Thursday, April 9, 2020

கம்பராமாயணம் 90



6829.
'பேதை மானிடவரோடு குரங்கு அல,
   பிறவே ஆக,
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப்
   புறத்தது ஆக,
காது வெஞ் செரு வேட்டு, என்னைக்
   காந்தினர் கலந்த போதும்,
சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த்
   தொழில் திறம்புவேனோ?'


அறிவற்ற மானிடர்களோடு,
குரங்கு மட்டும் அல்ல,
வேறு யார் வேண்டுமென்றாலும்
துணைக்கு வரட்டும்,
மண்ணுலக எல்லை, அதையும் தாண்டி
நாகருலகம் வரையிலும், ஏன் அதற்கு
அப்பாலிருந்தும் ஆட்கள் வரட்டும்,
போர் புரியும் எண்ணத்தோடு, பகைவர்
சினந்து எனை நெருங்கி வரட்டும்.
சீதையை கவர்ந்து செல்ல எண்ணினால்,
போர் செய்யாது விடுவேனா ?
என்று இராவணன் சபையில் பேசினான்.


இலங்கை காண் படலம்


6836.
அருந்ததி அனைய நங்கை அவ்வழி
   இருந்தாள் என்று
பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர்
   காண்பான் போல,
பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும்
   பின்பு செல்ல,
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன்
   இராமன், இப்பால்.

கற்பில் சிறந்த அருந்ததி போன்ற சீதை
இலங்கையில் உள்ளாள் என்ற செய்தி
உற்சாகம் தந்தது, காதலைத் தூண்டியது;
அந்த அழகிய இலங்கை நகரைக் காண
ஆவல் எழுந்தது;
சுக்ரீவனும் வீடணனும் இருபுறம் வர,
தம்பி இலக்குவன் பின் தொடர,
தங்கியிருந்த பெரிய சுவேல மலையேறி
இலங்கை நகரைப் பார்த்து ரசித்தான்
இராமன்.



6829.
இன்னவாறு இலங்கை தன்னை
   இளையவற்கு இராமன் காட்டி,
சொன்னவா சொல்லா வண்ணம் அதிசயம் 
   தோன்றும் காலை,
அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் 
   பெருமை காண்பான்,
சென்னிவான் தடவும் செம்பொற்
   கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான்.

இவ்வாறு இலங்கையின் அழகை ரசித்து 
இராமன் இலக்குவனும் காட்டுகையில்,
புதிது புதிதாய்க் காட்சிகள் அவர்தம் கண் 
முன் முன் தோன்றிக் கொண்டிருக்கையில்,
அந்த நகரத்தின் அரசன் இராவணன்,
குரங்குக் கூட்டத்தின் பெருமைகளைக் 
காணும் பொருட்டு,
வானைத் தொடும் உயர்ந்த கோட்டைக்
கோபுரத்தின் உச்சியை அடைந்தான்.



இராவணன் வானரத் தானை காண் படலம்

6877.
மடித்த வாயினன்; வயங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்,
இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்;
துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள்.

(கோட்டை மதில் ஏறிய இராவணன்,
இராமனைக் கண்டான்)

கோபத்தில் உதட்டைக் கடித்தான்.
சிறுசிறு பொறிகளாய்த் தீ விழுகின்ற
கண்களையுடையவனானான்.
அந்த சமயத்தில், அவன் கோபத்தால்
இடி போன்ற ஒலி உண்டாயிற்று;
உள்ளம் பற்றி எரிந்தது;
கண்களும் இடது தோள்களும் துடித்தது.


6879.
'ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
மேனியே உரைசெய்கின்றது; வேறு இச்
சேனை வீரர் படையைத் தெரி' என்னத்
தான் வினாவ, எதிர், சாரன் விளம்பும்


'மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு
உடல் கருத்து,
அவனே இராமன் என்று தெரிகின்றது.
மற்ற வீரர் பற்றி,
அவர் பெற்ற தீரம் பற்றிச் சொல்'
என்று இராவணன் வினவினான்.
படை வீரன் சாரன் ஒவ்வொருவரைப்
பற்றியும் விளக்கினான்.



( தொடரும் )


No comments:

Post a Comment