Saturday, March 10, 2018

பொன்மாலைப் பொழுதில் 15

இரவினில் உறங்கையில்
   உதடுகளுன் பெயர் உளருதே
விடிகாலைக் கனவினில்
   நிலவாயுன் முகம் தோன்றுதே
எனைத்தேடும் விழிகளில்
   மறையாக் காதல் தெரியுதே
மௌனமாய்ப் பார்க்கையில்
   மனதினில் தெளிவு மலருதே
மலைக்கோவில் வாசலில்
   கார்த்திகை தீபம் மின்னுதே

***

பார்த்து ரசிக்க ஆளில்லையெனினும்
நீரில் தவழும் நிலவின் பிம்பம்

பறித்து நுகர ஆளில்லையெனினும்
மலர்ந்து மணம் வீசும் மலர்

கூட விளையாட ஆளில்லையெனினும்
தனக்குள் மகிழ்ந்து சிரிக்கும் குழந்தை

குதித்துப் பரவசப்பட ஆளில்லையெனினும்
கரைநோக்கி ஆடிவரும் அலைகள்

அருகில் நீ இல்லையெனினும்
அகலாது எனைச் சுற்றும் உன் நினைவு

கவிதை படிக்க ரசிக்க ஆளில்லையெனினும்
தினம் தினம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

***

காலை கண் திறக்கையில்
கையில் காபியோடு நிற்கிறாய்
முத்தம் தர எத்தனித்தால் கெட்டவார்த்தை பலவோடு
கண்டபடி திட்டுகிறான் அறை நண்பன்.

குளிக்கையில் கூடவே நனைகிறாய்
துடைத்து விட எண்ணுகையில் கதவு படபடவென்று அடிக்கப்பட திறக்கிறேன்,
வயிரைப் பிசைந்து கொண்டு உள்ளே ஓடுகிறான் நண்பன்.

உனக்கு ஊட்டி விட்டுக் கொண்டே உண்கிறேன் நான்
எனக்குக் கையிருக்குடா கபோதி என்கிறான் நண்பன்

இரவில் இருளில் ஏகாந்தமாய் நாமிருக்க
தொந்தரவு தாங்காது தரையில் படுக்கப் பழகிக்கொண்டான் நண்பன்

சரி விழி திறந்திருப்பதால் உன் உருவம் மட்டும் தெரிகிறதோ என் கண்ணே என்றெண்ணி
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே

***

என்னுள் ஒரு ஆனந்தம்
எனக்கேப் புரியாது எங்கிருந்து வந்தாய் ?

வார்த்தைகள் வரிசையில் தானே வந்தமருது
கவிதையின் உட்பொருளாய் நீ இருக்காய்.

அழகாய் உடுத்த ஆசையாய் இருக்கே
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்

திடீரென்று பூத்து மணக்கும் மல்லிகை
எதற்காக இதுவரை நீ காத்திருந்தாய் ?

எனைத்தேடி வந்திருக்கும் தேவதையே,
இதுநாள் வரை ஏனடி மறைந்திருந்தாய் ?

என்மேல் விழுந்த மழைத்துளியே,
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?


***