Wednesday, October 24, 2018

பொன்மாலைப் பொழுதில் 39

301. நிற்காது ஓடு, ஓடிக்கொண்டேயிரு
உன்னோடு வர வேண்டியவர் வருவர்.
நீ வேண்டாமென்றாலும் தொடர்வர்.
வராதாரை வேண்டி அழைத்தாலும் வரார்.
அவர் வரத் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டிருப்பதை உணர்.
நீ எதையும் தேடத் தேவையில்லை.
உனக்கானது வந்து சேரும்.
நீ போகும் பாதை புரிந்து கொண்டு, தக்க சமயத்தில் குறுக்கிடும்.
ஓடு ஓடு ஓடுவது மட்டுமுன் வேலை
நடக்கவேண்டியவை தானே நடந்தேறும்.
வளைவுகளில் வளைந்து விழ வேண்டிய இடத்தில் விழுந்து, எழும் சமயம் வீறுகொண்டெழுந்து விவேகத்தோடு விரைந்து ஓடு.
துன்பம் துடை. இன்பங்களில் இணை. உனக்கேது தடை.
உன் பணி முடிந்தவுடன் உன் பாதை முடியும்; அதுவரை ஆடு ஓடு பாடு
உன்னால் எல்லாம் நலமே
*நானென்ற நதிமுலமே*


300. எது எப்படியிருந்தாலென்ன,
எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தானே மெய்;
விரும்பினாலும், வெறுத்தாலும்,
இரண்டும் இல்லாது தவிர்த்தாலும்,
தனித்திருந்தாலும்,
சில சமயத்தில் ஒட்டி, வேறு பல சமயங்களில்  எட்டி நின்றாலும்,
புரிந்த போதும் புரியாததுபோல் பாவித்தாலும், புரியாத போதும் புரிந்ததாய்ப் பாராட்டினாலும்
இன்றும் இதானா என்று இகழ்ந்தாலும்,
இன்று இதுவா, நாளை எதுவோ என்று எண்ண வைத்தாலும்,
ஏன் எப்படி எதற்கு என்றெதுவும் சொல்லாது மறைத்தாலும்,
எது வரை இது போகும், என்று நிற்குமென்றுத் தெரியாதெனினும் எப்போதும் எல்லாருக்கும்
*வந்தனம் ... என் வந்தனம்*

299. என்ன கேட்டாலும் அசராது விடை தருகிறாளே.
ஏழெட்டு வரிகளில் விளக்கி விவாதிக்கிறாளே.
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம், ஐரோப்பிய தொழில் நுட்பம் அத்தனையும் அறிந்திருக்கிறாளே.
1917 லிருந்து இன்றைய வரலாறு வரை இயல்பாய் இயம்புகிறாளே.
ம்ம்ம் ... இவளை வேறெப்படி மடக்க?
கடினமான விடயங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவள் எளிமையான கேள்வியில் ஏமாறலாமே,
மலை தடுக்கி யாரும் விழுவதில்லை, கல் தடுக்கி தானே.
சரி சரி ஒரே ஒரு வினா, ஆம் / இல்லை விடை; ஒரு வார்த்தை ஒரு கோடி, தயாரா ?
*சந்திரனைத் தொட்டது யார் ... ஆம்ஸ்ட்ராங்கா ?*

298. சரி, புது ஜிமிக்கி, புரிகிறது
அதை இப்படி தட்டித் தட்டி ஆட்டித் தான் காமிக்கணுமா ?
நான் பார்ப்பதெப்படித் தெரிகிறது? சட்டென்று இங்கு அங்கு இழுத்து மறைத்துக் கொல்கிறாயே.
மல்லிப்பூ சூடிய அன்றாவது முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதை நிப்பாட் ... சுடிதார் அணிந்து வா என்றர்த்தம்.
ஃபோன் பேசிக்கிட்டே அதென்ன குனிந்து ஒரு கண்ணை இழுத்து மூடி என்னைப் பார்க்குறது?
பூ வாங்கித் தந்தால் கூந்தலில் முடியச்  சொல்வது, சாப்பிடுகையில் ஊட்டிவிடச் சொல்வது, இதெல்லாம் சரி, நாயுடு ஹாலுக்கு நான் எதற்கு?
ஐயோ ... எனைக் கொல்லாதேடி
*ஐயங்காரு வீட்டு அழகே*


297. பார்த்து ஐந்து நாள் ஆகுது.
பழகியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து வந்துப் போகுது.
எனை இங்கு ஏங்கித் தவிக்க விட்டு எங்கு சென்றாயோ ?
எப்படி இருக்காயோ, எதற்கிந்தத் திடீர்த் தலைமறைவோ ?
எவ்வாறுனை நான் தேட? யாரென்று யாரேனும் கேட்டால் என்ன சொல்ல ?
ஏதாவதொரு வழியில் தகவல் தா
என்னுயிரே இக்கணமேயருகே வா.
தழுவியக் கரங்களைத் தேடுகிறேன்
படர வழியில்லாதக் கொடியாய் அல்லாடுகிறேன்.
ஊண் உறக்கம் ஏதுமின்றி உன் நினைவால் வாடுகிறேன்.
என்றுனை மீண்டும் காண்பேனோ,
அதுவரை என் நிலை
*அனல் மேலே பனித்துளி*


296. கோபம் தானே, பட்டுக்கொள்.
ஊடல் தானே, ஒதுங்கி நில்.
கவிதை சொல்லமாட்டாயா, சரி
நீ சொல்ல நினைப்பதை நான் சொல்லவா ? கேட்டு ரசி, வா.
*
அள்ள அள்ளக் குறையாத அளவு உன்னுள் கற்பனைகள் சுரக்க வைக்கும் ~அமுத~ கவிதைசுரபி நானல்லவா.
உன் உள்ளத்தினுள் உற்சாகம் உற்பத்தியாகும் உயிர்நாடி நானல்லவா.
விழி திறந்திருக்கையிலேயே உன்னைக் கனவு காண வைப்பவள் நானல்லவா.
உண்ண விடாது உறங்க விடாது
அகிம்சை முறையில் இம்சை செய்பவள் நானல்லவா.
எல்லாம் மறந்து நீ  உறங்க,
உன்னைத் *தாலாட்டும் பூங்காற்று நானல்லவா*

295. காத்திருந்துக் காத்திருந்துக் காலம் கழித்தது போதும்.
கனவுகளில் மட்டும் கைகோர்த்து வாழ்ந்தது போதும்.
உண்ணப் பிடிக்காது உறங்குவதும்
உறங்காது உளறுவதும் போதும்.
எந்த சம்மந்தமும் இல்லாதபோதும்
ஏதும் மறக்காது ஏங்கித் தவித்து இளைத்துக் களைத்தது போதும்.
நெஞ்சில் நிறைந்த ஆனந்தமே
என்றும் என் கூடவேயிருக்கும்
*வசந்தமே, அருகில் வா*

No comments:

Post a Comment