Friday, October 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 37

285. மரம் நிழலும் கனியும் தந்துக் காத்திட
பறவைகள் கைமாறு என்ன செய்யுமோ ?
மழை பெய்துக் குளிர்விக்க
மேகத்திற்கு மண்ணோடு முன்ஜென்ம பந்தமோ?
தேடி வந்ததும் வாரியணைத்துக் கொண்டானே குசேலனை,
அத்தனை  பாக்கியவானோ ?
மல்லிப்பூ மலர்ந்து மணம் வீச
செடி ஏதேனும்  புண்ணியம் செய்திருக்குமோ ?
கண்ணனை மகனாய் வளர்த்திட
யசோதா ஏதும் வரம் பெற்றிருப்பாளோ ?
*நெற்றிக் குங்குமம் நீ சூட்ட
எத்தனைத் தவம் நான் செய்தேனோ ?*


284. ரசிக்கவா ? பாடவா ?
இனிய கானம் கேட்குதே

உண்ணவா ? மறுக்கவா ?
இனிப்பு அதிகமாய் இருக்குதே

சொல்லவா ? எழுதவா ?
நெஞ்சில் கவிதை சுரக்குதே.

சிரிக்கவா ? பேசவா ?
மெல்ல என்னைப் பார்க்கிறாளே.

எடுக்கவா ? தொடுக்கவா ?
*கொடியிலே மல்லியப்பூ மணக்குதே*


283. புரிகிறது,
உனக்குப் பிடித்திருக்கிறது.
நீ சொல்லாமலேயே தெரிகிறது.
உன் இதயம் அவன் பின்னே பறக்குது.
அவன் இருக்குமிடம் தேடி அலையுது.
அவன் உன்னருகே வந்து பேசணும் என்றுன் மனம் அல்லாடுது.
ம்ம்ம் ... சாதிக்கப் பிறந்தவள் நீ.
சாதிக்கப் பிறந்தவர்கள் காதலிக்கக் கூடாதா என்று தானே கேட்க வருகிறாய்?
காதல் ... வலி தரும், உன் வழி மாற்றும், வலிமை குறைக்கும்.
கனவுகள் பிறக்கும், உன் காரியம் கெட்டுப் போகும்.
நன்றாய் யோசி, பின் செயல்படு.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேலைக்காகாது.
எவ்வழியில் நீ பயணப்பட்டாலும் சங்கடங்களும் சச்சரவுகளும் உனைச் சந்திக்கக் காத்திருக்கும்.
விடாது முயன்றிடு, கலங்காது போராடு, வெற்றி என்றும் உன்னோடு.
என்ன பார்க்கிறாய்? யார் பேசுவது என்றா? நான் தான் *பேசுகிறேன், பேசுகிறேன், உன் இதயம் பேசுகிறேன்*


282. தனித்திருக்கிறாய், எனை விட்டு விலகியிருக்கிறாய்.
ஆனால் எனை நீ மறக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை.
என்னவோ கோபம், இல்லை ஏக்கம்
வெளியில் சொல்ல முடியாதுத் தவிப்பு.
எனைத் தவிர்த்து மறைந்து வாழ்வதாய் எண்ணி உனை நீ ஏமாற்றிக் கொள்கிறாய்
உன் மனது அறிவேன், அந்த மழைநீர் போல் நீ மிகத் தூய்மையானவன் என்பதையும் அறிவேன்.
உனக்காக நான் காத்திருப்பேன்.
உன் கவலை தீர்க்கக் காரியம் ஆற்றுவேன்
முதல் வேலையாய், மன்னவனே
என் *மன்னவனே நீ போன பாதை தேடிதேடி வருவேன்*


281. நெஞ்சில் காதல்; கொஞ்சிப் பேச முடியாததால் கொஞ்சம் கோபம்;
கையளவு மனதில் கடலளவு சோகம்.
இருந்தும் இல்லை என்றாகிவிட்ட பின் இல்லாமலா போகும்?
அன்பு அறிந்துக்கொள்ளாதபோது அருகில் இருந்தாலென்ன, அயல்நாட்டில் இருந்தாலென்ன ?
காலம் ஆற்றாதா காயம்? நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
புதிய  இடம், புதிய வழி ஏதேனும் கிட்டும் என்றெண்ணி, கொஞ்ச நாள் பறந்து வந்து விட்டேன்.
அன்று அவமானமாய்த் தெரிந்தது, இன்று விலகி நின்று யோசிக்க வெகுமானமாய்த் தெரிந்தது.
எனக்கென்று இருந்தால் யாரால் பறிக்க முடியும் என்று ஆறுதலோடு,
இதோ காத்திருக்கிறேன்,
இமை கூட மூட இயலாது,
இரண்டு நாளாய் உறக்கமில்லாது,
இது இரவு நேரம்
*ந்யுயார்க் நகரம் உறங்கும் நேரம்*


280. எழுத எனக்கு நாட்டமில்லாத போது என் எழுத்தில் சுவையிருக்காது, எழுதியவரை போதும்.
என்ன வரைய என்றேதும் தீர்மானிக்காது வர்ணத்தை மட்டும் வாரியிரைக்க யாருக்கும் புரியாது. நிறுத்திவிட்டேன்.
பழைய அரவிந்த் சாமி கமல் அளவுக்கு இல்லையென்றாலும் பார்க்க சுமாராயிருந்தேன்.
'இருந்தேன்' இறந்த காலம் தானே ?
ஆமாம் எல்லாம் இனி இறந்தகாலம் தான்.
இதுவரை இப்படி இல்லை.
இனியென்ன இருக்கு.
கவிதைகளிலும் கனவுகளிலும், என் எண்ணங்களிலும், இன்றிலிருந்து இல்லாமலிருக்கலாம், ஆனால் *நேற்று அவளிருந்தாள்*


279. கடற்கரையில், அலைகளின் இடையில், ஆனந்தமாய் கைகோர்த்தபடி ஆடுகிறோம்.
பூஞ்சோலையில், பூக்களின் இடையினில், புல் தரையினில், பனிப் போர்வையில் புரண்டு கிடக்கிறோம்.
பத்து யானைகள், இருபது குதிரைகள், படை சூழ, வீரவாள் ஏந்தியபடி, வெள்ளைப் பட்டில் நீ,  தேரிலிருந்துக் குதிக்கிறாய்.
திரையரங்கம், மொக்கைப் படம், ஆளில்லா வரிசை, ஓர இருக்கை, முத்தக் காட்சி, மெல்ல எனைப் பார்க்கிறாய்.
வீடு, தனி அறை, இசையில் தொடங்குதம்மா பாடல், வெளியில் மழை, கையில் டீ, மடியில் நீ, கவிதை சொல்ல, நான் ரசிக்க, பரிசு கேட்க, எதைத் தர எப்படித் தர என்று நான் *கனா காண்கிறேன், கனா காண்கிறேன், கண்ணாளனே*

No comments:

Post a Comment