன்றதும்)
சீதை வருந்தினாள்;
தன் உள்ளத்து நிலையை யாரிடமும் சொல்லமுடியாது தவித்தாள்;
ஊமைகள் போல் மனதிற்குள்ளேயே தேம்புவாள்;
எரிகிற நெருப்பில் விறகு இட்டது போல்
அவ்வமயம் மன்மதன் அம்பு எய்தான்.


529. சொரிந்தன நறு மலர் சுறுக் கொண்டு ஏறின 
         பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின 
         எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்,
         பரிந்தன, கரிந்தன பல்லவங்களே.


படுக்கையில் பரப்பப்பட்ட வாசமிக்க பூக்கள் 
அவள் உடம்பைத் தைத்தன;
உடல்மேல் பூசப்பட்ட சந்தனங்கள் 
தீயிலிட்டது போல் பொரிந்தது, உதிர்ந்தது;
காமத் தீ எரிய, அணிகலன்களைக் கோர்த்த நூல், 
அறுந்து விழுந்தது.
தளிர்கள் கரிந்து போயின.


547. 'வெளி நின்றவரோ போய் மறைந்தார்;
              விலக்க ஒருவர்தமைக் காணேன்;
         'எளியள், பெண்' என்று இரங்காதே 
               எல்லியாமத்து இருளூடே,
         ஒளி அம்பு எய்யும் மன்மதனார்,
              உனக்குஇம் மாயம் உரைத்தாரோ ?
         அளியென் செய்த தீவினையோ !
              அன்றில் ஆகி வந்தாயோ?

(ஓ, பறவையே)
பார்த்துக்கொண்டிருக்கும்போதே மறைந்துவிட்டார்
அவ்வாறு விலகிப் போவதை வழி மறிக்க யாருமில்லை;
'இவள் எளியவள், பெண்' என்ற இரக்கம் இல்லாது,
இருட்டில் ஒளிந்திருந்து அம்பு எய்தும் மன்மதன் 
உனக்கும் இந்த வஞ்சகச் செயலை சொல்லித்தந்தானோ ?
இல்லை, முற்பிறப்பில் நான் செய்த பாவமோ ?
அன்றில் பறவை யாய் மாறி எனை வருத்த வந்தாயோ?


562. ஏகி, மன்னனைக் கண்டு எதிர் கொண்டு அவன் 
         ஒகையோடும் இனிது கொண்டு உய்த்திட 
         போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர் 
         மாசு மாடத்து, அனைவரும் வைகினார்.

(முனிவன் உட்பட மூவரும்)
அரண்மனைக்குள் நுழைய 
ஜனக மன்னன் எதிர்கொண்டு அழைத்து 
வரவேற்று உபசரித்து 
அந்த இன்ப பூமியில் 
சிறந்த ஓர் வானளாவிய மாளிகையில் 
தங்கவைத்தான்.


( தொடரும் )

Sunday, January 19, 2020

கம்பராமாயணம் 13


மிதிலைக் காட்சிப் படலம்

481.  நிரம்பிய மாடத்து உம்பர்
               திரை மணிக் கொடிகள் எல்லாம்
         'தரம் பிறர் இன்மை உன்னி,
               தருமமே தூது செல்ல
         வரம்பு இல் பேர் அழகினாளை
                மணம் செய்வான் வருகின்றான்' என்று
         அரம்பையர் விசும்பின் ஆடும்
                ஆடலின், ஆடக் கண்டார்.

அந் நகரில் பெரிய பெரிய மாடங்கள் நிறைந்த,
வீடுகளின் மேல் கட்டப்பட்ட கொடிகள் யாவும்,
'(சீதையை மணக்க) வேறாருக்கும் தகுதி இல்லாததால்
அறக்கடவுளே தூது சென்று தெரிவிக்க,
பேரழகியான சீதையை மணந்து கொள்ள
இராமன் வருகின்றான்' என்று
தெய்வ மங்கையர் வானத்தில் ஆடுவது போல்
கொடிகள் ஆடுவதை மூவரும் கண்டனர்.



487.  நெய் திரள் நரம்பின் தந்த
                மழலையின் இயன்ற பாடல்
         தைவரு மகர வீணை
                தண்ணுமை தழுவித் தூங்க
         கை வழி நயனம் செல்ல
                கண் வழி மனமும் செல்ல
         ஐய நுண் இடையார் ஆடும் 
                ஆடக அரங்கு கண்டார்.

தேன் போன்ற யாழிசை நரம்பு மீட்டும் இனிமையும்
மழலைச் சொற்கள் கொண்டு பாடப்பெறும்
வாய்ப்பாட்டு இசையும்
விரல் மீட்ட எழும் வீணை இசையும்
மத்தளத்தின் ஓசையும்
ஒன்றோடொன்று ஒத்து ஒலிக்க
கைகள் செல்லும் வழியே தன்
கண்களின் குறிப்புப் பார்வை செல்லவும்
அக் கண்களின் வழியே
மனதின் குறிப்பு செல்லவும்
இருக்கா இல்லையா என்று காண்போர் சந்தேகிக்கும்படி
மெல்லிடை மகளீர் நடனமாடும் அரங்கம் பார்த்தனர்.


510.  பொன் சேர் மென் கால் கிண்கிணி 
                  ஆரம், புனை ஆரம்,
          கொன் சேர் அல்குல் மேகலை 
                   தாங்கும் கொடி அன்னார் 
          தன் சேர் கோலத்து இன் எழில் 
                  காண, சத கோடி 
          மின் சேவிக்க மின் அரசு 
                  என்னும்படி நின்றாள்.

பொன்னாலாகிய கால் சலங்கைகளையும் 
இரத்தின மாலைகளையும் 
பூ மாலைகளையும் 
இடையில் அணியும் மேகலை யையும் 
அணியும் தோழியர் பலர் 
அவள் அழகைப் பார்த்து ரசித்து நிற்க,
நூறுகோடி மின்னல்கள் சுற்றி நின்று வணங்கிப் பணி புரிய,
அவற்றிற்கிடையில் மின்னல்களின் அரசி யாய் '
சீதை நின்றிருந்தாள்.



514.  எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி 
         கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று 
         உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
         அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

இதுதான் அழகின் எல்லை என்று எண்ணக் கூட முடியாத 
அழகு நிறைந்த சீதை, மாடத்தில் நின்றிருந்தபொழுது 
இருவர் கண்களும் பற்றிக்கொண்டன, 
ஒன்றையொன்று சுவைத்து உண்டன,
உணர்வுகள் ஒன்றுபட்டன,
இராமன் சீதையைக் காண, சீதையும் இராமனைக் கண்டாள்.


517. மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும் 
         ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,
         கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் 
         பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ?

இடை இல்லாத நங்கை சீதையும் 
குற்றம் இல்லாத இராமனும் 
(பார்த்த அந்த ஒரு பார்வையிலேயே) 
இரண்டு உடல், ஒரு உயிராய் மாறினர்.
பார் கடலில் பாம்புப் படுக்கையில் 
கலந்து, பின் பிரிந்து, 
மீண்டும் ஓரிடத்தில் சேர்ந்தால் பேசத் தேவையா ? 



( தொடரும் )

Saturday, January 18, 2020

கம்பராமாயணம் 12



அகலிகைப் படலம்

457.  பள்ளி நீங்கிய, பங்கயப்
                பழன நல் நாரை,
          வெள்ள வான் களை களைவுறும்
                 கடைசியர் மிளிர்ந்த
          கள்ள வாள் நெடுங் கண் நிழல்   
                 கயல் எனக் கருதா
          அள்ளி, நானுறும் அகன் பணை
                மிதிலை நாடு அணைந்தார்.


உறக்கம் நீங்கிய வெள்ளை நாரைகள்
தாமரைகளுடைய வயல்களில்
களை பறிக்கின்ற பெண்களின்,
கள்ளத்தனமாக பார்க்கும் கண்களின்
நிழலை, கயல் மீன்கள் என்று கருதி,
குத்தி, ஏமாந்து, வெட்கி ...
அத்தகைய அகன்ற வயல் சூழ்ந்த
மிதிலை நாடு சென்று சேர்ந்தனர் மூவரும்.


465.  கண்ட கல்மிசைக் காகுந்தன் 
              கழல் துகள் கதுவ 
         உண்ட பேதைமை மயக்கு அற 
               வேறுபட்டு, உருவம் 
         கொண்டு, மெய் உணர்பவன்
               கழல் கூடியது ஒப்ப  
          பண்டை வண்ணமாய் நின்றனள்;
               மா முனி பணிப்பான்;


கண்படு தூரத்தில் இருந்த 
கல்லின்மேல், இராமனது 
கால் தூசி பட 
மனதின் அறியாமை மறைந்து 
தத்துவ ஞானம் பெற்றவன்,
பரமனது திருவடிகளை அடைவது போல,
உருவம் மாறி, பெண்ணாகி 
எழுந்து நின்றாள்,
முனிவன் அவள் கதை சொன்னான்.


475. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் 
                 இனி இந்த உலகுக்கு எல்லாம்  
         உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் 
                 துயர் வண்ணம் உறுவது உண்டோ?
         மை வண்ணத்து அரக்கி போரில்  
                  மழை வண்ணத்து அண்ணலே! உன் 
         கை வண்ணம் அங்குக் கண்டேன் 
                  கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

(அகலிகை கதை கூறி)
இவ்வாறு நடந்தது முன்னர்.
இனி, இவ்வுலகிலுள்ளோர் உன்னால் நலம் பெறுவர் 
துன்பம் கடலில் யாரும் பரிதவிப்பாரோ ?
கரிய நிறத்து அரக்கியுடன் 
மேக நிறத்தை ஒத்தவனே,
நீ செய்த போரில் 
உன் கையின் திறமையை அங்கு கண்டேன்.
காலின் பெருமையை இங்கு கண்டேன்.

 
479. குணங்களால் உயர்ந்த வள்ளல் 
               கோதமன் கமலத்தாள்கள் 
         வணங்கினன், வலம்கொண்டு ஏத்தி 
               மாசு அறு கற்பின் மிக்க 
         அணங்கினை அவன்கை ஈந்து, ஆண்டு  
                அருந்தவனோடும், வாச 
         மணம் கிளர் சோலை நீங்கி 
                 மணி மதில் கிடக்கை கண்டார்.

அனைத்து நற் குணங்களிலும் மேம்பட்ட இராமன்,
கௌதம முனி கால்களில் விழுந்து வணங்கி 
வலம் வந்து துதி செய்து 
குற்றமற்ற கற்பு நெறி மாறாத அகலிகையை 
முனிவன் கையில் ஒப்படைத்து 
அப்பொழுதே தவ முனியோடும்,
வாசம் வீசும் மலர்ச்சோலையிலிருந்து கிளம்பி 
அழகிய நவமணிகள் கொண்டமைக்கப்பட்ட 
மிதிலை நகரின் புறமதிலைக் கண்டனர்.


( தொடரும் )

Friday, January 17, 2020

கம்பராமாயணம் 11


வேள்விப் படலம்

422.   எண்ணுதற்கு ஆக்க அரிது
                  இரண்டு மூன்று நாள்
          விண்ணவர்க்கு ஆக்கிய
                  முனிவன் வேள்வியை
           மண்ணினைக் காக்கின்ற
                  மன்னன் மைந்தர்கள்
           கண்ணிணைக் காக்கின்ற 
                  இமையின் காத்தனர்.

முனிவர், தேவர்களின் பொருட்டு செய்த வேள்வியை
மண்ணைக் காக்கும் மன்னவன் மைந்தர்கள்,
அரிய கடினமான ஆறு நாள் காவல் பணியை
கண் விழியைக் காக்கும் இமை போல செய்து முடித்தனர்.


436.  எய்தனர், எறிந்தனர், எரியும் நீருமாய்ப்
         பெய்தனர், பெரு வரை பிடுங்கி வீசினர்,
         வைதனர், தெழித்தனர், மழுக் கொண்டு ஓச்சினார்,
         செய்தனர், ஒன்று அல  தீய மாயமே.

(வேள்வியைத் தடுக்கும் நோக்கில்)
அரக்கர்கள் அம்பு எய்தினர்,
சூலம் வேல் முதலியவற்றை எறிந்தனர்
நெருப்பையும் தண்ணீரையும் பொலியச் செய்தனர்.
;பெரிய மலைகளை பிடுங்கி வீசினர்
அதட்டினார், மழு எறிந்தனர்
இன்னும் பல மாய வேலை செய்தனர்.


443.  கவித்தனன் கரதலம், 'கலங்கலீர்' என
         செவித்தலம் நிறுத்தினன்;சிலையின் தெய்வ நாண்
         புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
         குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.

கலக்கம் வேண்டாம் என்று கைகளைக் கவித்து
தன் தெய்வீக அம்பை காது வரை இழுத்து
அந்த இடத்தை ரத்தக் காடாக்கினான்
குன்று போல் அரக்கர்களின் தலையைக் கொய்தான்.



451. அரிய யான் சொலின், ஐய! நிற்கு
             அறியது ஒன்று இல்லை;
         பெரிய காரியம் உள; அவை
              முடிப்பது பின்னர்;
         விரியும் வார் புனல் மருதம் சூழ்
              மிதிலையர் கோமான்
          புரியும் வேள்வியும், காண்டும் நாம்,
              எழுக!' என்று போனார்.

'பெருந்தகையே, கடினமான செயல் எதுவும்
உனக்கு கடினமாகாது.
காலம் கனியட்டும், இன்னும் சில
பெரிய செயல்கள் முடிக்க நேரம் வரட்டும்.
மருத நிலங்கள் மிகுந்த
மிதிலை நாட்டு மன்னன்
யாகம் ஒன்று செய்கின்றான்,
கண்டு களிப்போம் வாரும்'
என்று சொல்ல, மூவரும் கிளம்பினார்.

( தொடரும் )


Thursday, January 16, 2020

கம்பராமாயணம் 10


தாடகை வதைப் படலம்

362.   சூடக அரவு உறழ்  சூலக் கையினள்;
          காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்
          ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் !
          தாடகை என்பது அச் சழக்கி நாமமே;

பாம்பை அணிகலனாய் சூடியிருப்பாள்
கையில் சூலம் வைத்திருப்பாள்;
இக்காட்டில் வசிப்பவள்;
ஆண்கள் உனைக் கண்டால்
பெண்தன்மை விரும்பத் தகுந்த தோளாற்றலுடையவனே,
தாடகை என்ற பெயர் கொண்டவள் அந்தக் கொடியவள்;


372.  'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும் 
         கெட, கருவறுத்தனென்; இனி சுவை கிடக்கும் 
         விடக்கு அரிது எனக் கருதியோ? விதிகொடு உந்த
         படக் கருதியோ? - பகர்மின் வந்த பரிசு !' என்றே.

எனை வெல்வது அரிது, 
என் காவலுக்குட்பட்ட இடம் இது 
இங்கு எல்லாம் கெட நாசப்படுத்திவிட்டேன்; 
சுவையாய் வேறேதும் கிட்ட வழியில்லாது செய்துவிட்டேன்; 
அதனால் தான் இங்கு வந்தீர்களோ,
இல்லை விதி உங்களை இங்கு கொணர்ந்து சேர்த்ததோ?
எனக்குப் பரிசாக வந்தவர்களே, சொல்லுங்கள் - என்றாள் தாரகை.


374.  அண்ணல் முனிவற்கு அது
                    கருத்து எனினும், 'ஆவி
          உண்' என வடிக் கணை
                    தொடுக்கிலன்; உயிர்க்கே
          துண்ணெனும் வினைத்தொழில்
                    தொடங்கியுளளேனும்
           'பெண்' என மனத்திடை
                     பெருந்தகை நினைத்தான்.

ஆற்றல் நிரம்பிய அம் முனிவர்க்கு
அவளைக் கொல்லும் எண்ணம் இருந்தாலும்,
அரக்கி இறக்கும் வண்ணம் கூரிய கணை விட
முயற்சிக்கவில்லை இராமன்.
உயிர்கள் அஞ்சி நடுக்குமாறு
தொழில் தொடங்கியுள்ளாள் எனினும்
'பெண்' ஆயிற்றே என்று எண்ணினான் இராமன்.



382. ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
         சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
         ஆறி நின்றது அரன் அன்று; அரக்கியைக்
         கோறி' என்று எதிர் அந்தணன் கூறினான்.

அழிவில்லாத நல்லறமே உனக்கு எடுத்துரைத்தேன்.
இவள் மேல் உள்ள கோபத்தில் சொல்லவில்லை.
இவ்வாறு நீ தயங்கி நிற்பது தருமம் அல்ல;
இந்த அரக்கியைக் கொல் என்று முனிவன் கூறினான்.



390.  பொடியுடைக் கானம் எங்கும்  
              குருதிநீர் பொங்க வீழ்ந்த 
          தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்
              தாடகை, தலைகள்தோறும் 
          முடியுடை அரக்கற்கு, அந் நாள் 
               முந்தி உற்பாதம் ஆக,
           படியிடை அற்று வீழ்ந்த 
                வெற்றிஅம் பாதகை ஒத்தாள்.


புழுதி நிறைந்த அந்த காடு முழுவதும் 
ரத்த ஆறு ஓடுமாறு,
தடித்த உடல், கோரைப் பற்கள்,
குகை போன்ற வாய் கொண்ட 
தாடகை விழுந்தாள்.
தலைகள் தோரும் கிரீடம் உடைய அரக்கன் (ராவணன்)
பின்னால் அழிவதற்கு அறிகுறியாக 
ஒடிந்து விழுந்த வெற்றிக் கொடியை 
ஒத்திருந்தாள்.


( தொடரும் )

Tuesday, January 14, 2020

Garden composting

Wait for me

கம்பராமாயணம் 9


317.  மடங்கள்போல் மொய்ம்பினான்
             முன்னர், 'மன்னுயிர்
         அடங்கலும் உலகும் வேறு
             அமைத்து, தேவரோடு
         இடம் கொள் நான்முகனையும்
             படைப்பென் ஈண்டு' எனாத்
         தொடங்கிய துனி உறு
             முனிவன் தோன்றினான்.

சிங்கம் போன்று அமர்ந்திருந்த மன்னன் முன்,
உயிர்கள் எல்லாம் வாழ ஓர் உலகையும்,
தேவர்களோடும் இன்னொரு பிரம்மனையும்
படைக்கத் துணிந்த முனிவன் (விஸ்வாமித்திரன்)
அங்கு வந்து நின்றான்.


324.   தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
                  இடையூறா, தவம் செய்வோர்கள்
           வெருவரச் சென்று அடை காம வெகுளி என
                  நிருதர் இடை விலக்கா வண்ணம்,
           'செருமுகத்துக் காத்தி' என, 'நின் சிறுவர்
                   நால்வரினும் கரிய செம்மல்
            ஒருவனைத் தந்திடுதி' என உயிர் இரக்கும்
                    கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.

மரங்கள் நிறைந்த வனம்,
வனத்தினிடையில் செய்கிறோம் வேள்வி, தவம்,
அவ்வாறு தவம் செய்வோர் அஞ்சா வண்ணம்,
எங்கள் பணிக்கு இடையூறு நேரா வண்ணம்,
காமம் வெகுளி தடை ஏதும் வராது,
அரக்கர் கூட்டம் எங்களை அணுக முடியாது,
எதிர்த்து நின்று போர் புரிந்திட வேணும்,
அதற்கு உன் பிள்ளையருள் கரிய நிறத்தினன் வேணும்,
அவனை நீர் எமக்கு தந்திட வேணும்,
உயிர் வேணும் எனக் கேட்காது கேட்டான் முனிவன்
மன்னன் மனம் வருந்தினான்.


326.  தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் 
                 ஒருவண்ணம் துயர் நீங்கி,
          'படையூற்றம் இலன், சிறியன் இவன்; பெரியோய்!
                 பணி இதுவெள் பனி நீர்க் கங்கை 
          புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும் 
                 நான்முகனும் புகுந்து செய்யும் 
          இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பேன்; 
                 பெரு வேள்விக்கு எழுக!' என்றான்.

தேன் சொட்டும் புது மலர் மாலை அணிந்த மன்னவன் 
தன் மனதை தேற்றிக்கொண்டு, துயரம் நீங்கி 
'படை நடத்துவதில் பயிற்சி அற்ற சிறுவன் இராமன்,
எல்லா வல்லமையும் நிறைந்த பெரியவர் நீங்கள்,
தாங்கள் இடும் கட்டளை இதுவெனில் 
சடையில் கங்கை பெருகும் சிவனும்,
பிரம்மனும், இந்திரனும் 
அவ்வரக்கர்கட்கு துணையாய் நின்று 
தீங்கு செய்ய வந்தால் 
அவர்கட்கு தடையாய் நின்று நான் காக்கிறேன்;
பெரு வேள்வி தொடங்கட்டும், எழுக' என்றான்.


328.   கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ 
          பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு 
          உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் 
          மறுத்தியோ?' எனா வசிட்டன் கூறினான்.

சீற்றம் கொண்ட விஸ்வாமித்திரன் 
எண்ணத்தை உணர்ந்து
'நீ பொறுத்தருள்' என்றுரைத்து 
'உன் மகனுக்கு அடைவதற்கரிய நன்மைகள் 
வந்து கூடும் நாளை வேண்டாமென நீ மறுத்துக் கூறுவாயோ 
என்று வசிட்டன் மன்னனுக்கு உரைத்தான்.


331.    வந்த நம்பியைத் தம்பிதன்னொடும் 
           முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல் 
           தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
           எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான்.

தம்பியோடு, அழைத்தவுடன் வந்த ராமனை,
வேதங்கள் அனைத்தும் அறிந்த முனிவருக்குக் காட்டி,
'இனி இவர்கட்கு தாய் தந்தை நீங்கள் தான்,
எந்தையே, இவர்களைத் தங்களிடம் தந்தேன்;
இயன்ற காரியத்தை  நிறைவேற்றுக' - என்றான்.

( தொடரும் )


Monday, January 13, 2020

கம்பராமாயணம் 8


282.   ஒரு பகல் உலகு எலாம்
                   உதரத்துள் பொதிந்து,
          அரு மறைக்கு உணர்வு அரும்
                  அவனை, அஞ்சனக்
          கரு முகிற் கொழுந்து எழில்
                   காட்டும் சோதியை,
          திரு உறப் பயந்தனள் -  திறம்
                   கொள் கோசலை.

பிரளயத்தின் போது
உலகை எல்லாம் தன் வயிற்றில் வைத்துக் காத்தவனை,
வேதங்களும் விவரிக்க முடியாத அப் பரம்பொருளை,
கரு மேகத்தின் அழகைக் காட்டும் ஒளி வடிவாய்த் திகழ்பவனை
உலகம் சிறக்க வேண்டி அவதரிப்பவனை
கோசலை பெற்றெடுத்தாள்.


286.  ஆடினர், அரம்பையர்; அமுத ஏழ் இசை
          பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
          'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்
          ஓடினர், உலாவினர், உம்பா முற்றுமே;

ரம்பை போன்ற தேவ மங்கையர் ஆடிக் கொண்டாடினர்;
அமுதம் போன்ற ஏழு வகை இசை மீட்டிப் பாடினர் ;
பல்வேறு வாத்தியங்கள் முழங்கி ஓசை எழுப்பி மகிழ்ந்தனர்;
'அரக்கர் அழிந்தனர்' என்று ஆடி வான வீதியெங்கும் ஓடித் திரிந்தனர்;


289.  'இறை தவிர்ந்திடுக, பார் யாண்டு ஓர் ஏழ்; நிதி
          நிறைதரு சாலை தாள் நீக்கி, யாவையும்
          முறை கெட, வறியவர் முகந்து கொள்க' எனா
          அறை பறை' என்றனன் - அரசர் கோமகன்.

ஏழாண்டுகள் சிற்றரசர்கள் திறை செலுத்துவதைத் தவிர்க்க;
செல்வம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அறையின் தாழ்பாள் அகற்றுக;
வரைமுறை இல்லாது வறியவர் வேண்டிய அளவு அள்ளிக் கொள்க;
இதை உடனே பறை அடித்து தெரியப்படுத்துக; 
   - என்று மன்னர் மன்னன் அறிவித்தான்;


296. கரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
        'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
        விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
        'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

ஒரு முதலை காலைக் கவ்வி வருத்த,
சோர்வுற்ற யானை கஜேந்திரன்,
பாம்புப் படுக்கையில் படுத்திருந்தவனை அழைக்க
அக்கணமே விரைந்து வந்து அருள் செய்த அந்த மெய்ப்பொருளுக்கு
'இராமன்' என்று பெயர் சூட்டினான்.

308.  வீரனும், இளைஞரும் வெறி பொழில்களின்வாய்
          ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
          சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
          கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால்.

மாவீரன் ராமனும் அவர் தம்பியரும்
மணம் வீசும் சோலைகளைக் கண்டு களிப்பர்;
வந்தாரோடு அன்போடு உரையாடும்
முனிவரிகளிடம் பேசி மகிழ்வர்;
மாலையில் அரண்மனை வாயில் வந்தடைவர்;
வரும்போதும், போகும்போதும் நால்வரையும் நோக்கும் நகரத்தார்
'மழை வர மகிழும் பயிர் போல்' ஆனந்தம் கொள்வர்;

( தொடரும் )

Sunday, January 12, 2020

கம்பராமாயணம் 7



207. அருள் தரும் கமலக்கண்ணன்
           அருள்முறை, அலர் உளோனும்
        இருள் தரும் மிடற்றினோனும்,
            அமரரும் இனையர் ஆகி
        மருள் தரும் வனத்தில், மண்ணில்,
             வானரர் ஆகி வந்தார்;
         பொருள்தரும் இருவர் தம்தம்
             உறைவிடம் சென்றுபுக்கார்.

கருணையே வடிவான
தாமரைக் கண்ணன் திட்டப்படி,
பிரம்மனும், சிவனும், மற்ற தேவர்களும்
சொன்ன முறைப்படி,
இருண்ட வனங்களிலும், நிலத்திலும்
வானரர்களாய் வடிவெடுத்தார்கள்,
பிரம்மனும் சிவனும் தங்கள் தங்கள்
உறைவிடம் போய்ச்சேர்ந்தார்கள்.

208.   ஈது, முன் நிகழ்ந்த வண்ணம், என, முனி இதயத்து எண்ணி,
          'மாதிரம் பொருத திண் தோள் மன்ன ! நீ வருத்தல்; ஏழ் - ஏழ் 
          பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி 
          தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும் என்றான்.

இவ்வாறு முன்னம் மால் சொன்னதை 
இதயத்துள் எண்ணிப்பார்த்தபடியே, வசிட்ட முனி,
'வலிய தோள்களை உடைய வேந்தே, 
நீ வருந்த வேண்டா;
ஈரேழு உலகையும் காக்கும் 
புத்திரரைத் தரவல்ல வேள்வியைச் செய்,
குறையேதுமின்றி செய்,
உன் மனத்துயர் விலகும், இது மெய்' என்றான்.

254.  அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்  
         முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர் 
         கடிகையின் அடைந்தனன் - கமல வான் முக 
         வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே,

முரசு ஒலிக்க, தாமரை 
முகத்தையொத்த பெண்கள் வாழ்த்து பாட,
மணிமுடி தரித்த மன்னன் தசரதன்,
கலைக்கோட்டு முனிவனோடு 
ஒரு நாழிகையில் 
மாநகர் அயோத்தி வந்தடைந்தான்.


261. என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு 
        ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஓம்பிடும்
        வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
        இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.

தசரதன் தன் கோரிக்கையைச் சொன்னதும்,
'அரசன் வருந்தாதே, 
இவ்வுலகு மட்டுமின்றி ஈரேழு உலகையும் 
பாதுகாத்து ஆளும்  
வல்லமை பொருந்திய மைந்தர்களை 
கொடுத்தருளக்கூடிய வேள்வி ஒன்றை 
இன்றே செய், எழு' என்றுரைத்தான்.

267.   மா முனி அருள் வழி, மன்னர் மன்னவன் 
          தூம மென் கரி குழல் தொண்டைத் தூய வாய்க் 
          காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
          தாமன் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ.

மாமுனி கலைக்கோட்டு முனிவன் சொன்னபடி,
(வேள்வியின் பிரசாத அமுதத்தை)
அரசனுக்கரசன் தசரதன் 
சுருண்ட கூந்தல், சிவந்த வாய் உடைய 
அழகிய கோசலையின் கைகளில், 
சங்குகள் முழங்க, 
ஒரு பாகத்தை தந்தருளினான்.

 
( தொடரும் )


Friday, January 10, 2020

கம்பராமாயணம் 6


அரசியற் படலம்

171.  தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்
         சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
         நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும், நுணங்கு கேள்வி
         ஆயப் புகுங்கால், அறிவு ஒக்கும் - எவர்க்கும், அன்னான்.

மன்னர்க்கெல்லாம் மன்னனான தசரதன்
   - அன்பு செலுத்துவதில் அன்னை போன்றவன்
   - நன்மை செய்வதையே தன் தவப்பயன் என்று  கருதுபவன்
   - இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்வதால் மகன் போன்றவன்
   - நோய் வந்தால், அதைப் போக்கும் மருந்தாவான்
   - நுணுக்கமாய் ஆராய்ந்து பொருள் காணும் அறிவைக் கொண்டவன்

திரு அவதாரப் படலம்

180.  ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் 
         தூய மா முனிவனைத் தொழுது, தொல் குலத் 
         தாயாரும் தந்தையும் தவமும் அன்பினால் 
         மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.


தசரதன் ஒருநாள், பிரம்மனுக்கு நிகரான 
தூய முனிவன் வசிட்டனை வணங்கி, எம் குலத்தின் 
தாய் தந்தை தவப்பயன் 
கருணை பொழியும் கடவுள் 
எனக்கெல்லாமே தாங்கள் தான் என்றியம்பினான்.


182.   அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
          உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;
          பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம் 
          மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

வசிட்ட, 
அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டேன்,
பகைவர்களை ஒடுக்கிப் பணி புரிந்தேன்,
குறை ஏதும் இல்லாது நாட்டு மக்களைக் காத்தேன்,
என் ஆட்சிக்குப் பின், ஏதும் குழப்பம் நேரும் 
என்று மட்டும் கலக்கம் கொண்டேன்;


200.   மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் 
          நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
          கச ரத துரக மாக் கடல்கொள் காவலன் 
          தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

கானல் நீர் போன்றவர்களாகிய அரக்கர்கள் வாழ்வை 
எம் குறி தவறா அம்பினால் அழிப்பதற்கென்று 
யாமே, யானை குதிரை தேர், கடல் போன்ற படைகளுக்கு 
தலைவனான தசரதனின் தனயனாய் அவதரிப்போம் 
(என்று முன்னம் திருமால் இயம்பியது 
வசிட்டருக்கு நினைவுக்கு வந்தது)


( தொடரும் )

Thursday, January 9, 2020

கம்பராமாயணம் 5



நகரப் படலம் 

93.   செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்
             சீரிய கூரிய தீம் சொல்
        வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
             முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
        எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து
             ஏறுவான் ஆதரிக்கின்ற
        அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி
             புரிகின்றது - அயோத்தி மா நகரம்.


அழகான இனிமையான
சிறந்த நுட்பமான
சொற்களைளைக் கொண்டு
பல கவிஞர்களும், வால்மீகியும்
பாடிப் புகழ்ந்துரைத்த நகரம்,
வேறு பல உலகத்தில்,
வேறு ஊரில், நாட்டில் வசிப்போர்
தவம் செய்து, வாழ விரும்பும் நகரம்,
விண்ணுலகத்தாரும்
மண்ணில் இறங்கி வந்து வசிக்க ஏற்ற நகரம்,
எனக்கும் மிகவும் பிரியமான நகரம்
-  இந்த அயோத்தி மாநகரம்.

97.  'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்'
            என்னும் ஈது அரு மறைப் பொருளே;
       மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
             மா தவம் அறத்தோடும் வளர்த்தார்?
       எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இல்
             ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
       ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம்
            உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

புண்ணியம் செய்தார் சொர்கம் அடைவார்
இது வேதம் உரைக்கும் கருத்தாம்.
இராமபிரான் அன்றி வேறார்
அறத்துடன் புண்ணியம் செய்தார் ?
இவ்வாறு எல்லா நற்குணங்களும் கொண்ட
இந்த இராமபிரான் இருந்து
ஏழுலகத்தையும் ஆள ஏற்ற இடம் அயோத்தி என்றால்,
இதனின் நல்ல இடம்
இன்னொன்று உண்டென்று உரைக்க முடியுமா என்ன?

131.   பொன் திணி மண்டபம் அல்ல; பூத்தொடர் 
          மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
          குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
          முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

நகரம் எங்கும் 
பொன்னால் கட்டிய மண்டபம், 
அப்படியல்லாதவை 
மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாம் 
பலர் கூடி  வாழும் பொது மன்றங்கள் 
அப்படியல்லாதவை 
மேல் மாடியோடு அமையப்பெற்ற மாளிகைகள் 
இரத்தினங்கள் கொண்டமைக்கப்பட்ட முற்றங்கள் 
அப்படியல்லாதவை 
முத்துப்பந்தல்கள்.

( தொடரும் )


Wednesday, January 8, 2020

கம்பராமாயணம் 4


77. காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
      போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
      நீரோடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
      ஊரோடு நிகர்வன, இமையவர் உலகம்.

கோசல நாட்டில் -
பூஞ்சோலைகள் மேகங்களுக்கு ஒப்பாகும்
நெற்போர் கழனிகள் மலைகளுக்கு ஒப்பாகும்
அணை சூழ்ந்த நீர்நிலைகள் கடலுக்கு ஒப்பாகும்
செல்வ வளம் நிறைந்த ஊர்கள் தேவலோகத்துக்கு ஒப்பாகும்.


84.  வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
       திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
       உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
       வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்;

கோசல நாட்டில் - 
வறுமையே இல்லாததால், தானம் தர, பெற வழியில்லை 
போர் புரிய எதிரிகள் இல்லாததால், உடலுறுதியை நிரூபிக்க வாய்ப்பில்லை;
யாரும் பொய் உரைப்பதில்லை என்பதால் உண்மை என்று தனியே ஏதும் இல்லை;
அறியாமை இல்லவே இல்லை, கேள்வி எழுப்பி எல்லாரும் அறிவை பெருக்கிக்கொள்வதால்;


87.  கூறு பாடலும், குழலின் பாடலும்,
       வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
       'ஆறும் ஆறும் வந்து எதிர்த்த ஆம்' என,
       சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

இரு வேறு திசையிலிருந்து வரும் ஆறுகள் 
ஒன்றோடொன்று  கலந்திடுவது போல்,
இசை வல்லுனரின் பாடலும்,
புல்லாங்குழலின் பாடலும்,
வேறு வேறு விழாவில் ஒலிக்க 
மக்கள் கூட்டம் ஒன்றுகூடி மகிழ்ந்தனவே.

( தொடரும் )

Tuesday, January 7, 2020

கம்பராமாயணம் 3



35.   தண்டலை மயில்கள் ஆட
           தாமரை விளக்கம் தாங்க
        கொண்டல்கள் முழவின் ஏங்க,
           குவளை கண் விழித்து நோக்க,
        தெண் திரை எழினி காட்ட, தேம்
           பிழி மகர யாழின்
        வண்டுகள் இனிது பாட
           மருதம் வீற்றிருக்கும் மாதோ.


மயில்கள் ஆடுது 
தாமரை விளக்கு ஏந்தி நிற்குது 
மேகங்கள் மத்தள சத்தம் எழுப்புது 
குவளை மலர்கள் கண் விழித்துப் பார்க்குது 
நீரில் அலைகள் திரைச்சீலையாய்த் தெரியுது 
மகர யாழிலிருந்து தேனிசை ஒலிக்குது 
வண்டுகள் இனிமையாய்ப் பாடுது 
இவை எல்லாவற்றுமிடையில் 
மருத நாயகி வீற்றிருப்பதாய்த் தோன்றுது 

37.    நீரிடை உறங்கும் சங்கம்; 
            நிழலிடை உறங்கும் மேதி; 
        தாரிடை உறங்கும் வண்டு; 
           தாமரை உறங்கும் செய்யாள்;
        தூரிடை உறங்கும் ஆமை;
           துறையிடை உறங்கும் இப்பி;
        போரிடை உறங்கும் அன்னம்;
           பொழிலிடை உறங்கும் தோகை.

நீரில் மிதந்தபடி உறங்கும் சங்கு
மர நிழலில் உறங்கும் எருமை
மலர் மாலைகளில் உறங்கும் வண்டு 
தாமரை மேல் உறங்கும் திருமகள் 
சேற்றில் உறங்கும் ஆமை 
நீர் நிலைகளில் உறங்கும் சிப்பி 
நெற்போர்களில் உறங்கும் அன்னப்பறவை;
சோலைகளில் உறங்கும் மயில்;

(எந்தத் தொந்தரவுமின்றி 
எல்லாம் உறங்க,
ஏதுவான கோசலநாடு)

69.    கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா
         நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
         பிலம் சுரக்கும்; பெறுவதற்கு அரிய தம்
         குலம் சுரக்கும், ஒழுக்கம் - குடிக்கு எலாம்.

கோசல நாட்டு மக்கட்கு 
கப்பல் வாணிபம் காசு ஈட்டித் தரும்,
கணக்கில்லா செல்வம் நிலம் தரும்,
நல்ல வகை ரத்தினம் சுரங்கம் தரும்,
பெறுதற்கு அரிய ஒழுக்கம் குலம் தரும்;

( தொடரும் )


Monday, January 6, 2020

கம்பராமாயணம் 2


பால காண்டம்

ஆற்றுப் படலம்


18.
     மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
     அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தன்
     இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
     வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.

முத்து, மணி, மயிலிறகு, யானைத் தந்தங்கள்,
தனக்கு நிகரில்லா சந்தன மரம்
இவையனைத்தையும் வாரிக்கொண்டு வருது சரயு நதியின் வெள்ளம் ஆகவே இது வணிகர்க்கு ஒப்பாகும்.

20.
     மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
     இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
     அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
     நிலையுடைக் கவி நீத்தம் - அந் நீத்தமே.

மலைகளைப் பெயர்த்துக்கொண்டும்,
மரம் செடி கொடி களை இழுத்துக்கொண்டும்
வரும் சரயு நதியின் வெள்ளம்
அலை நிறைந்த கடலிடையே
அணை கட்டத் துணிந்த
வானரக் கூட்டத்திற்கு ஒப்பும்.

நாட்டுப் படலம்

33.
     வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
        மடை எலாம் பணிலம்; மா  நீர்க்
     குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
        குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
     பரம்பு எலாம் பவளம்; சாலிப்
        பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
     கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
        கா எலாம் களி வந்து வண்டு ஈட்டம்.

வயல் வரப்புகளில் முத்துக்கள்
தண்ணீர் பாயும் மடைகளில் மிதக்கும் சங்குகள்;
நீர்ப்பெருக்கின் இடையில் கிடக்கும் செம்பொன்;
மலர்கள், பவளங்கள் நிறைந்து கிடைக்கும் இடங்கள்
நெற்பயிர்ப் பரப்புகளில் அன்னங்கள்;
அருகில் பயிர் செய்யப்படாத பரப்புகளில் செந்தேன்;
சோலைகளில் மது உண்டு மயக்கத்தில் திரியும் வண்டினங்கள்;
(இத்தகையது கோசல நாடு)

(தொடரும்)

Sunday, January 5, 2020

கம்பராமாயணம் 1


பாயிரம்

1.
     உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
     நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
     அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
     தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

படைப்பான்
படைத்ததைக் காப்பான்
காத்ததை அழிப்பான், இதையே  விளையாட்டாய் தொடர்ந்து செய்யும்  எங்கள் தலைவன் அடி பணிகிறோம் நாங்கள்.

4.
     ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
     பூசை, முற்றவும் நக்குபு புக்கென
     ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
     காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

பாற்கடல் முழுதையும்
பருகப் புகுந்த பூனை போல்,
ஆசையாலே இராமன் கதை உரைக்க விரும்பினேன்.

8.
     முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
     உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:
     'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
     பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?'

எல்லாமறிந்த மக்கள் நிறைந்த இச் சபையில், ஒன்று சொல்கிறேன். பைத்தியத்தின் பேச்சும், அறிவில்லாதார் அறிக்கையும்,
பக்தர்களின் பரவசப் பேச்சும் ஆராய்தல் முறையன்று.

11.
     நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
     இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
     தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
     சடையன் வெண்ணெய்நல்லூர் வயின் தந்ததே.

இராமாவதாரம் என்ற பெயரில் பாடப்பட்ட இக் காப்பியம் தோன்றிய களம் சடையப்பரின் திரு வெண்ணைநல்லூர் ஆகும்.

( தொடரும் )