Tuesday, October 25, 2016

நான் … நீ



அலையாய் நான் படகாய் நீ
ஆடித்திரிவோமா ?

மழையாய் நான் முகிலாய் நீ
கொட்டித் தீர்ப்போமா ?

குரலாய் நான் குயிலாய் நீ
பாடிப் பறப்போமா ?

உடையாய் நான் இடையாய் நீ
ஒட்டிக்கிடப்போமா ?

விதையாய் நான் நிலமாய் நீ
செடியாய் முளைப்போமா ?

கண்ணன் நான் ராதை நீ
காதல் செய்வோமா ?

கவியாய் நான் தமிழாய் நீ
கவிதை புனைவோமா ?

Wednesday, October 19, 2016

கலியாணம்



'ஹலோவ்' திறந்திருந்த கதவில் டொக்கினாள் தான்வி.
'யாருங்கவேணும்?' கேட்டுக்கொண்டே வந்தார் ரகுராமன், 60 வயது நரை தலையில், நடையில் ஒரு வேகம்.

'ரகுராமன் ?'

'நாந்தா, வாங்க உள்ளே , யாரு வேணும் ஒங்களுக்கு?'

'பையன பாத்துட்டு வரனும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரு, அதா வந்தே, சுகுமார் தானே பையன் ? இருக்கானா?'
சுருக்கென்றிருந்தது ரகுராமனுக்கு. இருந்தாலும் நம்பகாலமில்லை. 2016 ல இருக்கோம்னு ஞாபகப்படுத்திக்கொண்டார்.

'நீங்க தா ஞானகியா? உக்காரும்மா ... கமலம்' என்று உள்ளேபார்த்து குரல் கொடுத்தார்.

'தான்வி' தன் பெயரைச் சொல்லிக்கொண்டே அமர்ந்தாள்,

'உன்னோட பேருக்கு என்னம்மா அர்த்தம்?'

'யாருக்குத் தெரியும், மாத்தலாம்னு கூட யோசிச்சே, ஆனா ப்ரெண்ட்ஸ் லா ஷார்ட்டா ஸ்வீ ட்டா இருக்கு ன்னு சொன்னாங்க, சரின்னு விட்டுட்டே'

'கூப்டீங்களா?' என்று கேட்டுக்கொண்டே கமலம் உள்ளிருந்து வந்தார்.

'சுகு வ பையன் பார்க்க ... அப்பாம்மா வரலியாம்மா?'

'நா மொதல்ல ஓகே சொல்லணும்ல, கல்யாணத்துக்கு வந்துருவாங்க, சுகு வ கூப்பிடுங்களே பாத்துட்டு கெளம்புறே'

'சுகு...மார், இங்கே  வாப்பா ' என்று மாடியில் குரலனுப்பிவிட்டு 'காஃபி கொண்டா போ' என்று மனைவியை உள்ளுக்கனுப்பினார்.

'காஃபில்லா வேணா' என்று இடைமறித்து, 'பல்லு கருப்பாயிடும்னு குடிக்கறதில்லே, ஜில்லுன்னு என்ன கெடைக்கு?' என்று தொடர்ந்தாள்.

'மோர் குடிக்குறியாம்மா?'
'மோர் ? அப்டின்னா?'

'யாருப்பா' என்று கேட்டுக்கொண்டே சுகுமார் வர

'ஒன்ன பாக்க வந்திருக்காங்க, தான்வி ... இவ தாம்மா சுகுமார்'

'வேஷ்டி சட்டைல எதிர்பார்த்தே ... ஜீன்ஸ் டி ஷர்ட் ... ம்ம்ம்'

'நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?' சுகுமார் கேட்க,

'சுகு கார் ஓட்ட தெரியுமா?'

'இப்போதா டிரைவிங் க்ளாஸ் போயிட்டிருக்கே, நீங்க என்ன ... ?'

'டான்ஸ் க்ளப் பார்ட்டி இதெல்லா பழக்கம் உண்டு தானே?'

'இல்லே எனக்கு இதெல்லா பழக்கமில்லை'

'தட்ஸ் ஓகே, பட் எனக்கு நிறைய பாய் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க, காலைல ஒருத்த பிக்கப் பண்ணுவா, நைட்டு ஒருத்த ட்ராப் பண்ணுவா .... பி சோசியல் யங் மேன்'

சுகுமார் தந்தையைப் பார்க்க ரகுராமன் இடைமறித்து

'பேஸ் பேஸ் ... பார்ட்டி ல்லா போறேன்னா ... உனக்கு நல்ல பாட்டு பாட வருமே கரெக்ட்டா?'

'ராம், எல்லா ப்ரெண்ட்ஸோட பார்ட்டிலேயு என்னோட குத்தாட்டம் தா மெயின் அட்ராக்சன்'

ரகுராமன் இப்போது சுகுமாரைப் பார்த்தார்.

'சமைக்கத் தெரியுமாம்மா ஒனக்கு ?' என்று கமலம் கேட்டாள்

'வீட்ல சமைக்க ஆளிருக்கு,  ரோட்டுல ஒவ்வொரு மூலையிலு ஹோட்டல் இருக்கு, கையில பணமிருக்கு’

சுகுமார் கமலம் ரகுராமன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


'கல்யாணம் ஆனா சேர்ந்து இருப்பியா இல்லே ...' ரகுராமன் ஒரு ஐயத்துடன் கேட்க

'லுக் மிஸ்டர் … ராம், இன்னு நா கல்யாணம் பண்ணனுமா, வேணாமா ன்னு முடிவெடிக்கலே, சுகு அதுக்குத் தகுதியானவனான்னு இன்னு தெரியலே ...வாட்டவேர் ... தனியா இருந்தா பெட்டெர்னாலு வேலை செய்யனு, காஃபி போடனு , சமைக்கனு இதுக்கெல்லா செலவில்லாம ஆளிருந்தா நல்லதுதானே ... என்ன சொல்றீங்க?' என்று எதிர் கேள்வி கேட்டு, தான்வி தொடர்ந்தாள் ..... ‘பை த பை சுகு, எவ்ளோ சம்பளம் ?'

'ஒங்க தேவையோட கம்மி'

'பாஸ்போர்ட் லா இருக்குல்ல?'

'சரி ... ' என்று சுகுமார் எந்திரிக்க

'ஓகே ராம் நா சொல்றே, வேணாம்னு சொல்லிட்டா டோன்ட் பீல் பேட், பை சுகு'

கமலம் திகைக்க,
ரகுராமன் முழிக்க,
சுகுமார் மனதுள் சிரிக்க

தான்வி அங்கிருந்து கிளம்பினாள்.

****
சுகுமார் விரைந்து மாடிக்குச் சென்று

'தாங்க் யூ தான்வி' என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்'

'நாளைக்கே மைதிலியு நீயும் காதலிக்கறத ஒன்னோட பாரெண்ட்ஸ் ட சொல்லிடு, நா இப்போ பண்ண ரகளைக்கு நீ யார கல்யாணம் கட்டிக்கறேன்னு சொன்னாலு ஒத்துப்பாங்க, ஆல் தி பெஸ்ட் நண்பா' என்று பதில் செய்தி அனுப்பினாள் தான்வி.

Wednesday, October 12, 2016

என் தவறோ ?



கனவில்லாது
கண் விழித்தப்பின்னும் 
அலுவலகத்தில் வேலையின்றி
அமர்ந்திருக்கும் பொழுதும்
பழையக் கவிதைகளின் மேல்
பார்வையோட்டும்போதும்
அழகுபெண்டியரை
அரைக்கண்ணால் கண்டு ரசிக்கும்போதும்

ஏனோ இப்பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருவதில்லையே,
இதுவும் என் தவறோ ?