Tuesday, September 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 36

278. அருகில் யாரோ நிற்பதை உள்ளுணர்வு உணர்த்தியது.
நிமிர்ந்து, மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க வைத்தது.
என் நெஞ்சைக் கவர்ந்த, அதே கருநீலவண்ணச் சேலையோ?
மெல்லிய தேகம், நீள் வட்ட முகம்,
பார்க்கையில் காதல் பொங்கும்.
வாயில் சிரிப்பு, பரபரப்பு.
பார்வையிலொரு வசிகரிப்பு.
அருகிலழைக்கும் மல்லிகை மணம்,
ஆழ்ந்து நுகர மோகம் தரும்.
கிட்ட நிற்கையில் கொஞ்சமாய்த் தெரியும் அந்தச் சிற்றிடை,
அச் சிற்றிடையையும் காண விடாது மறைக்கும் அவள் கருங்கூந்தல்.
கை நீட்ட, வெட்கம் படர, கைப்பேசி அலற, ம்ம்ம் ... விடிகாலை 5 மணி,
*யாரது யாரது கனவிலே வந்து போனது?*

277. என்னவென்று சொல்வேனடி,
ஏதும் மறக்க முடியாது தவிக்கிறேன்
ராதே ராதே என்று குழைந்தவன்,
ரகசியமாய்ப் பலமுறை என்னைச் சீண்டி விளையாடியவன்,
எனக்கே எனக்காய் இருப்பான் என்று தானே பழகினேன்.
எல்லாரோடுமிப்படி சுகித்திருப்பான் என்றுத் தெரியாது போயிற்று.
ராமனென்று எண்ண, அவன் காம ரூபன் எனத் தெரியாது போயிற்று.
எல்லாம் புரிந்து, நகர்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
எனினும் ...  எனினும்,
என்ன அவன் இப்பொழுதும் பட்டுப் பீதாம்பரத்தில் தான் திரிகிறானா ?
கொஞ்சம் சிகப்பேறி இருப்பானே ! காதலை என்னுள் கலந்த  அவன்
*ஆசை முகம் மறந்து போச்சே !*

276. பணம் பணம் என்று நாங்கள் பயணப்பட்டது போதும்,
நீயும் எங்கள் வழியிலேயே வந்து விசனப்பட வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு அளவாய் நிறைவாய் வாழ கற்றுக் கொள்.

பணம் சேர்க்க ஆயிரம் வழி இருக்க, இனிமேலும் இயற்கையை இம்சித்து வாழவேண்டாமே.
பறவை விலங்கு மரம் செடி கொடி இவற்றை நேசி.
நீரையும் நிலத்தையும் கூட, உன் தாய் போலே எண்ணு, மதி.
மண்ணிலும் மனதிலும் மாசு நிறையாது வாழ, இதுவே மதி.

அதிகமான அறிவு ஆணவம் தரும்.
அமைதியான வாழ்வே ஆனந்தம் தரும்.
இயற்கைக்கு அடிபணிந்து வாழ எல்லாம் வளம் பெரும்.

பாரம்பரியப் பாதையில் பயணப்படு
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடம் தென்படும், போராடு.
நீ செய்யாவிட்டால் வேறார் செய்வார் ?
நம்பிக்கை வைத்திடு,
*உன்னால் முடியும் தம்பி*


275. *ஆயிரம் நிலவே வா* என்று ஆரம்பித்து *வான் நிலா நிலா* என்று தொடர்ந்து *நிலாவே வா* என்று மீண்டும் ஒருமுறை அழைத்து *நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்* என்று விளம்பி *நந்தா என் நிலா* என்று உரிமை கொண்டாடி, *பெண்மானே சங்கீதம் பாடிவா* என்று கூடப் பாடழைத்து,  *கண்மணியே காதல் என்பது* சொல்லித் தந்து, *வண்ணம் கொண்ட வெண்ணிலவே* என வர்ணித்து, *இளைய நிலா பொழி* வது கண்டு பரவசித்து, *நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* என்று உவமித்து, ஊடல் பொழுதில் *நிலவே முகம் காட்டு* எனக் கெஞ்சி, *சங்கீத மேகம் தேன் சிந்த*  ... இன்னும் இருக்கு சொல்ல, நேரம் பொறுமை இருக்கா கேட்க.

274. பார்க்காதபோது பார்த்து,
பார்க்கையில் இமை தாழ்த்தி, இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.
சிரித்துப் பேசி சிநேகித்ததில்லை.
கவிதை என்றேதும் என் நெஞ்சில் சுரந்ததில்லை.
காதல் பாட்டுக்களை திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்ததில்லை.
கண் திறந்திருக்கக் கனவு கண்டதில்லை.
உறக்கம் வராது படுக்கையில் புரண்டுக் கிடந்ததில்லை.
சாப்பிட்டேனா, குளித்தேனா என்றக் குழம்பமெல்லாம் இருந்ததில்லை.
எதையோ செய்ய வந்து என்ன செய்யணும் என்பதை மறந்து சிலையாய் நின்றதில்லை.
ஆனால் இதெல்லாம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் இப்போது நெஞ்சிலிருக்கு.
என்னிடம் அனுமதி ஏதும் *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

273. நம் வாழ்வில் எல்லாமே இசை.
எல்லா சமயத்திலும் சடங்கிலும் நிறைந்திருப்பது இசை.
உறங்கவும், எழும் போது, எழுச்சிக்கும், எல்லாம் முடிந்துப் போகும் போதும்.
அமைதி நாடும் போதும், அழகாய்ப் பாடும் போதும்.
சிரிக்க இசை, சிந்திக்க உதவும் இசை
குழந்தையின் சிரிப்பிலும் அழுகையிலும் நிறைந்திருக்கும் இன்னிசை.
காதலிலும் காமத்திலும் கலந்திருப்பது இசை.
இவ் உலகில் எல்லாமே *இசையில் தொடங்குதம்மா*

272. கோபங்கொள், பேசாதிராதே
திட்டு, சண்டையிடு, தனியே தவிக்க, தவிர்ப்பது தவறில்லையா?
இரவும் பகலும் அடுத்தடுத்து வருவது இயற்கை
சச்சரவும் சமாதானமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
ஊடலும் கூடலும் உறவில் சகஜம்.
அப்படி என்ன கோபமடி உனக்கு? அதற்கு இத்தனை நாளா பேசாதிருப்பாய் ?
சிரித்தால் முறைக்கிறாய், அருகில் வந்துப் பேசினால் அதட்டுகிறாய்.
எசகுபிசகாய் எங்காவது கண்டுவிட்டால் காணாதது போல் நழுவுகிறாயே,
ஒருவேளை பழசு எல்லாம் மறந்துப் போயிருச்சோ?
என் நெஞ்சைக் களவாடிய
*ஏடி கள்ளச்சி, எனை தெரியலியா?* 

Sunday, September 2, 2018

பொன்மாலைப் பொழுதில் 35

271 என்றும் நாம் ஒன்றாயிருக்க வேண்டும்.
நம் வாழ்வில் எல்லாம் நன்றாய் அமைய வேண்டும்.
உன்னால் நான் மலர வேண்டும்.
என்னால் நீ உயர வேண்டும்.
இரவிலென் கனவில் நீ வேண்டும்
பகலிலுன் நினைவில் நான் வேண்டும்.
என் எண்ணங்களெல்லாம் உனைச்சுற்றியிருக்க வேண்டும்.
உன் வெற்றியில் எனக்கொரு பங்கு வேண்டும்.
என் போர்வை நீயாக வேண்டும்.
உன் பார்வை என் மேல் மட்டும் பட  வேண்டும்.
என் துங்கங்களிலெல்லாம் உன் துணை வேண்டும்.
உனக்கு இணையாய் பக்கத்தில் எனக்கோர் இடம் வேண்டும்.
என்றும் எக்கணமும் எனை நீ விட்டு விலகாதிருக்க வேண்டும்.
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*

270. மஞ்சளோ பச்சையோ கையில் கிடைத்த எதையாவது அணிவேன்.
அழகாய்த் தோன்றுவது எப்படி என்று சொல்லித் தந்தது நீ தான்.
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை செல்லும் வழியில் வாழ்ந்து வந்தேன்.
அத்தனைக்கும் ஆசைபட சத்குரு சொன்னதாக எடுத்துரைத்தது நீ தான்.
பதங்களைப் பகுத்து வரிக்கு ஒன்றாய் எழுதி புதுப்பா என்று்ப் பெயரிட்டேன்.
தேமா புளிமா வெண்பா இலக்கணங்களை விளங்குமாறு விளக்கியது நீ தான்.
கோவில்கள் நடைபயிற்சிக்கு என்று நம்பியிருந்தேன். கோரிக்கைகள் பிரார்த்தனைகள் பற்றியெல்லாம் பாடமெடுத்தது நீ தான்.
ஏதும் தெரியாது இத்தனை நாள் எப்படித்தான் வாழ்ந்திருந்தேனோ ?
*என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் ?*

269. சரி உனக்குப் பிடித்திருக்கிறது என்பது புரிகிறது.
உன் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது.
இப்படி வாய் திறந்தபடி பார்க்காதே, கட்டுப்படுத்திக்கொள்.
கனவுகளிலெல்லாம் காட்சி தருகிறான், அதானே?
அழகாய், மென்மையாய்ப் பேசுகிறான், ஆணவமில்லாதுப் பழகுகிறான், அதற்கு?
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் தான், காணாததைக் கண்டதுபோல் நீ காண்பது ஏன்?
அமைதியாய், அவன் வருகையில் வேறு திசை பார்த்திரு;
ம்ம்ம் ... விழலுக்கு இறைத்த நீராய் எத்தனை முறை எடுத்துச் *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*.

268. பல மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு வர, வாசலில் அரிசி மாவுக் கோலம், பிடித்திருந்தது.
எல்லா இடமும் சுத்தமாய், வீடே ஒருவித நறுமணத்துடன், பிடித்திருந்தது.
பாலைக் காய்ச்சி நுரையோடு சூடாய்க் காபி, பிடித்திருந்தது.
வளையலோசை, மல்லிப்பூ மணம், கலகல சிரிப்போசை எல்லாமே பிடித்திருந்தது.
எல்லாவற்றிலும் தெரியும் புதுமை ஏன் எப்படி என்று விசாரிக்க,
ரேவதி, என் மாமன் மகள், விடுமுறைக்கு வந்திருக்கிறாளாம். பிடித்திருந்தது.
மறைந்து நின்று பார்ப்பதும், ஒற்றை வார்த்தை பதிலும், பிடித்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப் பழகி, இதெல்லாம் பெரியவர்களின் திட்டமோ என்று சந்தேகித்தோம்.
எந்த எதிர்பார்ப்பும் கொள்ளாது நட்பைத் தொடர்ந்திட முடிவு செய்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கையில் நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்,
*மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்*

267. ஆடு ஓடு அலைந்துத் திரி
பணம் தேடு பாவம் செய்
எல்லாவற்றின் மேலும் ஆசைபடு
கிடைக்காதெனில் ஆத்திரப்படு
கோபம் மோகம் நெஞ்சில் வளர்
சாஸ்திரம் சம்பிரதாயம் மற
உனக்கென்றோர் நியதி கொள்
தேவையெனில் மாற்று.
யாரையும் மதிக்காது வாழ்
பாவமூட்டை சுமக்க முடியாது கதறு
கண்ணீர் விட்டுக் கடவுளை நினை
மீண்டும் பிறந்து அவதியுரு
அடுத்த பிறவியிலாவது, தாமரை இலை மேல் தண்ணீராய் வாழ்.
எல்லாம் மாயை என்பதை உணர்.
மந்திரம் இதுதான், மறவாதிரு
உடம்பொரு குப்பை
*அப்பனும் அம்மையும் கொட்டிவைத்தது*


266. அடி என் ஆருயிர்த் தோழி
அருகில் வந்தொரு சேதி கேளடி.
அரிவை நீ  அறிவாய் தானே.
*
கோட்டைக்குக் காவலாய் கோவில் அருகில் இருக்கும் வாசலில் நிற்பானே,
கையில் ஈட்டியோடு இருட்டின் நிறம் ஒத்து இருப்பானே,
நாம் பந்தாடி விட்டு வருகையில் 'பொங்கு கனங்குழை' பாடினானே,
*
நேற்று, குதிரையில் வந்து, எனை நெருங்கி நிறையப் பேசினான்.
தன் தினப்பணி பற்றி பல செய்தி பரைந்தான்.
தேன் ததியன்னம் கம்பங்கூல் அப்பம் மோர் என்று நிறையத் தின்னக் கிடைக்குமாம்.
அளவாடியபடியே திடீரென்று எனைப் பெண் கேட்க வரலாமா என்று வினவினான்.
தன் கைக்காப்பைக் கழட்டி என் கையில் மாட்டிவிட்டான்.
*
பதறிய படியே நான் விலக,
அவன் எனை விடாதுத் தொடர,
அவ்வமயம் குதிரை கனைக்க,
நான் பயந்து அலர,
'என்னடி' என்றென் தாய் கூச்சலிட,
ம்ம்ம் ... *மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி*

265. மனமொன்றிப் பழகியதெல்லாம் பழைய கதை.
தொட்டுப்பேசி விட்டுக்கொடுத்த தெல்லாம்  வெட்டிப் பேச்சு.
இருவேறு திசையில் பிரிந்து பலகாத தூரம் பயணப்பட்டாச்சி.
கண் பார்த்துப் பேசிய காலமெல்லாம் போயேபோச்சி.
'நல்லாயிருக்கியா?' எனக் கேட்டே நிறைய நாளாச்சி.
விவரமெதையும் சொன்னதில்லை, சுற்றி நடக்குமெதையும் விசாரிக்கவுமில்லை.
இனி ஒட்டமுடியாது என்று புரிந்து விலகியே இருந்த போதிலும்,
மனம் லயித்து எந்த விஷயத்தில் ஈடுபடினும் உடனுன் ஞாபகம் வருகுதே,
*எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?*