Tuesday, September 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 36

278. அருகில் யாரோ நிற்பதை உள்ளுணர்வு உணர்த்தியது.
நிமிர்ந்து, மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க வைத்தது.
என் நெஞ்சைக் கவர்ந்த, அதே கருநீலவண்ணச் சேலையோ?
மெல்லிய தேகம், நீள் வட்ட முகம்,
பார்க்கையில் காதல் பொங்கும்.
வாயில் சிரிப்பு, பரபரப்பு.
பார்வையிலொரு வசிகரிப்பு.
அருகிலழைக்கும் மல்லிகை மணம்,
ஆழ்ந்து நுகர மோகம் தரும்.
கிட்ட நிற்கையில் கொஞ்சமாய்த் தெரியும் அந்தச் சிற்றிடை,
அச் சிற்றிடையையும் காண விடாது மறைக்கும் அவள் கருங்கூந்தல்.
கை நீட்ட, வெட்கம் படர, கைப்பேசி அலற, ம்ம்ம் ... விடிகாலை 5 மணி,
*யாரது யாரது கனவிலே வந்து போனது?*

277. என்னவென்று சொல்வேனடி,
ஏதும் மறக்க முடியாது தவிக்கிறேன்
ராதே ராதே என்று குழைந்தவன்,
ரகசியமாய்ப் பலமுறை என்னைச் சீண்டி விளையாடியவன்,
எனக்கே எனக்காய் இருப்பான் என்று தானே பழகினேன்.
எல்லாரோடுமிப்படி சுகித்திருப்பான் என்றுத் தெரியாது போயிற்று.
ராமனென்று எண்ண, அவன் காம ரூபன் எனத் தெரியாது போயிற்று.
எல்லாம் புரிந்து, நகர்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
எனினும் ...  எனினும்,
என்ன அவன் இப்பொழுதும் பட்டுப் பீதாம்பரத்தில் தான் திரிகிறானா ?
கொஞ்சம் சிகப்பேறி இருப்பானே ! காதலை என்னுள் கலந்த  அவன்
*ஆசை முகம் மறந்து போச்சே !*

276. பணம் பணம் என்று நாங்கள் பயணப்பட்டது போதும்,
நீயும் எங்கள் வழியிலேயே வந்து விசனப்பட வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு அளவாய் நிறைவாய் வாழ கற்றுக் கொள்.

பணம் சேர்க்க ஆயிரம் வழி இருக்க, இனிமேலும் இயற்கையை இம்சித்து வாழவேண்டாமே.
பறவை விலங்கு மரம் செடி கொடி இவற்றை நேசி.
நீரையும் நிலத்தையும் கூட, உன் தாய் போலே எண்ணு, மதி.
மண்ணிலும் மனதிலும் மாசு நிறையாது வாழ, இதுவே மதி.

அதிகமான அறிவு ஆணவம் தரும்.
அமைதியான வாழ்வே ஆனந்தம் தரும்.
இயற்கைக்கு அடிபணிந்து வாழ எல்லாம் வளம் பெரும்.

பாரம்பரியப் பாதையில் பயணப்படு
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடம் தென்படும், போராடு.
நீ செய்யாவிட்டால் வேறார் செய்வார் ?
நம்பிக்கை வைத்திடு,
*உன்னால் முடியும் தம்பி*


275. *ஆயிரம் நிலவே வா* என்று ஆரம்பித்து *வான் நிலா நிலா* என்று தொடர்ந்து *நிலாவே வா* என்று மீண்டும் ஒருமுறை அழைத்து *நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்* என்று விளம்பி *நந்தா என் நிலா* என்று உரிமை கொண்டாடி, *பெண்மானே சங்கீதம் பாடிவா* என்று கூடப் பாடழைத்து,  *கண்மணியே காதல் என்பது* சொல்லித் தந்து, *வண்ணம் கொண்ட வெண்ணிலவே* என வர்ணித்து, *இளைய நிலா பொழி* வது கண்டு பரவசித்து, *நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* என்று உவமித்து, ஊடல் பொழுதில் *நிலவே முகம் காட்டு* எனக் கெஞ்சி, *சங்கீத மேகம் தேன் சிந்த*  ... இன்னும் இருக்கு சொல்ல, நேரம் பொறுமை இருக்கா கேட்க.

274. பார்க்காதபோது பார்த்து,
பார்க்கையில் இமை தாழ்த்தி, இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.
சிரித்துப் பேசி சிநேகித்ததில்லை.
கவிதை என்றேதும் என் நெஞ்சில் சுரந்ததில்லை.
காதல் பாட்டுக்களை திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்ததில்லை.
கண் திறந்திருக்கக் கனவு கண்டதில்லை.
உறக்கம் வராது படுக்கையில் புரண்டுக் கிடந்ததில்லை.
சாப்பிட்டேனா, குளித்தேனா என்றக் குழம்பமெல்லாம் இருந்ததில்லை.
எதையோ செய்ய வந்து என்ன செய்யணும் என்பதை மறந்து சிலையாய் நின்றதில்லை.
ஆனால் இதெல்லாம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் இப்போது நெஞ்சிலிருக்கு.
என்னிடம் அனுமதி ஏதும் *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

273. நம் வாழ்வில் எல்லாமே இசை.
எல்லா சமயத்திலும் சடங்கிலும் நிறைந்திருப்பது இசை.
உறங்கவும், எழும் போது, எழுச்சிக்கும், எல்லாம் முடிந்துப் போகும் போதும்.
அமைதி நாடும் போதும், அழகாய்ப் பாடும் போதும்.
சிரிக்க இசை, சிந்திக்க உதவும் இசை
குழந்தையின் சிரிப்பிலும் அழுகையிலும் நிறைந்திருக்கும் இன்னிசை.
காதலிலும் காமத்திலும் கலந்திருப்பது இசை.
இவ் உலகில் எல்லாமே *இசையில் தொடங்குதம்மா*

272. கோபங்கொள், பேசாதிராதே
திட்டு, சண்டையிடு, தனியே தவிக்க, தவிர்ப்பது தவறில்லையா?
இரவும் பகலும் அடுத்தடுத்து வருவது இயற்கை
சச்சரவும் சமாதானமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
ஊடலும் கூடலும் உறவில் சகஜம்.
அப்படி என்ன கோபமடி உனக்கு? அதற்கு இத்தனை நாளா பேசாதிருப்பாய் ?
சிரித்தால் முறைக்கிறாய், அருகில் வந்துப் பேசினால் அதட்டுகிறாய்.
எசகுபிசகாய் எங்காவது கண்டுவிட்டால் காணாதது போல் நழுவுகிறாயே,
ஒருவேளை பழசு எல்லாம் மறந்துப் போயிருச்சோ?
என் நெஞ்சைக் களவாடிய
*ஏடி கள்ளச்சி, எனை தெரியலியா?* 

No comments:

Post a Comment