Sunday, May 10, 2020

கம்பராமாயணம் 121



விடை கொடுத்த படலம்

10332.
பூமகட்கு அணி அது என்னப் பொலி
   பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம்
   அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும்
   மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன்
   சார்ந்தான்.


நிலமகளுக்கு இது ஓர் அணிகலன்
போல் விளங்கும்,
பொன்னைக் கொண்டு சிறந்த
மணிக் கற்களால் செய்த தூண்கள் அமைந்த
திருவோலக்க மண்டபத்தின் நடுவில்,
பல்லக்கின் மேல் அமர்ந்து
மேகமும்   மின்னலும் போல
தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளாகிய சீதாபிராட்டியோடு
தசரத  ராமன்  வந்து சேர்ந்தான்.


 10351.
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது
   அருளின் நோக்கி,
'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்?
   அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது
   இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப்
   புல்லுக!' என்றான்.


இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு
அருட்பார்வை பார்த்தான்;
'உன்னையல்லால் வேறு யார் உதவி
செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்'
என்று கூறினான்.
'அன்று இராவண யுத்தத்தின் போது
நீ ஆற்றிய  உதவிகளுக்கு நான்
செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் இல்லை'
என்று புகழ்ந்தான்.
'பூணுல் அணிந்த போர்க்குத் தகுதியாக
வலிய தோளை உடையவனே!
என்னை நன்கு  தழுவிக் கொள்வாயாக'
என்று அழைத்தான்.


10353.
பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில்
   மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள்
   முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை
   கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தான், அந்நாள், இடர் அறிந்து
   உதவினாற்கே.

தாமரை மலரை விட்டு எழுந்து
பொன் மதில் சூழ்ந்த மிதிலையில் தோன்றிய
தேன் மொழியுடைய திருமகள் சீதையை
இராமன் திருவருளோடு பார்க்க,
அன்று, அசோக வனத்தில், தன் இன்னல்
உணர்ந்து உதவிய அனுமனுக்கு
வேதத்தலைவி சரஸ்வதி தேவி தனக்களித்த 
முத்து மாலையை இன்பமுறக் கொடுத்தாள்,



10365.
பரதனை, இளைய கோவை, சத்துருக்
   கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை,
   மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி,
   வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம
   பதியைச் சார்ந்தார்.

பரதனை, இலக்குவ சத்ருகனனை,
மூன்று தாயாரையும்,
மிதிலைப் பொன் சீதை யையும்
இராமபிரானையும்,
வலம் வந்து வணங்கினர்,
விடை பெற்றுக் கொண்டனர்,
தங்கள் தங்கள் நகரங்களுக்குக் கிளம்பினர்.




10368.
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர்
   ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி
   நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும்,
   தரணி காத்தான் -
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில்
   வந்த வள்ளல்.

தேவர்கள் தொடங்கி மக்கள் வரை
பதினான்கு உலகங்களும்,
'எம்பெருமான்' என்று வணங்கித் துதித்து,
சொன்ன கட்டளையை நிறைவேற்ற,
தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும்
ஒன்றாகும்படி நின்று,
இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.
திருப்பாற்கடலில், அறிதுயிலிலிருந்து விலகி
அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து
பலர்க்கும் அருள் செய்த இராமபிரான்;




( முற்றும் )

Saturday, May 9, 2020

கம்பராமாயணம் 120




10305.
ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை,
   அருளின் நோக்கி,
'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன்
   மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும்,
   பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம்
   தெரித்தி' என்றான்.

எல்லோரும் அரண்மனை வந்தடைந்தனர்,
'உளந்தூய வீடணனுக்கும்,
கதிரவன் மைந்தனான சுக்கிரீவனுக்கும்,
மற்ற வானர  வீரர்களுக்கும்,
நம்முடைய அரண்மனையின் சிறப்புக்கள்
எல்லாவற்றையும் விளக்கிடு'
என்று இராமன் பரதனிடம் கூறினான்.



10311.
'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி 
   பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு 
   அருமைத்து ஓர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், 
   அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், 
   காலின் தோன்றல்.

(இராமனுக்கு மகுடம் சுட்டுவது எப்போது 
என்று சுக்ரீவன் கேட்க)
ஏழு கடல்களிலிருந்து கொண்டு வரும் 
புனித நீரும் 
பெரிய நதிகளிலிருந்து கொண்டு வரும் 
தீர்த்தங்களும் 
இங்கு வந்து சேருதற்கு, தாமதமாகிறது 
என்று பரதன் கூறினான்;
ஒற்றைச் சக்கரத் தேரினனான 
சூரியன் புதல்வன் சுக்கிரீவன்
அனுமனை விரைந்து பார்த்தான்.
காற்றின் மைந்தனாகிய அனுமன்
கடல் சூழ் உலகத்தின் தொலைவை
உடன் கடந்து சென்றான்.


10313.
அரியணை பரதன் ஈய, அதன் கண் 
   ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, 'பெரு 
   நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உகந்தனர் 
   ஒருவு இல் செல்வம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் 
   நாளை' என்றான்.

(குலகுரு வசிட்டன் வந்ததும்)
பரதன் அவருக்கு அமர இடம் தந்தான்.
வசிட்டன் அதன் மீது அமர்ந்தான்,
பரதனைப் பார்த்தான்,
'பூமிப் பிராட்டியோடும்,
பொருந்திய திருமகளோடும் 
அழியாப் பெருஞ்செல்வங்களோடும் 
கரு நிறத்து இராமன் ஆட்சி நடத்த
இசைந்த காப்பு அணியும் நன்னாள்
நாளைய தினமாகும்' என்று கூறினான்.


10327.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் 
   உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் 
   கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் 
   சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே
   புனைந்தான், மௌலி.

சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்கவும்.
அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கவும், 
வெண் கொற்றக் குடையைப்
பரதன் பிடித்து நிழற்றவும், 
இலக்குவ சத்துருக்கனன் இருவரும்
சாமரை ஏந்தவும்
மணம் கமழ்கிற கூந்தலை உடைய பிராட்டி
பெருமிதமாய் விளங்கவும்
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பர்  
வழியின் முன்னோராக உள்ளோர்
மகுடத்தை எடுத்துக் கொடுக்க, 
பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே 
இராமனுக்கு மகுடம் சூட்டினான்.



10331.
விரத நூல் முனிவன் சொன்ன விதி 
   நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா 
   மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் 
   பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள்
   இருந்தான் மன்னோ.

விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்டன் 
சொல்லிய விதி முறைகளைத் தவறாது,
அருளாளன் இராமன், கடைபிடித்தான்.
தன் தம்பியர் மூவர்க்கும் 
உயர்ந்த மகுடம் அணிவித்தான். 
பரதனை தன் செங்கோலாட்சி நடத்துமாறு
கட்டளையிட்டான். 
எல்லையற்ற இன்ப மகிழ்ச்சியில் 
திளைத்திருந்தான்.


( தொடரும் )

Friday, May 8, 2020

கம்பராமாயணம் 119


10260.
ஊனுடை யாக்கை விட்டு உண்மை
   வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான்.

பரதன் பார்த்தான்,
உடம்பை உதறிவிட்டு சத்தியத்தை விரும்பி
வானுலகு சென்ற தந்தையார்
திரும்பி வருவதைப் பார்ப்பது போலப்
பார்த்தான்.
காட்டிற்குச் சென்ற
தாமரை மலர்  போன்ற  கண்களை  உடைய
இராமனைப் பார்த்தான்.
தன்னுடைய உயிராக உள்ளவனைத்
தம்பி பரதன் பார்த்தான்.



10270.
தாயருக்கு அன்று சார்ந்த கன்று 
   எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் 
   மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு 
   இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் 
   புகுந்தாலும் ஒத்தான்.

 
இராமன், தாய்மார்களுக்கு 
பிரிந்து வந்தடைந்த கன்றின் தன்மையை 
ஒத்தவனாக ஆனான்; 
அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு
மனம் லயிக்க பரப்பிரம்மம் வந்து 
சேர்ந்தாற்போல ஆனான்; 
தன் பிரிவால் மெலிந்து நுணுகிய 
பரத சத்துருக்கனருக்கு 
கண்ணிற் கருமணி போலானான். 
மற்றவர்க்கு நோய் வாட்டிய உடம்பிற்குள்
மீண்டும் உயிர்வந்து புகுந்தாற் போலானான்.



10276.
கைகயன் தனயை முந்தக் கால் 
   உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் 
   முறைமையின் வணங்கு செங் கண்
ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் 
   தழுவி, தம் தம் 
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் 
   தொழிலும் செய்தார்.

  
முதலில் கேகயன் மகள் தாய் கைகேயியின் 
திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அதன்பின் கோசலை, சுமித்திரை ஆகிய 
இருவர் திருவடிகளையும் வணங்கினான்.
சிவந்த கண்களை உடைய இராகவனை
தாய்மார்கள் அன்பினால் அணைத்து, 
தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற
கண்களிலிருந்து வருகின்ற கண்ணீரினால் 
நீராட்டினர்.


திருமுடி சூட்டு படலம் 

10292.
ஊழியின் இறுதி காணும் வலியினது 
   உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் 
   கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் 
   கவரி பற்ற, 
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் 
   கோல் கொள்ளப் போனான்.

 
யுக  முடிவின் எல்லை காணவல்ல 
உறுதியான உயர்ந்த பெரிய தேரில்,
ஏழு முழ உயரமுள்ள யானை போன்ற 
இலக்குவன் வெண் கொற்றக் 
குடையைப் பிடித்து  நிற்க, 
வல்லமை மிக்க இன்னொரு தம்பி 
சத்துருக்கன் வெண் சாமரையை ஏந்த, 
புவியையே மறைக்கவல்ல 
ஆனந்தக் கண்ணீர் சிந்தும் பரதன், 
குதிரைகளை ஏவி தேரைச் செலுத்த, 
இராமபிரான் அயோத்தி சென்றான்.



( தொடரும் )

Thursday, May 7, 2020

கம்பராமாயணம் 118


10174.
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு
   வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங் கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, 'அவன் இங்குத்
   தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின்
   இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும்
   அரசு; எரி போய் அமைக்க' என்றான்.


முத்து வடிவம் போன்ற வெண்மை
நிற மேனியை உடைய தாமரை போலும்
கண்ணை உடைய சத்துருக்கனைப் பார்த்து,
'இராமன் நாடு வரத் தாமதிக்கின்ற காரணம்
நான்  இங்கு  அரசாட்சி செய்வதால் அல்லவா?
நான் இறந்தபிறகு இந்த உலகத்தை வருந்த
விடமாட்டான்;
அந்த மாறுபட்ட நினைவும் அவனை விட்டகலும்;
உடனே வந்து அயோத்திக்குள் நுழைந்து
அரச பொறுப்பை ஏற்பான்;
ஆதலால் சத்துருக்கனா !, நீ  சென்று
நெருப்பை மூட்டு' என்று பரதன் சொன்னான்.


10189.
'அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா,
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.

 'தலைவன் இராமன் வந்துவிட்டான்.
எல்லார்க்கும் மேலோனவன் வந்துவிட்டான்;
சத்தியத்திற்கு வடிவான நீ அழித்துவிட்டால்
இராமன் உயிர் வாழ்வானா?'
என்று கூறிக்கொண்டே
அனுமன் அங்கு வந்துசேர்ந்தான்.
இடையில் நுழைந்து, தன் கரங்களாற்
எரியும் நெருப்பை அணைத்துக்
கரியாக்கினான்.



10196.
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன; 
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின; 
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன; 
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 

(அனுமன் பரதனிடம் கணையாழியைக் 
காண்பித்தான்)
 
இதுவரை அழுது கொண்டிருந்த வாய்கள் 
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன;
நீர் விழுகின்ற அழுத கண்களில் 
வெள்ளநீர் பெருகத் தொடங்கின;
வருந்தி கீழே சாய்ந்த தலைகள் எல்லாம் 
மேல் உயர்ந்தன, நிமிர்ந்தன; 
கைகள் எல்லாம் காற்றின் மகனாகிய 
அனுமனைத் தொழுத் தொடங்கின. 


10210.
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம் 
பத்து உடையவனுடன் விளைந்த 
   பண்பும், தான் 
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, 
   போர் 
வித்தகத் தூதனும் விரிக்கும் 
   சிந்தையான். 


இராமனை, பரதன் சித்திர கூட மலையில் 
சந்தித்த பிறகு 
பத்துத் தலைகளை உடைய இராவணனுடன் 
நடந்த  போர்ச் செயல்களையும்,  
முடிவாக தான் அயோத்திக்கு வந்து 
சேர்ந்ததையும் 
இடையில்  நடந்த  செய்திகளையும் 
போர்த் திறமை மிகுந்த அனுமன்  
விரித்துக் கூறினான்.


10256.
அன்னது ஓர் அளவையின், விசும்பின் 
   ஆயிரம் 
துன் இருங் கதிரவர் தோன்றினார் என, 
பொன் அணி புட்பகப் பொரு இல் 
   மானமும், 
மன்னவர்க்கு அரசனும், வந்து 
   தோன்றினார். 

 
அந்த சமயத்தில் ஆகாயம் 
ஆயிரம் சூரியன் தோன்றியது போல் 
ஒளிர்ந்தது;
பொன்னால் அழகு பெற்ற ஒப்பற்ற 
புட்பகம் விமானம் வானில் தெரிந்தது;
அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி இராமனும்
வந்து அநுமன் கண்முன்னே நின்றனர்.

( தொடரும் )

Wednesday, May 6, 2020

கம்பராமாயணம் 117


10066.
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு
   அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது
   ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும்,
   பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை
   விழுந்தான்.


சிவபெருமான் அருளைப் பெற்று
சக்கரவர்த்தி தயரதன்,
தன் அன்பு மகனைக் காண ஆசைப்பட்டு
மண்ணுலகத்தில் நுழைந்தான்,
இராமன் இருக்கும் பூமிக்கு வந்தான்,
ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும்
அத்தயரதனது மலர்போலும் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினான்.



10072.
''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு
   நாட்ட,
அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது
   மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு;
   அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக்
   கருதேல்.


சீதையே! உனது கற்பின் சிறப்பை
உலகிற்கு உணர்த்த விரும்பினான்.
அதனாலேயே 'நெருப்பில் புகு'
என்று இராமன் கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதை
மனதுள் கொள்ளாதே;
சந்தேகம் உற்றவர்கள் இவ்வாறு
நெருப்பின் மூலமாக பிறவற்றின் மூலமாக
மெய்ப்பிக்கச் செய்து ஐயம் நீங்குதல்
உலகில் இயல்பாக நடைபெறுவதே;
இதனால், கங்கையை ஆள்பவனை
கோசல நாட்டிற்கு அரசனான உன்
கணவனை வெறுக்க எண்ணாதே'
என்று தசரதன் சீதையிடம் கூறினான்.


10079.
'ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
   உரை' என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும்
   மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!' எனத்
   தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர்
   எலாம், வழுத்தி.


தயரதன் இராமனைப் பார்த்து,
'உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக் கேள்'
என்று கூற
இராமன்  அதற்கு, 'நீ தீயவள் என்று
துறந்த என் தெய்வமாகிய  கைகேயியும்,
அவள் மகன் பரதனும்; எனக்குத் தாயும்
தம்பியும் ஆகும்படி வரம் தருக'
எனக் கேட்டு வணங்கினான்;
அது கேட்டு அவன் அருள் திறத்தை எண்ணி,
உயிர்கள் எல்லாம் அவனை வணங்கின;
வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.


10096.
'அனைய புட்பக விமானம் வந்து அவனியை
   அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு,
   'இனி நம்
வினையம் முற்றியது' என்று கொண்டு
   ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள்
   புகன்றே.

(புட்பக விமானம் உள்ளது என்று வீடணன் கூற)
அத்தகைய புட்பக விமானமானது வந்து
தரையிறங்கியதை
நற்சிந்தனைகளை உடைய இராமன் கண்டான்;
'அயோத்தியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற நம் எண்ணம் சீக்கிரம் ஈடேறிவிடும்'
என்று மனத்திற்   கொண்டு  ஏறினான்;
தேவர்கள் வாழ்த்துரைத்து மலர்களைத் தூவி
மகிழ்வொலி செய்தனர்.


10117.
'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல 
   கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் 
   துணையாக நட்ட 
பின்னை, மாருதி வந்து, உன்னைப் 
   பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது 
   இச் சேது கண்டாய்.

'அழகிய நெற்றியுடையாளே!
உன்னைப் பிரிந்து பலநாள் கழித்த பிறகு
வானர அரசன் சுக்கிரீவன் 
சிறந்த துணை ஆன பிறகு,
அனுமன் தூது வந்து, உன் கலக்க  
நீக்கிய பிறகு,
உனது இருப்பிடத்தை என்னிடம் 
தெரிவித்த பிறகு
வானரச் சேனை கட்டியதே இவ்வணை'
என்று இராமன் சீதைக்குக் காட்டினான்.


(பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில்
தரை இறங்கியது புட்பக விமானம்)

10151.
'இன்று நாம் பதி வருதுமுன், மாருதி! 
   ஈண்டச் 
சென்று, தீது இன்மை செப்பி, அத் 
   தீமையும் விலக்கி 
நின்ற காலையின் வருதும்' என்று 
   ஏயினன், நெடியோன்
'நன்று' எனா, அவன், மோதிரம் கைக் 
   கொடு நடந்தான்.


நாம் அயோத்திக்கு வந்து சேரும் முன்,
அனுமனே! நீ விரைந்துஅங்கு செல்; 
எனக்கு ஒரு தீமையும் இல்லை 
என்பதை பரதனுக்குச் சொல்;
தீப்புக எண்ணியிருக்கும் அவனைத் 
தடுத்து நிறுத்து;
நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன்
என்று ஏவி அனுப்பினான்; 
'நல்லது' என்று அனுமனும் கூறினான்;
இராமன் அளித்த கணையாழியை 
கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். 



( தொடரும் )

Tuesday, May 5, 2020

கம்பராமாயணம் 116




10036.
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்.


வெள்ள நீரிலே மேலே உயர்ந்துத்
தோன்றும் தாமரை மலர்
தன் வாழுமிடத்தை அடைவது போல
சீதை நெருப்பில் புகுந்தாள்.
பாய்ந்தவுடன்
பால்  போன்று, பஞ்சு  போன்று,
அந்த நெருப்பு
பிராட்டியின் கற்பு என்னும்
நெருப்பால் தீய்ந்துப் போனது.


10042.
'அங்கி, யான்; என்னை இவ் அன்னை
   கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப்
   பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை
   நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும்
   சான்றுளாய்?

('யார் நீ?' என்று இராமன் கேட்டதும்,
தீயிலிருந்து எழுந்தவன் பேசினான்)

'நான் தீக்கடவுள்;
என்னை இந்தத் தாயின்
கற்பு என்னும் தீ சுட
அதனைத் தாங்க முடியாது
எழுந்து வந்தேன்;
எனக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகும்
இவளைச் சந்தேகிக்கிறாயா?
இல்லை என்னையே சந்தேகிக்கிறாயா?
எல்லார்க்கும் அகத்தே சாட்சியாக
நிற்கும் பரம்பொருளே!' என்றான்.



10046.
'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வய்யுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.'

மழை பொழியாது,
பூமி வெடிக்கும்,
பொருளைத் தாங்காது விலகும்,
அறம் நேரான வழியில்
நடைபெறாது போகும்,
உலகம் பிழைக்குமா? தெய்வக் கற்பினளாய்
இவள் உணர்வு திரிந்து கோபம் அடைந்தால்;
இவள் சபித்தாலோ,
மலர் மேல் வீற்றிருக்கும் நான்முகனும்
இறந்துவிடுவான் அன்றோ.



10048.
'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு;
   ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, '
   'யாதும் ஓர்
பழிப்பு இலள்'' என்றனை; பழியும்
   இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன் - கருணை
   உள்ளத்தான்.

'நீ இந்த உலகத்துக்கு நீக்க முடியாத
சாட்சி ஆவாய்;
இகழ்ச்சிக்கு இடம் இல்லாத
உயர்ந்த வார்த்தைகளாற்
இவளை பாராட்டியிருக்கிறாய்;
யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள்
என்று உறுதி கூறியிருக்கிறாய்;
இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை;
எனவே இனி என்னால் இவள்
நீக்கத் தக்கவள் அல்லள்'
என்று கூறினான்,
அருள் உள்ளம் வாய்ந்த இராமன்;



10064.
'துறக்கும் தன்மையள் அல்லளால், 
   தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் 
   பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் 
   திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் - 
   வரதர்க்கும் வரதன்.

'உன்னால் கைவிடப்படக்கூடியவள் 
இல்லை இவள்;
எல்லா உலகங்களும் தோன்றுதற்கு 
அழகிய உதரத்தையுடைய மகாமாதா இவள்;
இவள் பிழை செய்வாளானால் 
எல்லா உயிர்களும்  இறந்துவிடும்;
இராமா, நீ  இவள் விஷயத்தில் 
அலட்சியம் காட்டுவது மறந்து விடத்தக்கது'
என்று கூறினான் வரம் தரும் கடவுளர்க்கு 
வரம் தரும் சிவபெருமான்.



( தொடரும் )



Monday, May 4, 2020

கம்பராமாயணம் 115


10007.
சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் கற்பு?' என்றாள்.


'என்னுடைய கற்பொழுக்கத்தை என்
கணவற்கு இயம்பி
என்  கணவனின் போர்க்கோலக் காட்சியை
யான்  பார்க்கும்படிச்  செய்து
நான் பிறந்த குலத்தையும் புகுந்த
குலத்தையும்  நிலைநிறுத்தி
இவ்வுலகத்தையும் இராவணனால்
அழியாதபடி  காத்த இவ்வனுமனுக்கு
வாழ்நாள் கரைந்து போகாது என்றும்
வாழ்வதாகிய சிரஞ்சீவித் தன்மையைத்
தரட்டும் என் கற்பு'
என்று சீதை ஆசி கூறினாள்.



10011.
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்.


கற்பிற்குக் காவலாக இருப்பவளை,
பெண்மைக்குக் காப்பிடமாக உள்ளவளை
அழகிற்கு அழகாய் விளங்குபவளை
புகழை இவ்வுலகில் நிலை நிறுத்தியவளை
தனியே நின்று தன்னைப் பிரிந்த உயிர்கட்கு
நல்லருள் செய்யும் தருமம் போன்றவளை
அன்பாய், தலைவன் நாயகன் இராமனும்
நன்றாகப் பார்த்தான்.


10013.
'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் 
   பாழ்பட, 
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் 
   மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் 
   தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ''எனை விரும்பும்''
   என்பதோ?

 
'அரக்கர் ஊரின் உணவு வகைகளை 
உண்டுக் கொண்டு நெடுநாள் இருந்தாய்;
ஒழுக்கம் அழிந்து போகும்படி 
சாகாமல் உயிருடன் இருந்தாய்; 
நீதிநெறியும் அறமுறையும் இல்லாத 
அரக்கனது இலங்கை நகரில் 
அவனுக்கு  அடங்கியிருந்தாய்;
பயம் இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது 
திரும்பி  வந்தது எதை எண்ணி ?
'என்னை இராமன் விரும்புவான்' 
என்பது உன் நினைவா?'
என்று இராமன் சீதையிடம் கேட்டான்.



10017.
'பெண்மையும், பெருமையும், பிறப்பும், 
   கற்பு எனும் 
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், 
   சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி 
   தோன்றலால், 
வண்மை இல் மன்னவன் புகழின், 
   மாய்ந்தவால். 

 
'பெண்மைக் குணங்களும் 
பெருமை குன்றாச் சிறப்பும் 
நற்குடிப் பிறப்பும், கற்பின் வலிமையும் 
சீரிய ஒழுக்கமும், அறிவுத்தெளிவும்,
மேன்மையும், சத்தியமும் ஆகிய எல்லாம்
சீதை என்னும் நீ ஒருத்தி தோன்றியபடியால்
கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் 
கெடுவது போல அடியோடு அழிந்தன'
என்று கூறினான்.



10028.
'ஆதலின், புறத்து இனி யாருக்காக என் 
கோது அறு தவத்தினைக் கூறிக் 
   காட்டுகேன்? 
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; 
   தக்கதே, 
வேத! நின் பணி; அது விதியும்' 
   என்றனள். 

'உலகியல்பு இவ்வாறு இருக்க 
நான் என்ன செய்ய முடியும்?
இனிமேல் யாருக்காக 
என் குற்றமற்ற தன்மையை  
நான் நிரூபிக்க வேண்டும் ?
சாவதைக் காட்டிலும் எனக்கு 
நற்பயன் வேறு எது தரக்கூடும்.
நீ இட்ட கட்டளையும் எனக்குத் 
தகுதியானதே, அப்படியே செய்யும்,
வேத வடிவினன் ஆகிய பெருமானே!
என் விதியும் இதுவாகவே 
இருக்கக்கூடும்' என்று சீதை கூறினாள்.



10029.
இளையவன் தனை அழைத்து, 'இடுதி
   , தீ' என 
வளை ஒலி முன் கையாள் வாயின் 
   கூறினாள்; 
உளைவுறு மனத்தவன் உலகம் 
   யாவுக்கும் 
களைகணைத் தொழ, அவன் கண்ணின் 
   கூறினான். 

ஒலிக்கின்ற வளையல் அணிந்த சீதை
இலக்குவனை அழைத்தாள்,
'நெருப்பை உண்டாக்கித் தருக' 
என்று சொன்னாள்,
வருந்துகின்ற மனத்தோடு இலக்குவன்
உலக துன்பம் நீக்க பற்றுக் கோடாக
உள்ள தமயன் இராமனை 
வணங்கி நின்றான்.
இராமன் தன் கண்ணின் குறிப்பினாலேயே 
நெருப்பிடக் கூறினான். 



( தொடரும் )

Sunday, May 3, 2020

கம்பராமாயணம் 114



மீட்சிப் படலம்

9953.
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.'*

சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடும்,
காற்றுக் கடவுள் மகனாகிய அனுமனோடும்
மற்றுள்ள குரங்கு வீரர்களோடு சென்று
முதற்கடவுளாகிய நாராயணன் தந்த
வேத  விதிப்படி
அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு
சிறந்த கிரீடத்தைச் சூட்டி அரசனாக்குவாய்'
என்று இராமன் இலக்குவனிடம் சொன்னான்.


9963.
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம் 
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது, 
இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத் 
தரும சீல!' என்றான் - மறை தந்துளான்.

உனக்கு உரிமையான இந்த அரசை,
மூன்று உலகத்தில் உள்ளாரும்  
உன்னை மதித்து வணங்குமாறு,
தேவர்களுடைய பெருமைக்கும்,
அரச நீதிக்கும், தரும வழிக்கும்
சிறிதும் மாறுபடாது 
இம்மைக்குப் புகழும் 
மறுமைக்குப் புண்ணியமும் 
தரத்தக்கதாக ஆள்வாயாக' என்று 
நான்கு வேதங்களையும் அருளிய
இராமபிரான் வீடணனுக்கு ஆசி கூறினான்.



9967.
'ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்! 
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச் 
சூழி யானை துகைத்தது, சோபனம்!' 


'மிக்க மங்களம் உண்டாகட்டும்,
அணிகலன்கள் அணிந்தவளே, மங்களம்;
நீ வாழ்க, வாழ்கவே, மங்களம்;
எல்லாம் இனி மங்களம்;
தீமைக்கு வரம்பாகிய இராவணனை,
மேன்மை மிக்க இராமன் என்ற யானை
அழித்   தொழித்தது,
இனி, எல்லார்க்கும் மங்களம் உண்டாகட்டும்'
என்று சீதையிடம் அனுமன் கூறினான்.


9988.
என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான் 
தன் துணைப் பெருந் தேவி தயா' எனா 
நின்ற காலை, நெடியவன், 'வீடண! 
சென்று தா, நம தேவியை, சீரொடும்.

'அரக்கியரை இம்சிக்காதே, விட்டுவிடு' 
என்று பிராட்டி கூறிய அளவில், 
அனுமன், 'இராமபிரானது ஒப்பற்ற 
பெருந்தேவி பிராட்டியின் கருணைத் 
தன்மையை வணங்கி  நின்ற  பொழுது;
அங்கே, இராமன், 'வீடணா, சீதையை 
சென்று  சிறப்போடும்  அழைத்து வருக' 
என்று கூறினான்.



9991.
'யான் இவண் இருந்த தன்மை, இமையவர் 
   குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், 
   குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், 
   காண்டல், மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது 
   அன்று - வீர!' 

(அலங்கரித்துக் கொண்டு வருக என்று 
வீடணன் கூற)

நான் இந்தச் சிறையில் இருந்த இயல்பினை
தேவர்கள் கூட்டம் காணவேண்டும்,
எம் தலைவன் இராமனும் காணவேண்டும்,
அங்குள்ள முனிவர்களுடைய குழுவும்
காணவேண்டும்,
தம் குலத்துக்கு ஏற்றவாறு உயர்ந்த கற்பின் 
மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்
காணவேண்டும்,
இதுவே சிறப்புடையதாகும்;
இதைவிடுத்து ஆடை அணிகலனோடு 
அலங்கரித்துக் கொண்டு வருதல் 
சிறந்தது அன்று, வீடணனே' 
என்று சீதை பதில் கூறினாள். 



 9992.
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு 
   இறைவன், நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் 
   குறிப்பு இது' என்றான்;
'நன்று' என நங்கை நேர்ந்தாள், நாயகக் 
   கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை 
   முதலோர், சேர


'அணிகலன் வேண்டாம்' என்று 
சொன்னாள் சீதை;
அது கேட்ட அரக்க அரசனாகிய வீடணன்,
'நீலமலை போன்ற தோள்களை உடைய
இராமபிரானது கட்டளையின் குறிப்பு, 
இக் கோலம் பூணுதல்' என்று சொன்னான்; 
அது  கேட்ட  பிராட்டி, 'நல்லது' என்று கூறி 
உடன்பட்டாள்; 
தேவர் உலகத்துள்ள திலோத்தமை 
முதலாகிய தெய்வ மகளிர் ஒன்று சேர்ந்து 
பிராட்டிக்கு அழகிய அலங்காரம் செய்ய 
அவள்பால் சென்றனர்.


( தொடரும் )

Saturday, May 2, 2020

கம்பராமாயணம் 113



9923.
''அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;
   உலகுக்கு ஓர் அன்னை'' என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்;\
   அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில்
   படக் கண்டும், உறவு ஆகாதே,
பொன்றினையே! இராகவன்தன் புய வலியை
   இன்று அறிந்து, போயினாயோ!''


முன்னொரு காலத்தில், உன்னைச் சபித்து
தீயில் விழுந்த வேதவதி,
அவளே உலகத்துக்கெல்லாம் தாயாகி
சீதையாக வந்துள்ளாள் என்று சொன்னேனே,
மலை போன்ற பெருந்தோள் உடையவனே,
அவ்வுரையை மனத்துட் கொள்ளாது
எனை இகழ்ந்தாயே,
உன்னுடைய குலம் முழுவதும் அழிந்தும்,
போரில் சினந்து, மடிதலைக் கண்டும்,
இராமபிரானோடு நட்பு கொள்ளாதிருந்தாயே,
இறுதி வரையில் அவனைப் பகையாகக்
கொண்டு அழிந்து ஒழிந்தாயே,
இராமனுடைய தோள்வலியை, இன்று
சாகும்போது அறிந்துகொண்ட
போயிருக்கிறாயோ!'
என்று கூறி வீடணன் அழுதான்.


9939.
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு
   அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த
   கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ?
   படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார்
   முடிந்த பரிசு! இதுவோ பாவம்!


'அம்ம! கொடியவளான எனக்கு வந்துள்ள
நிலைமையை என்னென்று சொல்வேன்;
இராக்கதர் தலைவனாகிய இராவணன்
இறந்த பிறகா நான் இறப்பேன் ?
முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து வந்த
கொள்கைகளில் இதையும் கைவிட்டேன்?
என் கண்கள் எதிரிலேயே என் கணவரின்
மகுடத் தலைகள் விழுந்தனவோ?
மண் மேல் கிடப்பவை
என் உயிர்க் கணவனின் தலைகள் தானோ?
இல்லை வேறெதுவோ ?என்னென்பேன்,
உலகைக் கலக்கிய இராவணனார் வாழ்வு
இத்தகையதாகவா முடியவேண்டும்?
பாவம்! பாவம்!' என்று கூறிக்
கதறி அழுதாள் மண்டோதரி.


9946.
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.


பலவாறு கூறி, கூவி அழுதாள்;
ஏக்கமுற்று எழுந்தாள்;
அந்த இராவணனின் பொன் அணிகள்
கிடக்கும் ஒப்பற்ற வீர மார்பினைத், தன்
தளிர் போன்ற கரங்களால் தழுவினாள்;
தனித்து நின்று அவன் பெயரைச் சொல்லி
அழைத்தாள்; பெருமூச்சு விட்டவளாய்
உயிர் நீத்தாள் மண்டோதரி.



9949.
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு 
உடைந்து போன மயன் மகளோடு உடன் 
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - 
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 
இறுதிக் கடன்களையெல்லாம்
செய்து முடித்த வீடணன் 
கணவனுடனே,  நெஞ்சம் உடைந்து மாண்ட 
மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; 
(இராவணன் உடல் அடங்குமாறு 
கொடுந்தீக்கு உணவாக்கினான்.
குடம் கொண்ட  நீரை விட மிகுதியாகக்  
கண்ணீர் சிந்தினான்.



( தொடரும் )

Friday, May 1, 2020

கம்பராமாயணம் 112


இராவணன் வதைப் படலம்


9706.
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும்,
   'அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய்
   மடித்து எயிறு தின்றான்;
பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப்
   பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன்
   மேல் விடுதி' என்றான்.

இராமன் ஏறி வந்தத் தேரைத் தன்
கண்களால் இராவணன்  பார்த்தான்;
'பெரிய  தேரைத்  தேவர்கள்
கொடுத்திருப்பர்' எனக் கருதினான்;
உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
'அது கிடக்கட்டும்' என்று அலட்சியம் செய்தான்;
தன்னுடைய பெரிய வலிமையான தேரை
வில்லை ஏந்திய இராமனை நோக்கிச்
செலுத்து என்று கட்டளையிட்டான்.


9712.
'அம்புயம் அனைய கண்ணன் தன்னை
   யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத்
   தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை
   கொற்றம்' என்றான்;
வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்'
   என்று, அவனின் மீண்டான்.


'செந்தாமரை போன்ற கண்களை உடைய
இராமனை
ஆண் சிங்கம் யானையை அழித்தது என்று
சொல்லும்படியாக
நான் அழித்தொழிப்பேன்;
இணை பிரியாது நிற்கும் தம்பியை
நீ போரிட்டுத் தடுப்பாயானால்
வெற்றி தேடித் தந்தவனாவாய்' என்று
இராவணன் தளபதி மகோதரனிடம் கூறினான்;
அரக்கன் மகோதரனும் 'அவ்வாறே செய்வேன்'
என்று கூறி, திரும்பிச் சென்றான்.


9837.
'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்;
   திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம்
   அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன்
   அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?'
   என்றான்.

'இந்த இராமன் சிவபெருமானோ? இருக்காது,
திருமால் தானோ இவன், இருக்காது,
என்னுடைய மிகச்சிறந்த ஆயுத பலங்களை
எல்லாம்  அழிக்கின்றான்;
தவம் செய்து ஆற்றல் பெற்றிருப்பானோ ?
ஆனால் இத்தகைய பேராற்றலைத் தவத்தால்
செய்து முடிக்கும் தகுதியுடையவன்
ஒருவனும் இல்லை;
வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான
ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?'
என்று கூறி வியந்து நின்றான் இராவணன்.



9869.
மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், 
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய 
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 


மேகம் போன்ற நிறத்தை ஒத்த 
மார்பிலும் தோளிலும்;
விடம் போன்ற கண்களிலும் நாவிலும்
வஞ்சகன் இராவணன் உடம்பினை 
அம்புகளை விடுத்து, 
நீண்ட அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற
தூணி என்று கூறும் படி செய்தான்.



9876.
'படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் 
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ? 
கடை துறந்தது போர், என் கருத்து' என்றான். 


'போர்க் கருவிகளை இழந்தான், 
நினைவிழந்து கிடக்கின்றான், 
அழிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றான்,
இந்த சமயத்தில், போர் நீதியின் 
ஒழுக்கத்திலிருந்து விலகி;
உயிரைக் கொள்வது அறம் ஆகுமோ? 
கொஞ்ச நேரம் விலகியிருப்பது தான் 
போர் நெறியாகும், இதுவே நான் எண்ணுவது'
என்று இராமன் கூறினான்.



9899.
முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
   பெருந் தவமும், முதல்வன், முன்நாள், 
என் கோடியாராலும் வெலப்படாய்' 
   எனக் கொடுத்த வரமும், ஏனைத் 
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் 
   கடந்த புய வலியும், தின்று, மார்பில் 
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று 
   இராகவன்தன் புனித வாளி. 


இராவணனுடைய மூன்று  கோடி ஆயுளையும்
தவம் செய்துப் பெற்றிருந்த பயனையும்; 
நான்முகன் முன் காலத்தில், 
தேவர்களில் எந்த வரிசையைச் சேர்ந்தோர் 
ஆனாலும் அவர்களால் நீ வெல்லப்பட 
மாட்டாய் என்று தந்த வரத்தையும் 
மற்றும் திசைகளையும்,
தோள் ஆற்றலையும்; தோற்கடித்து விட்டு,
இராவணனுடைய மார்பில் நுழைந்து, 
உடல் எங்கும் சுழன்று உயிரைக் குடித்து 
வெளியே சென்றது.
இராமபிரான் செலுத்திய தூய்மை
நிறைந்த பிரம்மாத்திரம்; 



( தொடரும் )