Wednesday, January 29, 2020

கம்பராமாயணம் 21


1343.   ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
            பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
            மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
            யாது நும் கருத்து?' என இனைய கூறினான்.

(தசரதன் அரசவையில் தன் எண்ணங்களைச் சொல்லி)
ஆதலால், இராமனை அரசனாக்கிவிட்டு
அறியாமையை தரும் இப் பிறப்பு நோய் விட்டகல
அரிய தவம் கானகத்தில் செய்யப்போகிறேன்
அவையோரே, என்ன உங்கள் கருத்து என்று கேட்டான்.


1361.   அலங்கல் மன்னனை அடிதொழுது 
                    அவன் மனம் அனையான் 
            விலங்கல் மாளிகை வீதியில் 
                    விரைவொடு சென்றான் 
            தலங்கள் யாவையும் பெற்றனன் 
                    தான் எனத் தளிர்ப்பான் 
            பொலன் கொள் தேரோடும்  
                    இராகவன் திருமனை புக்கான்.

மாலை அணிந்த மன்னவனை வணங்கி 
அவன் மனதை ஒத்த சுமந்திரன் 
உலகம் யாவும் தனக்கே கிட்டியது போல் மகிழ்ந்து 
மலை போன்ற மாளிகைகள் நிறைந்த அரச வீதியில் விரைந்து
பொன்மயமான தேரினில் இராமன் இல்லம் அடைந்தான்.


1382.   தாதை அப் பரிசு உரைசெய 
                 தாமரைக் கண்ணன் 
            காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
                 'கடன் இது' என்று உணர்ந்தும் 
            'யாது கொற்றவன் ஏவியது 
                   அது செயல் அன்றோ 
            நீதி ஏற்கு?' என நினைந்தும் 
                    அப் பணி தலைநின்றான்.

தந்தை தன் எண்ணத்தை உரைத்தும் 
தாமரைக் கண்ணனோ, அதுவரை 
அரசாட்சியை விரும்பியதுமில்லை, 
வெறுத்து ஒதுங்கியதுமில்லை. 
இது தன் கடமை என்றே கருதினான்.
அரச ஆணை எதுவோ 
அதை நிறைவேற்றுவதே நியாயம் என்று எண்ணி 
பதவி ஏற்க சம்மதித்தான்.



1394.   ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர் 
             பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும் 
             கார் மழை பொழியவும் கழனி பாய் நதி 
             வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்?

ஊர் மக்கள் குடிக்க பயன்படுத்தும் நீர்நிலை நிறைய 
பலருக்கும் உதவும் வகையில் மரம் வளர்ந்து பழுத்திருக்க 
கார்காலத்தில் மழை பொழியவும் 
வயல்களில் பாய்கிற ஆறு நீர் நிறைந்திருக்கவும் 
யாராவது வேண்டாமென்பார்களா ?
(அதுபோல் இராமன் அரசனாக மறுப்பார்களா?)

 
( தொடரும் )




No comments:

Post a Comment