Thursday, April 30, 2020

கம்பராமாயணம் 111


9480.
அய் - இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
'எய்' எனும் மாத்திரத்து, அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே.

பத்துக் கோடி அரக்க அரசர்களும்
வலிமை செறிந்த அரக்க வீரர்களும்
முழுமையாக அழிந்திட
எய் என்று சொல்லும் நொடி அளவில்
சிறந்த தவம் பல செய்த இராவணனது
மூல பலப் படை அழிந்துவிட்டது
என்று சொல்வார்கள்.


9526.
தாய், 'படைத்துடைய செல்வம் ஈக!' என,
   தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர்
   தவத்தின் மேவி,
தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர்
   துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம்
   வாழ்த்தினார், வணக்கம் செய்தார்.


தாய் கைகேயி, 'உனக்கு உரியதாக வந்த
செல்வத்தைக் கொடுத்துவிடு' என்று
சொல்ல தம்பி பரதனுக்குத் தந்தவனை,
மூங்கில்கள் வளர்ந்துள்ள காட்டுக்கு
தேவர்கள் செய்த தவத்தால் வந்தவனை,
தன் போர்த்திறத்தால் எல்லாருடைய
துயரையும் போக்கியவனை,
வாய் உள்ளோர் அனைவரும்
வாழ்த்தி வணங்கினர்.


இராவணன் தேர் ஏறு படலம்

9642.
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச்
   செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை
   முறையின் நோக்கி,
' ''ஏது உளது இறந்திலாதது இலங்கையுள்
   இருந்த சேனை
யாதையும் எழுக!'' என்று ஆனை மணி முரசு
   எற்றுக!' என்றான்.


மலை  போன்ற உடலை உடையவனை,
கரிய புருவங்களையுடையவனை ,
செந்தீ போன்றவனை,
மகோதரன் எனும் பெயருள்ள ஒருவனை
அழைத்தான் இராவணன்.
'சாவாத சேனை எது உள்ளது? இலங்கைக்குள்
இன்னும் மீதி இருக்கும் படை அனைத்தும்
எழுக' என யானை மீது ஏறி முரசை அடிக்க
ஆணையிட்டான்.



9676.
'எழுந்து வந்தனன் இராவணன்; 
   இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தி வந்து உற்றது; 
   கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் 
   அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், 
   விரைவான்.
 
'இராவணன் தன் படையுடன் புறப்பட்டு 
வந்திருக்கிறான்;
அரக்கர் படையின் முன்னணிப்படை 
வந்தடைந்தது; 
வெற்றி கொண்ட இராமா !
நம்படை எதிரிகளைக் கண்டு 
நடுங்குகிறது;
தேவர்களும் பயம் கொள்கின்றனர்'
என்று விரைந்து வந்த வீடணன், கூறினான். 



இராமன் தேர் ஏறு படலம்

9681.
'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; 
   இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் 
   அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் 
   தேர்
ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் 
   இசைத்தான்.

'தொடங்கிய இந்தப் போர் இன்றோடு 
முடிந்துவிடும்; 
இனிமேல் வெற்றி ஆண்மையாளனான 
இராமனுக்கே உரியது; 
இனிமேல் நீங்கள் அச்சம் கொள்ள
அவசியமில்லை ;
மணிகள் கட்டிய, வலிமை கொண்ட 
குதிரைகள் பூட்டிய, உயர்ந்த தேரினை,
விரைவில் 
இராமனுக்கு அனுப்புங்கள், தேவர்களே!'
என்று சிவபெருமான் கூறினான். 


( தொடரும் )

Wednesday, April 29, 2020

கம்பராமாயணம் 110


இராவணன் சோகப் படலம்


9188.
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார், -
'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச்
சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார்.

(போர்க்களத்திலிருந்து கெட்ட செய்தி
கொண்டுவந்த தூதுவர்களுக்கு,)
பற்களும், வாயும் மனமும் பாதமும்
நடுக்கமுற்றன
உயிர் பயம் உண்டாகின;
அச்சம் சூழ்ந்து கொள்ள கலங்கினர்;
நிலைதடுமாறினர்;
(இறந்து விட்டான் என்று கூறப் பயந்து)
'உன் மகன் இன்று இல்லாமற் போனான்'
என்று இராவணனிடம் கூறினர்.


9219.
கண்டிலன் தலை; 'காந்தி, அம் 
   மானிடன்
கொண்டு இறந்தனன்' என்பது 
   கொண்டவன், 
புண் திறந்தன நெஞ்சன், பொருமலன், 
விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 
 
(இந்திரசித்தின்  கையையும் உடம்பையும் 
கண்ட இராவணன்) 
தலையைக் காணாது மனம் எரிந்தான். 
இலக்குவன் எடுத்துச் சென்றனன் என்று 
அறிந்து கொண்டான்.
புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு 
பொருமுனான். 
விண்முகடு பிளக்குமாறு விம்மி விம்மி 
வாய்திறந்து அழத் தொடங்கினான்.


9230.
தலையின் மேல் சுமந்த கையள், 
   தழலின்மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளன், 
   நேசத்தால் நிறைந்த நெஞ்சள்,
கொலையின் மேல் குறித்த வேடன் 
   கூர்ங் கணை உயிரைக் கொள்ள,
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன, 
   மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.

 
தலையின் மேல் கையை வைத்தவளாய், 
நெருப்பின் மேல் நிற்பவள் போல 
நிலையாக உள்ள தரையின் மேல் 
நிலையில்லாது பதைபதைக்கும் 
பாதங்களை உடையவளாய் 
மகன் மேல் வைத்த பேரன்பினால் 
துக்கத்தால்  நிறைந்த நெஞ்சுடையவளாய், 
கொலை செய்தவர்க்கென்று எய்திய 
கூரிய அம்பு உயிரை வாங்க
ஒரு மயில் மலையின் மேல் வீழ்ந்தாற்போல
மகனது உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள்,
மண்டோதரி. 
 


மூலபல வதைப் படலம்

9299.
'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு 
   வழி சென்று,
ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; 
   நீயிர் போய், ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறிர் 
   என்று அறைந்தான் -
தானவப் பெருங் கரிகளை வாள் 
   கொண்டு தடிந்தான்.

'நான் ஒரு பக்கம் போகிறேன்; 
வானரப்  பெரும்படைகளை, உடல்கள் 
சிதையும்படி வெட்டி உயிர் குடிக்கிறேன்;
நீங்களனைவரும் ஒன்றாகச் செல்லுங்கள்;
வானரர் தவிர இராம இலக்குமனர் 
இருவரையும் கொல்லுங்கள்' 
என்று கட்டளையிட்டான் இராவணன்.
 

9359.
'மாருதியோடு நீயும், வானரக்கோனும், 
   வல்லே, 
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் 
   தனிமை  பேணிச்
சோருதிர்என்னின், வெம் போர் தோற்றும், 
   நாம்' என்னச்சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் 
   விளம்பலுற்றான்:

 
'அனுமனோடு சேர்ந்து சுக்கிரீவனும் நீயும்
வானரப் படையைக் காப்பதற்கு 
விரைவாகப் புறப்படுங்கள்; 
மூலப் படையை நான் பார்த்துக் 
கொள்கிறேன்;
என் தனிமையைப் பெரிதாக எண்ணி 
தளர்வீர்களானால், 
நாம் இந்தப் போரிலே தோற்க நேரிடும்'
என்று இராமன் சொன்னான்; 

( தொடரும் )

Tuesday, April 28, 2020

கம்பராமாயணம் 109


8932.
‘இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென்,
   என் கண் ஆர;
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு
   உண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை
   மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற
   முடிக்க மூண்டான்.’


“சீதை அசோகவனத்தில் இருக்கிறாள்,
என் கண்களால் கண்டதையே சொல்கிறேன்;
அருந்ததி போன்ற கற்பினை உடைய
சீதைக்கு அழிவும் வருவதுண்டோ?
இந்திரசித்து மாயங்களைச் செய்து நம்மை
ஏமாற்றியிருக்கிறான்;
நமக்குக் போக்குக்காட்டி விட்டு, நிகும்பலை
கோயிலில் புகுந்திருக்கிறான்;
எல்லாவற்றையும் அழிக்க வல்ல
வேள்வியைச் செய்து முடித்து நம்மை
அடியோடு அழிக்க மூண்டுள்ளான்”
என்று வீடணன் இராமனிடம் கூறினான்.


நிகும்பலை யாகப் படலம்


8935.
என்றலும், இறைஞ்சி, ‘யாகம் முற்றுமேல்,
   யாரும் வெல்லார்
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்;
   இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும்
   சிதைப்பென்’ என்றான்;
‘நன்று அது; புரிதிர்!’ என்னா, நாயகன்
   நவில்வதானான்:


இராமன் வீடணனை பாராட்ட,
அவனும் வணங்கி, இந்த வேள்வி
நிறைவுறுமானால் இந்திரசித்தை
யாரும் அழிக்க முடியாது;
வெற்றியும் அரக்கர் பக்கம் போய்விடும்;
ஆகவே எங்களுக்கு அனுமதி தந்திடு;
இலக்குவனோடும் சென்று அவனது
உயிரை  உண்டு அவ் வேள்வியினையும்
அழிப்பேன் என்று கூறினான்;
தலைவனாகிய இராமனும் ‘நல்லது!
அதனைச் செய்யுங்கள்! என்று கூறினான்.






8977.
மலைகளும், மழைகளும், வான 
   மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த 
   ஆம் என,
உலை கொள் வெங் கனல் பொதி 
   ஓமம் உற்றலால்,
தலைகளும் உடல்களும் சரமும் 
   தாவுவ.

ஊழிக்காலத்துக் கடுங்காற்றில் 
தாக்கப்பட்டது போல,
மலைகளும், மேகங்களும், விண்மீன்களும்
நிலை பெயர்ந்து அழிந்து வீழ,
இலக்குவன் எய்த அம்புகள் பாய, 
அரக்கர்களின் தலைகளும் உடல்களும்
அறுபட்டு,
வெம்மை மிக்க தீ நிறைந்த 
ஓம குண்டத்தில் வீழ்ந்தன.



இந்திரசித்து வதைப் படலம்

9147.
‘தேரினைக் கடாவி, வானில் செல்லினும்
   செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும்
   புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்தும் வஞ்சம், கருதினும்
   கருதும், காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன்
   இருளின், வெய்யோன்.


'தேரினைச் செலுத்திக்கொண்டு
வானில் சென்றாலும் செல்வான் இவன்;
நேரே செய்யும் போரை விடுத்து, மாயச்
செயல்களைச் செய்யக்கூடியவன் இவன்;
விண்ணில் போய் அந்த மேகத்தில் கலந்து
வஞ்சனைச் செயல்கள் செய்வான் இவன்;
வீரனே!  உன் கருத்தில் கொள்,
கொடியனாகிய இந்த இந்திரசித்து
பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்;
இது உண்மை' என்று வீடணன் கூறினான்.


9167.
நேமியும், குலிச வேலும், நெற்றியின்
   நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன்
   படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன்
   சிரத்தைத் தள்ளி,
பூ மழை அமரர் சிந்த, பொலிந்தது-அப்
   பகழிப் புத்தேள்.

(இராமனைத் துதித்து இலக்குவன்
அம்பு தொடுக்க )

திருமாலின் சக்கரப்படையும்,
இந்திரனின் வச்சிரப்படையும்; 
நெற்றியில் நெருப்புக் கண்ணை உடைய
உருத்திரனின் அஞ்சத்தக்க  சூலவேலும்;
பிரமனின் பிரமாத்திரமும் நாணுமாறு;
முனையில் நெருப்பு பற்றி எரியும்
விரைந்து சென்று அந்த இந்திரசித்தின்
தலையை அறுத்துத் தள்ளியது;
தேவர்கள் மலர்மாரி சொரிய நின்றது,
இலக்குவன்  விடுத்த அந்த அம்பு;



9174.
ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் 
   தன் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் 
   தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே 
   தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் 
   இளவல் போனான்.
உடம்பிலிருந்து அறுபட்டு விழுந்த 
இந்திரசித்தின் தலையை,  
மனமகிழ்ச்சி பொங்க அங்கதன் தன் கையில்  
தூக்கிக்  கொண்டு முன்னே செல்ல,
விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் 
கூட்டம், சொரிகின்ற  மலர்ப் பந்தல் நிழலில்,
இலக்குவன் அனுமன் தோள் மேலமர்ந்து,
எல்லோரும் இராமன் இருக்குமிடம் சென்றனர்.



( தொடரும் )

Monday, April 27, 2020

கம்பராமாயணம் 108


மாயா சீதைப் படலம்


8852.
‘அனையது வேறு நிற்க; அன்னது
   பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது
   வீழ்க! வீர!
இனையல் நீ; மூண்டு யான் போய்,
   நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால்,
   முடியும், துன்பம்.

இராமன் தெய்வம் என்ற உண்மை
ஒருபுறம் இருக்கட்டும்;
அத்தகு  உண்மைகளைக்  கூறித்
தயங்குதல் போராண்மை அன்று;
போரில் எதிர்த்து நின்று வீ்ழ்ந்தவர்கள்
வீழட்டும்; வீர! நீ, அது பற்றி வருந்தாதே!
இப்போதே நான் சென்று
நிகும்பலை கோயிலை அடைந்து
ஆற்றலுடைய வேள்வியை விரைந்து
செய்ய, உன் துன்பம் அதனால் தீரும்'
என்று இந்திரசித் இராவணனிடம் கூறினான்.



8854.
‘சானகி உருவமாகச் சமைத்து, அவள்
   தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே, வாளினால்
   கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்தி
   மேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர்
   துயரம் பூண்பார்.

(வேள்விக்கு பகைவர் இடையூறு
இல்லாதிருக்க)

சீதையின் உருவம் போல மாய உருவம்
ஒன்று செய்வோம்;
அவளை ஏற்கனவே ஒருமுறை கண்ட
அனுமன் காணும்படி இந்த மாய சீதையைக்
கொல்வோம்;
கொன்று, பின் நான் நெடிய சேனையோடு
அயோத்தி நோக்கி போகின்றேன்
என்ற செய்தி சொல்வோம்;
அத்திசை நோககிப்  போனதாய்ப் போக்கு
காட்டுவோம்;
நம் எதிரிகள் ஒன்றும் புரியாது துயரம் கொள்ள,
இதற்கிடையில் நான் வேள்வி முடிப்பேன்'
என்று இந்திரசித் தன் திட்டத்தைக் கூறினான்.


8870.
‘கண்டவளே இவள்’ என்பது கண்டான்,
‘விண்டதுபோலும், நம் வாழ்வு’ என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
‘உண்டு உயிரோ!’ என, வாயும் உலர்ந்தான்.


(இலங்கையை எரியூட்ட வந்த வானர வீரரும்,
அனுமனும், இந்திரசித் சீதையைக் கொல்வதைக்
கண்டனர்)

அனுமன், முன்பு அசோகவனத்தில் தான்
கண்ட சீதை இவளே என்று உணர்ந்தான்;
‘நம்வாழ்வு அழிந்ததோ' என்று மனம் வெந்தான்;
சீதையை அரக்கனிடமிருந்து விடுவிப்பது
எப்படி என்று அறியாது திகைத்தான்.
உயிர்  உண்டா எனக் கண்டவர் ஐயுறுமாறு
வாய் உலர நின்றான்..


8926.
 ‘பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன்
   படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய்
   முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல்
   போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம்,
   சிறிது போழ்தின்.


'பத்தினி சீதையைப் பாதகன் இந்திரசித்து
தீண்டிக் கொன்றிருப்பானாயின்,
அக்கணமே மூன்று உலகங்களும் வெந்து
சாம்பல் ஆகியிருக்குமன்றோ?
அந்நிகழ்ச்சி உண்மையாக நடந்தது
என்றாலும்
இந்திரசித்து அயோத்தி போனான்
என்பதெல்லாம்
அதிசயமானது, இதையெல்லாம்  இன்னும்
சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்'
என்று வீடணன் கூறினான்.


8928.
வண்டினது  உருவம் கொண்டான்,
   மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கை தன்னைப்
   பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்
   கருத்தில் ‘ஆவி
உண்டு, இலை’ என்ன நின்ற, ஓவியம்
   ஒக்கின்றாளை.


வண்டினது உருவத்தைக் கொண்டான்.
இராமனது மனத்தைப்  போல் வேகமாய்ப்
பறந்தான்;
அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை
விரைந்து அடைந்தான்
'உயிர்  உண்டு, இல்லை என்று ஐயுறுமாறு
இருக்கின்ற, ஓவியம்  போன்ற சீதையை,
வீடணன் தானே தன் கண்களினால்
கண்டான்.


( தொடரும் )

Sunday, April 26, 2020

கம்பராமாயணம் 107


மருத்துமலைப் படலம்


8704.
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ்
   உலகினைப் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர
   வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை;
   விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான்,
   உணர்வு தீர்ந்தான்


வீடணன் வந்தான்,
போர்களத்துக் காட்சிகளைக் கண்டான்,
வானரவீரர் எல்லோரும் தாக்கப்பட்டுக்
கிடக்கும் நிலையைக் கண்டான்,
இவ் உலகத்தைப் படைத்தவன் சாபத்தால்
மாண்டனரோ என்று சிந்தித்தான்.
தானே விடத்தை எடுத்துக் குடித்தவன்
போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்,
மயங்கி உணர்வு நீங்கினான்.



8713.
கண்டு, தன் கண்களூடு மழை எனக்
   கலுழி வார,
'உண்டு உயிர்' என்பது உன்னி, உடற்
   கணை ஒன்று ஒன்று ஆக,
விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென
   விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல
   முகத்தினைக் குளிரச் செய்தான்


வீடணன் போர்க்களத்தில் அனுமனையும்
கண்டான்,
தன் விழிகளிலிருந்து மழை போன்று
கண்ணீர் பெருக்கினான்.
அனுமான் இறக்கவில்லை, உயிர் உண்டு
என்று அனுமானித்தான்.
உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகாத
இடத்திலிருந்து அம்புகளை நீக்கினான்.
தண்ணீரைக் கொண்டு வந்து
அனுமானின் அழகிய முகத்தைக்
குளிரச் செய்தான்.



8729.
'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
   உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
   படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
   மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்
   தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.


'இறந்தவர்களை எழுப்பும் மருந்து
ஒன்றுண்டு;
உடல் அறுபட்டவர்களை ஒன்றிணைத்து
ஒட்டச் செய்யும் மருந்து ஒன்றுண்டு;
அம்புகள் தைத்திருக்கும் இடங்களை
சரி செய்யும் மருந்து ஒன்றுண்டு;
மீண்டும் உருவை திருப்பித் தரும்
மருந்தும் ஒன்றுண்டு;
அனுமனே, வீரனே, நீ உடனே சென்று
இவற்றைக் கொண்டுவா' என்றான்,
அவற்றின் அடையாளங்களையும் சொல்லி
அனுப்பினான், அறிவு நிறைந்த சாம்பவான்.



8763.
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை 
   பாதலத்துச் 
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, 
   தடுத்து வந்து, 
காய்ந்தது, 'நீதான் யாவன்? கருத்து 
   என்கொல்? கழறுக!' என்ன, 
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு 
   அறியச் சொன்னான்.


நீலமலை தாண்டி மருத்துமலை கண்டான்,
கண்டதும் பாய்ந்தான், பாய்ந்த வேகத்தில் 
அம்மலை பாதாளத்தினுள் சாய்ந்தது,
அதற்கு காவலாக இருந்த தெய்வங்கள் 
கோபம் கொண்டனர்,
அனுமானைத் தடுத்து நிறுத்தினர்,
'யார் நீ? என்ன செய்ய முயலுகிறாய், சொல்'
என்று கேட்டனர்.
அனுமானும் தன் வந்த  காரணத்தை
அவர்களுக்கு புரியுமாறு சொன்னான்.


8802.
காற்று வந்து அசைத்தலும், கடவுள் நாட்டவர் 
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் 
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார், 
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்


அனுமன் மருத்துமலையோடு போர்க்களம் வர 
அந்த மலையின் மேலிருந்து வீசிய காற்று 
இறந்தவர்களை உயிர்ப்பிக்க,
விருந்து  உண்ண வானுலகம் சென்ற 
வானர வீரர்கள் திரும்பி வந்தனர்,
பெரும் வலிமையோடு அழகோடு விளங்கினர்,
எமனை வென்று தம் உருவம் பெற்றனர்.



8817.
'உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார், 
பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்; 
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய் 
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!' 

நீ கொண்டு வந்த மருந்து உதவியது,
இம்மலை இங்கேயே இருந்தால் 
நம் பகைவர்களும் மீண்டும் உயிர் பெறுவர்,
அதனால் இதனை இப்பொழுதே 
பெயர்த்து எடுத்த இடத்தில் வைத்துவிட்டு 
சீக்கிரம் திரும்பிடு! ஆற்றல் மிக்கவனே'
என்று சாம்பவன் அனுமானிடம் சொன்னான்.


( தொடரும் )

Saturday, April 25, 2020

கம்பராமாயணம் 106



8626.
‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று
   இராவணன் இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல்,
   தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன்
   சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’
   என்றான், மதலை.
 
(போர்க்கள நிகழ்ச்சிகளை இந்திரசித் கூற)
‘இராமன் இறக்கவில்லையோ?’  என்று 
இராவணன் கேட்டான்;
‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு
எங்கேயோ சென்று விட்டான்; 
அவ்வாறு செல்லாதிருந்தால்,
அவன் தம்பியைக் கொன்று
அவன் நண்பர்களை எல்லாம் கொன்று
அவனுடைய சேனையையும் சிதைத்த அத்திரம்,
அவனை மட்டும் விட்டுவிடுமா ?'
என்று  மறுமொழி கூறினான்
மைந்தன் இந்திரசித்து.



8638.
பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர்
   முற்றும் புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக்
   குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர,
   சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.

(தன் வழிபாடுகளை முடித்துவிட்டு
வந்த இராமன்)

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் தம்பியையும்
சேனைகளையும் கண்டு மனம் வருந்தினான்;
கோபம் மிகுந்திடக் கண்டான்; 
நீலமணி போன்ற அழகிய உடலும்
உள்ளம் போல நடுங்கக் கண்டான்;
அறக்கடவுள் இராமனின் துன்ப நிலை
கண்டு இரங்கி  தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்த,
இராமன் நிலத்தில் சாய்ந்தான்;
இடியினால்  தாக்கப்பட்டதொரு மராமரத்தை
ஒத்துத் தரையில் வீழ்ந்தான்.



சீதை களம் காண் படலம்


8672.
அந்த நெறியை அவர் செய்ய,
     அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
     முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
     சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
     அடங்கக் கடலினுள் இட்டான்.

வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று
இராவணன்  இட்ட பணியில்
ஒரு சாரார் ஈடுபட, இதனிடையில்
மருத்தன் என்னும் அரக்கனை அழைத்தான்;
"முதலில் நீ சென்று, இறந்து  கிடக்கும் 
அரக்க உடல்கள் அனைத்தையும் கடலில் வீசு";
இந்த விசயத்தை வேறு யாரேனும் அறிந்தால்
உன் தலை, தவப்பயன் அனைத்தையும்
அழித்து விடுவேன்' என்று கூறி அனுப்பினான்;
அந்த மருத்தனும் சென்று அரக்கர் உடல்
முழுவதையும் கடலில் போட்டான்.


8673.
‘தெய்வ மானத்திடை ஏற்றி
   மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
   கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
   அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும்
   போர்க் களத்தின்மிசை உய்த்தார்.

இராவணன் சீதைக்குக் காவலாய்
இருக்கும் அரக்கியரை அழைத்தான்;
'சீதையைத் தெய்வத்தன்மையை
உடைய புட்பக விமானத்தில் ஏற்றி,
இராம இலக்குமனர்க்கு நேர்ந்த கதியை
காட்டுங்கள்;
தன் கண்ணால் காணாது ஐயப்பாடு 
நீங்காள்' என்று கூறினான்;
அரக்கியர்கள் ஆரவாரித்தனர்;
இவ்வுலகில் வாழ ஆசையற்ற  சீதையை
போர்க்களத்துக்கு வான் வழியே
அழைத்துச் சென்றார்கள்,



8679.
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
     வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
     நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
     கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
     சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;

விழுந்தாள்; புரண்டாள், உடல் முழுதும்
வியர்த்தாள்; பெருமூச்சு விட்டாள், மனம்
வெதும்பினாள்; எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
தனது கரங்களை நெரித்துக் கொண்டாள்,
தன் நிலையை எண்ணிச் சிரித்தாள்,
ஏங்கினாள்;  இலக்குவனைப்  பார்த்துக்
‘கொழுந்தா!’ என்று கூவினாள்; இராமனைப்
பார்த்து, ‘அயோத்தி நகரத்தவரின்  அரசே!’ 
என்றாள். ‘எவ்வுலகத்தவரும் வந்து
தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ 
என்று அழைத்தாள்; சோர்ந்தாள்,  பின்பு வாய்
திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!


8695.
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு 
   ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் 
   வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; 
   உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-
   மண்ணில் வந்தாய்!

பூமியிலிருந்து தோன்றியவளே!  
சக்கரப்படைக்கு உரியவனாகிய இராமனது
உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை 
என்பதை மென்மையான உள்ளமுடைய நீ 
காண்கிறாயல்லவோ?
அம்புபட்டிருந்தாலும், இலக்குவனின் முகம்
இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும் 
சூரியன் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; 
எனவே நிறைய நாள் வாழப்போகும் 
அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; 
அவர்கள் இறந்தார்கள் என்று வீணாக நீயே 
நினைத்துக்கொள்ளாதே !' என்று திரிசடை 
சீதைக்கு ஆறுதல் கூறினாள்.



( தொடரும் )


Friday, April 24, 2020

கம்பராமாயணம் 105


பிரமாத்திரப் படலம்


8443.
வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர்
   மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு
   குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர்
   பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும்
   காண்பர்' என்றான்

வணங்கினான்,
உன் மக்கள் மாண்டனர் என்று நீ
மன வருத்தம் கொள்ள வேண்டாம்
என ஆறுதல் கூறினான்,
இன்று பார், குரங்குச் சேனையை
பிணக்குவியல் ஆக்குகிறேன் என்றுரைத்தான்,
அந்த இராம இலக்குமார்களின்
உயிரற்ற உடலை சீதையும் தேவர்களும்
காணும்படி செய்கிறேன்
என்று இராவணனிடம் கூறிவிட்டுப்
போருக்குக் கிளம்பினான் இந்திரசித்.


8458.
மாருதி அலங்கல் மாலை மணி அணி
    வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு
   சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்;
   அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர்,
   இடைவிடாமல்.

அனுமனின் மாலையும் மணியும் அணிந்த
தோள் மேல் இராமன் ஏற
வாலி மகன் அங்கதனின் சிகரம் போன்ற
தோள் மேல் இலக்குவன் ஏறிக்கொள்ள
தேவர்கள் அதைக் கண்டு வாழ்த்தினர்,
மலர்களை மழையாகப் பொழிந்தனர்.



8521.
ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை 
   வழா தாய்! 
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், 
   இவ் உலகம் 
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது' 
   என்றான், 
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் 
   தம்பி.


பிரம்மாத்திரத்தை எய்துகிறேன் என்று 
இலக்குவன் சொல்ல,
'தருமத்தின் வழி தவறாதவனே,
பிரம்மாத்திரத்தை நீ ஏவினாய் எனில், 
இந்திரசித்தை மட்டும் கொல்லாது,
அது மூன்று உலகையும் சுட்டழிக்கும் 
ஆற்றல் உள்ளது' 
என்று அறிவுறுத்தினான் இராமன்;
நல்லுணர்வு நிறைந்த இலக்குவனும் 
பிரம்மாத்திரத்தை ஏய்தாது தவிர்த்தான்.



8522.
மறைந்துபோய் நின்ற வஞ்சனும், 
   அவருடைய மனத்தை 
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் 
   தொடுப்பதற்கு அமைந்தான், 
'பிறிந்து போவதே கருமம், இப்பொழுது' 
   எனப் பெயர்ந்தான்; 
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், 
   சிரித்தார். 

மேகத்தினிடையிலிருந்து போர் செய்த   
வஞ்சகன் மேகநாதன்,
இராம இலக்குமணர் மனக்கருத்தை 
அறிந்து கொண்டான்.
பிரம்மாத்திரத்தை தான் ஏவுதற்கு 
தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.
'இப்போதைக்கு இடம் பெயர்கிறேன்,
அதுவே நல்லது' என்று எண்ணி 
மறைந்துகொண்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த 
தேவர்கள் சிரித்தனர்.



8610.
இன்ன காலையின் இலக்குவன் மேனி 
   மேல் எய்தான், 
முன்னை நான்முகன் படைக்கலம்; 
   இமைப்பதன் முன்னம், 
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் 
   மொய்ப்பது போல, 
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் 
   கணை பாய்ந்த.

இலக்குவன் அனுமனோடு 
பேசிக்கொண்டிருக்கையில் 
பிரம்மாத்திரத்தை இமைப்பொழுதில் 
இந்திரசித் ஏவினான்.
பொன் மயமான மலை மீது 
குருவிக்கூட்டங்கள் மொய்ப்பது போல 
ஒளிமிக்க அம்புகள் 
இலக்குவன் உடல் மீது பாய்ந்தன.



8612.
அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், 
   ஈது அமைந்தான்? 
இனி என்? எற்றுவென் களிற்றினோடு 
   எடுத்து' என எழுந்தான்; 
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் 
   கணை தைக்க, 
நினைவும் செய்கையும் மறந்துபோய், 
   நெடு நிலம் சேர்ந்தான். 


வந்தவன் இந்திரனோ ? 
இப்போது நான் என்ன செய்வேன் ?
என்று அனுமன் எண்ணினான்.
அவனை யானையோடு பிடித்துத் 
தள்ளுவேன் என்று எழுந்தான்.
எழுந்தவன் உடம்பில் ஆயிரம் கோடி 
அம்புகள் பாய தரையில் விழுந்தான்,
நினைவிழந்தான்.



( தொடரும் )

Thursday, April 23, 2020

கம்பராமாயணம் 104


8238.
தான் விடின் விடும், இது ஒன்றே;
   சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம்
   மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்;
   வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன்
   செய்கை’ என்றான்.

'ஒப்பற்ற நாகக் கணை இது;
தானே விட்டால் தான் உண்டு;
பிரமனை முதல்வனாகக்  கொண்ட
தேவர்களாலும் விடுவித்தல் முடியாதது;
அவ்வாறிருக்கையில் இவ் உலகத்தவர்
இதிலிருந்து விடுவிப்பர் என்று எண்ண
என்ன உள்ளது;
உயிர் போன உடன் தானே நீங்கும் இது;
பிழைக்கும் வழி வேறு இல்லை.
எனக்குத் தெரிந்து;
துளசி மாலை அணிந்த இராமா,
இதுவே இந் நாகக் கணையின் செயல்'
என்று வீடணன் கூறினான்.


8265.
பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
     அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
     உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
     அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
     வடு ஆன, மேனி வடுவும்.
பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி முடியாத
இறகுகளை உடைய கருடன் 
அங்கு தோன்றினான்.
இரண்டு சிறகுகளும் அடித்துக் கொள்ள 
காற்று அங்கு எங்கும் பரவ, 
இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய 
உடலில் குத்தி நின்ற அம்புகள் 
சிதறிப் போயின;
அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட 
தழும்புகளும் நீங்கின.



8271.
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், 
   ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; 
   அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ 
   என்று உணர்த்தி, ‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் 
   பெயர்ந்து போனான்.
'பறவைக் கூட்டங்களைப் 
பாதுகாக்கின்ற கருடன்; 
உன்னோடு எனக்குப் பழைய உறவு உள்ள 
தன்மைகளை எல்லாம்,
இராவணனோடு நீ போர்த்தொழிலை 
முடித்த பின்பு வந்து உணர்த்துவேன்; 
இப்போது  நீ எனக்கு  விடை  கொடு,
மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைவனே'
என்று கூறி விட்டுத் திரும்பிப் போனான்.


(கருடனின் காற்று பற்று 
கட்டுப்பட்டவர்கள் கண்விழித்ததைக் கேட்டு 
கோபம் கொண்டான் இராவணன்)

8301.
‘இன்று  ஒரு பொழுது  தாழ்த்து, என் இகல்  
   பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் 
   படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் 
   மீட்பென்’ என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் 
   கோயில் புக்கான்.
இன்று ஒரு நாள் அவகாசம் கொடு, 
போரினால் ஏற்பட்ட துன்பத்தை 
போக்கிக்கொள்ள நேரம்  விடு;
நாளை ஒரு கண நேரத்தில், 
போர்க்களம் செல்வேன்,
பிரமன் தந்த, தெய்வத்தன்மை வாய்ந்த,
வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
பகைவர்களைக் கொன்று உன்  மனத்தில் 
ஏற்பட்டுள்ள  துன்பத்தைப் போக்குவேன் 
என்று உறுதி கூறினான் இந்திரசித்.
சரி என்று ஒப்புக்கொண்டு மலர் 
மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த 
தன் அரண்மனைக்குத் திரும்பினான் 
இராவணன்.


( தொடரும் )

Wednesday, April 22, 2020

கம்பராமாயணம் 103


நாக பாசப் படலம் 


8005.
கண்டான், இறை ஆறிய நெஞ்சினன்,
   கைகள் கூப்பி,
'உண்டாயது என், இவ்வுழி?' என்றலும்,
   'உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப
   நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்
   வீர!' என்றான்.


இந்திரசித்து வந்தான்,
இராவணனைக் கண்டான்,
நெஞ்சம் ஆறினான்,
தன் இரு கைகளைக் கூப்பி வணங்கினான்,
இவ்விடத்தில் சூழ்ந்திருக்கும் துயரத்திற்கு
என்ன காரணம் என்று வினவினான்,
'உன் தம்பியரைக் கொன்றான் காலன்,
கும்பன் நிகும்பன்  இருவரோடும்
அதிகாயனும் இறந்தான், வீரனே'
என்றான் இராவணன்.


8010.
'என், இன்று நினைந்தும், இயம்பியும்,
    எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக்
   கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை
   நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்;
   வாழ்வும் வேண்டேன்.


நடந்தவற்றை நினைத்துப்பார்த்தும்
உன் மீது பழி சொல்லியும்,
என்ன பயன் இப்போது ?
கொல்லும் படைக்கலன்கள் ஏந்திய
என் தம்பியைக் கொன்றவனை,
அந்த இலக்குமனை, அவன் உடம்பை,
அந்த போர்க்களத்திலேயே கொல்லுவேன்,
அவ்வாறு கொல்லாவிட்டால், இந்த
இலங்கை நகருக்கு திரும்ப வரமாட்டேன்,
உயிர் வாழவும் விரும்பமாட்டேன்,
என்றான் இந்திரசித்து.


8029.
'யார், இவன் வருபவன்? இயம்புவாய்!' என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
'ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்'
   என்றான்.

'இதோ இங்கு வருகின்றானே,
இவன் யார் ?' என்று இலக்குவன் கேட்டான்.
'தேவர்களின் தலைவன் இந்திரனை
வென்றவன்,
அதனால் இந்திரஜித் என்ற
பெயர் பெற்றவன்,
இன்றைய போரை மிகக் கடுமையானதாய்
ஆக்க வல்லவன்'
என்று வீடணன் உரைத்தான்.


8190.
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை;
   விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து
   இரியஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு
   இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை
   உளைய வாங்கி.


(கடும் சண்டை நடக்கும் வேளையில்
வானரரும், அரக்கர் பலரும் இறந்த பொழுதினில்)

இந்திரசித் நாகாபானத்தை எய்தினான்.
எய்திய உடனே எல்லா திசையிலும்
இருள் சூழ்ந்தது, அனைவரையும்
நிலை கெட்டு ஓடச் செய்தது.
காளை போன்ற இலக்குவனின்
மலை போன்ற தோள்களை
வளைத்துக் கட்டியது.



8207.
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள 
   தன்மை எல்லாம் 
சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர் 
   நீ; எந்தாய்! 
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, 
   மேல் நுவல்வென்' என்னா, 
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் 
   கோயில் புக்கான்.

தந்தை இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
போர்க்களத்தில் நடந்தவைகளை 
எடுத்துரைத்தான்.
'தீர்ந்தது உன் துயர், கவலை விடு' என்றான்.
'நானும் தளர்ந்து விட்டேன், கொஞ்சம் 
இளைப்பாறிக் கொள்கிறேன், அடுத்து 
என்ன என்று நாளை உரைக்கிறேன்' என்றான்.
துன்பம் போக்கிக்கொள்ள தன் இருப்பிடம் 
போய்ச் சேர்ந்தான் இந்திரசித்.



( தொடரும் )

Tuesday, April 21, 2020

கம்பராமாயணம் 102


அதிகாயன் வதைப் படலம்

7737.
‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?

'உன் தம்பியைக் கொன்றான் ஒருவன்,
அவன் தம்பியைக் கொல்வேன் நான்,
அவ்வாறு கொன்று அந்த இராமனை
பயந்து நடுங்க வைப்பேன்,
அப்படி செய்யவில்லையேல்,
உனக்கு மகன் இல்லை நான்'
என்று சொல்லிவிட்டுப்
போருக்குக் கிளம்பினான் அதிகாயன்.



7759.
‘"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்.

அழகிய மாலை அணிந்த கும்பகருணன்
இறந்ததன் காரணமாக
வருந்தி அழும் என் தந்தையின் 
மனத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு;   
துயரத்தோடும் சினத்தோடும் எரிகின்ற 
அதிகாயன் வந்துள்ளான்  என
முதலில் சொல், போ' என்று 
இராம இலக்குமணரிடம் தூது அனுப்பினான்.



(அதிகாயன் பின்புலத்தை வீடணன் கூற )

7807.
‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.
'இலக்குவனுடன் போர்க் களத்துக்கு 
நீயும் செல்;
எதிர்த்து போர் புரிய வந்துள்ள 
அந்த அதிகாயனுடைய பெரிய தலை 
அம்போடு ஆகாயத்தை அளந்து 
விழுவதனைப் போய்க் காண்,
காகம்  முதலிய  பறவைகள்  
கொத்தி உண்பதனையும் காண்'
என்று இராமன் வீடணனிடம் கூறினான்.


7842.
தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
காதலை, பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்.

சீதை என்ற பெயர் கொண்ட 
ஒரு கொடிய யமனைத் தேடிய அரக்கர்கள்,
இலக்குவனோடு நடந்த போரில்,
பெருங்காற்றுப் போன்ற கணை ஊடுருவ
தந்தையை இழந்தனர், 
தமயனையும், தம்பியையும், 
தன் மகனை, பேரனை, மருமகனையும் 
இழந்தனர். 


(பிரம்மாஸ்திரத்தை ஏவ வாயுதேவன் உரைக்க)

7931.
‘நன்று’ என உவந்து, வீரன், நான்முகன் 
   படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் 
   கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான்
   தலையினைக் கொண்டு, அவ் வாளி
சென்றது, விசும்பினூடு; தேவரும்
   தெரியக் கண்டார்.
நன்றி நவின்றான் வீரன் இலக்குவன்.
பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தான்.
மின்னல் தோன்றியது போன்று 
அம்பு செலுத்தினான்; 
அந்த அம்பு, குன்று போன்ற தோள்களை 
உடைய அதிகாயனது தலையை 
அறுத்துக் கொண்டு வான் வழியே சென்றது
அக்காட்சியை தேவர்களும் கண்டனர்.



7977.
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.

இதுவரை பின்னடையாத அரக்க வீரர்கள் 
குரங்குப்படைகளைத் தடுத்திட தலைமை
யாரும் இல்லாமையால்  தத்தளித்தனர்; 
நிலை கெட்டுத் தடுமாறிப் பிரிந்தனர்;
வலிய மரங்களை வானர வீரர்கள் வீசி 
அரக்கரின் பெரும் படையைக் கொன்றனர்;
அதனால் அரக்க வீரர் எண்ணிக்கையில் 
குறைந்தனர்;


( தொடரும் )

Monday, April 20, 2020

கம்பராமாயணம் 101


7662.
ஆயது ஓர் காலத்து, ஆங்கண்,
   மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன்
   கடிதின் வந்து,
காய் எரி அனையான் முன்னர்க்
   காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத்
   தரிக்கிலாதாள்.

அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு
அரக்கன் மருத்தனை சனகனாக மாற்றி
வாய் விட்டுக் கதறச் சொல்லி,
பற்றிக்கொண்டு விரைந்து வந்து,
கொழுந்து விட்டெரியும் நெருப்பை ஒத்த
இராவணன் முன் காட்டினான்;
அந்த மாய சனகன் இராவணனை
வணங்குவதைச் சீதை கண்டாள்;
தன் தாய்ப்பறவை நெருப்பில்  விழுவதைக்
கண்ட பறவைக் குஞ்சு போல தவித்தாள்;


7678.
‘"அடைத்தது கடலை; மேல் வந்து
   அடைந்தது, மதிலை; ஆவி
துடைத்தது பகையை சேனை" எனச்
   சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகைதன்னை, வேறு
   ஒரு வினயம் பண்ணி,
உடைத்தது விதியே" என்று என்று,
   உளைந்தனள், உணர்வு தீர்வாள்.


அணை கட்டி கடலைத் தடுத்தது
இலங்கை மதிலை வரை வந்து சேர்ந்தது
பகைவர்களின் உயிரைக் குடித்தது படை
என்று சிலர் சொல்லச் சொல்ல
ஒப்பற்ற பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
அந்த மகிழ்ச்சியை வேறு ஒரு சூழ்ச்சி
செய்து உடைத்தது விதியே என்று
பலமுறை புலம்பினாள், வருந்தினாள்,
உணர்ச்சி ஒடுங்கினாள் சீதை.



7680.
‘காரிகை! நின்னை எய்தும் காதலால்,
   கருதலாகாப்
பேர் இடர் இயற்றுலுற்றேன்; பிழை இது
   பொறுத்தி; இன்னும்,
வேர் அற மிதிலையோரை விளிகிலேன்;
   விளிந்த போதும்,
ஆர் உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை,
   அன்னம் அன்னாய்!


'அழகியே! உன்னை அடைய வேண்டும்
என்ற ஆசையாலே,
எண்ணவும் கூடாத பெருந் துன்பத்தைச்
செய்யத் தொடங்கி விட்டேன்; இச்செயல்
தவறானது தான், மன்னித்து விடு,
மிதிலையில் உள்ளவர்கள் அனைவரையும்
அழியுமளவிற்கு நான் சினம்  கொள்ளவில்லை;
அவ்வாறு அழிக்க நேர்ந்திடினும்
இந்தச் சனகனுடைய உயிரைக் கொல்லேன்;
அஞ்சாதே, அன்ன நடை உடையவளே'
என்று இராவணன் சீதையை மிரட்டினான்.



7686.
‘இத் திருப் பெறுகிற்பானும், இந்திரன்; 
   இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும், வீடணன்; 
   புலவர் கோமான்
கைத் திருச் சரங்கள் உன்தன் மார்பிடைக் 
   கலக்கற்பால;
மைத் திரு நிறத்தான் தாள் என் தலைமிசை 
   வைக்கற்பால.
 

'நீ தருகிறேன் என்று சொல்லும் செல்வம் 
அனைத்தையும் பெறப் போகிறவன் இந்திரன்; 
இலங்கையையும்  அதன் செல்வத்தையும் 
பெறப் போகிறவன்  வீடணன்;  
தேவர்களின் தலைவனாகிய இராமனின் 
கையில் உள்ள அழகிய அம்புகள் 
உன்னுடைய மார்பைத் தைப்பதற்கு  உரியன
அந்த கரு நிறத்து இராமனின் திருவடிகள் 
என் தலையின் மீது வைத்தற்கு உரியவை'
என்று சீதை மறுமொழி உரைத்தாள்.



7706.
புறந்தரு சேனை முந்நீர் அருஞ் சிறை 
   போக்கி, போதப் 
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு 
   எய்தி, பைய, 
'திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங் 
   கடலைச் சிந்தி, 
இறந்தனன், நும்பி; அம்பின் கொன்றனன், 
   இராமன்' என்றார்.


இராவணனைச் சுற்றி நிற்கும் 
காவலைக் கடந்து 
அவன் அருகில் சென்ற தூதுவர்,
மெல்ல அவன் காதில் விழுமாறு 
'கூட்டம் கூட்டமாக நின்ற 
வானரப் படையை அழித்த,
உன் தம்பி கும்பகர்ணனை 
இராமனின் அம்பு கொன்றது'
என்று கூறினர்.



7718.
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து 
   அழைத்து, 
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் 
   பாரித்தான்; 
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் 
   பொடிப்ப, 
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே 
   கிளுகிளுத்தாள்.

அண்டங்கள் யாவும் அறியும்படி கதறினான்,
தன் பெயர்க் காரணத்தை உரைத்து அழுதான்,
கொவ்வைக் கனி போன்ற சிவந்த உதடுகள் 
துடிக்க, மயிர்க் கூச்செறிய,
கெண்டை மீன் போன்ற கண்களை உடைய 
சீதை, உள்ளம் மகிழ்ந்தாள்.


( தொடரும் )

Sunday, April 19, 2020

கம்பராமாயணம் 100



மாயா சனகப் படலம்


7634.
‘உணர்த்துவென், இன்று நன்று; ஓர்
   உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது
   ஓர் வினையம் போற்றி;
கணத்து, வன் சனகன்தன்னைக் கட்டினென்
   கொணர்ந்து காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை
   உருவம் மாற்றி?’

(சீதையை அடைய வழி யாசித்தான் இராவணன்)
'இன்றே ஒப்பற்ற ஒரு உபாயத்தை
உணர்த்துவேன்,
சீதை  தானே  வந்து  உன்னைச்
சேர்வதற்குரிய மாயை செய்வேன்;
அரக்கன் மருத்தனை, சனகனாக
உருமாற்றி, ஒரு நொடியில் கட்டிக்
கொணர்ந்து காட்டினால்
உன்னைத் திருமணம் செய்து கொள்ள
சீதை விரும்புவாள் அன்றே'
என்றான் மகோதரன் என்ற மாயக்காரன்.


7640.
‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது?
   இந்து என்பான்,
என்றுதான், இரவியோடும் வேற்றுமை
   தெரிவது என்பால்?
என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு
   அலாதிருக்கலாவது?
என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான்
   எடுத்துக் கொண்டான்.


என் மேல் நீ இரக்கம் கொள்வது  என்று?
கதிரவனுக்கும் நிலவுக்கும் இடையில்
உள்ள வேறுபாட்டை என்னிடம் நீ
அறிந்து கொள்வது என்று ?
மன்மதனின் மலரம்புகளுக்கு நான்
இலக்கு ஆகாமல் இருப்பது என்று?'
என்று இராவணன் தான் அடைந்த காம
வருத்தங்களை எல்லாம்
சீதையிடம் சொன்னான்.



7642.
‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; 
   தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; 
   வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; 
   அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் 
   தீர்திர் அம்மா!

'யாரிடமும் தோற்காத என்னை 
உன்னிடம் தோற்கச் செய்தாய்; 
சந்திரனால் என் உடம்பைச் சுடுமாறு செய்தாய்; 
தென்றல் காற்று வீச காம வெப்பத்தால் 
உடம்பு புழுங்க வேர்க்கச் செய்தாய்;
என் உறுதியான தோளை மெலியச் செய்தாய்;
வேனில் காலத்தைத் துணையாகக் கொண்டு 
மன்மதனை  ஆர்ப்பொலி  செய்யச்  செய்தாய்;
துன்பம் என்றால் என்ன என்று அறியச் செய்தாய்;
தேவர்களின் அச்சத்தை நீக்கினாய்;
இன்னும் என்னென்ன துன்பங்களை எனக்குத் 
தரப்போகிறாய் ?' என்று கேட்டான் இராவணன்.




7650,
‘ ”பழி இது; பாவம்” என்று பார்க்கிலை;
   “பகரத் தக்க
மொழி இவை அல்ல” என்பது உணர்கிலை;
   முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும்
   இன்றுகாறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்?
   அறம்தான் என் ஆம்?

'நீ  செய்ய விரும்பும் செயலால் பழி வரும்
பாவம் வரும் என்று எண்ணிப் பார்க்கவில்லை;
உம் போன்றவர் சொல்லத்தக்க சொற்கள்
இவை  அல்ல என்பதை  நீ உணரவில்லை;
யாரிடம் எவ்வாறு  நடந்து கொள்ள  வேண்டும்
என்ற  முறையையும் நீ எண்ணிப் பார்க்கவில்லை;
இவ்வாறு முறையற்ற செயல் செய்தும் 
முறையற்ற சொல்லைச் சொல்லியும் கூட 
உன் நெஞ்சம் கிழிந்து பிளவுபடவில்லை; 
உன் வஞ்சனைக்கு  உதவும்  சுற்றத்தவருடன்
இன்று  வரை  நீ அழியவில்லை;
என்றால் என் கற்பின் வலிமை என்ன ஆகும்?
அறம் தான் என்னவாகும்?'
என்று சீதை பதிலுரைத்தாள்.



7659.
‘கொற்றவாள் அரக்கர்தம்மை, “அயோத்தியர்
   குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந் தலை
   கொணர்திர்; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர்” என்று உந்தினேன்;
   உந்தை மேலும்,
வெற்றியர்தம்மைச் செல்லச் சொல்லினென்,
   விரைவின்’ என்றான்.


வாட்படையை ஏந்திய அரக்கர்களை,
'அயோத்தியின் அரச குலத்தைச் சேர்ந்த
அனைவரையும் இழுத்துக் கொண்டு வாருங்கள்;
அவ்வாறில்லையேல் அவர்களது தலையை
வெட்டிக் கொண்டு  வாருங்கள்;
எது முடியுமோ அதைச் செய்திடுங்கள்'
என்று கட்டளையிட்டு அனுப்பி உள்ளேன்;
உனது  தந்தையாகிய  சனகன்  மீதும்
வெற்றியே அடையும் அரக்க வீரரை
விரைந்து  போகுமாறு  அனுப்பியுள்ளேன்'
என்று இராவணன் சீதையிடம் கூறினான்.


( தொடரும் )

Saturday, April 18, 2020

கம்பராமாயணம் 99


(கும்பகர்ணனோடு போரிட்டு சுக்ரீவன் மயங்க)

7539.

'மண்டு அமர் இன்றொடு மடங்கும்;
   மன் இலாத்
தண்டல் இல் பெரும் படை சிந்தும்;
   தக்கது ஓர்
எண்தரு கருமம் மற்று இதனின் இல்'
   என,
கொண்டனன் போயினன், நிருதர்கோ
   நகர்.

'இவனைத் தூக்கிப் கொண்டு போய்விட்டால்,
தொடங்கிய போர் இன்றோடு முற்று பெறும்;
அரசன் இல்லாது வானரப் படை சிதறிவிடும்;
இதனைக்  காட்டிலும் சிறந்த செய்யத்தக்க
செயல் வேறேது, இதுவே ஆகும்'
என்றெண்ணி, சுக்கிரீவனை தன் நகருக்கு
தூக்கிக் கொண்டு போனான்
அரக்கர் தலைவனாகிய கும்பகருணன்.


7555.
'காக்கிய வந்தனை என்னின், கண்ட
   என்
பாக்கியம் தந்தது, நின்னை; பல்
   முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்
   முனைப்
போக்குவென், மனத்துறு காதல்
   புன்கண் நோய்.


இச் சுக்கிரீவனைக் காப்பாற்ற  வந்தாயா,
இல்லை முன்னம் நான் செய்த பாக்கியம்
உன்னை என்னிடம் வரவைத்துள்ளது,
முன்பு பலமுறை செய்துள்ள வீரப் போரை
எல்லாம் இன்று இப்பொழுது செய்து,
என்  அண்ணணுடைய மனதில் உள்ள
வருத்தம் தரும் நோயைப் போக்குவேன்'
என்று கும்பகர்ணன் இராமனிடம் சொன்னான்.


7558.
மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
சேட்டு அகல் நெற்றியின், இரண்டு
   சேர்த்தினான்.


இராமன் கும்பகர்ணனோடு போர் புரிந்தான்,
அம்பு மழை பொழிந்தான்,
சுக்கிரீவனை மீட்டு வருவதற்கு முயன்றான்,
அம்பறாத் தூணியிலிருந்த
கூரிய அம்புகள் இரண்டை
கும்பகருணனது அகன்ற நெற்றியில்
பாய்ச்சினான்.


7562.
கண்டனன் நாயகன்தன்னை,
   கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும்
   தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும்
   வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த்
   தமரைக் கூடினான்,

கண்விழித்த சுக்கிரீவன் தலைவனாகிய
இராமனைக் கண்டான்.
பார்த்து நாணம் கொண்டான்;
பகைவனான கும்பகர்ணனது
மூக்கையும் காதையும் வேரோடு பிடுங்கினான்,
உடனே எழுந்து தன் சேனையிடம்
போய்ச் சேர்ந்தான்.



7594.
'ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை;
   எதிர் ஒரு தனி நின்றாய்; 
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், 
   நின் உயிர் நினக்கு ஈவென்; 
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின்,
   போர் புரிந்து இப்போதே 
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, 
   சமைவுறத் தெரிந்து, அம்மா!

 
'படைக் கலங்களுடன் போர் புரிய வந்து 
எதிர்த்து நின்று எல்லாம் இழந்தாய்;
தன்னந்  தனியாய் எதிரே நிற்கின்றாய்; 
நீதிநெறி தவறாத வீடணனுடன் பிறந்ததினால் 
உன் உயிரை உனக்குத் தருகிறேன்; 
இப்போது திரும்பிப் போகிறாயா?
பின்பு மீண்டும் போர் புரிய வருகிறாயா? 
அப்படியில்லை என்றால் 
இப்போதே போரிட்டு இறந்துவிடுகிறாயோ?
நீயே ஆராய்ந்து சொல்'
என்று இராமன் சொன்னான்.



7628.
' "மூக்கு இலா முகம்" என்று முனிவர்களும்
   அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் 
   என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் 
   கருங் கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற 
   பொருள்' என்றான்.


'மூக்கு இல்லாத முகம் என்று சொல்லிக்
காண்பிப்பார்கள் முனிவர்களும் தேவர்களும்;
அவர்கள் அவ்வாறு சிரிக்காதிருக்க 
உன் அம்பினால் என் கழுத்தை நீக்குவாய்;
அறுத்து நீக்கிய பிறகு, என் கழுத்தோடு கூடிய 
தலையை கரிய கடலுக்குள் மூழ்கச் செய்வாய்;
இதுவே நான் உன்னை வேண்டிக் கொள்கின்ற 
பொருள்' என்றான் கும்பகருணன். 


7630.
மாக் கூடு படர் வேலை மறி மகரத் 
   திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு 
   திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும்
   புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் 
   முகக் குன்றம்.
 

(கும்பகர்ணன் கேட்ட வரத்தின்படி, 
இராமன் அவன் தலையைக் கொய்தான்)
 
கருமை நிறம் மிகுந்த பரந்த கடலில்,
மடங்கி எழும் அலைகளை, மேற்கு, கிழக்கு 
என்று எல்லா திசைகளிலும் விலக்கி,
இரு கண்களிலும் புகையை வெளிப்படுத்தும்
மலை போன்ற அவன் முகம் 
மூக்கு வழியாகவும் நீர் உள்புக, மூழ்கியது.


( தொடரும் )

Friday, April 17, 2020

கம்பராமாயணம் 98



7375.
ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம்,
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான்.

ஆயிரம் சிங்கங்களோடு, கூடவே
ஆயிரம் ஆளிகள் துணையோடு
ஆயிரம் மத யானைகள் உடன் வர
ஆயிரம் பூதங்கள் சேர்ந்திழுக்க
மிகப்பெரிய பூமியைச் சுமப்பன் போல்
ஒப்பில்லா ஒளியுள்ள மணிகள்
பதிக்கப் பெற்ற தேர் ஒன்றில் ஏறி,
கும்பகருணன் போருக்குப் புறப்பட்டான்.



7383.
'எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும் 
விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; 
   வெரீஇ, 
புழுங்கும் நம் பெரும் படை இரியல் 
   போகின்றது; 
அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம்
   இவன்?*

'சூரிய ஒளியே மறைத்துவிட்டது, 
எல்லா இடமும் இருளால் நிரம்ப விட்டது, 
இந்த அரக்கனின் பேருடம்பினால் 
இது நிகழுது,
நமது பெரிய படை அஞ்சி நடுங்கி 
இங்கும் அங்கும் ஓடுகிறது, 
வருந்துதல் இல்லாத மனமுடைய வீடணா,
இவன் யார் என்று கூறுவாயா ?'
என்று கேட்டான் இராமன்.



7385.
ஆரியன் அனைய கூற, அடி இணை 
   இறைஞ்சி,  'ஐய! 
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; 
   எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்ப
   கருணன் என்னும்
கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை 
   கூறலுற்றான்;

இராமன் அவ்வாறு  கேட்க, வீடணன் 
அவன் அடி வணங்கி, பேசலுற்றான்.
'ஐயா,  நிறைய சிறப்புடைய இலங்கை
வேந்தன் இராவணனுக்குப் பின்பிறந்தவன்,
எனக்கு முன்  பிறந்தவன், இவன்; 
கருமை நிறம் பொருந்திய 
இயமனை ஒத்தவன்;
வீரக்கழல் அணிந்தவன், 
கும்பகருணன் என்னும் பெயர் கொண்டவன்;
கூர்மையான சூலத்தைக் கையிலே 
வைத்திருப்பவன்'
என்று வீடணன் அவனது தன்மையைக் 
கூறத் தொடங்கினான்.


7397.
' "நன்று இது அன்று நமக்கு" எனா, 
ஒன்று நீதி உணர்த்தினான்; 
இன்று காலன் முன் எய்தினான்' 
என்று சொல்லி, இறைஞ்சினான். 

'பிறர் மனை கவர்ந்து சிறை வைத்த செயல் 
நமக்கு நன்மையைத் தருவது அன்று'
என்று அறச் சொற்களை இராவணனுக்கு 
எடுத்துச் சொன்னவன்; 
அதை அவன் கேளாமையால்,
சாகத் துணிந்து யமன் முன்
வந்து நிற்பவன்' என்று கூறி 
இராமனை வணங்கி நின்றான் வீடணன்.


(இராமனிடம் அடைக்கலம் அடைந்திடு 
என்று சொன்ன வீடணனிடம் )

7426.
'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் 
   வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் 
   கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் 
   தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடுதி, 
   கடிதின் ஏகி'

நீரில்  வரைந்த கோலம் போன்று 
விரைந்து அழியும் வாழ்வை விரும்பி,
என்னை இத்தனை நாள் வளர்த்து, இன்று
தன் கையாலேயே போர்க்கோலம் 
பூணுவித்துப் போர்க்குச் செல் என்ற 
இராவணனுக்காக என்னுயிரைக் 
கொடுக்காமல் எப்படி இருப்பது?
அந்த இராமனிடம் போய்ச் சேர மனம் 
விரும்பாது,
மார்பில் மாலையணிந்த அழகிய மைந்தா, 
என் துன்பத்தைப் நீ போக்க விரும்பினால்,   
கரிய அழகிய  திருமேனியுடைய  இராமன் 
இருக்குமிடம் இப்போதே சென்று விடு'
என்று கும்பகர்ணன் கூறினான்.




7450.
வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் 
   தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை 
   நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் 
   சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் 
   புடைக்கும், சுற்றி.

கும்பகர்ணன் வானர சேனையை, 
கடலில் அமுக்கினான்; 
கையினால் வாரி எடுத்து
நிலத்தில் தேய்த்தான்;
நீரில் மூழ்கச் செய்தான்; 
மேலும் நெருப்பில் நிற்கும்படி வீசினான்;
தேரில் அடித்து  அழித்தான்;
எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி 
தூக்கியெறிந்தான்.
மரத்தின் அடிப்பகுதியில்
மோதி அழித்தான்; 
சுழற்றி மலைகளில் மோதி அழித்தான்.

( தொடரும் )

Thursday, April 16, 2020

கம்பராமாயணம் 97


கும்பகருணன் வதைப் படலம்


7274.
மாதிரம் எவையும் நோக்கான், வள நகர்
   நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ்
   சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி
   நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே
   நோக்கிப் புக்கான்

(தோற்று திரும்பும் இராவணன்)
எந்த திசையையும் நோக்காது நடந்தான்,
நகரினுள் எதையும் காண விரும்பாது
கடந்தான்,
சுற்றம் நட்பு யாரையும் பார்க்காது நகர்ந்தான்,
போர் வீரர்கள் நிறைந்த சேனைப் பக்கம்
திரும்பாது நடந்தான்,
கூந்தல் அவிழ்ந்த பெண்கள் அங்கங்கே
தனித்தனியே நின்று இவனைப் பார்க்க,
மண்ணைப் பார்த்தபடியே நடந்து வந்து
அரண்மனை நுழைந்தான்.



7312.
'ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதி
   என்னின், ஐய! 
ஓங்கலே போல்வான் மேனி காணவே 
   ஒளிப்பர் அன்றே; 
தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் 
   உயிரைத் தானே 
வாங்கும்' என்று இனைய சொன்னான்; 
   அவன் அது மனத்துக் கொண்டான். 

'கும்பகர்ணனை எழுப்புவோம்,
போர் புரியக் கட்டளையிடுவோம்
மலை போன்ற அவன் உடலைக் கண்டதும் 
எதிரிகள் அஞ்சி ஒளிவர் அன்றோ?
ஒருவேளை எதிர் நின்று போர் புரிந்தாலோ,
அந்த தவ வேடம் அணிந்த இருவரையும் 
கும்பகர்ணனே கொன்றுவிடுவான் அன்றோ'
என்ற இனிமையான வார்த்தைகளை 
மகோதரன் உரைத்தான்.
இராவணன் அதை மனதுள் கொண்டான்.





7325.
என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று 
   இராக்கதர்கள், 
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் 
   தன் மாடு அணுகி, 
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் 
   கொண்டு அடிப்ப, 
பொன்றினவன் எழுந்தாற்போல், புடை 
   பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 

அரசன் இராவணனின் கட்டளையை 
வணங்கி ஏற்று, 
ஆயிரம் அரக்கர்கள் அயர்ந்துறங்கும்
கும்பகர்ணன் அருகில் சென்று 
தம் கடுமையான செயல் முறைகளால் 
அவன் இரண்டு கன்னத்திலும் 
உலக்கைகளால் பலமாய் இடித்து 
இறந்தவன் எழுந்தது போல,
படுத்துக்கிடந்த இடத்தை விட்டு அசைந்தான்.


7349.
'வானரப் பெருந் தானையர், மானிடர், 
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும் 
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர் 
போனகத் தொழில் முற்றுதி, போய்' என்றான். 

(கும்பகர்ணன் உறக்கம் நீங்கி, வர)

'இரண்டு மானிடர்,
வானர சேனையோடு வந்திருக்கின்றனர்,
நம் நகரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர்,
இதுவரை யாரும் பெறாத வெற்றியைப் 
பெற்றுருக்கின்றனர்,
நீ அவர்களோடு போர் செய், போ,
அவர்களைக் கொன்று, பின் வா'
என்று இராவணன் கூறினான்.


7350.
'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச் 
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ? 
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் 
போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?'

'கொடிய போர் தொடங்கிவிட்டதா ?
கற்பில் சிறந்த சீதையின் துயர் இன்னும் 
தீரவில்லையா ?
வானம் வரை, மண்ணுலகம் முழுவதும் 
வளர்ந்த  உன் புகழ் அழிந்ததோ ?
அழிவு காலம் நெருங்கிவிட்டதோ ?'
என்று கேட்டான் கும்பகர்ணன்.



7362.
'மறம் கிளர் செருவினுக்கு உரிமை 
   மாண்டனை; 
பிறங்கிய தசையொடு நறவும் 
   பெற்றனை; 
இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் 
   எல்லியும் 
உறங்குதி, போய்' என, உளையக் 
   கூறினான்.

'வீரம் விளங்க வேண்டிய போருக்கு 
தகுதியில்லாதவனாகிவிட்டாய்.
ஊன் நிறைய உண்டு, 
உண்டுக் கிடப்பாய்,
அருந்த நிறைய கள் இருக்கு,
குடித்து மகிழ்வாய்,
குழி போன்ற கண்களை மூடிக்கொண்டு 
இரவும் பகலும் உறங்கியிருப்பாய்'
என்று கும்பகர்ணன் மனம் வருந்த 
இராவணன் பேசினான்.


7366.
'வென்று இவண் வருவென் என்று 
   உரைக்கிலேன்; விதி 
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது; 
பொன்றுவென்; பொன்றினால், பொலன் 
   கொள் தோளியை, 
"நன்று" என, நாயக விடுதி; நன்றுஅரோ.

(இராவணன் அவ்வாறு உரைத்ததும் )

'வென்று திரும்பி வருவேன் என்று 
உரைக்கமுடியாத நிலையில் உள்ளேன்;
விதி வலியது, 
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது,
இறந்து விடுவேன் நான், இறந்த பின், 
அழகிய தோள்களுடைய சீதையை 
விட்டுவிடு;
'அதுவே உனக்கு நன்மை பயக்கும்'
இதைப் புரிந்து கொள்' என்று கூறிவிட்டு 
கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டான்.


( தொடரும் )

Wednesday, April 15, 2020

கம்பராமாயணம் 96



7222.
எறிந்த கால வேல், எய்த அம்பு யாவையும்
   எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின்
   பொங்கி,
செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது;
   சிந்தை
அறிந்த மைந்தனும், அமர் நெடுங் களத்திடை
   அயர்ந்தான்.

காலனைப் போன்ற கொடிய வேலை
இராவணன்  வீச
அது இலக்குவன் எய்த அம்புகள்
அனைத்தையும் வீழ்த்தியது,
வேகத்தோடு, மலர்கள் அடர்ந்த மாலை
அணிந்திருந்த இலக்குவன் மார்பின்
நடுவே பாய்ந்தது,
அவ்வாறு வேல் ஊடுருவிச் சென்றதை
உணர்ந்ததும் பரந்த அகன்ற போர்க்களத்தில்
சோர்வுற்று வீழ நேர்ந்தது;


7228.
எடுக்கல் உற்று, அவன் மேனியை ஏந்துதற்கு
   ஏற்ற
மிடுக்கு இலாமையின், இராவணன் வெய்
   துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து எடுத்து
   ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து,
   அயல் சார்ந்தான்.


மயக்கமடைந்து  விழுந்த இலக்குவனை 
இராவணன்  தூக்கிச் செல்ல எண்ணினான்,
எனினும் இலக்குவனின்  உடலைத் தூக்கும்
வலிமையில்லாது திகைத்தான்,
வெப்பப் பெருமூச்சு விட்டான்,
இச் சமயத்தில் எங்கோ ஓர் இடுக்கில் நின்று
கொண்டிருந்த அனுமன்,
 வேகமாய் நுழைந்தான்,
இலக்குவன் பொன்மேனியைச் சுலபமாய்
ஏந்திக் கொண்டான்,
யாராலும் தடுக்க முடியாததொரு
வேகத்தோடு வேறிடம் சென்று சேர்ந்தான். 



7233.
'நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல்
   நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ
   மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய
   எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்'
   என்றான்.

'விரைந்து செல்ல வல்ல,
ஆயிரம்  குதிரைகளைக் கொண்ட தேரின்
மேலிருந்து போர் புரிகிறான் அரக்கன்.
உன் முன்னர் அவ்வாறு அவன் போரிட
தரையிலே நின்று நீ சண்டையிடுதல்
ஒப்பற்றதொரு தன்மையைக் காட்டும்.
மென்மையானவை என்றாலும், ஐயனே!
என் தோளின் மேல் நீ ஏறிப் போரிடு'
என்று இராமனை அனுமன் வேண்டினான்.

7253.
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந்
   தலை உருட்டி,
சென்று தீர்வு இல, எனைப் பல கோடியும்
   சிந்தி, 
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும்
   நிற்க,
கொன்று வீழ்த்தினது--இராகவன் சரம்
   எனும் கூற்றம்.

இலட்சம் அரக்கருடைய கொடிய
தலைகளை அறுத்து உருளச் செய்து,
அதனோடு மட்டும் நிற்காது,
பலகோடி  வீரர்களையும்  அழித்து, 
தேரோடு இராவணன் மட்டும் மிஞ்சி நிற்க
மற்றனைவரையும் கொன்றழித்தது
இராமபிரானுடைய காலன் போன்ற அம்பு.



7267.
'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ்
   சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை
   வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்;
   பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை 
   கண்டு இரங்கி.


(இராமபிரான்  இராவணனை நோக்கி) 
'அற வழியில் அல்லாது, பாவ நெறியினால்
போரினில் வெல்ல முயற்சிப்பது
தேவர்களாலும் முடியாதது;
இதை உள்ளத்திலே உறுதியாகப்
பதித்துக் கொள்வது உனக்கு நல்லது;
பாவச்  செயல்கள்  புரிந்தவனே!
உன்  சேனையோடு நகருக்குத் திரும்பு,
நிராயுதபாணியாக நிற்கிறாய்,
உன் நிலை கண்டு இரங்குகிறேன்;
உன்னைக் கொல்ல நான் எண்ணவில்லை'


 7271.
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம்
   அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்,
   போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங்
   கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

'அரக்கரை ஆள்கின்ற  ஐயா,
உன் சேனைகள் அனைத்தும்;
பெருங்காற்று தாக்கிய பூக்களைப் போல
சிதைந்து போனதைக் கண்டாய்.
இன்று உன் இடம் திரும்பிச் செல்வாய்,
மேலும் போர் புரிய நீ விரும்பினால்,
நாளை திரும்ப வருவாய்'
என்று இராவணனுக்கு அருள் உரைத்தான்
இளைய கமுக மரத்தின் மீது வாளை  மீன்கள்
தாவிப் பாயும் வளம் மிக்க கோசல நாட்டுக்கு
உரிய  வள்ளலாகிய இராமபிரான்.


( தொடரும் ) 



Tuesday, April 14, 2020

கம்பராமாயணம் 95



7124.
ஆங்கு, அவன் அமர்த் தொழிற்கு
   அணுகினான் என,
'வாங்கினென், சீதையை' என்னும்
   வன்மையால்,
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின, இராகவன் வீரத் தோள்களே.

இராவணன் போரிட வருகிறான்
என்ற செய்தி கேட்டான் இராமன்.
சீதையைத் திரும்ப என்று உறுதியாக
எண்ணினான்.
துயர்மிக்க, அவள் பிரிவினால்
மெலிந்த தேகம் மறைய
வீரத் தோள்கள்  வீங்க
இராமனும் போர்க்களம் கிளம்பினான்.



7153.
'யார் இது செய்யகிற்பார்?' என்று கொண்டு 
   இமையோர் ஏத்த,
மாருதி, பின்னும், அங்கு ஓர் மராமரம் 
   கையின் வாங்கி, 
வேரொடும் சுழற்றி விட்டான்; விடுதலும், 
   இலங்கை வேந்தன் 
சாரதி தலையைத் தள்ளிச் சென்றது, நிருதர் 
   சாய. 

(இராவணன் எய்தியக் கணைகளை 
அனுமன் தாங்கி நின்ற அருமையைக் கண்டு) 
 
'இத்தகைய செயலை வேறு யார் செய்ய வல்லார்?'
என்று உரைத்து போற்றிப் புகழ,
அனுமன், அவ்விடத்தே இருந்த ஒரு மராமரத்தை 
வேரொடும்  பெயர்த்து சுழற்றி வீச, 
அது இலங்கை  வேந்தனின் தேர்ப்பாகன் 
தலையைத் துண்டிக்க, கூடவே 
வேறு சில அரக்கர்களையும் அழித்து பின்  
வீழ்ந்தது.


7166.
தேர் எலாம் துமிந்த; மாவின் திறம் எலாம் 
   துமிந்த;  செங் கண்
கார் எலாம் துமிந்த; வீரர் கழல் எலாம் 
   துமிந்த; கண்டத்
தார் எலாம் துமிந்த; நின்ற தனு எலாம் 
   துமிந்த; தம்தம்
போர் எலாம் துமிந்த; கொண்ட புகழ் எலாம் 
   துமிந்து போய.

(வில்லேந்தி, இலக்குவன் போர் புரிய)
அரக்க சேனையில் தேர்கள் எல்லாம் 
துண்டாயின,
குதிரைகளின் திறமையெல்லாம் 
தோற்கடிக்கப்பட்டன, 
சிவந்த  கண்களையுடைய கரிய நிறமுடைய 
யானைகள் எல்லாம் தோற்றுப்போயின,
அரக்க வீரர்களின் வீரக்கழல்கள் 
துண்டாயின,
கழுத்தில்  அணிந்திருந்த மாலைகள் 
அறுந்துபோயின,
கைகளில் ஏந்தி  நின்ற விற்கள் எல்லாம் 
உடைந்துபோயின,
அவர்களுடைய போர் ஆற்றல் 
தோற்கடிக்கப்பட்டன 
இதுநாள் வரை அவர்கள் ஈட்டி வைத்திருந்த  
புகழ்கள் எல்லாம் துண்டு துண்டாகச் 
சிதறிப் போயின.


7221.
'வில்லினால் இவன் வெலப்படான்' எனச் 
   சினம் வீங்க,
'கொல்லும் நாளும் இன்று இது' எனச் 
   சிந்தையில் கொண்டான்,
பல்லினால் இதழ் அதுக்கினன்; பரு வலிக் 
   கரத்தால் 
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் 
   எடுத்து எறிந்தான்.

 
'இலக்குவனை வில்லால் வெல்ல முடியாது' 
என்பதை உணர்ந்தான் இராவணன்.
கோபம் தலைக்கேற நின்றான். 
'இவனைக் கொல்ல வேண்டிய நாளும் 
இன்றே'  என்ற முடிவுக்கு வந்தான்.
பற்களால் உதடுகளைக் கடித்தான்.
வலிய பெரிய கரத்தில், பிரம்மன் தந்த 
ஒளியொடு கூடிய வேல் எடுத்து வீசினான்.

( தொடரும் )

Monday, April 13, 2020

கம்பராமாயணம் 94


முதற் போர் புரி படலம்


7019.
'இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு
   அறத்
தடுமின்; "போர்க்கு வருக!" எனச்
   சாற்றுமின்;
கடுமின், இப்பொழுதே கதிர் மீச்
   செலாக்
கொடி மதில் குடுமித்தலைக்கொள்க!'
   என்றான்.


சாலையின் இடையில் மரங்கள்
பலவற்றைப் போடுங்கள்,
அரக்கர்கள் நடமாட இயலாதபடி
தடுத்து விடுங்கள்,
யுத்தத்திற்கு வாருங்கள் என்று
கூவியழையுங்கள்,
இப்போதே இவற்றைச் செய்யுங்கள்;
சூரியன் நேராய்ச் செல்ல இயலாத,
உயர்ந்து வளர்ந்து வளைந்து செல்லும்
மதில்களின் சிகரங்களைக்
கைப்பற்றிக் கொள்ளுங்கள்'
என்று இராமன் வானர சேனைக்குக்
கட்டளையிட்டான்.



7035.
பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும்,
கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல்.
வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது--இக் கடல்.

பற்களைக் கொண்டும்,
பெரிய மரங்களைக் கொண்டும்,
கற்களைக் கொண்டும், போரிடச் சென்றது
கடல் போன்ற வானரச் சேனை;
வில்லைக் கொண்டும்;
நீண்ட வேல்களைக் கொண்டும்
மற்றும் ஒளி மிக்க படைக் கருவிகளையும்
கொண்டு, போரிடச் சென்றது
கடல் போன்ற அரக்கர் சேனை.


7041.
கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப்
பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின,
இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை
முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின.

தம் பற்களால் அரக்கரைக் கடித்தன,
கைகளால் குத்திக் காயம் ஏற்படுத்தின,
அரக்கர் கழுத்துகள் துண்டாகும்படி
இறுக்கின,
கூரிய நகங்களால் இரண்டாய்ப் பிளந்தன,
முட்டிகளால் மோதின,
கால்களால் உதைத்தன,
எண்ணற்ற அரக்கர்களை இவ்வாறாக
அழித்தன,
கொடுங்கோபம் மிக்க குரங்குகள்.



(வச்சிரமுட்டி என்ற அரக்கன் 
வானர சேனையில் பலரை அழிக்க)

7070.
நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி 
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள் 
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன் 
யாக்கையும் சிதைத்திட்டு, எழுந்து ஏகினான். 

சுக்கிரீவன் அங்கு நடப்பதைக் கண்டான்,
வஞ்சகன் ஆகிய வச்சிரமுட்டியின் 
விரைந்து செல்லும் வலிய குதிரைகள்
பூட்டிய தேரின் மீது பாய்ந்து ஏறினான்.
தோளில் தொங்க விட்டிருந்த 
அம்பறாத் தூணியையும் வில்லினையும் 
அறுத்தான்; அதோடு நிற்காது  
அவன் உடலையும் அழித்துவிட்டு, 
அங்கிருந்து விலகிச் சென்றான்.


7110.
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் 
கண்டு நின்று, கயிலை இடந்தவன், 
புண் திறந்தன கண்ணினன், பொங்கினான், 
திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்-- 

(அரக்கப் படை அழிவதைக் 
கேள்விப்பட்ட இராவணன்)
நிறைய போர்களைச் செய்தவன், 
கயிலை மலையைப்  பெயர்த்து எடுத்தவன் 
புண்ணைப் பிளந்தாற்போன்று சிவந்த 
கண்களையுடையவன், சினந்து பொங்கி; 
நெறிமுறைகளையெல்லாம் ஆராய்ந்து, 
வலிய உறுதியான நெடுந்தேர் ஒன்றைத் 
தேர்ந்தெடுத்து ஏறி, போர்க்களம் போனான்.


( தொடரும் )