Tuesday, December 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 44


337. மண்ணில் பயிர் உயிர் வாழ முடிவதெல்லாம்
மழை பெய்யும் வரைதான்.
கதை கவிதை எல்லாம்
கற்பனை காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடும் வரையில் தான்.
நல்ல சாப்பாடு தூய அன்பு இதெல்லாம்
தாய் என்பவள் தரணியில் வாழும் வரை தான்.
பேச்சில் பணிவு கண்ணில் கனிவு எல்லாம்
காரியம் ஆகும் வரை மட்டும் தான்.
என் ஆட்டம் அலட்டல் எல்லாம்
சிநேகமே நீ என்னோடு இருக்கும் வரைதான்,
எனை விட்டுப்
*போகாதே ... போகாதே*

336. பிரச்சனைகள் ஏராளம்,
சிக்கல்கள் தாராளம்;
யாருக்குத்தான் துன்பமில்லை என்று அறிவு கேட்கிறது; மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
எந்த பிறப்பில் என்ன பாவம் செய்தேனோ, அனுபவிக்கிறேன்.
யாரீந்த சாபமோ, சிரமப்படுகிறேன்.
மனம் இசையாது எது நடந்தாலும் உடனே வருந்தி, அழுகிறேன், ஆத்திரப்படுகிறேன்.
அவசரமாய் என்னவோ எதையோ ஏனோதானோவென்று செய்து என் வெறுப்பை வெளிகாட்டுகிறேன்.
சில நேரம் கழித்து என்னசெய்தேன் என்றே புரியாது தடுமாறுகிறேன். மறந்து முழிக்கிறேன்;
காரணமில்லாமல் காரியம் இல்லை என்று கற்றறிந்த போதும் ...
இப்போது கூட ... என் நெஞ்சின் ஏக்கத்தை ஒரு சில வார்த்தைகளில் கவிதையாய் ...
இங்குதானே வைத்தேன்,
*எங்கே எனது கவிதை ?*

335. முடிந்தவரை கொடை, தானம் செய்வதுண்டு,
எனினும் கர்ணன் இல்லை நான்;
இலக்கு பார்த்து அடிப்பதுண்டு;
ஆனாலும் அர்ச்சுனன் அளவிற்கு இல்லை நான்;
கவாஸ்கர்  டெண்டுல்கர் ல்லாம் தெரியுமென்ற போதும்
கால்பந்து விளையாடியதில்லை நான்.
வாலி வைரமுத்து அளவிற்கில்லை எனினும்
கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்குபவன் நான்.
அட, சின்னதாய்க் கூட கோவில் எதுவும் கட்டியதில்லை
எனினும்  *ராஜ ராஜ சோழன் நான்*

334. சிரித்தால், கூட சேர்ந்து சிரிப்பேன், சிரிக்க வைத்து மகிழ்வேன்.
கெஞ்சினால் விட்டுத் தருவேன்.
கோபப்படுத்தினால் எரித்திடுவேன்.
எதிரில் நின்று மோத, ஒரு கை பார்க்காது விடமாட்டேன்;
யாராயிருந்தாலும் சரி;
பொய் பிடிக்காது, புகை போதை பழக்கமிருந்தால் விரட்டி விடுவேன்.
காலில் விழச் சொல்லவில்லை; ஆனால் விழவைக்க எண்ணினால் என்னிடமிருந்து தப்ப வழியில்லை.
மதியாரை மிதித்திடுவேன், பிடித்தாரோடு மட்டும் பழகுவேன்.
உனக்குப் பிடித்திருக்கா? சமாளிக்க முடியும் என்ற தெகிரியம் இருக்கா?
பார்க்கையில் மட்டும் சாந்தம்; பேசிப் பழக புரியும் நான் சரியான *சண்டை கோழி*


333. சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
அதிகம் பேசினால் முறைக்கிறாய்
நவில்வது நாட்டு நன்மைக்குத்தான் என்றால் ஏற்க மறுக்கிறாய்.

ஸ்வர ஆலாபனை பூஞ்சோலையில் செய்வதால், இப்போது பார், குயில்கள் கூவ மறந்து உன் குரல் கேட்கக் காத்திருக்கின்றன.

பரத நாட்டியம் மாடியில் ஆடினால் பாதகமா ?
தோட்டத்தில் நீ ஆட அதைக் கண்டு ரசித்து மனம் லயித்து மயில்கள் மயங்கிக் கிடக்கின்றன.

ஏரிக்கரையிலெதற்கு நடைபயிற்சி?
அன்னம் உண்ணாது அன்னப் பட்சிகள் உன் அழகு நடை காண ஆவலோடு அமர்ந்திருக்கின்றன.

அடுத்து இந்த...வீணை வாசிப்பு... நாளையே உன் விரல்கள் மீட்டினால் மட்டுமே இசைப்போம் என்று வீணைகள் போராடினால்?

சரி சரி இப்போது என்ன செய்வது?
புல்லாங்குழல் ஊதுவதால் வந்தது.
கடன் கேட்கிறதே, மருதாணி
*உன் உதட்டோரச் சிவப்பை*

332. கட்டுமஸ்தான் உடம்பெல்லாம் கனவில் மட்டும் தான்.
வம்பு தும்பு எதிலும் ஈடுபட தெம்பு லேது.
நான் உண்டு, என் வேலையுண்டு என்று இருந்துவிடுவேன்.
என்னவோ அவளைப் பார்த்தால் மட்டும் ஒரு ... ஒரு ... ஈர்ப்பு ?
தேவையா என்ற கேள்வி, இவள் இல்லாது வாழ்வே வீண் இல்லையா என்று பதில் - எனக்குள் விவாதம்;
வரும் போதும் போகும் போதும் மெல்ல ஒரு பூஞ்சிரிப்பு.
சின்னச் சின்ன பரிமாறல்கள், பெரியப் பெரிய மாற்றங்கள்.
திடீர்ப் பின்னடைவு ... முழு மூச்சில் முன்னால் பாய உதவுமோ?
திந்நவேலியில் ஒரு திருமணம், திரும்ப மூன்று நாளாகும் என்று சொல்லியிருந்தாள்.
எந்நிலையை என்னென்று சொல்வேன் ஏதென்று சொல்வேன்.
எனை எண்ணியே ஏந்திழையாள் ஏங்குவாளோ என்று தவித்தேன்.
வனவாசம் முடிந்து வஞ்சி அவள் வருகைக்காக காத்திருக்கையில்,
எந்த நேரமும் எதிர்படலாம் என்று எண்ணுயிருக்கையில்,
பின்னாலிருந்து என் கண்ணை யாரே மூட,
வளையலோசை கேட்க,
மருதாணி வாசம் எனை மயக்க,
பரிதவிப்பு நீங்கி பரவசம் பிறக்க,
என் உள்ளுணர்வு உணர்ந்துக் கூவியது *கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை*.

331. அடேய் தெரியுமடா உன்னை.
எப்போது எப்படி எப்படி நீ மாற்றிப் பேசுவாய் என்றறியேனா என்ன ?
'நல்லாருக்கு' என்றால் 'உனக்குப் பிடிக்குமென்று தான்' என்பாய்.
'எப்படி இப்படியெல்லாம்' என்று சொன்னால் 'எல்லாம் உன்னோடு பழகுவதாலே தான்' என்பாய்.
ஆளுக்கேற்றவாறு அரற்றுவாய்.
எது அணிந்திருந்தாலும் இத்தனை அழகு நீ அணிவதால் தானென்பாய்
நீ தொட்டுத் தந்ததால் இத் திரவம் அமிர்தமாய் இனிக்குதென்பாய்.
அறிவேனடா,  அழகா,
உன் தாய் யசோதை இல்லை
நீ யாதவ குலத்தில் பிறக்கவில்லை
உலகில் எங்கு வசித்தாலும் நீ உன் லீலையை விடுவதில்லை.
*கோகுலத்துக் கண்ணா*

329. மனிதனை மனிதனாக்கும்,
மனதளவிலும் முழுமையாக்கும்.
கல்லைக் கனியாக்கும்,
முள்ளை முல்லையாக்கும்.

கண்ணனோ காதரோ தப்பமுடியாது,
ஆணவத்தால் காரியம் எதுவும் செல்லுபடியாகாது.

மீராவும் ஸாராவும் மேரியும் மண்ணைப் பார்த்தே நடந்தாலும் மனதை எங்கோ தொலைக்கக்கூடும்.
கோவிலில் கண்கள் மோதும் காலம் வரும்.
சர்ச்சிலேயே கூட சம்மதம் சொல்ல நேரம் வரும்.

குருநானக் குருவாயூர் வரலாம், சேவை செய்யலாம்.
ஐயங்கார் ஊரெல்லையிலிருக்கும் ஐயனாரிடம் வரம் கேட்கலாம்.

பூணுல் அறுப்பதால் நீ இப் புவியை ஆள்ந்து விடப் போவதில்லை.
ஜாதி மறந்ததால் தலை வெடித்து செத்து விடப் போவதில்லை

தர்காவினுள் துர்கா வரலாம்.
மும்தாஜ் மண்டியிட்டு மேரி மாதாவைத் தொழலாம்.

ராபர்ட் ராமநவமி அனுஷ்டிக்கலாம்.
வெஜ்பிரியாணி சாப்பிட்டபடி வெங்கட் ஃபரிதாவைப் பார்த்துப் புன்னகைக்கலாம்.

மனிதனாய் வாழ்வதே முக்கியம்.
சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தேவைக்கேற்ப மாறுபடும்.

காதலெனும் வேதம், மந்திரம்
*சாதி மதமெனும் வியாதியைப் போக்கிடும்*.

Sunday, December 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 43


328. எத்தனை உதவிகள்... எதைச் சொல்ல, எதை மறக்க, மறைக்க.
அழைக்க நினைக்கும் போதே அருகில் வந்து நிற்பாயே;
என்ன வேணுமென்று கேட்டு செய்வாயே;
இன்றாவது என் நன்றியைத் தெரிவிக்க அனுமதி தருவாயா?
*
உனக்காக எல்லாம் உனக்காக.
மாவு பிசைந்து என் கையால் தட்டி, பொரித்து தேன்குழல், உனக்காக,
தேங்காய் போளி, முதல் முறையாக, என் கைபட, இதுவும் உனக்காக,
பாசமாய் பாசந்தி, என் கையால், கடையில் வாங்கியது, உனக்காக.
இனிப்பு எப்படி இருந்தாலும் பிடிக்கும் தானே, லட்டு செய்ய ஆரம்பித்து பூந்தியாகி .. உனக்காக.
மறந்திருக்கமாட்டாய், என் மடியில் படுத்துக் கொண்டு நிலவை ரசித்து,
கவிதை படித்து கனவு கண்டு ...
இன்று இந்தப் பௌர்ணமியில்,
சீக்கிரம் வா, காத்திருக்கிறேன்,
நிறுத்தி வைத்திருக்கிறேன், பிடித்து வைத்திருக்கிறேன்
உனக்காக *அந்த நிலாவத் தான்*

327. யோசித்துப் பார்க்கிறேன்,
நாம் எதைப்பற்றி இதுவரை விவாதித்ததே இல்லை என்று.
எனக்கென்னவோ நாம் பேசாத விடயங்களே இல்லை என்றுத் தோன்றுகிறது.
எந்த விஷயமெனினும் சரி எது தவறு எது என்று உன்னால் சொல்ல முடிகிறது.
படர்ந்த உன் அறிவைக் கண்டு நான் பலமுறை ப்ரமித்துப் போவதுண்டு.
உன்னோடுப் பழகிப் பழகி உன் அறிவின் முதிர்ச்சி என்னுள்ளும் தட்டுப்படுகிறது.
இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ என்ன செய்வாய் என்றெண்ணுகிறேன்.
இதோ இப்போது கூட நீ அருகில் அமர்ந்து அல்லாடும் என் நெஞ்சை ஆற்றுவதாய் உணர்கிறேன்.
கண் மூடிக் கிடக்க, இங்கே தான் நீ அருகில் எங்கோ இருந்து கொண்டு *ஆனந்த யாழை மீட்டுகிறாய்*.

326. தாள லயத்தோடு இணையும் ஒசைகள் எல்லாம் சங்கீதம்.
ஜதியோடு இணைந்த அசைவுகள் எல்லாம் நர்த்தனம்.
விவரம் தெரியாதவர்களுக்கு மட்டும் இது விநோதம்.
உண்மையில் இந்த ஆட்டம் பாட்டு எல்லாம் ஆண்டவன் அனுக்ரகம்.
நல்ல சரீரம் தரும் சாரீரம், நாட்டியம் தினம் பார்க்க கேட்க சுகம்.
இது முன் ஜென்மப் பலன், வரம், வெகுமானம்.
வாழ்வை தூய்மையாக்கி ஆனந்தமாய் மாற்றும் ரகசியம்.
மறந்து போகும் தேவையற்ற விசனம்.
புரிந்தால் புண்ணியம், புரியாது போனால் பாக்கியம்
கற்றுத் தந்தது *வேதம்,*
*அனுவிலும் ஒரு நாதம்*

325. திருப்பாவை தந்தருளிய ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம்.
ஐய்யப்ப சாமியின் சபரிமலைக்கு மாலை அணிய ஐப்பசி மாதம்.
மது மாமிசம் சேர்க்காது விரதம் இருக்க மார்கழி புரட்டாசி மாதம்.
உழைத்து விளைந்த வயலில் அறுவடை ஆவது தை மாதம்.
குதிரையில் கள்ளழகர் மதுரை வருவது சித்திரை மாதம்.
காரணமறியாது கணவன் மனைவி பிரிந்து இருப்பது ஆடி மாதம்.
நீ எனைக் காண எந்த மாதம் வந்தாலும் அது எனக்கு
*மன்மத மாதம்*.

324. வண்டு தேடி வருவது, மலர்ந்து
மலர் மணம் வீசும் போது தான்.

இடியும் மின்னலும் இணைவது மழை வெளுத்து வாங்கும் போது தான்.

உணவு தேடி உயிர்கள் அலைவது
பசி எடுக்கும் வேளையில் தான்.

பிரார்த்தனை பக்தி என்பதெல்லாம்
வேதனை ஏதும் வந்த பின்பு தான்.

ஆடை அவசியமாவது வெட்கம் நெஞ்சினுள் நுழைந்த பின்பு தான்.

ஏமாற்றம் என்பதெல்லாம் எதிர்பார்ப்பு ஏற்பட்ட பின்பு தான்.

எனை நான் கண்டு தெளிந்தது
*உன்னைக் கண்ட பின்பு தான்.*

323.. இதுவரை ஒரு சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிட்டியது, நன்றி.
இன்று ஒரு இடம் போகிறோம்.
கொஞ்சம் தைரியத்தைக் கூட எடுத்துக் கொள்ளவும்.
பயமில்லாத மாதிரி நடித்தால் போதும், அதுவே தைரியம் ஆகும்.
அமைதியாக வரவும், காது கண் திறந்தபடி, ~வாய் மூடியிருக்கட்டும்~.
இதோ இதுதான் அந்த குகை, இருட்டு தான்; ப..பயப்படக்கூடாது.
நொம்ப பயத்தால் கீழே ஓடுவது புழுவா பூச்சியா பூரானா என்று தெரியாது, பார்..ர்த்து வரவும்.
என்ன? என்னவோ கடிச்சதா ? சேசே ... பாம் ... ல்லாம் இருக்காது; பேடிக்கண்டா.
மலேஷியா ஐ மீன் மலேரியாக் கொசுவாயிருக்கும்.
உஷ்...அபா, மலேரியா என்று தானே சொன்னேன்;ஹெச்ஐவி அளவிற்கு உணர்ச்சி வசப்படுவது எதற்கு.
அதிகமாய் ஆர்ப்பாட்டம் செய்து உள்ளே தூங்கிட்டிருக்கும் சிங் ...
சீ ... சிங்கம்லா இல்லை வா;
இதோ இங்கு தான்; ஷ்ஷ் அமைதி; ஓரமாய் ... மெல்ல ... கேட்கிறதா ? எனக்குக் கேட்குதே; காதைத் தீட்டி வைத்துக் கொள்ள, கவனம்.
கேட்குதா ? கேட்குதா ? அடர்ந்த அடவியில், மாலை வேளையில்,
*என்ன சத்தம் இந்த நேரம் ?*

322. மாலை முடியும் வேளை
இருள் சூழத்தொடங்கும் சமயம்
மனதில் கவிதை கற்பனை சுறக்க
சுற்றி அமைதியான சாலை
ஆள் ஆரவாரமற்றப் பாதை
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி
தோகை விரித்தாடும் அழகு மயில்
ஆளை மயக்கும் பூ வாசம்
எங்கோ தூரத்தில் மெல்லிசை
அருகில் அருவியில் தண்ணீர் ஒலி
வானில் நிலவொளி
பக்கத்தில் ஒரு பைங்கிளி
கொஞ்சல் கிள்ளல் துள்ளலோடு
என் தோளில் சாய்ந்தபடி
அவ்வப்பொழுது முத்தம்
என் ஒரு கை அவள் இடை சுற்றி
இன்னொரு கை குடை பற்றி
இது *மழை பொழிந்திடும் நேரம்*

Monday, December 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 42


321. கொஞ்ச நாள் முன்பு வரை அவன் என் பின்னால் தான் அலைந்தான்.
காலையில் என் கோலம் காண வருவான்.
பார்வையாலேயே பாவை நெஞ்சை பறித்தான்.
அகநானூறு புறநானூறெல்லாம் அறிந்தவன் போல் அளப்பான்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்;
ஏதாவது காரணம் சொல்லி இங்கு
அங்கு தொட்டு நோண்டுவான்.
ஒரே விசயத்தை எல்லோரிடமும் உளறிவிட்டு என்னிடம் மட்டும் இது பரம ரகசியம் என்பான்.
வைரமுத்து கவிதைகளை வரி மாறாது ஒப்பிப்பான்; வாலியின் வார்த்தை ஜாலத்தை ரசித்து சிலாகிப்பான்.
இன்று என் அருகில் இல்லாது எங்கோ இருக்கான், தெரியும்.
தன் எண்ணத்தில் எனை மறக்க முடியாதுத் தவிப்பான், பாவம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள்
எனைத் தேடி அவன் வரு *வான் வருவான் வருவான்*



320. அடேய் என் இனியக் காதலா,
அறிவேனடா உன்னைப் பற்றி சில பல விஷயங்கள்.
இத்தனை நாள் பழகியிருக்க, பிடிபடாதா உன் சிந்தனைகள்?
நீ எப்போது எப்படி பேசுவாய் என்று சொல்ல முடியும் என்னால்.
நீ யோசிக்கும் விதத்திலிருந்தே
எதைப்பற்றி என்று யூகிக்க முடியும் என்னால்.
உன் கள்ளப் பார்வை சொல்லிடும்
உன் அடுத்த கட்ட நடவடிக்கை எதை நோக்கி இருக்குமென்று.
உன்னைப் பற்றி இத்தனையும் நான் உணர்ந்திருக்கையில்,
இன்று இங்கு நான் அருகிலேயே  இருக்கையில்,
அந்தப் பெண்ணை இப்படி மேய்கிறாயே, அழகா, புரிந்து கொள்.
 *கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ... கண்களுக்குச் சொந்தமில்லை*


319. என்னருமைக் காதலா,
என் பல முதல் களின் மூலவா,
எங்கு சென்றாய் ?
எப்படி இருக்கிறாய் ?
*
உன்னை முழுவதுமாய் நம்பினேன்
நீயே என் உயிராய் உறவாய் எண்ணி வந்தேன்.
நீயும் அப்படிதானேடா பழகினாய்,
திடீரென்று என்னாயிற்று உனக்கு?
விலகியிருப்பது எதற்கு விளக்கு.
*
நிழலாய் நீ தொடர்ந்ததால் தானே நிம்மதியாய் நான் இருந்தேன்.
கனவில் நீ வந்ததால் தானே கண்மூடி நான் உறங்கினேன்.
*
இப்போதெல்லாம் உனைக் காணாது கலங்குகிறேன்.
அலையினிடையில் அகப்பட்டக் கலமாய் அல்லாடுகிறேன்.
தண்ணீரில் தத்தளிக்கும் மானாய்
தரையில் மீனாய்த் துடிக்கிறேன்.
அருகில் நீ இல்லாது, *காதலா ... காதலா காதலால் தவிக்கிறேன்.*


318. ஒரு தொடர்வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள், தேவை தானே.
ஏக் மார் தோ துக்கடா, நல்ல நகைச்சுவை.
ஒரே பூவில் காய்க்கும் இரண்டு கனிகள், அதிசயம்.
ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய், சாத்தியமே.
ஒரு பாடலில் இரண்டு ராகம், இசை வல்லுனர்கட்கு எளிமையானது.
ஒரு பதில், இரண்டு அர்த்தம் சர்வ சாதாரணம்.
ஆனால் ...  ஆனால்
*ஓ வெண்ணிலா, இரு வானிலா?*


317. சிறு தோட்டம், பச்சை பச்சையாய் இலை தழைகள்
காற்றைச் சுத்தப்படுத்த துளசிசெடி, நாற்புரமும்.
ப்ராணவாயுவிற்காக வேப்பமரம்
கூடவே தென்னை வாழை;
செடி கொடிகள், தக்காளி அவரை
பாகற்கா பெல்லாரி கருவேப்பிலை
மல்லிப்பூ, கனகாம்பரம்
நாய் ... ஆமாம் என்னை விடுத்து இன்னொன்று; நீ சிரிப்பை அடக்கு.
நாலைந்து கோழி, உண்பதில்லை வளர்க்கக் கூடாதா என்ன? கூடவே பசு மாடு;
ஓரத்தில் கிணறு, புல் மண் தரை.
நடுவில் சின்னதாய் ஒரு ஓட்டு வீடு.
வீட்டில் இரு உடல், ஒரு உயிர், அதில்
*நீ பாதி, நான் பாதி கண்ணே*

316. தொடங்கியதெல்லாம் முடிய வேண்டும் என்பது உலக நியதி.
ஆடியதெல்லாம் அடங்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
தூங்கிக்கொண்டு திரிந்தது எல்லாம் இறங்கியாகணும் இனி.
யாருக்கும் தெரியாது செய்த பாவங்கள்
கண் முன் நின்று கணக்கு தீர்க்கும் நேரம்.
தெரிந்தேப் புரிந்த துரோகங்கள், கூடவேப் பெற்ற சாபங்கள்
பழி வாங்கும் படலம்.
ஓடி ஒளியவும் முடியாது, தப்பித்துச் செல்லவும் வழி கிடையாது.
ஆணவமும் ஆடம்பரமும் செல்லாது
எல்லாம் முடிந்தது, போதும் இனி ~போய்வரு~ போகிறேன், இதோ பாடிவிட்டேன் *ஜன கன மன*


314. அருமையான கிராமம்
எளிமையான மனிதர்கள்
பாசத்திற்கு பஞ்சமில்லை
இருப்பதை ஈந்து இல்லையென்று சொல்லாது வாழ்பவர்கள்
மழையில் ஆடி பாடி நெல்லிக்காய் கிழங்கு சோளம் நுங்கு தின்று,
இளநீர் மோர் குடித்து ஆரோக்யமாய் வாழ்ந்தோம்.
ஆடு மாடு கோழிகளுக்கு பெயரிட்டு தோழியராக்கி விளையாடினோம்.
அண்ணே அக்கா அத்தே என்றே பாசத்தோடு அழைத்துப் பழகி ...
எல்லாம் பழைய கதை ஆனது.
பணம் தேடி பயணப்பட்டு பாரம்பரியம் மறந்து ...
போதும் என்று முடிவெடுத்து விட்டேன்.
பெற்றதை விட இழந்தது அதிகம் என்பதை உணர்ந்து விட்டேன்.
பணம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்பது புரிந்தது.
இழந்த என் பழைய வாழ்க்கையை தேடி எடுக்கப் போகிறேன்.
மாறாத என் மண் மணத்தை நோக்கிப் பயணப்படப்போகிறேன்.
இன்முகத்தோடு எனை வரவேற்கும்,
இருப்பதைக் கொண்டு இனி சந்தோஷமாய் வாழப்போகிறேன்
என் *தென்கிழக்குச் சீமையிலே*

Sunday, November 25, 2018

பொன்மாலைப் பொழுதில் 41

313. நான் உன்னை விரும்புகிறேன்.
உனக்குப் பிடித்திருக்கு இல்லை எனச் சொல்வதிலென்ன தயக்கம் ?
இது தான் வெட்கமா ? நாணமா ? இதை நான் நம்பணுமா ?
சரி சில கேள்விகள், ஆம் இல்லை என்று சொல், புரிந்து கொள்கிறேன்
உண்ண உறங்கவிடாதென் உருவம் உன்னை உபத்ரவம் செய்கிறதா ?
அதையும் மீறிக் கண்ணயர கனவில் கொஞ்சி கதைக்கிறேனா?
என் அழகும் அறிவும் ஆற்றலும் அபலையுன் நெஞ்சை அபகரித்ததா
பார்க்குமெல்லாவற்றிலும் என்
பிம்பம் தெரிய பாவை உன்னுள் ஒரு பதற்றம் பற்றியதா?
யாருக்காகவும் என்னை விட்டுத்தரக் கூடாதென்றும், இனி நாமிருவரும் இணைந்தே செயல்படவேண்டுமென்றும், உன்
*மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா?*

312. அரண்மனையில் நீ பிறக்கவில்லை ஆனால் அரசகுமாரனாய்த் தான் எனை வளர்த்தாய்.
அதிகம் நீ கற்கவில்லை எனினும் எல்லாக் கலைகளும் நான் கற்க வேணுமென்று ஊக்குவித்தாய்.
பசியென்ற ஒன்று நான் அறியா வண்ணம் எனைப் பார்த்துப் பார்த்து உணவளித்தாய்.
குளிர் என்னை அணுகா வண்ணம் போர்த்திப் போர்த்தி வளர்த்தாய்.
நீ என்ன உண்டாய் எப்போது உறங்கினாய், நானறியேன்.
எந்தக் குறையும் இல்லாது எனை வளர்த்ததை மட்டுமறிவேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க அன்று என் விதைக்கு நீ
நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
இன்று என்னிடம் எல்லாம் இருக்கையில் நீ மட்டும் ... நீ இல்லையேல் நானேது ? என் ...
*உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே ....*

311. இப்பொழுதெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கிறேன்.
தேவையில்லாத விஷயமெதிலும் தலையிடுவதில்லை.
கோபம் குறைத்துக் கொண்டேன்
யாராவது என்னை அடித்தால் கூட சிரிக்கப் பழகிக் கொண்டேன்.
குடிப்பதில்லை புகை போதை எல்லாம் மறந்தாகிவிட்டது.
இன்னும் என்ன செய்ய ? சொல்.
ஊருக்கு வெளியே ... தெரியும்ல, பழைய சிவன் கோவில், தினம் தொண்டு, திருப்பணி.
எல்லாரும் என்னோடு பாசத்தோடு பழகுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நீ தான் .
அடி திருத்தாததை உன் அன்பு ...
என் சினம் கட்டுண்டது உன் சின்னப் பார்வையில், சிரிப்பினில்.
இன்னும் எப்படி என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் ?
இப்போதாவது ... உன் செவ்வாய் திறந்து, ஏதாவது ஒரு வார்த்தை ...
*சொல்லாயோ சோலைக்கிளி*

310. கனவு காண்பதாய்க்  கனவு உமக்கு வந்ததில்லையா என்ன ?
ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை கேட்டதில்லையா நீர் ?
மகிழ்ச்சியான ஒரு செய்தியில் மனம் லயித்திருக்கையில்,
இன்னொரு நற்செய்தி வரலாமே.
ஒரு திரைப்படத்தில் இன்னொரு படம் தெரிந்தால் தப்பில்லை.
அட தொலைக்காட்சி பார்ப்பவரை
தொலைக்காட்சியில் பார்க்கிறோம் தானே.
சரி இப்போது மாலை ஏழு,
இந்தப் பொன்மாலைப் பொழுதில்
இன்றையப் பொன்மாலைப் பொழுதில்
*பொன்..மா..லைப்..பொழுது*


309. நினைப்பதெல்லாம் நடக்கிறது
இன்றில்லையேல் நாளை என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொட்டதெல்லாம் துலங்குகிறது.
சின்னச் சின்ன இன்னல்கள்,
இறை துணை வேண்ட இருந்த இடம் தெரியாது விலகுகிறது.
அகநானூறு தொடங்கி அனைத்து இலக்கிய நூல்களையும் கற்க
ஆர்வம் பிறக்குது.
ஆண்டவன் அருள் பரிபூரணமாக
எனக்கு அமைந்திருக்குது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி நவில ஆலயம் சென்றால்
கையில் வந்து விழுகிறது.
பத்திரப்படுத்திக் கொண்டேன், இது *ஒரு தெய்வம் தந்தப் பூ*


308. அடி பெண்ணே,
இங்கே பார், உன் கண்ணைப் பார்த்துப் பேசும் என்னைப் பார்.
ஆண்களை நம்பாதே
அவர்கள் சொல்வதில் ஐம்பது சதவீதம் கூட உண்மை இருக்காது.
அந்த மீதி ஐம்பதில் உண்மையின் அளவு நொம்ப சொல்பம்.
அழகுப் பெண்ணைக், உன்போல், கண்டால் போதும், சும்மா அப்படியே அளந்து விடுவார்கள்.
வானவில் என்றும் தேனிதழ் என்றும் நயனங்களால் நடனமாடும் நங்கை என்றும் ... நம்பாதே;
எங்காவது ஏதாவது மேய்ந்து விட்டு உன்னிடம் வந்து புருடா விடுவார்கள்,
காளிதாசன் நான், கண்ணதாசன் தான் என்றுக் கதை அளப்பார்கள்.
இங்கே பார் பெண்ணே, நான் அப்படிப்பட்டவனில்லை, நிஜம்.
நான் ... ராஜா ரவிவர்மா உனக்குத் தெரியுமா? கேள்விப்பட்டிருக்காயா?
இல்லையா ... நல்லது.
அவரோவியங்களும் என்னுடையது போலவே தத்ருபமாய் ...
சந்தேகப் பார்வை  சிந்தக்கூடாது
சொன்னால் நம்பு, உண்மை இது
*பூ வாசம் புறப்படும் பெண்ணே ... நான் பூ வரைந்தால்*

Friday, November 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 40


307. பிடித்தது, இணைந்திருந்தோம்
பின் என்னென்னவோ காரணம், பிரிந்து விட்டோம்.
பிரிந்ததும் விலகிச் செல்லாமல் ... புரியவில்லை, இதுதான் விதியா ?
ஒரேயிடத்தில் இருந்துகொண்டு, விலகி விலகி நின்று கொண்டு,
பாதை குறுக்கிடும் போதெல்லாம் சில சமயம் விலகி, பல சமயம் மனதுள் அலறி, முறைத்து, அனல் வார்த்தை வீசி, நெஞ்சைப் பொசுக்கி, ஐயகோ ...
நாலு பேர் சூழ இருக்கையில், உனை வெறுப்பேற்றி, உனக்கெது பிடிக்காதோ அதையே செய்து  ...
மனதுக்குப் பிடித்தவரிடத்தில்தான் கோபம் கொள்ள முடியுமாமே;
ஊடலும் ஒருவிதத் தேடல் தானாமே
மெல்ல மெல்ல உணர்கிறேன், என்னை மாற்றிக் கொள்கிறேன்.
ஒன்றாயிருந்தக் காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் சீண்டி சிரித்து விளையாடியதை எல்லாம் எண்ணி மகிழ்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமான என் செயல்களைக் குறையாகக் கருதாது ... எனை *மன்னிப்பாயா?*


306. பச்சை பசேல் புல்வெளி
நடுவில் வளைந்து வளர்ந்த ஒற்றை தென்னை மரம்
கீழே ஆறு இல்லை இல்லை நதி
என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து எப்போதும் போல் மௌனமாகவே இருக்கிறார்கள்.
சரி சுருக்கமாய் நீர், மிதக்கும் படகு.
துடுப்பு தவிர படகில் யாருமில்லை
நமக்குத் தனிமை வேண்டுமே.
லேசான தூரல், கொஞ்சம் குளிர்
பகல் முடிந்துப் பதுங்கும் பகலவன்
பின் மாலையில் உலா வந்தபடி நமை நோட்டம் விடும் பிறைநிலா
சரி என்ன தான் சொல்ல வருகிறான் பார்ப்போம் என்றுத் தொடர்ந்து படிக்கும் அவர்கள்.
இன்றாவது ஏதாவது சொல்வாயா என்றுன்னைப் பார்க்கும் நான்.
கைப்பேசியில் வந்த இந்த 'பச்சை பசேல் புல்வெளி' கவிதையைப் படிக்கும் நீ.
கூடவே ஒலிக்கும் பாடல்
*நீ......ல வானம்*


305. ஆரம்பத்திலிருந்தே என்னுளுண்டு இறுக்கம்.
அருகில் யார் வந்தாலுமொரு கலக்கம்.
நெஞ்சம் நிறையக் குழப்பம்.
எதைக் கேட்கவும் தயக்கம்.
என் அதிர்ஷ்டம், கிட்டியதுன் அறிமுகம்
உன்னாலென் உள்ளத்தில் உத்வேகம்.
அசரவைத்தது உன் விவேகம்.
எதைக் கேட்டாலும் விளங்குமாறு நீ வழங்கும் விளக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடும் நம் நெருக்கம்.
என் நெஞ்சமுழுதும் உன் ஆதிக்கம்.
இனி நீ சொல்வதே என் மார்க்கம்.
உன்னாலென் வசந்தகாலத் தொடக்கம்
இப்போதெல்லாம் நீ ஏது செய்தாலும் பிடிக்கும்.
ஏனெனில் என் நெஞ்சில் ...
*காதல் மயக்கம்*


304. பார்த்து, சிரித்துப் பேசி, பிடித்துப் போக நெருங்கிப் பழகி;
தெரிந்தும் தெரியாமலும் இடித்து முட்டி முறைத்து விளையாடி;
ஆளிருந்தால் விழியால் பேசி ஆளில்லாப்பொழுது விரலால் பேசி;
முத்தத்திற்கு கணக்கு வைத்து
சத்தமின்றி இருட்டில் பரிமாறி;
புதுப்புது ஆடை பரிசாய்த் தந்து, அணியப் பார்த்து வியந்து வியர்த்து
ஆடை பாரம் என்பதை உணர்ந்து, நீரை வீணாக்காது சேர்ந்து நனைந்து;
இன்னும் தாமதிக்க தாத்தா பாட்டி ஆக நேரிடுமென்று பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து;
கோவில் தேவஸ்தானமாம் என்றிழுக்க
முதலிரவு தானே கூடாது, இது எங்கட்கு முதலிரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
சரி சரி உன்னிடம் யாராவது இதுபற்றிக் கேட்டால் ... நீ
*என்ன சொல்லப் போகிறாய் ?*

303. அடி என்னருமைக் காதலி,
நேற்றென் உறக்கத்தில் ...
வாரணங்கள் வரவில்லை,
தோரணங்கள் நாட்டப்படவில்லை,
நாளையா மணநாள் ? தெரியலை.
காளை போன்றுதான் இருக்கேன் ஆனால் பந்தல் புகவில்லை,
மந்திரங்கள் சொல்லப்படவில்லை.
மத்தள ஓசை இல்லை
சங்கொலி முழங்கவில்லை
நானுன் கைத்தலம் பற்றியது நினைவிருக்க, தீ வலம் இல்லை,
அம்மி மிதிக்கவில்லை
அருந்ததி பார்க்கவில்லை,
எனினும் ஏழேழ் பிறவிக்கும் நீயே என் காதலியாய், ஆருயிராய், என் எல்லாமுமாய் இருப்பதாய்க்
*கனா கண்டேனடி ... தோழி*

                              (நன்றி: ஆண்டாள்)

302. எந்தெந்த வேதிப்பொருட்களை எப்படி இணைத்தால் என்ன கிட்டும் என்று உனக்குத் தெரியும்.
கணிதத்தில் எதைக் கேட்டாலும் விடை சொல்லி நிரூபிக்க உனக்குத் தெரியும்.
வார்த்தைகளை வளைத்து வர்ணங்களை வாரியிரைத்து வசீகரமாய்க் கவிதை ஓவியம்  படைக்க உனக்குத் தெரியும்.
மழை பெய்யப்போகும் நேரம், அளவு; பறவைகள் சிறகுகடித்துப் பறக்கக் காரணம் இவையெல்லாம் கூட உனக்குத் தெரியும்.
நாம் பேசுகையில் சிரிக்கையில் நடக்கையில்  உடலினில் எத்தனை தசைகள் இயங்குகிறது என்று உனக்குத் தெரியும்.
சரி, முத்தமிடுகையில்? தெரியாதா?
நீ உணராத இன்னொரு விஷயத்தை உரைக்கவா ?
*சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு*

Wednesday, October 24, 2018

பொன்மாலைப் பொழுதில் 39

301. நிற்காது ஓடு, ஓடிக்கொண்டேயிரு
உன்னோடு வர வேண்டியவர் வருவர்.
நீ வேண்டாமென்றாலும் தொடர்வர்.
வராதாரை வேண்டி அழைத்தாலும் வரார்.
அவர் வரத் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டிருப்பதை உணர்.
நீ எதையும் தேடத் தேவையில்லை.
உனக்கானது வந்து சேரும்.
நீ போகும் பாதை புரிந்து கொண்டு, தக்க சமயத்தில் குறுக்கிடும்.
ஓடு ஓடு ஓடுவது மட்டுமுன் வேலை
நடக்கவேண்டியவை தானே நடந்தேறும்.
வளைவுகளில் வளைந்து விழ வேண்டிய இடத்தில் விழுந்து, எழும் சமயம் வீறுகொண்டெழுந்து விவேகத்தோடு விரைந்து ஓடு.
துன்பம் துடை. இன்பங்களில் இணை. உனக்கேது தடை.
உன் பணி முடிந்தவுடன் உன் பாதை முடியும்; அதுவரை ஆடு ஓடு பாடு
உன்னால் எல்லாம் நலமே
*நானென்ற நதிமுலமே*


300. எது எப்படியிருந்தாலென்ன,
எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தானே மெய்;
விரும்பினாலும், வெறுத்தாலும்,
இரண்டும் இல்லாது தவிர்த்தாலும்,
தனித்திருந்தாலும்,
சில சமயத்தில் ஒட்டி, வேறு பல சமயங்களில்  எட்டி நின்றாலும்,
புரிந்த போதும் புரியாததுபோல் பாவித்தாலும், புரியாத போதும் புரிந்ததாய்ப் பாராட்டினாலும்
இன்றும் இதானா என்று இகழ்ந்தாலும்,
இன்று இதுவா, நாளை எதுவோ என்று எண்ண வைத்தாலும்,
ஏன் எப்படி எதற்கு என்றெதுவும் சொல்லாது மறைத்தாலும்,
எது வரை இது போகும், என்று நிற்குமென்றுத் தெரியாதெனினும் எப்போதும் எல்லாருக்கும்
*வந்தனம் ... என் வந்தனம்*

299. என்ன கேட்டாலும் அசராது விடை தருகிறாளே.
ஏழெட்டு வரிகளில் விளக்கி விவாதிக்கிறாளே.
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம், ஐரோப்பிய தொழில் நுட்பம் அத்தனையும் அறிந்திருக்கிறாளே.
1917 லிருந்து இன்றைய வரலாறு வரை இயல்பாய் இயம்புகிறாளே.
ம்ம்ம் ... இவளை வேறெப்படி மடக்க?
கடினமான விடயங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவள் எளிமையான கேள்வியில் ஏமாறலாமே,
மலை தடுக்கி யாரும் விழுவதில்லை, கல் தடுக்கி தானே.
சரி சரி ஒரே ஒரு வினா, ஆம் / இல்லை விடை; ஒரு வார்த்தை ஒரு கோடி, தயாரா ?
*சந்திரனைத் தொட்டது யார் ... ஆம்ஸ்ட்ராங்கா ?*

298. சரி, புது ஜிமிக்கி, புரிகிறது
அதை இப்படி தட்டித் தட்டி ஆட்டித் தான் காமிக்கணுமா ?
நான் பார்ப்பதெப்படித் தெரிகிறது? சட்டென்று இங்கு அங்கு இழுத்து மறைத்துக் கொல்கிறாயே.
மல்லிப்பூ சூடிய அன்றாவது முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதை நிப்பாட் ... சுடிதார் அணிந்து வா என்றர்த்தம்.
ஃபோன் பேசிக்கிட்டே அதென்ன குனிந்து ஒரு கண்ணை இழுத்து மூடி என்னைப் பார்க்குறது?
பூ வாங்கித் தந்தால் கூந்தலில் முடியச்  சொல்வது, சாப்பிடுகையில் ஊட்டிவிடச் சொல்வது, இதெல்லாம் சரி, நாயுடு ஹாலுக்கு நான் எதற்கு?
ஐயோ ... எனைக் கொல்லாதேடி
*ஐயங்காரு வீட்டு அழகே*


297. பார்த்து ஐந்து நாள் ஆகுது.
பழகியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து வந்துப் போகுது.
எனை இங்கு ஏங்கித் தவிக்க விட்டு எங்கு சென்றாயோ ?
எப்படி இருக்காயோ, எதற்கிந்தத் திடீர்த் தலைமறைவோ ?
எவ்வாறுனை நான் தேட? யாரென்று யாரேனும் கேட்டால் என்ன சொல்ல ?
ஏதாவதொரு வழியில் தகவல் தா
என்னுயிரே இக்கணமேயருகே வா.
தழுவியக் கரங்களைத் தேடுகிறேன்
படர வழியில்லாதக் கொடியாய் அல்லாடுகிறேன்.
ஊண் உறக்கம் ஏதுமின்றி உன் நினைவால் வாடுகிறேன்.
என்றுனை மீண்டும் காண்பேனோ,
அதுவரை என் நிலை
*அனல் மேலே பனித்துளி*


296. கோபம் தானே, பட்டுக்கொள்.
ஊடல் தானே, ஒதுங்கி நில்.
கவிதை சொல்லமாட்டாயா, சரி
நீ சொல்ல நினைப்பதை நான் சொல்லவா ? கேட்டு ரசி, வா.
*
அள்ள அள்ளக் குறையாத அளவு உன்னுள் கற்பனைகள் சுரக்க வைக்கும் ~அமுத~ கவிதைசுரபி நானல்லவா.
உன் உள்ளத்தினுள் உற்சாகம் உற்பத்தியாகும் உயிர்நாடி நானல்லவா.
விழி திறந்திருக்கையிலேயே உன்னைக் கனவு காண வைப்பவள் நானல்லவா.
உண்ண விடாது உறங்க விடாது
அகிம்சை முறையில் இம்சை செய்பவள் நானல்லவா.
எல்லாம் மறந்து நீ  உறங்க,
உன்னைத் *தாலாட்டும் பூங்காற்று நானல்லவா*

295. காத்திருந்துக் காத்திருந்துக் காலம் கழித்தது போதும்.
கனவுகளில் மட்டும் கைகோர்த்து வாழ்ந்தது போதும்.
உண்ணப் பிடிக்காது உறங்குவதும்
உறங்காது உளறுவதும் போதும்.
எந்த சம்மந்தமும் இல்லாதபோதும்
ஏதும் மறக்காது ஏங்கித் தவித்து இளைத்துக் களைத்தது போதும்.
நெஞ்சில் நிறைந்த ஆனந்தமே
என்றும் என் கூடவேயிருக்கும்
*வசந்தமே, அருகில் வா*

Thursday, October 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 38

293. கண் விழிக்கையில் நெஞ்சில் புத்துணர்ச்சி,
நிம்மதியாய் நானுறங்க யாரேனும் தாலாட்டு பாடினாரோ ?

அருமையான சிற்றுண்டி, ரசித்து உண்கிறேன்.
இத்தனை சுவையாக யார் சமைத்தது ?

என் மனங்கவர் வண்ணத்தில் உடுத்தப் புத்தாடை,
எனக்காகவா ? யார் இதை வாங்கியிருக்கக் கூடும் ?

அதிசயமாயொரு மின்னஞ்சல் இன்று  உன்னிடமிருந்து.
எப்படி எதனால் உன் மனம் இளகியிருக்கும்?

நான் போகும் பாதையில் அற்புதமான சுகந்தம் உணர்கிறேன்
*யாரிந்த சாலையோரம் பூக்கள் வைத்தது ?*


292. கொஞ்ச நாளாகவே நான் உன்பால் ஈர்க்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.
அமைதியாய் அகந்தையின்றி அளவோடு  அலவாடுவது கண்டு அதிசயிக்கிறேன்.
விசாலமான உன் சிந்தனையும், விவேகமானப் பேச்சும், நுண்ணறிவும், செயலில் நேர்த்தியும், நியதி பிறழாத நேர்மையும் ... ம்ம்ம் என் நெஞ்சை நெகிழ்த்திட்டாய்.
உபத்திரவமில்லாது உதவுகிறாய், உதவினேன் என்று உரக்க உரைக்காதிருக்கிறாய்.
எனக்கென்னவோ இன்னுமதிகம் சிந்திப்பதும் குழப்பிக் கொள்வதும் வீண் என்றே தோன்றுகிறது.
காலம் போகும் போக்கில், கா...தல் காட்டும் பாதையில் உனைத் தொடரப்போகிறேன்.
புரிந்து விட்டது, இனி நீ இல்லாது வாழ்வது வீணே.
*உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே*.


291. காடு காய்ந்துக் கிடந்ததெல்லாம் பழைய கதையாகட்டும்.
வானம் பார்த்தே வறண்டு போன பூமி இனி வரலாறில் மட்டும்.
ஆழிமழைக் கண்ணன் வரம் தரட்டும்.
ஆண்டாள் பாடியது பாடியபடியே பழிக்கட்டும்.
வானின் கொடை அருள் அனைவர்க்கும் விளங்கட்டும்.
கருமேகங்கள் சூழட்டும்.
இடி இடிக்கட்டும்,
மின்னல் ஜொலிக்கட்டும்
காய்ந்த நிலமெல்லாம் செழிக்கட்டும்.
*மாரி மழை பெய்யாதோ !*

290. தவறு தான்
தப்பாய் யோசித்தது நான் தான்
பெண் புத்தி பின்^புத்தி என்பது சரிதான்
*
எவன் வராது ஏமாற்றி விட்டான் என்று நான் எண்ணினேனோ ...
எவன் என்னை மறந்து விட்டான் என்று நினைத்தேனோ ...
*
எவன் என் உறக்கத்தினுள் புகுந்து கனவு பல விதைத்தானோ ...
எவன் என்னைச் சீண்டி சிரிக்க வைத்து சிநேகித்தானோ ...
எவன் இல்லாது என்னால் வாழ முடியாது என்றாகிப்போனதோ ...
எவனால் நான் பெண்ணாகப் பிறந்ததன் பொருள் புரிந்துக் கொண்டேனோ ...
*
அந்தத் *தங்கமகன் இன்று சிங்க நடைபோட்டு அருகில் அருகில் வந்தான்*

^ பின் - pin - sharp

289. நீ வெட்டி எறியும் நகங்களெல்லாம்
   பிறைநிலவாகும்
நீ வரையும் புள்ளியும் கோடும்
   ஒப்பில்லா ஓவியம்
நீ நடக்கையில் கொலுசு இசைப்பது
   சுகமான ராகம்.
நீ தொட்டு உண்ணத் தருவதெலாம்
   தேவாமிர்தமாகும்.
நீ என்ன எழுதினாலும்
   கவிதைகள்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
   *சங்கீத ஸ்வரங்கள்*

288. காலையில் இன்று கண் விழிக்கும் போதே நல்ல சகுனமாய்ப் பட்டது.
என்றுமில்லாமல் பச்சைக்கிளி ஒன்று சாளரம் அருகில் வந்து கிச்சித்து, மறவாத உன்னை ஞாபகப்படுத்தியது.
குளித்து வர கோடியம்மன் கோவில் ப்ரசாதமாய், உனக்குப் பிடித்த, அக்காரவடிசல் தயாராயிருந்தது.
நான் எண்ணியதுபோலவே, உன் தங்கை நீ வந்திருப்பதை பறையறிவிக்க நெஞ்சம் பரபரத்தது.
அடுத்த நொடியே உனக்குப் பிடித்த பச்சை நிறத்தில் உடுத்திக் கொண்டேன்.
ஜிமிக்கி உனக்குப் பிடிக்காதே, கழட்டி எறிந்து விட்டுத் தோடு அணிந்து கொண்டேன்.
மறவாது மூக்குத்தி, மல்லிப்பூ;
உதட்டுச் சாயம், சுவையில்லை என்பாய், தவிர்த்து விட்டேன்.
மதியமும் முடிந்து மாலை ஆறு ஆனதும் கோவிலில் உன்னைத் தேடினேன், காணோம்.
ஏழு, எட்டு, இரவு் ஒன்பது, மறந்து விட்டாயா? என்னையா? வீட்டையா?
*நீ வருவாய் என நான் நினைத்தேன்*

287. அடேய் அதிகப்ரசங்கிக் காதலா,
இன்னும்  இன்னும் என்று என்னுள் எப்போதும் எதையாவது தேடாதே.
நீண்டு  நீண்டிருக்கும் விரல்களால் எல்லை மீறி நோண்டாதே.
பூ போன்றிப் பூவை எனை நின் வலு தோள் மார்பினால் முட்டாதே.
காந்தப் பார்வையால் கன்னி நெஞ்சைக் கவர்ந்திழுக்காதே.
இன்று எனை எப்படி இம்சிக்கப் போகிறாயோ என்று ஏங்க விடாதே.
*எங்கெங்கு எங்கெங்கு இன்பம் என்று தேடி எனைக் கொல்லாதே*

286. சின்ன வயதிலெல்லாம் உன்னோடு தான் விளையாடுவேனாம்.
ஒன்றாய்ப் பள்ளி சென்று, விளையாடிக் கொண்டே திரும்புவோமாம்.
ஒருமுறை சைக்கிளில் பின்னால் நான், குரங்கு பெடல் போட்டு, இருவரும் கீழே விழுந்து, இப்போது நினைத்தால் சிரிப்பாயிருக்கு.
அதன்பின் வீடு மாறி, தெரு மாறி, ஊர் மாறி, காலம் மாறி ... ம்ம்ம் நாடு வேறு மாறி,
காலையில் கோலம் போடையில், நீ வந்து நின்றதும் ஒரு உற்சாகம்,
என்னை நீ மறக்கவில்லை என்ற எண்ணம் தந்த பரவசம்.
இது அதுவா ? அதுதானா இது ? என்றக் குழப்பங்கள் ஏதுமின்றி,
எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றிதான் பழகுகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்,
அது ... உன்னோடு பேசும் போதும் பழகும் போதும் ...
என்னுள் ... ஒரு ... ஒரு ...
*ஒரு வெட்கம் வருதே...வருதே*

Friday, October 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 37

285. மரம் நிழலும் கனியும் தந்துக் காத்திட
பறவைகள் கைமாறு என்ன செய்யுமோ ?
மழை பெய்துக் குளிர்விக்க
மேகத்திற்கு மண்ணோடு முன்ஜென்ம பந்தமோ?
தேடி வந்ததும் வாரியணைத்துக் கொண்டானே குசேலனை,
அத்தனை  பாக்கியவானோ ?
மல்லிப்பூ மலர்ந்து மணம் வீச
செடி ஏதேனும்  புண்ணியம் செய்திருக்குமோ ?
கண்ணனை மகனாய் வளர்த்திட
யசோதா ஏதும் வரம் பெற்றிருப்பாளோ ?
*நெற்றிக் குங்குமம் நீ சூட்ட
எத்தனைத் தவம் நான் செய்தேனோ ?*


284. ரசிக்கவா ? பாடவா ?
இனிய கானம் கேட்குதே

உண்ணவா ? மறுக்கவா ?
இனிப்பு அதிகமாய் இருக்குதே

சொல்லவா ? எழுதவா ?
நெஞ்சில் கவிதை சுரக்குதே.

சிரிக்கவா ? பேசவா ?
மெல்ல என்னைப் பார்க்கிறாளே.

எடுக்கவா ? தொடுக்கவா ?
*கொடியிலே மல்லியப்பூ மணக்குதே*


283. புரிகிறது,
உனக்குப் பிடித்திருக்கிறது.
நீ சொல்லாமலேயே தெரிகிறது.
உன் இதயம் அவன் பின்னே பறக்குது.
அவன் இருக்குமிடம் தேடி அலையுது.
அவன் உன்னருகே வந்து பேசணும் என்றுன் மனம் அல்லாடுது.
ம்ம்ம் ... சாதிக்கப் பிறந்தவள் நீ.
சாதிக்கப் பிறந்தவர்கள் காதலிக்கக் கூடாதா என்று தானே கேட்க வருகிறாய்?
காதல் ... வலி தரும், உன் வழி மாற்றும், வலிமை குறைக்கும்.
கனவுகள் பிறக்கும், உன் காரியம் கெட்டுப் போகும்.
நன்றாய் யோசி, பின் செயல்படு.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேலைக்காகாது.
எவ்வழியில் நீ பயணப்பட்டாலும் சங்கடங்களும் சச்சரவுகளும் உனைச் சந்திக்கக் காத்திருக்கும்.
விடாது முயன்றிடு, கலங்காது போராடு, வெற்றி என்றும் உன்னோடு.
என்ன பார்க்கிறாய்? யார் பேசுவது என்றா? நான் தான் *பேசுகிறேன், பேசுகிறேன், உன் இதயம் பேசுகிறேன்*


282. தனித்திருக்கிறாய், எனை விட்டு விலகியிருக்கிறாய்.
ஆனால் எனை நீ மறக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை.
என்னவோ கோபம், இல்லை ஏக்கம்
வெளியில் சொல்ல முடியாதுத் தவிப்பு.
எனைத் தவிர்த்து மறைந்து வாழ்வதாய் எண்ணி உனை நீ ஏமாற்றிக் கொள்கிறாய்
உன் மனது அறிவேன், அந்த மழைநீர் போல் நீ மிகத் தூய்மையானவன் என்பதையும் அறிவேன்.
உனக்காக நான் காத்திருப்பேன்.
உன் கவலை தீர்க்கக் காரியம் ஆற்றுவேன்
முதல் வேலையாய், மன்னவனே
என் *மன்னவனே நீ போன பாதை தேடிதேடி வருவேன்*


281. நெஞ்சில் காதல்; கொஞ்சிப் பேச முடியாததால் கொஞ்சம் கோபம்;
கையளவு மனதில் கடலளவு சோகம்.
இருந்தும் இல்லை என்றாகிவிட்ட பின் இல்லாமலா போகும்?
அன்பு அறிந்துக்கொள்ளாதபோது அருகில் இருந்தாலென்ன, அயல்நாட்டில் இருந்தாலென்ன ?
காலம் ஆற்றாதா காயம்? நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
புதிய  இடம், புதிய வழி ஏதேனும் கிட்டும் என்றெண்ணி, கொஞ்ச நாள் பறந்து வந்து விட்டேன்.
அன்று அவமானமாய்த் தெரிந்தது, இன்று விலகி நின்று யோசிக்க வெகுமானமாய்த் தெரிந்தது.
எனக்கென்று இருந்தால் யாரால் பறிக்க முடியும் என்று ஆறுதலோடு,
இதோ காத்திருக்கிறேன்,
இமை கூட மூட இயலாது,
இரண்டு நாளாய் உறக்கமில்லாது,
இது இரவு நேரம்
*ந்யுயார்க் நகரம் உறங்கும் நேரம்*


280. எழுத எனக்கு நாட்டமில்லாத போது என் எழுத்தில் சுவையிருக்காது, எழுதியவரை போதும்.
என்ன வரைய என்றேதும் தீர்மானிக்காது வர்ணத்தை மட்டும் வாரியிரைக்க யாருக்கும் புரியாது. நிறுத்திவிட்டேன்.
பழைய அரவிந்த் சாமி கமல் அளவுக்கு இல்லையென்றாலும் பார்க்க சுமாராயிருந்தேன்.
'இருந்தேன்' இறந்த காலம் தானே ?
ஆமாம் எல்லாம் இனி இறந்தகாலம் தான்.
இதுவரை இப்படி இல்லை.
இனியென்ன இருக்கு.
கவிதைகளிலும் கனவுகளிலும், என் எண்ணங்களிலும், இன்றிலிருந்து இல்லாமலிருக்கலாம், ஆனால் *நேற்று அவளிருந்தாள்*


279. கடற்கரையில், அலைகளின் இடையில், ஆனந்தமாய் கைகோர்த்தபடி ஆடுகிறோம்.
பூஞ்சோலையில், பூக்களின் இடையினில், புல் தரையினில், பனிப் போர்வையில் புரண்டு கிடக்கிறோம்.
பத்து யானைகள், இருபது குதிரைகள், படை சூழ, வீரவாள் ஏந்தியபடி, வெள்ளைப் பட்டில் நீ,  தேரிலிருந்துக் குதிக்கிறாய்.
திரையரங்கம், மொக்கைப் படம், ஆளில்லா வரிசை, ஓர இருக்கை, முத்தக் காட்சி, மெல்ல எனைப் பார்க்கிறாய்.
வீடு, தனி அறை, இசையில் தொடங்குதம்மா பாடல், வெளியில் மழை, கையில் டீ, மடியில் நீ, கவிதை சொல்ல, நான் ரசிக்க, பரிசு கேட்க, எதைத் தர எப்படித் தர என்று நான் *கனா காண்கிறேன், கனா காண்கிறேன், கண்ணாளனே*

Tuesday, September 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 36

278. அருகில் யாரோ நிற்பதை உள்ளுணர்வு உணர்த்தியது.
நிமிர்ந்து, மெல்ல தலையைத் திருப்பிப் பார்க்க வைத்தது.
என் நெஞ்சைக் கவர்ந்த, அதே கருநீலவண்ணச் சேலையோ?
மெல்லிய தேகம், நீள் வட்ட முகம்,
பார்க்கையில் காதல் பொங்கும்.
வாயில் சிரிப்பு, பரபரப்பு.
பார்வையிலொரு வசிகரிப்பு.
அருகிலழைக்கும் மல்லிகை மணம்,
ஆழ்ந்து நுகர மோகம் தரும்.
கிட்ட நிற்கையில் கொஞ்சமாய்த் தெரியும் அந்தச் சிற்றிடை,
அச் சிற்றிடையையும் காண விடாது மறைக்கும் அவள் கருங்கூந்தல்.
கை நீட்ட, வெட்கம் படர, கைப்பேசி அலற, ம்ம்ம் ... விடிகாலை 5 மணி,
*யாரது யாரது கனவிலே வந்து போனது?*

277. என்னவென்று சொல்வேனடி,
ஏதும் மறக்க முடியாது தவிக்கிறேன்
ராதே ராதே என்று குழைந்தவன்,
ரகசியமாய்ப் பலமுறை என்னைச் சீண்டி விளையாடியவன்,
எனக்கே எனக்காய் இருப்பான் என்று தானே பழகினேன்.
எல்லாரோடுமிப்படி சுகித்திருப்பான் என்றுத் தெரியாது போயிற்று.
ராமனென்று எண்ண, அவன் காம ரூபன் எனத் தெரியாது போயிற்று.
எல்லாம் புரிந்து, நகர்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
எனினும் ...  எனினும்,
என்ன அவன் இப்பொழுதும் பட்டுப் பீதாம்பரத்தில் தான் திரிகிறானா ?
கொஞ்சம் சிகப்பேறி இருப்பானே ! காதலை என்னுள் கலந்த  அவன்
*ஆசை முகம் மறந்து போச்சே !*

276. பணம் பணம் என்று நாங்கள் பயணப்பட்டது போதும்,
நீயும் எங்கள் வழியிலேயே வந்து விசனப்பட வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு அளவாய் நிறைவாய் வாழ கற்றுக் கொள்.

பணம் சேர்க்க ஆயிரம் வழி இருக்க, இனிமேலும் இயற்கையை இம்சித்து வாழவேண்டாமே.
பறவை விலங்கு மரம் செடி கொடி இவற்றை நேசி.
நீரையும் நிலத்தையும் கூட, உன் தாய் போலே எண்ணு, மதி.
மண்ணிலும் மனதிலும் மாசு நிறையாது வாழ, இதுவே மதி.

அதிகமான அறிவு ஆணவம் தரும்.
அமைதியான வாழ்வே ஆனந்தம் தரும்.
இயற்கைக்கு அடிபணிந்து வாழ எல்லாம் வளம் பெரும்.

பாரம்பரியப் பாதையில் பயணப்படு
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடம் தென்படும், போராடு.
நீ செய்யாவிட்டால் வேறார் செய்வார் ?
நம்பிக்கை வைத்திடு,
*உன்னால் முடியும் தம்பி*


275. *ஆயிரம் நிலவே வா* என்று ஆரம்பித்து *வான் நிலா நிலா* என்று தொடர்ந்து *நிலாவே வா* என்று மீண்டும் ஒருமுறை அழைத்து *நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்* என்று விளம்பி *நந்தா என் நிலா* என்று உரிமை கொண்டாடி, *பெண்மானே சங்கீதம் பாடிவா* என்று கூடப் பாடழைத்து,  *கண்மணியே காதல் என்பது* சொல்லித் தந்து, *வண்ணம் கொண்ட வெண்ணிலவே* என வர்ணித்து, *இளைய நிலா பொழி* வது கண்டு பரவசித்து, *நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* என்று உவமித்து, ஊடல் பொழுதில் *நிலவே முகம் காட்டு* எனக் கெஞ்சி, *சங்கீத மேகம் தேன் சிந்த*  ... இன்னும் இருக்கு சொல்ல, நேரம் பொறுமை இருக்கா கேட்க.

274. பார்க்காதபோது பார்த்து,
பார்க்கையில் இமை தாழ்த்தி, இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.
சிரித்துப் பேசி சிநேகித்ததில்லை.
கவிதை என்றேதும் என் நெஞ்சில் சுரந்ததில்லை.
காதல் பாட்டுக்களை திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்ததில்லை.
கண் திறந்திருக்கக் கனவு கண்டதில்லை.
உறக்கம் வராது படுக்கையில் புரண்டுக் கிடந்ததில்லை.
சாப்பிட்டேனா, குளித்தேனா என்றக் குழம்பமெல்லாம் இருந்ததில்லை.
எதையோ செய்ய வந்து என்ன செய்யணும் என்பதை மறந்து சிலையாய் நின்றதில்லை.
ஆனால் இதெல்லாம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் இப்போது நெஞ்சிலிருக்கு.
என்னிடம் அனுமதி ஏதும் *கேளாமல் கையிலே வந்தாயே காதலே*

273. நம் வாழ்வில் எல்லாமே இசை.
எல்லா சமயத்திலும் சடங்கிலும் நிறைந்திருப்பது இசை.
உறங்கவும், எழும் போது, எழுச்சிக்கும், எல்லாம் முடிந்துப் போகும் போதும்.
அமைதி நாடும் போதும், அழகாய்ப் பாடும் போதும்.
சிரிக்க இசை, சிந்திக்க உதவும் இசை
குழந்தையின் சிரிப்பிலும் அழுகையிலும் நிறைந்திருக்கும் இன்னிசை.
காதலிலும் காமத்திலும் கலந்திருப்பது இசை.
இவ் உலகில் எல்லாமே *இசையில் தொடங்குதம்மா*

272. கோபங்கொள், பேசாதிராதே
திட்டு, சண்டையிடு, தனியே தவிக்க, தவிர்ப்பது தவறில்லையா?
இரவும் பகலும் அடுத்தடுத்து வருவது இயற்கை
சச்சரவும் சமாதானமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
ஊடலும் கூடலும் உறவில் சகஜம்.
அப்படி என்ன கோபமடி உனக்கு? அதற்கு இத்தனை நாளா பேசாதிருப்பாய் ?
சிரித்தால் முறைக்கிறாய், அருகில் வந்துப் பேசினால் அதட்டுகிறாய்.
எசகுபிசகாய் எங்காவது கண்டுவிட்டால் காணாதது போல் நழுவுகிறாயே,
ஒருவேளை பழசு எல்லாம் மறந்துப் போயிருச்சோ?
என் நெஞ்சைக் களவாடிய
*ஏடி கள்ளச்சி, எனை தெரியலியா?* 

Sunday, September 2, 2018

பொன்மாலைப் பொழுதில் 35

271 என்றும் நாம் ஒன்றாயிருக்க வேண்டும்.
நம் வாழ்வில் எல்லாம் நன்றாய் அமைய வேண்டும்.
உன்னால் நான் மலர வேண்டும்.
என்னால் நீ உயர வேண்டும்.
இரவிலென் கனவில் நீ வேண்டும்
பகலிலுன் நினைவில் நான் வேண்டும்.
என் எண்ணங்களெல்லாம் உனைச்சுற்றியிருக்க வேண்டும்.
உன் வெற்றியில் எனக்கொரு பங்கு வேண்டும்.
என் போர்வை நீயாக வேண்டும்.
உன் பார்வை என் மேல் மட்டும் பட  வேண்டும்.
என் துங்கங்களிலெல்லாம் உன் துணை வேண்டும்.
உனக்கு இணையாய் பக்கத்தில் எனக்கோர் இடம் வேண்டும்.
என்றும் எக்கணமும் எனை நீ விட்டு விலகாதிருக்க வேண்டும்.
*ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்*

270. மஞ்சளோ பச்சையோ கையில் கிடைத்த எதையாவது அணிவேன்.
அழகாய்த் தோன்றுவது எப்படி என்று சொல்லித் தந்தது நீ தான்.
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை செல்லும் வழியில் வாழ்ந்து வந்தேன்.
அத்தனைக்கும் ஆசைபட சத்குரு சொன்னதாக எடுத்துரைத்தது நீ தான்.
பதங்களைப் பகுத்து வரிக்கு ஒன்றாய் எழுதி புதுப்பா என்று்ப் பெயரிட்டேன்.
தேமா புளிமா வெண்பா இலக்கணங்களை விளங்குமாறு விளக்கியது நீ தான்.
கோவில்கள் நடைபயிற்சிக்கு என்று நம்பியிருந்தேன். கோரிக்கைகள் பிரார்த்தனைகள் பற்றியெல்லாம் பாடமெடுத்தது நீ தான்.
ஏதும் தெரியாது இத்தனை நாள் எப்படித்தான் வாழ்ந்திருந்தேனோ ?
*என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் ?*

269. சரி உனக்குப் பிடித்திருக்கிறது என்பது புரிகிறது.
உன் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது.
இப்படி வாய் திறந்தபடி பார்க்காதே, கட்டுப்படுத்திக்கொள்.
கனவுகளிலெல்லாம் காட்சி தருகிறான், அதானே?
அழகாய், மென்மையாய்ப் பேசுகிறான், ஆணவமில்லாதுப் பழகுகிறான், அதற்கு?
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் தான், காணாததைக் கண்டதுபோல் நீ காண்பது ஏன்?
அமைதியாய், அவன் வருகையில் வேறு திசை பார்த்திரு;
ம்ம்ம் ... விழலுக்கு இறைத்த நீராய் எத்தனை முறை எடுத்துச் *சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது*.

268. பல மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு வர, வாசலில் அரிசி மாவுக் கோலம், பிடித்திருந்தது.
எல்லா இடமும் சுத்தமாய், வீடே ஒருவித நறுமணத்துடன், பிடித்திருந்தது.
பாலைக் காய்ச்சி நுரையோடு சூடாய்க் காபி, பிடித்திருந்தது.
வளையலோசை, மல்லிப்பூ மணம், கலகல சிரிப்போசை எல்லாமே பிடித்திருந்தது.
எல்லாவற்றிலும் தெரியும் புதுமை ஏன் எப்படி என்று விசாரிக்க,
ரேவதி, என் மாமன் மகள், விடுமுறைக்கு வந்திருக்கிறாளாம். பிடித்திருந்தது.
மறைந்து நின்று பார்ப்பதும், ஒற்றை வார்த்தை பதிலும், பிடித்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப் பழகி, இதெல்லாம் பெரியவர்களின் திட்டமோ என்று சந்தேகித்தோம்.
எந்த எதிர்பார்ப்பும் கொள்ளாது நட்பைத் தொடர்ந்திட முடிவு செய்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கையில் நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்,
*மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்*

267. ஆடு ஓடு அலைந்துத் திரி
பணம் தேடு பாவம் செய்
எல்லாவற்றின் மேலும் ஆசைபடு
கிடைக்காதெனில் ஆத்திரப்படு
கோபம் மோகம் நெஞ்சில் வளர்
சாஸ்திரம் சம்பிரதாயம் மற
உனக்கென்றோர் நியதி கொள்
தேவையெனில் மாற்று.
யாரையும் மதிக்காது வாழ்
பாவமூட்டை சுமக்க முடியாது கதறு
கண்ணீர் விட்டுக் கடவுளை நினை
மீண்டும் பிறந்து அவதியுரு
அடுத்த பிறவியிலாவது, தாமரை இலை மேல் தண்ணீராய் வாழ்.
எல்லாம் மாயை என்பதை உணர்.
மந்திரம் இதுதான், மறவாதிரு
உடம்பொரு குப்பை
*அப்பனும் அம்மையும் கொட்டிவைத்தது*


266. அடி என் ஆருயிர்த் தோழி
அருகில் வந்தொரு சேதி கேளடி.
அரிவை நீ  அறிவாய் தானே.
*
கோட்டைக்குக் காவலாய் கோவில் அருகில் இருக்கும் வாசலில் நிற்பானே,
கையில் ஈட்டியோடு இருட்டின் நிறம் ஒத்து இருப்பானே,
நாம் பந்தாடி விட்டு வருகையில் 'பொங்கு கனங்குழை' பாடினானே,
*
நேற்று, குதிரையில் வந்து, எனை நெருங்கி நிறையப் பேசினான்.
தன் தினப்பணி பற்றி பல செய்தி பரைந்தான்.
தேன் ததியன்னம் கம்பங்கூல் அப்பம் மோர் என்று நிறையத் தின்னக் கிடைக்குமாம்.
அளவாடியபடியே திடீரென்று எனைப் பெண் கேட்க வரலாமா என்று வினவினான்.
தன் கைக்காப்பைக் கழட்டி என் கையில் மாட்டிவிட்டான்.
*
பதறிய படியே நான் விலக,
அவன் எனை விடாதுத் தொடர,
அவ்வமயம் குதிரை கனைக்க,
நான் பயந்து அலர,
'என்னடி' என்றென் தாய் கூச்சலிட,
ம்ம்ம் ... *மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி*

265. மனமொன்றிப் பழகியதெல்லாம் பழைய கதை.
தொட்டுப்பேசி விட்டுக்கொடுத்த தெல்லாம்  வெட்டிப் பேச்சு.
இருவேறு திசையில் பிரிந்து பலகாத தூரம் பயணப்பட்டாச்சி.
கண் பார்த்துப் பேசிய காலமெல்லாம் போயேபோச்சி.
'நல்லாயிருக்கியா?' எனக் கேட்டே நிறைய நாளாச்சி.
விவரமெதையும் சொன்னதில்லை, சுற்றி நடக்குமெதையும் விசாரிக்கவுமில்லை.
இனி ஒட்டமுடியாது என்று புரிந்து விலகியே இருந்த போதிலும்,
மனம் லயித்து எந்த விஷயத்தில் ஈடுபடினும் உடனுன் ஞாபகம் வருகுதே,
*எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா?*

Sunday, August 26, 2018

பொன்மாலைப் பொழுதில் 34


264. அடேய் அழகா, அற்புதா,
தினம் உனைக் காண, அது போதும்.
உன்னோடு கண்டபடி சிரித்துப் பேசிப் பழக, அது போதும்.
நீ செல்லுமிடமெல்லாம் உன் விரல் கோர்த்தப்படியே சுற்றுவது போதும்.
உன் கவிதைகளைப் படிக்கையில் பரவசம் பிறக்குதே, அது போதும்.
எங்குனை இழுத்துச் சென்றாலும் துணையாய் வருவாயே, போதும்.
சாப்பிடுகையில் 'ஊட்டிவிடவா?' என்று கேட்பாயே, அது போதும்.
வஞ்சியை வசீயம் செய்துவிட்ட
*வசீகரா, என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்*

263. வாழ்க்கையிலுண்டு பல இக்கட்டு
அசந்தால் உன் திறமைகள் போகும் திருட்டு
கலங்காது போராடு
அயராது போட்டியிடு
நற்சிந்தனைகளை நெஞ்சில் புகட்டு
நீ முன்னேற முன்னேற தினம் கிட்டும் வசை தோல்வி திட்டு
காதில் கொள்ளாது காரியம் ஆற்றிடு
உன் உழைப்பைக் காட்டு
புது யுக்திகளைக் கடைபிடித்திடு
பாராட்டப் பார்க்கப் பணிந்திடு
வெற்றி கிட்டும், மகிழ்ந்திடு
கர்வம் கொள்ளாதிருந்திடு
நெஞ்சைக் கொஞ்சம் அமைதிப்படுத்திடு
காது குளிர மெல்ஸிசைப் பாட்டு
ஒருவகையில் இதுவும் தாலாட்டு
இதோ இன்று *நிலவே முகம் காட்டு*


262 திடீரென்றெனக்குப் பொறையேற
ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தாய், மகிழ்ச்சி.
நூலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு சில புத்தகங்கள் கேட்க,
தேடி எடுத்துத் தந்தாய், மகிழ்ச்சி.
நானெது சொல்லினும்
சிரித்த முகத்தோடு நீ  செய்வது கண்டு பெருமகிழ்ச்சி.
*
ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்க,
மெதுவாய் நீ என்னை நெருங்க
'முத்தம் தரணுமா ?' என்று நான் வினவ,
'மதி தெரிய, மழை பொழிய, மடியில் நீ கிடக்க ...' கவிதை மட்டும் பாடிவிட்டுப் போய்விட்டாய்.
*
இதோ ... இன்று ...
காத்திருக்கிறேன், ஏமாற்றாது வா.
எனை மீண்டும் மகிழ்ச்சியில் திழைத்திடச் செய், வா.
நீ சொன்னபடியே, இது மதி தெரியும்
*மாலை நேரம், மழை தூறும் காலம்*


261. இன்றென்ன சொல்ல என்றெண்ண
எதுகை மோனையோடு ஏழெட்டு வரிகள் எடுத்தியம்பினாய்.
எவ்வழி என்வழி என்று நான் தேடிக்கிடக்க
இவ்வழி நல்வழி என்று நீ அழைத்துச் சென்றாய்.
சோகத்தில் நான் துவண்டிருக்க
தோள் தந்தென் துயர் துடைத்தாய்.
தாகத்தில் தவித்தேன், பருக பானகம் தந்தாய்.
*நிழல் வேண்டி நின்றேன், மேகமென*

260. இதுவரை என் மனம் இப்படி சஞ்சலப்பட்டதில்லை.
பார்க்குமெல்லாவற்றிலுமொரு பரவசம் பிறந்ததில்லை.
உள்ளத்திலொரு புத்துணர்ச்சி, இதுவரை  உணர்ந்ததில்லை.
கனவுகள் கருப்பு வெள்ளையில் மட்டும் என்று படித்திருக்க,
என்னுறக்கத்தின் உட்புகுந்து உள்ளத்துணர்வுகளில் வர்ணமிறைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறேன்.
இசையிலார்வம் இருக்கெனினும்
ஸ்வர வரிசையிலிதுவரை சிந்தித்ததில்லை.
எதனாலிப்படியொரு மாற்றம் ?
இதெப்படி நிகழ்ந்திருக்குமென்று  யோசித்திருக்க,
இத்தனைக்கும் காரணமான அந்த *ஒரு பொன்மானை நான் காண ... தகதிமிதோம்*

259. தவறு தான், ஒத்துக்கொள்கிறேன்.
வேலை வேலை என்றோடி தேவையற்ற செயல் பல செய்தது தவறு தான்.
பணம் தேடும் பயணத்தில் பாவையுன் குணம்  மறந்துத் திரிந்தது தவறு தான்.
கன்னியுன் கட்டழகை வர்ணித்தக் காதல் வார்த்தைகள் காலப்போக்கில் காற்றில் கரையவிட்டது தவறு தான்.
சீற்றத்தில் சுடுசொற்கள் பலவற்றை சிந்திவிட்டு விலகி நின்றது தவறு தான்.
ஆப்பக்குழி கன்னத்தில் அதரம் பதித்தது மறந்து அறைந்தது தவறு தான்.
எல்லாமே என் தவறு தான், ஏற்றுக் கொள்கிறேன், என்னுயிரே ...
*ஆருயிரே எனை மன்னிப்பாயா ?*

258. பிடித்திருக்கு என்றால் ... அதற்குப் பத்து காரணங்கள் சொல்லி கன்னி மனதைக் குழப்பணுமா என்ன ? சண்டாளா;

வேதியல் மாற்றங்களை விலாவாரியாய் படித்திருக்க, இன்று கணக்குப் பரிட்சையாம். படுபாவி படுபாவி.

வெயிலில் சிரித்துக்கொண்டே தனியே நடுவீதியில் நின்றிருந்தேனாம், வத்தி வைத்து விட்டார்கள். இதற்கும் நீ தானடா காரணம்.

இன்று காலையில் 'குட்மார்னிங் அங்கிள்' என்று சொல்ல, தூக்கக் கலக்கம் என்று போகவேண்டியது தானே, அப்பப்பா காதில் ரத்தம் வரவர அறிவுரை, அப்பாவை அங்கிள் என்று அழைத்ததற்கு.

அடுத்து நீ என்னை என்ன செய்ய வைக்கப் போகிறாய் என்று பயந்தபடியே இருக்கிறேன், புரியாமலேயே எனைப் படுத்தி எடுக்கும்  இது, *என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?*

257. கந்தர்வ விவாகம் செய்து கொண்டு 'இல்லை' என்று பொய் சொல்லவில்லையா துஷ்யந்தன்;

'தலைமுடியைக் கண்டேன், தாளம்பூவே சாட்சி' என்று பொய் சொல்லவில்லையா நான்முகன்;

தான் க்ஷத்ரியன் இல்லை என்று பொய்  சொல்லி வில் வித்தை கற்கவில்லையா  கர்ணன்;

மண்ணை நான் திங்கவில்லை என்று பொய் சொல்லவில்லையா மாயக் கண்ணன்;

நீ மட்டும் தயங்குவதேனடி பெண்ணே?
உன் காதலன் நான் தானென்று
*ஒரு பொய்யாவது சொல் கண்ணே*

Tuesday, August 21, 2018

பொன்மாலைப் பொழுதில் 33


256. அருந்தவத்தில் அமர்ந்திருக்கையில்
ஆக்கையில் அபூர்வ அதிர்வலைகள் அனுபவித்தேனே,
ஆண்டவன் அருள் அளித்துவிட்டானோ ?

எழுதத் தொடங்கையில்
கோவில் மணியோசை காதில் கேட்குதே,
இன்றிதை யாரேனும் படித்துப் பாராட்டிவிடுவார்களோ ?

இன்னும் இரு வரி எழுதலாம் என்றால்
கற்பனைக் குதிரை பாய்ந்தோட மறுக்குதே,
காதல் மை தீர்ந்துக் காய்ந்துப் போயிருக்குமோ ?

ஆகா, அதோ அங்கே,
*தோகை இளமயில் ஆடி வருகுதே,
வானில்  மழை வருமோ ?*

255. காலையில் விழித்து
'முருகா, க்ருஷ்ணா' என்று தெய்வ நாமம் சொல்லியழைத்து,
சிவபுராணம் ஒலிக்கவிட்டு, தொடர்ந்து பாடி
அம்மாவைக் கொஞ்சி காபி குடித்து
அமைதியாய் யோகா செய்து
மெல்லக் குளித்து அழகாய் உடுத்தி ... இதெல்லாம் அப்போது;
கிமு கிபி போல் உமு உபி; உனைப் பார்க்குமுன், பார்த்து பழகிய பின்.
இப்பொழுதெல்லாம் இமையின் இடையில் நீ நின்றிருக்க,
எங்கிருந்து நான் உறங்க?
'எந்திரி.. டீ எருமை' என்று யாரோ தொடர்ந்து கத்துவதைக் கேட்டுக் கனவு கலைகிறது.
'எவ்ளோ நேரம் குளிப்பே, காஃபி ஆறுதுல்ல ?' என்ற சத்தம் பலமுறை கேட்கிறது.
எதை உடுத்த என்று குழம்பி, நீ என்ன நிறத்தில் உடுத்தியிருப்பாய் என்று யோசித்து ...
உனக்காகக் காத்திருந்து,
நீ பார்க்காது போனால் வருந்தி, பேசாதிருந்தால் உள்ளே அழுது ...
முன்பெல்லாம் நான் உண்டு என் வேலையுண்டு என்றிருந்த என்னை இப்பொழுதெல்லாம் உனைப் பற்றி எண்ணி இருப்பதே வேலையாகி,
என்னை இப்படி தலைகீழாய் மாற்றிவிட்ட நீ
*எங்கிருந்து வந்தாயடா ?*

254. கொஞ்சம் நீளம் தான், கவிதையைச் சொன்னேன்.
இது எப்போது நடந்தது என்றால், சரி அது  கடைசியில்.
ஹாஸ்டலில் அறையில் இரவில்
தடையின்றி துயிலத் தயாராக,
கதவு மெதுவாய் சுரண்டப்பட அவசரமாய் ஒரு துண்டை எடுத்து சுற்றிக்கொண்டு திறக்க,
என்னவள் என் கற்பனைகளுக்கும் கவிதைகளுக்கும் சொந்தக்காரி, சட்டென்று உள்ளே நுழைந்தாள்.
'என்னடி இந்நேரத்துல?' என்றேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரில டவுட்டு' என்றாள், சொல்லித் தந்தேன்.
H2SO4 க்கும் CuSO4 க்கும் வேறுபாடு கேட்க, சொன்னேன்.
ட்ரான்சிஸ்டருக்கும் கசின் சிஸ்டருக்கும் வித்யாசம் வினவ விளக்கினேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே பையிலிருந்து அதை எடுத்தாள்.
எதை என்று சொல்லிவிட்டால் இந்தக் கவிதைக்கு 18+ முத்திரை குத்தவேண்டியிருக்கும், எனவே உங்கள் கற்பனைக்கு அதை விட்டு விடுகிறேன். 
'இது என்னடி?' என்று கேட்டேன்.
'ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பொளந்து கட்டுற, அத்தியாவசியமான இது என்னன்னு தெரியாது ?' கேட்டாள்.
'தெரியும், இப்போ இங்கே எதுக்கு ?' என்று நான் கேட்க,
'மூடிக்கோ' என்றவள் சமிக்ஞையில் பதில் தர,
அதையும் தொடர்ந்து அமெரிக்க அணு ஆயுதக் கொள்கையையும் ஐரோப்பாவின் வளர்ச்சியையும் கலந்தாலோசித்து ...
இதெல்லாம் நடந்தேறியது
*ஏப்ரல் மாதத்தில், ஓர் அர்த்த ஜாமத்தில்...*


253. இப்பொழுதெல்லாம் நீ என்னிடம் விரும்பிப் பழகுவதில்லை.
சரியாய் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.
ஏன் பல நாட்கள் பேசாதே தவிர்த்துத் தனித்திருக்கிறாய்.
என் தேவை தீர்ந்திட்டதோ ? எனை வெறுக்கத் தொடங்கி விட்டாயோ ?
ஆனால் என்னால் உனை மறக்கவோ தவிர்க்கவோ முடியாது.
நீ ஒட்டாதிருந்தாலும் நான் உனை விட்டு விலகாதிருப்பேன்.
நீயாய் எனை நாடி வரும் வரை உனக்காகக் காத்திருப்பேன்.
எனக்குத் துணையாய் பழைய நினைவுகளும் உன் கவிதைகளும்.
கூடவே அடிக்கடி நாம் விரும்பிக் கேட்கும்  சில பல பாடல்களும்.
இப்போது கூட எங்கோ ஒலிக்கிறது.
இங்கிருந்தே கேட்டு மகிழ்கிறேன் 
என் நெஞ்சக் குமுறலை ஆற்றியபடி எங்கிருந்தோ
*எவனோ ஒருவன் வாசிக்கிறான்*

252. சிறிது சிறிதாக அரிக்கப்பட்ட முள்ளங்கி, வெள்ளை நிலா
நெய் வாசத்தோடு சூடான சாம்பாரில் மிதக்குதே, இட்லி நிலா
~நீ கூடத் தான் இழுத்து அடக்கி வைத்திருக்கிறாய், இரண்டு அழகிய~
உன் கண்ணில் வெள்ளை மேகங்களிடையில் மிளிருதே, கருப்பு நிலா
நீ வெட்டி எறிந்த நகங்களெல்லாம் பிறைநிலா
சைவம் என்ற போதிலும் கணக்கில் எனக்குக் கிடைத்ததோ, முட்டை நிலா
பெருமாளைப் பார்த்த பரவசம் நீங்குமுன் பரிசாய் லட்டு நிலா
தலையைத் தூக்கிப் பார்க்கத் தெரியும்
*நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா* 

251. இலக்கில்லாது சிட்டுக்குருவியாய் இங்கங்கு எனச் சுற்றினேன்.
விசை ஏற்றி பருந்தாய் எனை மாற்றிப் பல திசையிலும் பறக்கக் கற்றுத் தந்தாய்.

கருப்பில் கோடு வரைந்து ஓவியமென்று உளறி வந்தேன்.
வர்ணங்களை இரைத்து வரையக் கற்றுத் தந்தாய். 

எதையோ தட்டி இசை என்று சொல்லி பாட முயற்சித்தேன்.
சரிகமபதநி யும் ஸ்வரம் பிரிக்கவும் கற்றுத் தந்து மெல்லிசையை மெல்ல எனை உணர வைத்தாய்.

இன்று எங்கோ காண முடியாத தூரத்தில் மறைந்து நிற்கிறாய்.
ஒரு முறை எனக்குன் தரிசனம் தா.
*உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான்  எழுதுவேன் காற்றில் தானே*

Monday, August 6, 2018

பொன்மாலைப் பொழுதில் 32


250. புடவை கட்டி, பூ பொட்டு வைத்து
'தேவதையாய்த் தெரிகிறாய்' என்றால்
மூன்று முறை கண் சிமிட்டிச் சிரிக்கிறாய்.
*
'காபி சாரி சாரி டீ ப்ரமாதம்' என்றால்
'அது பாயாசம்' என்று சொல்லி எனை பயமுறுத்துகிறாய்.
'ஹிஹி முந்திரி காணும்' என சமாளிக்க எண்ண முறைக்கிறாய்.
*
சங்க கால வார்த்தைகளை
இங்கு அங்கு தூவி கவிதை சொன்னால்,
கை தட்டி பாராட்டி முத்தம் தருகிறாய்
*
திரைப்படத்தில், (என்) தொடையில் தட்டி சிரித்து மகிழ்கிறாய்.
என் விரலை வளைத்து உன் வாயில் வைத்து விசிலடிக்கிறாய்.
துணிக்கடையில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு 'பின்னாலேயே வந்துடாதே' என்று ஞாபகப்படுத்தி விட்டு உடை மாற்றச் செல்கிறாய்.
*
மொத்தத்தில்
உன் தூண்டில் விழிகளால்
கண் பேசும் மொழிகளால்
எனை மொத்தமாகத்
*திருடுகிறாய் ... திருடுகிறாய்*

249. மிகவும் கட்டுப்பாடோடு தான் வாழ்ந்து வந்தேன்.
கல்லாய், அலை பாயாது நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்தேன்.
என்றுனைப் பார்த்தேனோ, மீசையில்லா பாரதியாய்த் தெரிந்தாய்.
அகந்தை ஆணவம் அணுவளவும் அண்டாது அளவாடினாய்.
அழகாய் நீ பாட, அதற்கு நான் அர்த்தம் சொல்ல அமைதியாய் நீ செவி மடிக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் என் நெஞ்சைக் களவாடிவிட்டாய்.
காதலை மறைக்க விரும்பினேன்
கோபத்தைத் துணைக்கு அழைத்துக்  கொண்டேன்.
காணாது மறைந்து நின்றேன்.
கொதித்துக் கிடக்கும் எனைக் குளிர்விக்க நினைத்தாயோ, காதலே ?
மெல்லக் கதவு திறந்து, தென்றலாய்க்  *காற்றே என் வாசல் வந்தாய்*.

247. இதோ இதோ கிளம்பிவிட்டேன்.
ஒரு நாழிகையும் இனி காலம் தாழ்த்தாது துள்ளிக் குதித்துச் செல்லப் போகிறேன்.
அவனின் நீல வர்ணத்திற்கேற்றார் போல் நானும் நீல அட்டிகை அணிந்துகொண்டேன்.
அவன் குரலுக்குத் தேனும் குழலுக்குக் குஞ்சலமும் எடுத்துக் கொண்டேன்.
அரையில் அவன் அணிய அழகுப் பட்டாடை ஒன்று என் பரிசாய்த் தரப் போகிறேன்.
போனமுறை தான் இடையில் அவன் என்னவோ எழுத ஆடை நெகிழ்ந்து, இந்த முறை கவனமாய் இறுக்கி அணிந்து கொண்டேன்.
ஏராளமானோர் அவனுக்காய் காத்திருக்க,
சந்தோஷமாயிருக்கிறது எனக்காகக்
*காத்திருப்பான் கமலக் கண்ணன்*


246. இதுதான் காதல் என்றுப் புரிந்துப் போனது.
இனி எல்லாம் நீ தானென்றுத் தெரிந்துப் போனது.
தினம் தினம் இருவரும் சேர்ந்தே சுற்ற, பேசிச் சிரித்துப் பழக முடிகிறது.
இப்போது தானே விடிந்ததென்று இருக்கும், ஆனால் அதற்குள் இருள் சூழ்ந்து நமைப் பிரிக்கும்.
இரவெல்லாம் நீ அருகில் இல்லாது ஏக்கமாயிருக்கும்.
முன்பெல்லாம் உறக்கம் வரும், உறங்கக் கனவு வரும், கனவில் நீ வருவாய்.
இப்போல்லாம் உறங்கினால் தானே கனவு வர; எப்போது விடியும் என்று நான் காத்திருக்க;
எனக்கு உன்னைப் பார்க்கணும், அதற்கு இரவு முடியணும், பொழுது விடியணும்.
அதனால் *அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவிடச் சொல்லுகிறேன்*

245. பெண்ணைப் பார்த்ததும் பரவசம் பொங்கணுமாம்,
எனக்கு எந்த பெண்ணைப் பார்த்தாலும் ... அதை விடுங்க,
அழகாயிருந்தாள், சேலை சுற்றிய சோலை, பூ சூடிய பூவை.
நளினம் அடக்கம் அமைதி அனைத்து நல்ல பழக்கங்களும்.
சிரித்தேன், மெல்லச் சிரித்தாள்,
பெயர் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கொஞ்ச நாள் பழகியாச்சி
அவளுக்கும் பிடித்திருக்காம், சுற்றி வளைக்காது சொல்லி விட்டாள்.
இப்பொல்லாம் ஒன்றாய்த் தின்று அருகருகில் அமர்ந்து படம் பார்த்து;
இன்று மாலை ... முதல் முத்தம் .... உங்க வாழ்த்து வேண்டி;
சம்மதம் சொல்லணும்னு சாமிகிட்ட
*நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சி*


244. இன்னும் எத்தனை நாள் விழித்து கழித்து உண்டு உறங்கிக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் கண்டு ரசித்து சுகித்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் உழைத்து களைத்து அயர்ந்துக் கிடக்கப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பாவப் பொருள் ஈட்டி, சுமந்துத் திரியப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் ஏய்த்து, பிடுங்கித் தின்று உயிர் வாழப் போகிறேன்?
இன்னும் எத்தனை நாள் பொய்யாய் மெய்யைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழப் போகிறேன்?
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்துப் பட்ட கடனைத் தீர்க்கப் போகிறேன்?
பலவித பித்தலாட்டங்களோடு வாழும் நானொரு பொய்யனே.
கருணை காட்டு மெய்யனே
*பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே*


243. பரிசுதான், அதற்காக இத்தனைப் புடவையா?
பாவி நீ தான் ஆடை அணியவே விடுவதில்லையே, பொறம்போக்கு.
அறத்துப்பால் பொருட்பால் வித்தியாசம் தெரியாது உனக்கு,
காமத்துப்பாலை மட்டும் கசடறக் கற்று, கற்பிக்கிறாயே, எப்படியடா ?
உன் வாய் சுவைப்பது சைவமென்ற போதினும் உமிழ்வதென்னவோ சுத்த அசைவமேயாம்.
தனிமையில் படிக்கையிலேயே வெட்கம் வெட்கமாய் இருக்கிறதே, இப்படியெல்லாமா வர்ணிச்சி எழுதுவாய்ங்க எருமை.
இப்படிப் பட்டக் கவிதைகளைப் படிச்சிட்டு இனி எப்படி உறங்க ?
என்னுள்ளும் கவிதை பொங்க !
மண்டு
நீ இப்பூவைச் சுற்றும் வண்டு
கனவில் வந்து நோண்டும் நண்டு
உன் நினைவில் *தூங்காத விழிகள் ரண்டு*

Sunday, July 29, 2018

பொன்மாலைப் பொழுதில் 31


242. நல்லோர் நலமாய் வாழ துணை புரி
நலிந்தோர் வாழ வழி கொடு
நாளைய பயத்தை நீக்கிடு
நானில வாழ்வை இதமாக்கிடு
நிதானம் நிம்மதி அருளிடு
நற்சிந்தனை நலம் தருமென்பதை நிருபித்திடு
நல்லார் இல்லாரை நல்வழிப்படுத்திடு
நஞ்சு விதைக்கும் நீசரை நசுக்கிடு
நம்பினார்க்குத் துணையிருந்திடு
*நாராயணா நாராயணா நாராயணா*


241. திருவிழாவில் தேர்மீதிருந்து என் மீது பூ தூவியது
நீ தானே?
காகிதத்தில் 143 எழுதி என் தம்பியிடம் கொடுத்தனுப்பியது
நீ தானென்று அறிவேன்.
நயனம் அதரம் வதனம் போன்ற வார்த்தைகளில் கவிபுனைந்து
என் கட்டுரைப் புத்தகத்தின் இடையில் வைத்தது நீ தானே?
உனைப்போலவே இருக்கும் உன் கிறுக்கெழுத்து காட்டித் தந்து விட்டது.
உன் சிலபல குறும்புச் செயல்களில் நான் கவரப்பட்டது உண்மையே.
நான் வரும் நேரம் பார்த்துக் கோவிலில் இருக்கிறாய்.
கண் மோதையில் கண்மூடிப் ப்ரார்திக்கிறாய்.
உன் திருட்டுத்தனங்களெல்லாம்
எனக்குத் தெரியுமென்று சொன்ன பிறகும் இன்னும் நீ
*மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?*


240. இருபக்க ஜடை பின்னி கண்மை வழிய
கலர் ரிப்பன் வாங்கித் தர அழுதாலே, அவளா இவள்?
பள்ளி செல்கையில் ஒருமுறை  பின்னால் தட்ட
எனை ஓட ஓட விரட்டினாளே, அவளா இவள்?
பாவாடைக்கு நடுவுல கமார்க்கட் வச்சி
பல்லால பாதி கடிச்சித் தந்தாளே, அவளா இவள்?
தாவணி, தலையில் பூ, காதில் ... என்னவோ சொன்னாளே ... ஜிம்மியா ?
மோர் தரும் போது ... அது சிநேகச் சிரிப்பா,
முறைமாமன் என்பதால் முறைப்பா ?
ஒருநாள் வரப்பு வழுக்கி, விழுந்து தொடையில் சிராய்ப்பு...
இப்போ அதுபத்திக்  கேட்டா தப்பாகுமோ ?
இப்படி ஆவாள் என்றெனக்கு அப்போதுத் தெரியாதே, ஆனால் அப்போதிருந்தே இவள் இப்படித்தானே.
எனக்குப் பிடிச்சிருக்கே
என் நெஞ்சைக் கவர்ந்தவளே
வளர்ந்து நிற்பவளே,
என் *அத்தைக்குப் பிறந்தவளே*

239. ஆகா
பரிமள சுகந்தம் நுகர்கிறேன்
பீதாம்பரத்தின் சரக் சரக் ஓசையும்,
கால்ச் சதங்கையின் ஜல் ஜல்
ஒலியும் துல்லியமாய்க் கேட்கிறது.
உன் நடைவேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது,
உன் பின்னால் ஓடி ஓடி வரும் என் தோழியரின்
முக்கல் முனகலை உணர்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னருகில் நான்
என்று நினைக்கையிலேயே நெஞ்சு உவகை கொள்கிறது.
உன் புல்லாங்குழலிசையை முதலில் கேட்டு
ரசித்து சிலிர்க்கப் போகிறேன்.
நேரம் தாழ்த்த மாட்டேன்
இதோ கிளம்பி விட்டேன்
உனக்காகத் தானே தவமிருந்தேன்.
*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்*


238. உனைப் பார்த்ததும் புத்துணர்ச்சி,
நெஞ்சில் பரவுமொரு பரவசம்,
பார்க்குமெல்லாவற்றிலும் பரிவு தோன்றுகிறது
ஆசை பாசம் எல்லாம் அளவுக்கு அதிகமாய்ச் சுரக்கிறது.
சிலசமயம் என்னுளெழும் வெட்கம் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் என்றெண்ணி சிரித்துக்கொள்கிறேன்.
இவை எல்லாம் உன்னைப் பார்த்ததிலிருந்து தான்.
மெல்ல எனைப் பார்த்து நீ சிரித்தாயே அன்றிலிருந்து தான்.
இது அதுதானோ ?
அப்போ  *காதல் நீ தானா ?*

237. புடவை அணிந்தக் கர்ணியோ?
பூ வாங்கியவள் மீதிப்பணத்தை பூக்காரியிடமே தந்துவிட்டாயே.
அந்தக் காட்டன் சேலை, தலையில் பூ, சிரித்த முகம் ... தேவதையே.
என் சந்தேகமெல்லாம் அழகான ஆடையே உடுத்துவாயா
இல்லை நீ உடுத்தும் எல்லாமே அழகானதா?
இத்தனை நீளக்கூந்தலா ? நடக்கையில் ஜதி பிசகாது
இருபுறமும் தொட்டுச் செல்லும் பாங்கு அருமை.
சந்நிதியில் பாடினாயே, வாரணம் ஆயிரம் ...
வாவ் கனவு பழிக்கும்.
ப்ரசாதக் கடையில் வாங்கி பூனைகளுக்கு உண்ணத் தந்தது,
அடடடடா அருமை.
இத்தனையையும் நீயறியாமல்,
உனக்கேத் தெரியாமல் நேற்று *முன்தினம் பார்த்தேனே*

236. சுரம் பிசகாது பாடுகிறாய்.
சுவாரஸ்யமாய் சிரிக்க வைத்துப் பேசுகிறாய்
குழல் ஊதி எமை ஈர்த்து நிழலாய் உனைத் தொடரச் செய்கிறாய்.
அருகிலமர்ந்து அளவாடுகையில் அழகாய் வரைந்து அசத்துகிறாய்.
பாசம் காட்டி ஆசை வார்த்தை சேர்த்து ஆளை மயக்கிவிடுகிறாய்.
அழகு தமிழில் எளிய சொற்களில் எழுதி எமை சொக்க வைக்கிறாய்.
சுந்தர வதனம் காட்டி எங்கள் சொப்பனங்களில் சுற்றுகிறாய்.
உனக்குத் தெரியாக் கலை எது ?
அன்பனே, என் உயிர் நண்பனே,
சகலமும் அறிந்தவனே
*சகல கலா வல்லவனே ...*

235. கவலை எதற்கு உனக்கு ?
காதலில் இல்லையே பிணக்கு
காணாமல் பிரிந்திருக்கிறோமே அதற்கா?
காரணமில்லாமல் காரியம் இருக்கா?
கரைந்து கிடந்தால் கலக்கம் மாறுமா?
கவலை தான் தீருமா?
காலத்தின் கட்டாயத்தால் கலம் மாறிப் பயணம்.
கரைகள் வேறானபோதும் மனம் மாறாது என்றும்.
காதலைச் சுமப்பவள்
கவலை மறந்து சிரிக்க வேணும்
கமலம் போன்றுன்
*கண்ணில் என்ன கார் காலம் ?*

Monday, July 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 30

234. காலை மூச்சுப்பயிற்சி ஓட்டம் எல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி நேரம்.
இமை உருட்டி எமை மிரட்ட, புரியும் அது இயற்பியல் பயிற்றுவிக்கும் நேரம்.
கூந்தலை இழுத்து முத்தானையைச் சொருகி  ம்ம்ம் உனக்கேப் புரியாத கணக்கை எனக்கு சொல்லித் தரும் நேரம். 
'அது ஒன்னுமில்லேடா தம்பி' என்றால் அடுத்து கெட்ட வார்த்தையால் நீ எனைத் திட்டும் நேரம்.
சந்தனக்கீற்றுடன் சாய்ந்து ஒயிலாய்ப் பார்த்தாலோ இதழோரம்
*காதல் கவிதைகள் படித்திடும் நேரம்*

233. தினம் உனைப் பார்க்க வேண்டும்.
சினேகப் பார்வை சிந்த வேண்டும்.
தவறாகிப் போகுமோ என்றத் தயக்கம் ஏதுமின்றிப் பேசிப் பழக வேண்டும்.
நட்புச்செடி நாளும் செழித்து வளர வேண்டும்.
விரல் பிடித்து எங்கும் சுற்றித் திரியும் சுதந்திரம் வேண்டும்.
செவ்வானம் சிவக்கும் அழகை உன் கூடவிருந்து ரசிக்க வேண்டும்.
அருகிலேயே ஒரு அருவி, ஓடை ஓட வேண்டும்.
காதல் காமம் இரண்டும் கலந்து வாழ்வு செழிக்க வேண்டும்.
ஆள் ஆரவாரமற்ற
*யாருமில்லாத தீவு ஒன்று வேண்டும்*

232. ஏனோ உன்னோடு, கொஞ்சநாள் தான் என்றபோதிலும், பழகியபிறகு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
விடுமுறைக்குச் சென்ற நீ எப்போது வருவாய் என்று ஏங்கித் தவிக்கிறேன்.
எப்போதாவது என் நினைவு வருமா உனக்கு  என்றறிய ஆசைப்படுகிறேன்.
வந்ததும் வராததுமாய் நீ எனைக் காண ஓடிவரணும் என்று விரும்புகிறேன்.
'என்னடி செய்தாய்?' என்றெனை நீ  கேட்கணுமென்றுத் தவிக்கிறேன்.
உன் நினைவில் வாடுவதை வெளியே சொல்ல ஏழாதிருக்கிறேன்.
தயவுசெய்து  உன் பணியை சீக்கிரம் முடித்துக் கொண்டு ...எனக்காக ...
*முன்பே வா, என் அன்பே வா*


231. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...ம்ம்ம்
அவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டுச் செல்ல ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

230. விடிந்தது காலை
சம்மதம் சொன்னது ஓலை
அபலைக்கில்லை இனி தொல்லை
பறந்துபோயிற்று நெடுநாள்க் கவலை
எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை
நெஞ்சில் பொங்கும் இன்பத்திற்கில்லை எல்லை
கண்ணின் திவலைக்குக் கிட்டியது விடுதலை
சொல்லமுடியாத சுகம் இந்நிலை
வாடியிருந்த நிலத்தில் பெய்தது வான்மழை
வெகு விரைவில் *மாலை சூடும் வேளை*

229. கோதையோடு நீ கொட்டமடித்தது பற்றிப் பேசேன்.
என் வேறுசில தோழியரோடு ஒளிந்துப் புரண்டு நீ ஆடிய ஆட்டம் பற்றி அளவாடேன்.
சுந்தர வதனம் காட்டி சுந்தரியரோடு சுகித்திருந்ததைப்  பற்றிக் கேட்கேன்.
நேற்று வருவதாய்ச் சொன்னாய், வரவில்லை; அதைப் பற்றி வாய் திறக்க மாட்டேன்.
அரக்கரையே அழிக்கும் ஆற்றல் படைத்தவனுக்கு இந்த அம்மாச்சிப் பெண்டியரை வசப்படுத்துவது அரிதா என்ன?
ஆயிரம் வேலைகள் உனக்குண்டு; அபலை எனக்கோ உன்னை எண்ணிக் கிடப்பதே வேலையாம்.
என்னருகிலும் ஒருமுறை வாராயா?  நெஞ்சின் வேதனை தீராயோ?
இன்னும் *கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா*

228. எப்போதும் போல் குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் காத்திருந்தேன்.
என் புஜ்ஜிக்குட்டி ஆளைக்காணேம்.
வராது கம்பி நீட்டி விடுவாளே என்று என்னுளொரு சம்சயம்.
அலைபேசியில் முயற்சிக்க அவளோ அழைப்பை நிராகரித்தாள்.
கொஞ்ச நேரத்தில் வேகவேகமாய் வந்தாள், கோபமாய்த் தெரிந்தாள்.
கொஞ்ச எத்தனிக்க கொடூரப் பார்வையில் எனைத் தடுத்தாள்.
'பேசாதே' என்றாள். 'தொடதே' எனச் சொல்லி தள்ளி நின்றாள்.
'எனக்கெதற்கு வாழ்த்து ? எருமை' என்றெறிந்து விழுந்தாள்.
எனக்கெல்லாம் புரிந்தது. சினத்திற்குக் காரணம் தெரிந்தது.
அருகில் அழைத்து அமர வைத்தேன்.
அன்றைய நாளின் மகத்துவத்தை புரியும்படி எடுத்துரைத்தேன்.
'அப்படியா' என்றாள், ஆச்சரியம்
ஆனந்தம் கொண்டாள்.
கையில் ஒரு சிறு பூ தந்து வாழ்த்த, வெட்கத்தோடு *மெல்லச் சிரித்தாள்*

227. இதமான மாலை நேரம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீ எனைக் காண வரும் நேரம்.
கதிரவனின் கதிர்கள் நமைக் காட்சிப் பொருளாக்க முடியா நேரம் .
நாமிருவரும் மனம் விட்டுப் பேசிச் சிரித்து மகிழும் நேரம்
நான் கேட்க கதைகளை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் நேரம்.
கன்னங்கள் உரச காதினுள் நீ கவிதைகள்  சொல்லும் நேரம்.
கைகளை இணைத்து கவலை மறந்துக் கலித்திருக்கும் நேரம்.
மெல்ல நீ இடை வருடி எனை உசுப்பிடும் அந்நேரம்
*என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்*

Monday, July 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 29

226. பகலினில் நினைவாய்
இரவினில் கனவாய்
நடக்கையில் துணையாய்
வெயிலினில் நிழலாய்
பாடலில் ஸ்வரமாய்
ஆடலில் ஜதியாய்
பார்க்கையில் இமையாய்
மார்கழியில் அனலாய்
பங்குனியில் பனியாய்
உணவினில் சுவையாய்
உறங்கிட துணையாய்
நினைக்க நினைக்க இனிமை
நேரில் இல்லாததே கொடுமை
நிஐத்தில் *எப்போ வருவாரோ?*


225. காலை விடிந்து விட்டது
கண்ணெதிரில் கதிரவன் கிளம்ப
பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி
மலர்ந்து மணம் வீசும் பூக்கள்
தேனுறிஞ்சப் பறக்கும் வண்டுகள்
இதோ நானும் கிளம்பிவிட்டேன்
உன்னை ஈர்க்கும் மஞ்சள் நிறத்தில் உடுத்திக்கொண்டேன்.
உன் மனதை மயக்கும் மல்லிகைப்பூ சூடிக்கொண்டேன்.
வெண்ணையிலும் எண்ணையிலும் உண்ண ஏராளமாய் உள்ளன.
கூடவே பருக பானகம்.
செரிக்க ததியன்னம்.
உன் எல்லாவற்றையும் ரசிக்க அருகில் நான்.
காத்திருக்கிறேன், நீ வரும் பாதை பார்த்திருக்கிறேன்.
இன்றாவது எனை ஏமாற்றாது
*கண்ணா வருவாயா?*

224. மதுரை மீனாஷி, நீல நிற ஆடையில் நல்ல திவ்ய தரிசனம்.
இதே நிறத்தில் உன்னிடமொரு சேலை இருந்த ஞாபகம்.
கொஞ்சமாய் வாசனைக்காக முல்லைப்பூ, ஒருசிலமுறை என் விரல்களைக் காயப்படுத்திய உன் சின்னச் சின்னப் பற்கள் ஞாபகம்.
சுடச்சுட இட்லி கூடவே சிகப்பாய்த் தக்காளி சட்னி, உன் தேனிதழ் ஞாபகம்.
திந்நேலி அல்வா பார்க்கையில் 'சட்டி, மாவு இல்லாமலேயே கிண்டுவியே' என்று நீ நக்கலடிப்பாயே, அந்த ஞாபகம்.
கடைத்தெருவில் பலவிதமாய் சட்டைகள், 'எப்பவும் ப்ளைனா (கிழவ மாதிரி) ?' என்று நீ சொன்னது ஞாபகம்.
விற்பனைக்கு வைத்திருந்த சந்தனத்தைக் கையிலப்பிக்கொள்கையில் நீ ரசித்த 'சந்தன இடையாளே' கவிதை ஞாபகம்.
இன்னும்...இன்னும் நான் எது செய்திடினும்
*எப்போதும் உன் மேல் ஞாபகம்*


223. எத்தனைப் பெண்களை இதுவரை ரசித்திருக்கிறேன்.
இவளைப் பார்க்கும்போது மட்டும் நெஞ்சிலொரு பயம் தோன்றுதே.
விழி போதுகையில் முதுகுத்தண்டிலொரு சிலிர்ப்பு.
பார்ப்பதே முறைப்பதாய்ப் பட என்ன தவறு செய்தேன் என்றெண்ண வைக்கிறது.
எத்தனைப் பேரோடு எளிதாய் இதுவரை ~கட~ பேசியிருக்கிறேன்.
இவளிடம் மட்டும் பேச எண்ணும் போதே வாய் குரளுதே.
இவள் தாய் எனக்குப் பேய் போல் தெரிகிறாளே, ஒருவேளை ...
இவளின் தங்கையைக் கண்டவுடன் ஒரு பூரிப்பு, கூடவே புன்சிரிப்பு
ஒருவேளை ...ஒருவேளை... ஐயோ
*எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ ?*

222. தவறு தான், துண்டித்தது போதும்; இனியாவது மன்னித்திடு.
கண்கள் முறைத்தாலும் எனை நீ காணத் துடிப்பது தெரியும்.
காணும் வரை உன நெஞ்சிலொரு பரபரப்பு இருப்பது எனக்குப் புரியும்.
பாராதிருப்பதும் பேசாதிருப்பதும் ஊடலின் வகையென்பதை உணர்கிறேன்.
கோபத்தில் நீ திட்டும் போதும் திவ்யமாய்த் தெரிவதை ரசிக்கிறேன்.
காலம் முடியும் வரை காத்திருப்பேன், என்ற போதிலும் ... நீயும் கொஞ்சம் ...
இன்னும் கொஞ்சம் இறங்கி வாயேன்,
மயிலே குயிலே மானே தேனே
*பொன்மானே கோபம் ஏனோ ?*

221. கோசலை உதரத்தில் உதித்தவன் கோதண்டம் கையிலேந்தியவன்.
போகம் துறந்து தேகம் நோக யாகம் காத்து யோகம் பெற்றவன்.
மைதிலி மைவிழி கசிய மாயமான் பின் ஓடி மனையாளை இழந்தவன்.
சுக்ரிவனுக்கு அடைக்கலம் வாலிக்கு மோட்சம் அளித்தவன்.
அனுமன் துணையேற்று ஆரண்யம் கடந்து  இலங்கை சென்றவன்.
இராவணன் இரா வண்ணம் அதம் வதம் செய்து வெற்றி கண்டவன்.
*
அவனை எண்ண தீய எண்ணங்கள் நெஞ்சில் நுழையாதே.
அவன் பெயர் சொல்ல நற் சிந்தனைகள் நாளும் வசப்படுமே.
அவன் பாதம் பணிய நீங்கும் நம் பாவமே
*ராம நாமம் ஒரு வேதமே*



220. குளித்தபின் கண்ணாடியில் உன் பெயர் ஏன் எழுதுகிறேனோ ?
சாப்பிடும் தட்டில் பருக்கையால் உன் முகம் ஏன் வரைகிறேனோ ?
நிற்கையிலும் நடக்கையிலும் உன் ஞாபகம் ஏன் வருதோ ?
இப்போதென்ன செய்வாய் என்று எப்போதும் ஏன் சிந்திக்கிறேனோ ?
என் கற்பனைகளெல்லாம் உனைச் சுற்றியே ஏன் சுழலுதோ ?
கண்ணாடி முன் நிற்கையில் உன் முகம்  பின்னால் ஏன் தெரியுதோ ?
*மாலை கருக்கலில்  சோலைக் குயிலொன்னு ஏன் பாடுதோ ?*

219. பார்த்ததும் பற்றிக்கொண்டதெல்லாம் பழைய கதை
பிடித்துப் போய் சுற்றி வந்ததெல்லாம் அப்போது
இப்பொழுதெல்லாம் நிறைய முறைத்துக் கொண்டாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதே பழக்கமாகிவிட்டது.
எதுகை மோனைப் பேச்சு மறைந்து  ஏட்டிக்குப் போட்டி ஆகிவிட்டது..
சரி சரி சண்டையெல்லாம் போதும்
சமாதானம் செய்து கொள்வோம்
இனியெல்லாம் சுகமே
இது *நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரமே*


218. தேனிதழ்
சிரித்த முகம்
மைதடவியக் கருவிழி
அடர்கூந்தல், இடையில் வாசப்பூக்கள்
மெல்ல வெளிப்படும் புன்னகை
உருண்டுத் திரண்ட உன் பெண்மை
அதைச்  சுமக்க முடியாதுக் குழையும் உன் சிற்றிடை
இன்னும்.. இன்னும்
எனைக் கட்டியிழுக்கிறாய்
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

Wednesday, June 27, 2018

பொன்மாலைப் பொழுதில் 28


217. நான் சொல்லுமெதையும் நீ காதில் வாங்கிக் கொள்வதில்லை
என் எண்ணப்படி எதையும் செய்வதில்லை.
என் ஆசைக்கு மதிப்பு தருவதில்லை
நான் எது செய்தாலும் நீ இஷ்டப்படுவதில்லை.
என் மனம் புண்படும்படி எதாவது நக்கல் செய்ய மறப்பதில்லை.
இத்தனைக்குப் பிறகும் எனக்குப்
*பிடிக்குதே, திரும்ப திரும்ப உன்னை*

216. பசித்தவனுக்கு அறுசுவை விருந்து கிடைத்ததுபோலே,
வெயிலில் அலைந்து திரிந்தவனுக்கு மரநிழல் கிட்டியதுபோலே,
பணத்தாசை கொண்டவனுக்கு ஒரு சில லட்சம் பரிசு கிட்டியதுபோலே,
கடினமாய் உழைத்தவனுக்கு வெற்றி கிட்டியதுபோலே
என்னைக் காண, நீ
*மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே*


215. வெயில் குறைவாய் இருக்க,
சுற்றுச்சூழல் மாசுபடாதிருக்க
போதுமான அளவு மழை பொழிய
கட்டிடங்களால் காற்றன் வீச்சு தடைபடாதிருக்க
போக்குவரத்து நெரிசல் இல்லாதிருக்க
விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்க
வாழ்க்கை நிதானம் நிரம்பியிருக்க
இன்னும் என்னென்னவோ ஆசை எல்லாருக்குமிருக்கு.
எனக்கோ
*உன்கூடப் பேசத்தானே ஆசை*

214. பார்க்கும் திரைப்படங்களில் நாயகி நீ, நாயகன் நான்.
ஒலிக்கும் பாடல்களில் பெண் குரல் நீ, ஆண் குரல் நான்.
கடிகாரத்தில் வேகமாய் ஓடும் நிமிடமுள் நீ, மணி காட்டும் சின்னமுள் நான்.
ஸ்வரங்களில் சரிகம நீ, பதநி நான்.
கவிதைகளின் கருப் பொருள் நீ, எதுகை மோனை நான்.
கார்காலத்தின் இடி மின்னல் நீ, மேகம் மழை நான்.
நம் வீட்டின் *ஒரு பாதிக் கதவு நீயடி, மறுபாதிக் கதவு நானடி*


213. பிரிந்திருந்தாலும் வெறுப்பில்லை
மறைந்திருந்தாலும் மறக்கவில்லை
உன் கள்ளச் சிரிப்பும் எள்ளல் பேச்சும் இன்றுமெனைச் சுற்றி ஒலிக்கிறது.
காது கடித்து வறுக்கும் உன் குட்டிச் செய்திகள் இன்னும் இனிக்கிறது.
இதழில் எழுதியக் கவிதைகளும்
இடையில் வரைந்தக் கோலங்களும்
இன்றளவும் எண்ணி மகிழ்கிறேன்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் வழிமாறிப் பிழைக்க நேர்ந்தாலும்,
காலம் நமைக் காணமுடியாதபடி  விலக்கி வைத்திருந்தாலும்,
உனையெண்ணி ஏங்கும் என்னைக்
காண எண்ணும் *உன்னை நானறிவேன்*


212. சோகமெதற்கு இப்போது ?
புலம்புவதை முதலில் நிப்பாட்டு.
என்ன செய்தாய், கிட்டவில்லை என்று கலங்குகிறாய்.

களைத்தவனுக்குத்தான் ஓய்வு
பசித்தவனுக்குத்தான் உணவு
உழைத்தவனுக்குத்தான் வெற்றி.

தொடர்ந்து முயல்.
தோல்வி தந்தப் பாடத்தைப் பயில்.

வெற்றி போதையேற்றும்.
தோல்வி நல்வழிப்படுத்தும்.

ஒவ்வொரு முறை நீ முயன்று தோற்கும் போதும்
உன் இலக்கு உனை நோக்கி நகர்கிறது.
தோல்வி கண்டு நீ நகைக்குப் போதெல்லாம்
வெற்றி உன்இருப்பிடம் தேடி வருகிறது.

இன்று இல்லையேல் நாளை.
இனிதாய் விடியும் உன்வேளை.
இன்னும் என்ன கவலை ?
*மயக்கமா ? தயக்கமா ?*


211. நீ என்ன உண்டாயென்று ஒரு நாளும் நான்  யோசித்ததில்லை, ஆனால் எனக்கு மட்டும் தினம் அறுசுவை விருந்து தந்ததை மறக்கவில்லை.
உனக்கென்ன வேணுமென்று ஒருநாளும் நான் கேட்டதில்லை. ஆனால் நான் கேட்குமுன்னே எனக்கு வேண்டியதை நீ எடுத்துத் தர மறந்ததில்லை.
உனக்கு எப்பொழுதாவது உடம்பு சுகமில்லாது போனதுண்டா என்றெனக்கு நினைவில்லை. நீ கூடயிருக்கும் வரை ஒரு நோயும் எனை நெருங்கியதில்லை.
என் அழுகைக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்தவளே,
எதற்கு ஆத்திரமடைவேன் எப்போது பாச மழை பொழிவேன் என்றறிந்தவளே,
உன்னைப்பற்றி ஏதுமறியுமுன் காணமுடியாதூரம் சென்றுவிட்டாயே
*கள்ளிக்காட்டில் பிறந்தத் தாயே*

210. உன்னால் தானே நான்,
நீயில்லையேல் ஏது நான் ?
கண்ணின் மணியாய் எனைக் காத்து வந்தாய்.
அமுதூட்டும் போதே அன்பு பண்பு எல்லாம் சொல்லித்தந்தாய்.
என் சுடு சொற்கள் பொருத்தாய்.
உன் சொல் கேளாது உனை மதிக்காத போதும் என கூட நின்றுக் காத்தாய்.
வாழ்வில் நான் உயர உயர நீ மகிழ்ந்தாய்.
என் வெற்றியே உன் கனவு இலட்சியம்
என்றெண்ணி வாழ்ந்தாய்.
இதோ இன்று ஒரு நிலைக்கு வந்த பின் திரும்பிப் பார்க்கிறேன்.
உன் சிரித்த முகம் எங்கும் தென்படாது தவிக்கிறேன்.
இன்று இன்பக்கடலில் நான் நீந்தி விளையாட அன்று நீ எதிர்கொண்ட இன்னல்களை எண்ணித் தவிக்கிறேன்.
இன்று நான் விருட்சமாய் வளர்ந்து நிற்க என் விதைக்கு நீ நீரூற்றியதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
உனை என்றும் மறக்க முடியாது வாழ்ந்து வருகிறேன.
என் *உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீ தாயே*

209. எத்தனையோ நாள் காத்திருந்தேன்.
அவள் செல்லுமிடமெல்லாம் நிழலாய்ப் பின்தொடர்ந்தேன்.
அவளுக்குப் பிடித்த எல்லாவற்றையும்  பிடித்தவாறே செய்துவந்தேன்.
உள்ளதை உள்ளபடி வர்ணித்து ஓரிரு  கவிதைகள் அனுப்பினேன்.
என் அழகையும் அறிவையும் கண்டு மயங்காதவள் என் எழுத்தில் ஈர்க்கப்பட்டு எனை ஏற்றுக்கொண்டாள்.
கன்னியவள் எனைக் காதலிப்பதாய் ஒத்துக்கொண்டாள்.
காலமெல்லாம் கூட வருவதாய் வாக்கு தந்தாள்.
இதோ என் விடாமுயற்சி வெற்றிக்கனி ஈன்றது.
இனியென்றும் *காதல் வைபோகமே*

Monday, June 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 27

208. பெண் :
அன்பாய் அக்கறையோடு குடும்பம் காப்பவள்,
கலகம் செய்வோரைக் கண்டால் காளியாய் மாறத் தயங்காதவள்.

பயங்கொள்ளாள், பாசாங்கு இல்லாள். பக்தி நெறியில் தர்மவழியில் வந்தச் செல்வம் காத்து தனலக்ஷ்மியாகிறாள்.

பண்பானவள், பணிந்து நடப்பவள், அபயம் கேட்டால் ஆதரித்து ஆனந்தலக்ஷ்மி ஆகிறாள்.

நெஞ்சில் வீரமேற்றி சாதிக்கவைத்து வீரலக்ஷ்மியாகி வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலக்ஷ்மி ஆகிறாள்.

தான் கற்றதைக் கற்பித்துக் கலைவாணியாய்க் காட்சிதருகிறாள்.
அனைவர்க்கும் அருசுவை அன்னம் உண்ணத் தந்து அன்னபூரணியாய் அவதாரமெடுக்கிறாள்.

வாழ்க்கையை வாசம் மிக்கப் பூச்சோலை ஆக்குவாள்.
சாதாரண ஆளையும் சாதனையாளனாக்கி சரித்திரம் படைப்பாள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறாள்.
காற்றாய் மலையாய் கடலாய் நதியாய் எல்லாமுமாய் எங்கும் நிறைகிறாள்.

அப்பெண்மையைப் போற்றுவோம்.
பாரினில் புகழ் பெறுவோம்.



207. விடிகாலையில் விடியும் வேளையில் பாடுவது பூபாளம்.
அம்சமாய் ஆண்டவன் முன் நீ ஆட பாடப்படுவது ஹம்சத்வனி.
மதிய வேலையில் மதுவந்தியும், மத்யமாவதி ராகமும்.
முன் மாலை வேளைக்குத் தாளமிட்டுப் பாட, ரசிக்க தர்பார்.
சாயங்காலத்தில் சவுகரியமாய்ப் பாட ஷண்முகப்ரியா, கல்யாணி.
இரவை ஆனந்தமாக்கிட ஆனந்த பைரவி, நீலாம்பரி.
எல்லா நேரத்திலும் பாட சங்கராபரணம், கரகரப்ரியாவும்.

இதெல்லாம் சரி,
பூமி வாழ மழை பொழிகையில்
*சின்ன சின்ன மேகம் பாடுவது தேவராகமோ?*



206. நமக்குள் இல்லை உறவு
தாமரையிலைமேல் தண்ணீராய்
சேராதும் பிரியாதும் நம் வாழ்வு
இருந்தும் எனக்குண்டு உன் தயவு
உன்மேல் எனக்குப் பரிவு
நம் காதலுக்கில்லை பிரிவு
தினம் வரும் உன்  நினைவு
கண்மூடினால் கனவிலுன் வரவு
கண்டுரசிப்பதுன் முகப் பொலிவு
அவ்வமயம் வானில் தெரியும் நிலவு
இது *பனி விழும் இரவு*


205. அடி எங்கள் அன்பின் ராதே,
கண்ணனைக் காணச் சென்றாயே
கண்டாயா? கண்டு பேசினாயா?
ரகசியமாய்ச் சிரிக்கிறாயே, கொஞ்சம் விவரம் சொல்லப் புரிந்துக் கொள்வோமே.
*
இடை சிறுத்தவளே,
அவன் நடை உடை உருவம் செப்பு, எம்செவி இன்புறவே.
காதலனவன் கள்ளப் பார்வையில் உனை மறந்து நின்றிருப்பாயே.
அவன் கொஞ்சல் பேச்சில் கோலமயில் நீ சொக்கிப்போனாயா?
குழலூதுகையிலும் உன் குழல் கலைத்து விளையாடினானா ? விவரம் சொல்லடி.
*
நயனங்களாலேயே நடனமாடும் நங்கையே நடந்ததை நவின்றிடு.
கண்ணே என்றழைத்தானா ? கட்டிப்பிடித்தானா? இதழில் இல்லை இடையில் எதையாவது தேடினானா?
எங்கே ஓடி ஒளிகிறாய்,
*சுந்தரி பெண்ணே ... சுந்தரி பெண்ணே நில்லு நில்லு*


204. எது என்றுத் தெரியவில்லை.
உனையொரு விநாடி எண்ணியவுடன் கவிதை பிறக்குதே, அதுவா ?
அழகென்று எவர் எதைச் சொன்னாலும் உன் ஞாபகம் வருகுதே, அதுவா ?
நீர் அருந்தும் போதும் நிலவைக் காணும் போதும் நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என்றெண்ணத் தோன்றுதே, அதுவா ?
'நாராசமான கவிதை, சொல்லவா' என்றதும் காது அடைத்துக்கொண்டு 'ஜொல்லு' என்பாயே, அதுவா ?
அழைத்தவுடன் வருகிறாய், உதவக் கேட்டால் உடனே செய்கிறாயே, அதுவா ?
கொஞ்சமாய்ப் பேசுகிறாய், ஒரு சின்னச் சிரிப்புடன் எப்பழதும் வளைய வருகிறாயே, அதுவா ?
ஏதோ ஒன்று ...
*எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று*

203. நேற்று அப்படியானதே, இன்று என்னாகும் என்ற சிந்தனை;
'எசககுபிசகாய் ஏதும் ஆகாதே' நப்பாசையோடு அச்சம் எழும்.
எல்லா நாளும் சலங்கை சத்தம் தொடர்ந்து  ஒலிக்கும் ... ஜல்.
சிலநாள்...இருளில்...கூட்டத்தின் இடையே தேடியலைவேன் ... ஜல்.
சிலநாளோ தேடத்தேவையேயின்றி எதிரில் நின்று சிரிப்பாய் ... ஜல்.
புடவையில் நான் ...ஜல்... இடையில் கோலம் வரையும் நீ ...ஜல்... அடுத்த இலக்காய் ~வயிறு நோக்கி நகரும்~
புல்மேல் நீ, மடியில் நான், பரவும் இருள், விலகும் நாணம் ...ஜல்.
சிலசமயம் எனை தொட நீ துரத்த இருளில் நான் விரைய ...ஜல்.
~படுக்கையில் என் மேல் புரளும் நீ ... ஆடையின் தேவையின்றி~
பகலில் நீ காக்கும் கண்ணியத்தை இரவில் காற்றில் பறக்க விடுமென்
*ரகசியக் கனவுகள் ஜல் ஜல் ஜல்*

202. தினம் உன்னைப் பார்க்க வேண்டும்.
உன்னோடு பேசிச் சிரிக்க வேண்டும்.
காதல் ரசம் சொட்டும் கவிதைகளை காதில் நீ சொல்ல வேண்டும்.
நாணத்தோடு நான் அவற்றைக் கேட்டு ரசிக்க வேண்டும்.
விரலிணைத்து வீதியுலா செல்ல வேண்டும்.
பார்க்குமெல்லாவற்றையும் கேட்க, நான் கேட்குமெல்லாவற்றையும் நீ வாங்கித் தர வேண்டும்.
எல்லாப்பொழுதும் என் மேல் உன் வாசம் வேண்டும்.
நீ இல்லாப்பொழுதே இல்லாதிருக்க வேண்டும்.
அன்பு காதல் காமம் என்றும் நம்மோடு  கலந்திருக்கவேண்டும்.
என் உடல் சிலிர்க்க உன்னோடு கூடி மகிழ  வேண்டும்.
அவ்வமயம் *அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்*

Monday, June 11, 2018

பொன்மாலைப் பொழுதில் 26

201. வெள்ளைத் தாளில் கவிதை போன்ற ஏதோவொன்றை எழுதினேன்.
உன் சொற்படி வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டேன்.
வெள்ளைக் காரனாய்த் தெரிகிறேன் என்று சொன்னபோது சிரித்து நகர்ந்தேன்.
வெள்ளை நிறத்தில் ஒரு வாகனம் வாங்க முடிவெடுத்தேன்.
வெள்ளைப் பூசணி விரும்பித் தின்பேன்.
வெள்ளைப் பூண்டு உனக்குப் பிடிக்காததால் உண்ணாது தவிர்க்கிறேன்.
வெள்ளை யானையைக் காண ஆவலாய்  இருக்குது.
எல்லா வரியிலும் வெள்ளை வர கனவு மட்டும் கருப்பாகவா வரும் ?
மனதில் *வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது*

200. தொடி அணிந்தத் தோகையே,
கயல் விழிக் கண்களால் எனைக் கவர்ந்தக் காரிகையே.
களிரு போல் தெரிந்தேன், கட்டுப்பாடின்றித் திரிந்தேன்.
என்றுனைக் கண்டேனோ அன்றே நானுன் மேல் மையல் கொண்டேன்.
என் உள்ளத்தின் உள்ளே உள்ள உருவம் உன்னதுதானடி உயிரே.
உன் கருங்கூந்தலின் ஆட்டத்திற்கு இணையாய்க் கவி பாடவா ?
உன் பொற்பாதச் சிலம்பொலிக்கு ஜதி சொல்லவா ?
எந்த விதத்தில் உனைக் கவர ? சொல்லிடு வா.
நழுவுகிறாயே, பசலை பயமா ? நாணமா? கோபமா?
இன்னும் நாம் பேசவேயில்லையே, ஊடலெதற்கு உயிரே ?
நில்லாயொரு நாளிகை, நங்கையே
*நறுமுகையே நறுமுகையே*

199. அவனுக்குப் பிடித்த நீல நிறத்தில் புடவை அணிந்துக் கொண்டேன்.
குந்தவையைக் காணப் பயணித்த  வந்தியத்தேவன் பழைய கதை.
மன்னவனைக் காண மங்கை நான் பயணிப்பது புதிய கதை.
எனைக் கண்டதும் ஆச்சரியத்தை மறைத்தபடி கோபத்தில் குதிப்பான்.
பயப்படுவதாய் நடிக்க குலைவான்.
மல்லிகை மணத்தில் மயங்குவான்.
வெட்கிக் சிரிக்கக் கிறங்குவான்.
மடியிலெனைக் கிடத்திக் கவிதை மழை பொழிந்திடுவான்.
இந்த எண்ணங்களெல்லாம் எனை அவனைநோக்கி நகர்த்துகின்றன.
ஒரு முடிவோடு கிளம்பிட்டேன்.
இனி யார் சொல் பேச்சும் கேளேன்.
*என் ஆளை பாக்கப் போறேன்*.

198. இதுவரை இத்தனை விஷயங்கள் எனைச் சுற்றியிருப்பதை உணர்ந்ததில்லை.
உன்னோடுப் பழகிய பின்பு தான் எல்லாம் ரசிக்க எண்ணம் ஏற்படுது.
பரந்து விரிந்த புல்வெளியில் நடந்திடப் புத்துணர்ச்சி பிறக்குது.
புல்லின்மேல் பனி இட்டப் பொட்டு எனை வியப்பிலாழ்த்துது.
பல வண்ணங்களில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் பரவசமளிக்குது.
படபடவென்று பறக்குமிந்தப் பட்டாம்பூச்சி ரம்மியமாய்த் தோன்றுது.
கீச்சு கீச்சென்றுக் கூவுமிந்தப் பறவைகளின் இன்னிசை அனுபவித்தறியாதது.
இத்தனையேன் என்னைய மெல்ல வருடும் இந்தப் *பூங்காற்று புதிதானது*

197.
_16 வயதினிலே_யே பழுத்து, பலமுறை ரசிக்க வைத்த மயிலு நீ.
ஏய் சிகப்பு ரோஜாவே, நாங்கள் தேடியக் கைகுட்டை விற்றவள் நீ.
'சீனு சீனு' என்று நீ கொஞ்சி நடித்த _மூன்றாம் பிறை_ பார்க்காதார் இலை, இருந்தால் அது அவர் பிழை.
வசதியாய் வாழ்ந்து _ஜானி_யோடு என் வானிலே ... பாடினாய் நீ, _வறுமையின் நிறம் சிவப்பு_ என்று வாழ்ந்தாய் நீ.
_வாழ்வு மாயம்_ என்றுப் புரிய வைத்தாய் நீ.
_மூன்று முடிச்சோ_ முப்பது முடிச்சோ எங்கள் முதல் கனவுக்கன்னி நீ.
யாருக்கும் _நான் அடிமை இல்லை_ என்றெண்ணும் _போக்கிரி ராஜா_வையும் _கல்யாணராமனா_ய் மாற்றக்கூடியவள் நீ.
எங்கள் _தர்மயுத்த_த்தின் _குரு_ நீ.
கலையுலகின் _அடுத்த வாரிசா_ய் வலம் வந்தக் _கவிக்குயில்_ நீ.
அடி _கோகிலா_, சொல்ல வெட்கினும்
*சின்னஞ் சிறு வயதில் ...*

196. அடக்கமாய்த் தான் இருப்பேன்
நெஞ்சை இறுக்கிப் பிடித்து தான் வைத்திருந்தேன்.
என்று உனைப் பார்த்தேனே அன்றே எனை நான் மறந்தேன்.
அதெப்படி பார்த்ததும் பற்றும் என்றுப் பலரை  பகடி செய்ததுண்டு.
பாவி, பாவை நெஞ்சுள் புகுந்து பித்து பிடிக்க வைத்திட்டாய்.
அய்யகோ என்னையும் கவிதை மொழியில் சிந்திக்க வைத்திட்டாய்.
இனியெதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் புரிகிறது.
என் வசம் ஏதுவுமில்லை என்பதைத் தவிர வேறெதுவும் புரியவில்லை.
சரியென்று சொல்லிவிடவா ?
இன்னும் கொஞ்சம் பழகவா ?
அருகில் சென்றுப் பேசவா ?
*அம்..மாடி அம்மாடி ... நெருங்கி ஒருதரம் பார்க்கவா ?*

195. நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருக்கிறேன்
நாம் இணையவுமில்லை பிரியவுமில்லை.
நம் ஊடல் முடியப் போவதுமில்லை.
அதனாலென்ன ?
காதல் கசந்திடுமா இல்லை கன்னி முகந்தான் வெறுத்திடுமா ?
காணுமெல்லாவற்றிலும் உனை இணைத்துப் பார்க்க முடிகிறதே.
சிரிக்கும் குழந்தையும் பூத்துக் குலுங்கும் பூவும் உன்னை ஞாபகப்படுத்துகிறது.
மெல்லிசை கேட்கையில் மடியில் நீ படுத்திருப்பதாய் மனதுள் படுகிறது.
பொட்டு பூ புடவையில் யாரைப் பார்த்தாலும் உன் பெயர் சொல்லி அழைக்கத் தோன்றுகிறது.
இதோ *அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது*

Monday, June 4, 2018

பொன்மாலைப் பொழுதில் 25

194. அழகு கண்டிருக்கிறேன்.
அழகுடி நீயென்று பலபேரிடம் பொய்யுரை சொல்லியிருக்கிறேன்.
ஆனால் உனைப்போல் ஒருத்தியை இதுவரை கண்டதில்லை,
இப்படி வியந்து நின்றதில்லை.
*
பாற்கடலிலிருந்து பரிமாறப்படும் பாலில் பாவை நீ நீராடுவாயோ  ? கும்குமப்பூவிலிருந்து குதித்திருப்பாயோ ?
இத்தனை சிவப்பா, அடடடடா.
மின்னல் கீற்றாய், பார்த்ததும் பளிச்சிடும் சிற்றிடை.
மெல்லிய தேகம், செயலில் வேகம்
அடர்ந்தக் கூந்தல், காந்தக் கண்கள்,
கண்ணிய உடை தரை பார்த்த நடை
மொத்தத்தில் மண்ணுலகில் மிதக்கும் தேவலோக மங்கை
*
இத்தனை அழகு என்றால் யாருக்குப் பிடிக்காது போகும்?
வீதியெல்லாம் உனை ரசிக்குது.
உனக்குத் தெரியுமா ?
இந்த *ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா ?*

193. எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து சில நொடிகள் சிரித்து விடுகிறேன்.
எனை வசீகரிக்க நீ செய்தவைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிறேன்.
எனைச் சுற்றிச்சுற்றி வந்து நீ பேசிப் பழகியதில் பெருமை கொள்கிறேன்.
உன் சேட்டைகளையும் லீலைகளையும் மறக்காது நினைத்து மகிழ்கிறேன்.
உன்னோடு இன்னும் கொஞ்சம் நாட்கள் சேர்ந்திருக்க எண்ணி ஏங்குகிறேன்.
இடையூறுகள் இருந்தும் உனை எண்ணாத நாளில்லை என்பதை ஏற்கிறேன்.
இருக்கும் வரையிலும் உன் நினைவு இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.
*உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே*

192. காதினில் வைரக் கடுக்கண், கப்பலில் வந்ததாம்.
நீலநிற நெத்திச்சுட்டி என் தேகநலம் காத்திடவாம்.
பாண்டியநாட்டில் பயணிக்கையில் கிட்டியதாம் இச் சந்திரப்பிறை.
*
அரசகுடும்பத்தார் அணியும் அட்டிகையும் ஆரமும் அன்புப் பரிசு.
சிலம்பின் சிவப்புக் கல்லில் என் சிரித்த முகம் தெரிகிறதாம், நல்ல கதை.
*
என் சொல் கேளாது மாட்டிவிட்டது இந்த ஒட்டியானம்.
என் இடை பெருக்கவைக்க அவர் நெஞ்சில்  திட்டமிருக்கும் ?
*
இத்தனையும் ஏதென்றா கேட்கிறாய்,
அடி என் கிறுக்கு,
எனை இத்தனை நாள்
சிந்தையில் சித்ரவதை செய்த என்...
தூர நின்றுத் துயரம் தந்த என்...
யாருக்காகக் காத்திருந்தேனோ அம்
*மன்னவன் வந்தானடி தோழி*

191. அனலிலிருந்து அவதரித்து
ஆறுகமலங்களில் வந்தமர்ந்து
ஆறுமுகனென்றப் பெயர் பெற்று
அசகாயசூரனாய் வளர்ந்து
அரிய பழம் கேட்டு ஆத்திரமடைந்து
அரையாடையோடு அகம் துறந்து
ஆவினன்குடியில் வந்து நின்று
அன்னை சொல்ல சமாதானமாகி
அவ்வையின் அகந்தையழித்து
அரக்கனோடு போரிட்டு வென்று
அப்பாவம் நீங்க அப்பனை வேண்டி
அலைகடலருகில் நின்றருள்புரியும்
ஆண்டவா செந்தில் நாதா
அபயமளித்துக் காத்திடைய்யா
அப்பா *சரவணபவ குக வடிவழகா*

190. சிரிக்கிறாய், மனம் துள்ளிக் குதிக்கிறது.
காதினுள் கதைக்கிறாய், நெஞ்சில் கவிதை நிறைந்து வழிகிறது.
இரு புருவத்தையும் மாற்றி மாற்றி நீ ஏற்றி இறக்க, அதிசயிக்கிறேன்.
கண்ணடித்து உன் உதடுகளை இறுக்கி மூடித் தலையாட்ட, ஆனந்தமடைகிறேன்.
வேகமாய் அருகில் வந்து எனை முகரவைத்து முத்தமிட்டு பரவசத்திலாழ்த்துகிறாய்.
பெண்ணாகவும் ஆணாகவும் நமைப்படைத்த ஆண்டவனுக்கு நன்றி நவில்கிறேன்.
அழகு அறிவு என்ற இரு சொல்லுக்கு ஒரேப் பொருளாய்த் திகழும்
*ஏய் மாண்புமிகு மங்கையே*

189. கடவுளருள் நிறைய கிட்டிடவே
நற்சிந்தனைகள் நெஞ்சில் நிறைகவே
நீ நினைப்பதெல்லாம் நடந்திடவே
தொட்டதெல்லாம் துலங்கிடவே
சொல்வதெல்லாம் பழித்திடவே
நீயிருக்குமிடமெல்லாம் செழிக்கவே
உன்பாதம்பட்ட இடமெல்லாம் பொழிவுறவே
உன்னாலெல்லாரும் வளம் நலம் பெறவே
என்றும் நீ நலமாய் வாழ்க வாழ்கவே
*கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே*


188. காற்றில் கலையாக் கூந்தல்
கவிதை சுரக்காக் காதல்
*
வாசம் வீசாப் பூக்கள்
நிறைந்து வழியும் நதிகள்
*
நிலத்தில் நீந்தும் மீன்
சுவைக்கப் புளிக்கும் தேன்
*
நீரின் மேல் நடனம்
காலால் ஆடும் கரகம்
*
படுத்ததும் உறங்கும் பணக்காரர்
மனைவிக்கு அஞ்சாக் கணவர்
*
கவிதைக்குக் கிட்டும் பாராட்டு
*குழந்தை பாடும் தாலாட்டு*
*

187. கண்கள் பேசும் மொழி பார்த்து பார்த்துக் கற்றுக்கொண்டேன்.
கவிதைகள் தானே சுரப்பதால் அதிலெந்தப் பிரச்சனையுமில்லை.
அடிக்கடி ஏதாவது குளறுபடி செய்து சிரிக்கவைத்து, தினமொருமுறை லவ்யூ சொல்லி இதுவே பாலபாடம்.
வேறெந்தப் பாவை மீதும் பார்வை படரக்கூடாதென்பது காதல் வேதம்.
விரல் நீட்டி விளையாடும் சேட்டைகள் பழகவில்லை இன்னும்.
இதழில் கதை எழுத வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை.
சம்மதமெனில் சீதாராமனாய் இல்லையேல் கோபிகிருஷ்ணனாய்
*காதலெனும் தேர்வெழுதிக் காத்திருக்கும் மாணவன் நான்*

Wednesday, May 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 24

186. படைப்பவன் நானே
பசிக்க, அழ வைப்பவன் நானே
பால் நானே, பால் தருபவள் நானே
பாவங்கள் நானே, பாவம் செய்யப்
பாதை வகுத்துத் தருபவன் நானே
பாவத்திற்குத் தண்டனை தந்துப் பாடம் புகட்டுபவன் நானே
பாதம் பணிந்தார்க்குப் பரிகாரம், பாபவிமோசனம் எல்லாம் நானே
பாரபட்சம் பாராது பாருலகைப் பாதுகாப்பவன் நானே
பந்தம் நானே, பகையும் நானே
பரந்து விரிந்த வானம் நானே
பருக வானம் தரும் பானம் நானே
பரவசம் தரும் பண்ணிசை நானே
பாடவைப்பவன் நானே
பாடப்படும் அந்தப் *பாட்டும் நானே, bபாவமும் நானே*

^பாவம் - bavam - expression

185. பூ சூடி, பொட்டிட்டு, புன்னகை புரிந்தபடியே வலம் வருவேன்.
தவறாய் யாரும் பார்க்க முடியாது நடந்து கொள்வேன்.
அப்படி நடக்க ஆரும் நினைத்தால் தடையிடத் தயங்கேன்.
ஆசையெதுவும் நெஞ்சில் நுழையாது வளர்ந்து வந்தேன்.
ஒருமுறை தானே பார்த்தோம்,
ஓரிரு வார்த்தை பேசினோம்.
இதுதான் ஜென்ம பந்தம் என்பதா ? தொடருதோ ?
இதுவரை இப்படி நடந்ததில்லையே.
ஏன் என்றெனக்குப் புரிந்தும் நம்ப முடியாது தவிக்கிறேனே.
உங்கள் ஒரு்சிறுப் பார்வையில், புன்சிரிப்பில் மெல்ல கரைகிறேனே
*துளி துளியாய், பனித்துளியாய்*.

184. சொன்னால் செய்கிறாய் நீ
சொன்னபடியே செய்கிறாய் நீ
என் எண்ணப்படி இசைகிறாய் நீ
கனவின் உருவாய்,கதைக் கருவாய் கவிதைப் பொருளாய் எல்லாம் நீ
நீயில்லாதிடமேயில்லை என்பதாய் எல்லாவிடத்திலும் என்னோடு நீ  தேவலோகத்து மங்கையர் போல் நர்த்தனமாடுவதிலும் நிபுணி நீ
இன்று இத்தினம் என்னோடு இணைந்துப் பாட வா நீ
இரவிலும் கனவிலும் பாட வா நீ
எல்லா ராகமும் நீயறிந்த போதிடினும் என்னோடு பாடு நீ *கீரவாணி*


183. பிள்ளையாரப்பா
கயிலைமலையானே
தினமொருக் கவிதை புனையக் கருணை புரியும் கனல்விழியானே
மாதொருபாகனாய் நின்றென் மனங்கவர்ந்த மகாதேவா,
பாதம் பற்றினார்ப் பாவம் போக்கும் பரமேஷ்வரா,
நினை நினையாத நாளில்லை நீலகண்டா,
திருவிளையாடல் பலபுரிந்த தியாகேசா,
தில்லை நடராஜா,
பிள்ளையின் பிழையெதுவாயினும் பொருத்தருளும் தாயுமானவா,
தயை புரிந்திடு வா.
சங்கரா, சாம்ப சதாசிவா,
சம்போ சிவசம்போ
இக்கணமே வந்து சக்தி தந்து விட்டுப்போ
*சக்தி கொடு*


182. பஞ்சகச்சத்தில் நான்
மடிசாரில் நீ
ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறேன்
மடியினில் படர்ந்திருக்கிறாய்
வெற்றிலை நான் போட
உன் வாய் சிவப்பேற
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

கால் கொலுசை நீ சப்திக்க
அர்த்தம் புரிந்து நான் முத்தமிட
கண்ணால் நீ கெஞ்ச
நான் காலமுக்கிவிட
ஆரிராரிரோரோ என நீ இழுக்க
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

அருகில் வந்து முறைக்கும் நீ
அலட்டாது அமர்ந்திருக்கும் நான்
'அறிவில்லை' என்கிறாய் நீ
காதில் கொள்ளாது நான்
குளிக்கப்போகிறாய் நீ
சரி போ என்றபடி நான்
'துண்டு ப்ளீஸ்' கேட்கிறாய் நீ
துண்டோடு கதவு தள்ளும் நான்
என் துண்டை உருவும் நீ
பிறந்த மேனியாய் நாம்
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

*சம்போ சம்போ சம்போ சம்போ*




181. ஏன் இத்தனை சந்தோஷம் என்றா கேட்கிறாய், என்னுயிர்த் தோழா,
எதைச் சொல்ல எதை மறைக்க என்ற குழப்பமிருந்திடினும் எல்லாம் சொல்கிறேன் கேளடா.
*
நேற்றவள் நேரில் வந்தாள்,
தென்றலாய், மழைச்சாரலாய், இளவெயிலாய், புதுப் புனலாய்,
மாலையில் நீல நிறச் சேலையில்,
கண்ணில் மையோடு,
வாயில் புன்னகையோடு
நெஞ்சில் காதலோடு.
அவள் கூந்தல் மணத்தை நுகர்ந்து மல்லிகைப்பூ மணம் வீச;
*
நிறையப் பேசினாள்.
காத்திருக்கக் கேட்டுக்கொண்டாள்.
தமக்கையின் திருமணம் தந்தையின் சில கடமை முடிய வேண்டுமென்றாள்.
என்னைச் சிநேகிக்க ஏழெட்டுக் காரணங்கள் எடுத்துரைத்தாள்.
அதையும் தொடர்ந்து, முத்தமழை பொழிந்து காதினுள் மெல்லச் சொன்னாள்
*கொஞ்ச நாள் பொறு தலைவா*

180. மெல்லப் பேசி புன்னகைத்து நலம் கேட்டதன் பொருள் அறிவேன்.
உபத்திரவமில்லாது ஓடியோடி உதவி செய்ததன் உள்ளர்த்தம் அறிவேன்.
கலங்கி நின்ற கணத்தில் கைதூக்கி விட்டதன் காரணம் அறிவேன்.
மாணிக்கவாசகம் பாடி மனபாரம் குறைய  மார்க்கம் காட்டியதன் மாண்பு அறிவேன்.
ஒருகுறிப்பும் உணர்த்தாது கன்னி நெஞ்சைக் களவாடியது மட்டும் அறியேன்.
காரணம் சொல்வீரா ...
*கள்வரே ... கள்வரே*


179. உழைத்து உழைத்து மனம் உடல் களைத்துவிட்டேன்.
பணம் தேடிப் பல பயணம் செய்து ஓய்ந்துவிட்டேன்.
பணமே வாழ்க்கை என்றெண்ணி இருந்துவிட்டேன்.
பலதும் பெற்றும் போதுமென்று எண்ணாது நெஞ்சமின்னும் அல்லாடுது.
வாழ மறந்த வாழ்க்கை விழி முன் வந்து நின்று பழித்துக்காட்டுது.
பெற்றதையும் இழந்ததையும் நிறுத்திப் பார்த்தால் என்ன கிழித்தோமென்று கோபம் வருகிறது.
எந்த திசையிலும் நகர முடியாது வாழ்க்கை கட்டுண்டுக் கிடக்கிறது.
அலையினிடையில் அகப்பட்ட படகு, கரைசேர  துடுப்பைத் தேடுகிறது.
தாமரை இலைமேல் தண்ணீராய் பற்றற்று வாழ மனம் விரும்புகிறது.
இதோ உன் வாசல் வந்துவிட்டேன்
துணை நீயம்மா, வழிகாட்டம்மா.
*நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா*

Tuesday, May 15, 2018

பொன்மாலைப் பொழுதில் 23

178. மயிற்பீலி சூடிய மாதவா
மங்கையென் மடியில் மயங்கிடவா
   ஆராரோ ஆராரோ

கார்மேகவண்ணா கமலநயனா
கன்னியருகில் கண்ணுறங்கிட வா
   ஆராரோ ஆராரோ

புல்லாங்குழலூதும் புருஷோத்தமா
பூமெத்தையில் பள்ளி கொள்ள வா
   ஆராரோ ஆராரோ

நர்த்தனமாடிய நந்தகுமாரா
நல்லுறக்கம் கொள்ள நீ மெல்ல வா
   ஆராரோ ஆராரோ

சங்கடம் தீர்க்கும் சியாமள வர்ணா
சயனம் கொள்ள சடுதியில் வா
   ஆராரோ ஆராரோ

பண்டரிநாதா பாண்டுரங்கா
பிரபஞ்சம் மறந்து உறங்கிட வா
    ஆராரோ ஆராரோ

*ஆராரோ ஆராரோ*
*நீ வேறோ நான் வேறோ*

*****

177. உணவு பசியின் புன்னகை
கனவு ஆசையின் புன்னகை
வெற்றி உழைப்பின் புன்னகை
தோல்வி சோம்பலின் புன்னகை
கவிதை காதலின் புன்னகை
குழந்தை காமத்தின் புன்னகை
ஆத்திரம் அதிகாரத்தின் புன்னகை
அழிவு ஆணவத்தின் புன்னகை
 *பூ கொடியின் புன்னகை*
*அலை நதியின் புன்னகை*

*****

176. நல்லோர் நலமாய் இருக்கணும்
நலிந்தோர் வாழ்வு மேம்படணும்
காலத்தில் மழை பொழியணும்
வயல் செழித்து நிறையணும்
தினம் வயிறு பசிக்கணும்
பசிக்கையில் உணவு கிட்டணும்
படுத்தவுடன் உறக்கம் வரணும்
நற்சிந்தனை நெஞ்சில் நிறையணும்
கடவுளெம் கூடயிருந்துக் காக்கணும்
கற்ற கல்வி கைகொடுத்திடணும்
அருள் புரி தாயே, எம் துணை நீயே
*கலைவாணியே*

*****

175. நீல நிலா என்றனர்.
நின்றவிடத்திலிருந்தே நிமிர்ந்து நோக்கினர்.
பால்கனியிலிருந்தும் பாலத்தின் மேலிருந்தும் பார்த்து ரசித்தனர்.
*
பலரும் பார்க்கப் பால்நிலா சிவந்து போனது.
வெட்கத்திலா, கோபத்திலா என்று புரியாமல் போனது.
*
கொஞ்சமாய்த் தெரியக் கூச்சலிட்டனர் சிலர்.
தானிருக்குமிடத்தில் தெரியவில்லை எனக் கவலை கொண்டனர் சிலர்.
நல்லாத் தெரியுதென்று ~நானே நிலாவென்றும்~ நடனமாடினர் சிலர்.
பார்க்காதார் பார்த்து மகிழப் படமெடுத்தனர் பலர்.
*
ஓட்டு போட்டு நாட்டை மறப்பது போல்
க்ரகத்திலிருந்து க்ரகணத்தை பார்த்து ரசித்து மறந்திட்டோம்.
ஆனால் .... இன்றும் ... வானில்
*நிலா காய்கிறது*
*நேரம் தேய்கிறது*
*யாரும் ரசிக்கவில்லையே ...*

*****

174. மின்னஞ்சலில் நலம் விசாரித்தாய், நவின்றேன்.
குறுஞ்செய்தியில் வணக்கம் சொல்ல வாழ்த்தினேன்
அலைபேசியில் அழைத்தப்பொழுது ஆர்வமாய் அலவாடினேன்.
கனவினில் கவிதை கேட்க வர்ணித்து உளறினேன்.
இத்தனையும் தொடர்ந்து
நேரில் வந்து நின்று இன்பத்திலாழ்த்துவாய் என்று எந்நாளும் எண்ணியதில்லை.
*ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ ?*

*****

173. எது பிடித்திருக்கு என்றால் ...
கன்னக்குழி விழ நீ சிரிக்கும்போது
பேசிவிட்டு நா கடித்துக் கொள்ளும்போது
குறுகுறுவென்று நான் பார்ப்பதையுணர்ந்து இழுத்து மறைத்து எனை முறைக்கும்போது
பார்க்காதிருந்தால் இருமி கவனம் கவரும்போது
பார்வை மோதையில் நாக்கை நீட்டி லலலல வெனும்போது
கொலுசோசை கேட்டு அருகில் செல்ல காதினுள் முத்தமிட்டு கண்ணடிக்கும்போது
புத்தாடையில் எதிரில் நின்று 'எப்படி' என்கையில்  'அ...பாரம்' என்றவுடன் சட்டென்று கை கட்டிக்கொள்ளும்போது,
கவிதை நல்லாருக்கு, அர்த்தமென்ன என மெல்லக் கேட்கும்போது.
யாருமில்லாப் பொழுதில் மடியில் படுத்துக் கொண்டு மருதாணியிடக் கெஞ்சியபோது
*சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது*

*****

172. இப்பத்தான் கண்டுகிட மாட்டேங்கறீங்க
ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க
அதெல்லா ஒரு காலம்ங்க, அப்போ...
மொதமுறை பார்த்தப்ப மொறச்சீங்க
அடுத்தமுறை பாக்காதமாதிரி நடிச்சீங்க
பின்னால ஒருநா மொல்ல சிரிச்சீங்க
பேரு என்ன ன்னு கேட்டீங்க
பழகப் பழக மனசுக்குப் பிடிச்சிப் போனிங்க
நெறைய எனக்கு சொல்லித்தந்திங்க
தெரிந்தத நாசொன்னா கேட்டுக்குவீங்க
நல்லப் பாடலை மொல்லப் பாடுவீங்க
சிரிச்சி சிரிக்கவச்சி சிந்திக்கவைப்பீங்க
வேஷம் போடாத வெளிப்படையா பேசி நேசத்த நெஞ்சில விதைச்சீங்க
ஆன்மீக அரசியல் மாதிரி கண்ணியமான காதலை கண்ணுல காட்டுணீங்க
இன்னும் சொல்லனும்னா ... அப்போல்லா எனையே *சுத்தி சுத்தி வந்தீக*

*****

171. உன்னிடமிருந்தோர் குறுஞ்செய்தி வந்ததும்
உள்ளம் உவகை கொள்வது ஏனோ ?
நீ அருகிலிருக்கையில்
அகத்திலோர் ஆனந்தம் பிறப்பது எங்ஙனம் ?
பார்த்ததும் புன்சிரிப்பும்
பார்க்கும் வரை பரிதவிப்பும் ஏற்படுவது எதனால்?
உன் குறுகுறுப்பார்வை
விறுவிறுவென்று ஓர் உணர்ச்சி உண்டாக்குவதேன் ?
உன் ஒவ்வொரு வாசகமும்
திருவாசகமாய்த் தித்திப்பதன் காரணம் சொல்லேன் ?
என் *மனசுக்குள் ஒரு புயல்  மையம் கொண்டதே, அதன் பெயர் தான் என்ன ?*

*****

Wednesday, May 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 22

170. உனை எண்ணாத நாளெல்லாம்
நான் எனை மறந்து வாழ்ந்த நாட்களே.
உன் விழியீர்ப்பு விசையிலிருந்து விலகியிருந்த நாட்களெல்லாம்
வீணாய்ப்  பொழுது போக்கிய நாட்களே.
உன் புகழ் பேசா நிமிடங்களெல்லாம்
என் நா அசையா நிமிடங்களே.
கனவில் நீ காட்சி தரா
இரவெல்லாம் நான் உறங்காதிருந்த இரவுகளே.
கருப்பொருளாய் நீ இல்லாவிடில்
என் கவிதைகள் வெறும் வார்த்தைகளே.
*உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே*

*****

169. அழகின் உருவம் அன்பின் வடிவம்
சிந்தை கவரும் செம்பொன் சிலை
நினைவலைகளில் நின்றாடும் நுரை
லயம் தவறாது நர்த்தனமாடும் மயில்
சுரம் பிசகாது கூவித்திரியும் குயில்
விடிகாலை வெயில்
மெல்ல வீசும் தென்றல்
~அமுத~கவிதைசுரபி சாந்தஸ்வரூபி
சிற்றிடை மோகினி
செவ்விதழ்க் காமினி
இரவில் கனவில், பகலில் எதிரில்  காட்சிதரும் கன்னி நீ,
என்னுயிரே, நிழலே, எழிலே
*மணியே, மணிக்குயிலே, மாலையிளங் கதிரழகே*

*****

168. கோவில்ல வச்சிப் பார்த்தானாம் ஒருநாள்
பார்த்ததும் பிடிச்சிப் போயிடிச்சாம்.
குளத்தாங்கரையில் பார்த்தானாம்,
குளிக்கரச்ச பார்த்திருப்பானோ ? களவானிப்பய.
பரவால்ல, பார்க்க சுமாராயிருக்காப்ல,
அமைதியாய் இருக்கா அலட்டாது பேசுறா
வாலி வைரமுத்து கணக்கா கவிதை சொல்றா
கண்களை இங்க அங்க மேயவுடாது கண்ணியமாப் பாக்குறா.
பயபுள்ள, என் நெஞ்சைக் களவாடிட்டானே,
மனசு இப்டி இறக்கை கட்டுன மாறிப் பறக்குதே
*அடி ஆத்தாடி ...*

*****

167. புடவையில் பவனி வரும் தெய்வீகம்
பார்வையில் தெரியும் சாத்வீகம்
பார்க்கப் பார்க்க நெஞ்சில் பரவசம்
பழகினால் புரியும் கம்பீரம்
பேசும் பாஷையில் வீசும் பரிமளம்
கருணை பிரதானம்
பகட்டில்லா யவ்வனம்
புரவியின் வேகம்
புவியின் நிதானம்
நடக்கும் போதி மரம்
நமக்குக் கிடைத்த வரம்
பட்டுப்போன்ற பாதம்
பாவை சொல்வதெல்லாம் வேதம்
*
மண்ணிலுன்னைப் போலே
இன்னொருத்தி இல்லையே,
*ஏய் மாண்புமிகு மங்கையே ....*

*****

166. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு மதிப்பு மரியாதை
உன்னைப் பார்க்கையில் மட்டும் தான் ஈர்ப்பு ஆசை  எல்லாம்

இரக்கம் நெஞ்சில் ஏராளம் தாராளம்
நீ அருகிலிருந்தாலோ கிறக்கம் நெருக்கம் இறுக்கம் எல்லாம் இருக்கும்

எந்த உடையின் நிறத்தையும் பகுத்துரைக்கும் திறமையிருக்கு.
நீ எதிரில் நின்று கேட்கையில் மேனி நிறம் மட்டுமே தெரிய முழிக்கவேண்டியிருக்கு.

நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்
*உண்மை சொன்னால் ... நேசிப்பாயா ?*

*****

165. உன் ஒருசிறுப்பார்வையில்
காதல் செடி முளைக்கத் தொடங்கிய நேரம்
கவலைகள் எனைவிட்டுக் காதாதூரம்
விலகி நின்ற நேரம்
நெஞ்சிலிருந்த பாரம் இலவம்பஞ்சாய் மாறிப்
பறந்து மறைந்த நேரம்
கண்ணனும் ராதையும் கண்முன் வந்து நின்றுக்
காதல் பாடம் கற்பிக்கும் நேரம்
வானின்தேவதைகள் பக்கம் வந்து நலம் விசாரித்து
வரம் தரும் நேரம்
முகிலாய் மாறி நான் வானில்
மிதக்க ஆரம்பித்த நேரம்
*தொடுதொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்*

*****

164. ஏறெடுத்துப் பாக்கலேன்னா ...
எப்படி இருக்கியன்னு தெரியாமயாப்போவும் ?
போறச்சே வாரச்சே சிரிக்கலையின்னா ...
கவனிக்கலேன்னு சொல்வியலா ?
பதில் தரலேன்னா ... பிடிக்கலையோன்னு ஏன் சந்தேகப்படணு ?
ஏடி வாடி போடின்னு சொல்லும்யா,
இங்கனகுள்ள அங்கனகுள்ள சுத்தும்யா
தவிக்கவுட்டு சோலிபாக்க தூரப் போறேன்னு
சொல்லுதியளே நாயமா?
செத்த நேரம் இங்க கிட்ட வாரும்
இந்தக் கிறுக்குப் ~பொட்டச்~ மொல்லச் சொல்றத
செவில்ல போடும்
மக்கா ஒமக்காவ இம்பட காத்து நிப்பே
ஏமாத்திப்போட்டு போயிடாதிய, சரியா
என் சுவாசமா நெனச்சிருக்கே
நேசமானவரே
*நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கே*

*****

163. வானவில் உன் புருவம்
போலிருக்காவெனச் சோதிப்பேன்.
வண்ணத்துப்பூச்சியில்
உன் தாவணி வர்ணத்தைத் தேடிப்பார்ப்பேன்.
கூட்டத்தில் உன் பார்வை தென்படுதா
என்று தேடித்தோற்பேன்.
பாராட்டுக்களில் உன் பெயர் இல்லாதது கண்டு ஏமாறுவேன்.
*பூக்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாக தேடிப்பார்த்தேன்.*

*****

162. வாய் விரிக்காது விரல் வருடி நகத்தால் கீறி
விடயமறிந்துக்கொள்வது அடுத்து நிகழும்.
இடை இழுத்து இதழ் இணைத்து
இறுக்கிக்கொள்வது இன்னொரு தினம்.
உடை பாரம் என்றுணர்ந்து, தவிர்த்து
உயிர் மாற்றிக்கொள்வது பின் நிகழும் சம்பவம்.
இன்று இங்கு இப்பொழுது இவ்வமயம்
ஆரம்பநிலையின் அடுத்தக்கட்டம்.
என்னுள் பாதி நீயாகும் விதம்
உன்னுள் நான் ஒன்றாகும் விதம் ஒரு வார்த்தை சொல்லு நீ,
*சுந்தரி, கண்ணால் ஒரு சேதி*

*****

161. வஞ்சி உறங்குகிறாள்
சாய்ந்தபடியே சகி சயனிக்கிறாள்
கனவுகள் கண்டபடி கண்மூடியிருக்கிறாள்
துயரங்களை மறந்துத் தோகை துயில்கிறாள்
நயனங்களை இழுத்து மூடி நங்கை நல்லுறக்கத்தில் இருக்கிறாள்.
வெண்ணிலவே நீ வேறு திசை விரைந்து உன் ஒளி பொழி
இடியோ மழையோ இரண்டும் இந்தப் பக்கம் வராதிரு.
பொன்மாலைப்பொழுதே மெல்லிசைப் பாடலையே எப்பொழுதும்போல் ஒலி.
*தென்றலே ... தென்றலே மெல்ல நீ வீசு*

*****