Thursday, January 30, 2020

கம்பராமாயணம் 22



மந்தரை சூழ்ச்சிப் படலம்


1402.   மன் நெடுங் கழல் வந்து வணங்கிட
            பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!' என
            நின் நெடும் புதல்வன்தனை, நேமியான்
            தொல் நெடும் முடி சூட்டுகின்றான்' என்றார்.

'எல்லா அரசர்களும்,
வீரக் கழல் அணிந்த உன் பாதம் பணிந்திட,
பல காலம் இந்த மண்ணுலகை ஆள்வாய்'
என வாழ்த்தி, தசரதன், உன் மகன் இராமனுக்கு,
பழமை வாய்ந்த திருமுடியை,
அணிவிக்கப்போவதாகக் கூறினார்
(என்று மங்கையர் ஓடிவந்து கோசாலையிடம் தெரிவித்தனர்)


1411.   ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல் 
            மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
            'புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
            நல்கும் நானிலம் நாளை நினக்கு' என்றான்.

தளர்ச்சி இல்லாது, தவ நெறி நிறைந்த நல்லவன் வசிட்டன்,
கற்க வேண்டியவற்றைக் கற்று, நிறைய  
கேள்வி ஞானம் நிறைந்த வள்ளல் இராமனைப் பார்த்து 
'போரில் வல்லவனே, 
உன் மேல் நிறைய அன்பு வைத்திருக்கும் தசரதன்,
உனக்கு அரசாட்சியை நாளை தருவான்' 
என்று தெரிவித்தான்.


1445.   அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
            பொன்னகர் இயல்பு எனப் பொலியும் எல்லையில்
            இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
            துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.


அயோத்தி நகரம்
அழகு படுத்தப்படும் ஆரவாரத்தால்,
தேவர்களின் அமராவதியோ என்று
எண்ணப்படும் தருணத்தில்,
துன்பம் தரும் இராவணன் புரிந்து தீமை
உருவம் கொண்டு வந்தது போல்,
கொடிய மனம் கொண்ட கூனி
வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.



1459.   தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
            விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
            அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
            குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே.

கத்தினாள், அதட்டினாள்,
கண்ணில் பொறி பறக்க முறைத்தாள்;
திட்டினாள்; வெப்ப மூச்சு விட்டாள்;
தன் கோலத்தை அலங்கோலமாக்கிக்கொண்டாள்;
அழுதாள்; சேதி சொன்னதும், மகிழ்ந்து 
கைகேயி பரிசாய்த் தந்த பொன்மாலையை
நிலத்தில் குழி விழும் படி வீசினாள் -
கொடிய நெஞ்சை உடையக் கூனி.


1483.   தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி 
            தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் 
            மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் 
            ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

கொடுமை நிறைந்த சொற்களை கூனி கூறவும் 
தேவி கைகேயி யின் நற்சிந்தனை மாறியது.
(மாறியதற்கு இன்னொரு காரணம்) 
தேவர்களின் சூழ்ச்சி மாயையும்,
அவர்கள் ஏற்கனவே வரம் பெற்றிருந்ததாலும் 
தூயவர்கள் செய்த கடும் தவத்தாலும்,
கைகேயி யின் மனம் மாறியது.


( தொடரும் )

No comments:

Post a Comment