Thursday, October 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 38

293. கண் விழிக்கையில் நெஞ்சில் புத்துணர்ச்சி,
நிம்மதியாய் நானுறங்க யாரேனும் தாலாட்டு பாடினாரோ ?

அருமையான சிற்றுண்டி, ரசித்து உண்கிறேன்.
இத்தனை சுவையாக யார் சமைத்தது ?

என் மனங்கவர் வண்ணத்தில் உடுத்தப் புத்தாடை,
எனக்காகவா ? யார் இதை வாங்கியிருக்கக் கூடும் ?

அதிசயமாயொரு மின்னஞ்சல் இன்று  உன்னிடமிருந்து.
எப்படி எதனால் உன் மனம் இளகியிருக்கும்?

நான் போகும் பாதையில் அற்புதமான சுகந்தம் உணர்கிறேன்
*யாரிந்த சாலையோரம் பூக்கள் வைத்தது ?*


292. கொஞ்ச நாளாகவே நான் உன்பால் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
அமைதியாய் அகந்தையின்றி அளவோடு  அலவாடுவது கண்டு அதிசயிக்கிறேன்.
விசாலமான உன் சிந்தனையும், விவேகமானப் பேச்சும், நுண்ணறிவும், செயலில் நேர்த்தியும், நியதி பிறழாத நேர்மையும் ... ம்ம்ம் என் நெஞ்சை நெகிழ்த்திட்டாய்.
உபத்திரவமில்லாது உதவுகிறாய், உதவினேன் என்று உரக்க உரைக்காதிருக்கிறாய்.
எனக்கென்னவோ இன்னுமதிகம் சிந்திப்பதும் குழப்பிக் கொள்வதும் வீண் என்றே தோன்றுகிறது.
காலம் போகும் போக்கில், கா...தல் காட்டும் பாதையில் உனைத் தொடரப்போகிறேன்.
புரிந்து விட்டது, இனி நீ இல்லாது வாழ்வது வீணே.
*உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே*.


291. காடு காய்ந்துக் கிடந்ததெல்லாம் பழைய கதையாகட்டும்.
வானம் பார்த்தே வறண்டு போன பூமி இனி வரலாறில் மட்டும்.
ஆழிமழைக் கண்ணன் வரம் தரட்டும்.
ஆண்டாள் பாடியது பாடியபடியே பழிக்கட்டும்.
வானின் கொடை அருள் அனைவர்க்கும் விளங்கட்டும்.
கருமேகங்கள் சூழட்டும்.
இடி இடிக்கட்டும்,
மின்னல் ஜொலிக்கட்டும்
காய்ந்த நிலமெல்லாம் செழிக்கட்டும்.
*மாரி மழை பெய்யாதோ !*

290. தவறு தான்
தப்பாய் யோசித்தது நான் தான்
பெண் புத்தி பின்^புத்தி என்பது சரிதான்
*
எவன் வராது ஏமாற்றி விட்டான் என்று நான் எண்ணினேனோ ...
எவன் என்னை மறந்து விட்டான் என்று நினைத்தேனோ ...
*
எவன் என் உறக்கத்தினுள் புகுந்து கனவு பல விதைத்தானோ ...
எவன் என்னைச் சீண்டி சிரிக்க வைத்து சிநேகித்தானோ ...
எவன் இல்லாது என்னால் வாழ முடியாது என்றாகிப்போனதோ ...
எவனால் நான் பெண்ணாகப் பிறந்ததன் பொருள் புரிந்துக் கொண்டேனோ ...
*
அந்தத் *தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு அருகில் அருகில் வந்தான்*

^ பின் - pin - sharp

289. நீ வெட்டி எறியும் நகங்களெல்லாம்
   பிறைநிலவாகும்
நீ வரையும் புள்ளியும் கோடும்
   ஒப்பில்லா ஓவியம்
நீ நடக்கையில் கொலுசு இசைப்பது
   சுகமான ராகம்.
நீ தொட்டு உண்ணத் தருவதெலாம்
   தேவாமிர்தமாகும்.
நீ என்ன எழுதினாலும்
   கவிதைகள்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
   *சங்கீத ஸ்வரங்கள்*

288. காலையில் இன்று கண் விழிக்கும் போதே நல்ல சகுனமாய்ப் பட்டது.
என்றுமில்லாமல் பச்சைக்கிளி ஒன்று சாளரம் அருகில் வந்து கிச்சித்து, மறவாத உன்னை ஞாபகப்படுத்தியது.
குளித்து வர கோடியம்மன் கோவில் ப்ரசாதமாய், உனக்குப் பிடித்த, அக்காரவடிசல் தயாராயிருந்தது.
நான் எண்ணியதுபோலவே, உன் தங்கை நீ வந்திருப்பதை பறையறிவிக்க நெஞ்சம் பரபரத்தது.
அடுத்த நொடியே உனக்குப் பிடித்த பச்சை நிறத்தில் உடுத்திக் கொண்டேன்.
ஜிமிக்கி உனக்குப் பிடிக்காதே, கழட்டி எறிந்து விட்டுத் தோடு அணிந்து கொண்டேன்.
மறவாது மூக்குத்தி, மல்லிப்பூ;
உதட்டுச் சாயம், சுவையில்லை என்பாய், தவிர்த்து விட்டேன்.
மதியமும் முடிந்து மாலை ஆறு ஆனதும் கோவிலில் உன்னைத் தேடினேன், காணோம்.
ஏழு, எட்டு, இரவு் ஒன்பது, மறந்து விட்டாயா? என்னையா? வீட்டையா?
*நீ வருவாய் என நான் நினைத்தேன்*

287. அடேய் அதிகப்ரசங்கிக் காதலா,
இன்னும்  இன்னும் என்று என்னுள் எப்போதும் எதையாவது தேடாதே.
நீண்டு  நீண்டிருக்கும் விரல்களால் எல்லை மீறி நோண்டாதே.
பூ போன்றிப் பூவை எனை நின் வலு தோள் மார்பினால் முட்டாதே.
காந்தப் பார்வையால் கன்னி நெஞ்சைக் கவர்ந்திழுக்காதே.
இன்று எனை எப்படி இம்சிக்கப் போகிறாயோ என்று ஏங்க விடாதே.
*எங்கெங்கு எங்கெங்கு இன்பம் என்று தேடி எனைக் கொல்லாதே*

286. சின்ன வயதிலெல்லாம் உன்னோடு தான் விளையாடுவேனாம்.
ஒன்றாய்ப் பள்ளி சென்று, விளையாடிக் கொண்டே திரும்புவோமாம்.
ஒருமுறை சைக்கிளில் பின்னால் நான், குரங்கு பெடல் போட்டு, இருவரும் கீழே விழுந்து, இப்போது நினைத்தால் சிரிப்பாயிருக்கு.
அதன்பின் வீடு மாறி, தெரு மாறி, ஊர் மாறி, காலம் மாறி ... ம்ம்ம் நாடு வேறு மாறி,
காலையில் கோலம் போடையில், நீ வந்து நின்றதும் ஒரு உற்சாகம்,
என்னை நீ மறக்கவில்லை என்ற எண்ணம் தந்த பரவசம்.
இது அதுவா ? அதுதானா இது ? என்றக் குழப்பங்கள் ஏதுமின்றி,
எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றிதான் பழகுகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்,
அது ... உன்னோடு பேசும் போதும் பழகும் போதும் ...
என்னுள் ... ஒரு ... ஒரு ...
*ஒரு வெட்கம் வருதே...வருதே*

No comments:

Post a Comment