Monday, October 31, 2011

அருணகிரிநாதர் திருப்புகழ் - 13

                                    சந்ததம் பந்தத் ...

துயரத்தில் சோர்ந்து போகாது,
பாசத்தோடு எல்லாரோடும் பழகி,
முருகா உன்னை என்றும்
மறவாது துதித்து
மனக்கண்ணால் கண்டு,
நான் அன்பு கொள்ள வேண்டும்.
தேவயானியின் மணாளனே,
சங்கரன் பார்வதியின் புதல்வனே,
திருச்செந்துரிலும் கண்டியிலும்
ஒளி கொண்ட வேலோடு
ஒளிர்பவனே,
திருவருள் தருபவனே,
திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும்
பெருமானே !!!

Thursday, October 20, 2011

தீபாவளி

                                    தீபாவளி

தித்திக்கும்
தீபாவளித்
திருநாள்;
திக்கெட்டும்
கொண்டாடிக்
குதுகளிக்கும்
பெருநாள்;

தேக்கி வைத்தப் பணம்
தீக்கு இரையாவதைப் பார்த்துத்
திணராது சிரித்து மகிழ்வது இத்
திருநாளில் மட்டும் தான்;

விடிகாலை விழித்து
வெந்நீரில் குளித்துப்
புத்தாடை உடுத்திக்
கொண்டாடி மகிழ்வோம்;

பெற்றோரை வணங்கி,
பெரியோரை மதித்து,
சிறியோரை வாழ்த்தி,
பரிசுகள் பரிமாறிச்
சிறப்பாய்க் கொண்டாடுவோம்;

இனிப்பு உண்போம்,
இல்லாதாற்குக் கொடுத்து மகிழ்வோம்;

நம் பழைய உடைகள்
பலருக்குப் புதிய உடைகளாகும்
உண்மையை உணர்வோம்;

சுத்தமான தீபாவளி
சத்தமில்லாத தீபாவளியே எனச்
சத்தமாகச் சொல்வோம்;
புகை சூழ்வதை விடப்
புன்னகை சொல்வதே
நன்று என்று உணர்வோம்;

   

கேப் வெடிக்கட்டும்,
குழந்தைகள் கை தட்டிச்
சிரிக்கட்டும்;
சங்கு சக்கரம்
சுற்றட்டும்,
சண்டை சச்சரவுகள்
ஒழியட்டும்;

கொஞ்சமாய்ப்
பாம்பு மாத்திரைகள் எரியட்டும்;
கொஞ்சம் கூட மிச்சமில்லாது
பாவ காரியங்கள் ஒழியட்டும்;

தீபாவளியில் மட்டும்
அணுகுண்டுகள் வெடிக்கட்டும்
(சத்தமில்லாது);
தீபாவளிக்காக மட்டுமே
துப்பாக்கி விற்பனை;
திசை மாறிப்பாயும் ராக்கெட் இத்
திருநாளில் மட்டுமே;

வான வேடிக்கையின்
விற்பனையை விட
வாழ்த்து அட்டைகளின்
விற்பனை அதிகரிக்கட்டும்;

தொலைக்காட்சியில்
தொலைந்து போகாது
தோழர் தோழியரைத்
தொடர்பு கொண்டு
தொல்லை தருவோம்
தவறில்லை;

தீய வழி ஒழியட்டும்,
தீபாவளி வாழட்டும்.

வாழ்த்துக்கள் !
வாழ்க பல்லாண்டு !

Wednesday, October 19, 2011

சுதாமா சரித்திரம் - 6

                                    சுதாமாவிற்கு அருள்

ஒருவழியாய் வயிற்றுப் பசி அடங்கியது,
உடல் சோர்வு கிளம்பியது;
கண்கள் உறங்கக் கெஞ்சியது;
வெளியே செல்ல முற்பட்டார்; எங்காவது
கொஞ்சம் உறங்கக் கிளம்பினார்;

கண்ணனோ சுதாமாவைத்
தன் அறைக்கு இழுத்துச் சென்றான்;
நறுமணம் நிறைந்த அறை;
சுத்தமானப் பஞ்சில் மெத்தை;
குளுகுளு காற்று வசதி;
அழகிய மணிகள்
அசைந்தாட இன்னிசை;
தயங்கியப்படியே தள்ளி நின்றார் சுதாமா; அவரை
அமுக்கிக் கட்டிலில் அமர வைத்தான் பரமாத்மா;
கால் பிடித்து விட்டான்; சுதாமா
கண்ணனின் அன்பைப் பார்த்து
கண் கலங்கினார்;
கவலை எதற்கு,
யாமிருக்க ? கண்ணன் கேட்டான்;

எல்லாம் சரி,
எனக்காக என்ன கொண்டு வந்தாய் சுதாமா ?
என்று கேட்டான் கண்ணன்,
எல்லாம் தெரிந்தவன்,
எதுவும் தெரியாதவன் போல் இருப்பவன்;

இத்தனை வித
அமுதம் படைத்தவனுக்கு, வறண்ட இந்த
அவலை அளிப்பது
அவமதிப்பதற்கு சமானம்
என்று எண்ணினார் சுதாமா;
ஏதும் சொல்லாமலே இருந்தார்;

கண்ணனே பேசினான்;
அன்பில்லாமல் பலர்
அள்ளி அள்ளித் தருவர்;
அவர்கட்கு என்
ஆசீர்வாதம் கிடைப்பதில்லை;
அன்போடு எனக்குக்
கொஞ்சம் தந்தாலும்
அப் பக்தர்கட்கு நான்
அடிமை என்றான்;

இவ்வளவு சொன்ன பின்னும்
எடுத்து வந்த அவலைக் கிருஷ்ணனுக்குக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;

கிருஷ்ணன் இத்தனை சொன்ன பின்னும்
கொண்டு வந்த அவலைக்
கொடுக்கத் தயங்கினார் சுதாமா;
'என்ன மூட்டை இது'
என்று தானே சுதாமாவின் அருகில் இருந்ததை
எடுத்தான், பிரித்தான், அதிசயித்தான்;

சுதாமா, எனக்கு மிகவும் பிடித்த அவல்;
ஆகா ஆகா என்று ஆனந்தப்படான்;

ஒரு கை அவல் எடுத்தான்;
தன் வாயில் போட்டுக்கொண்டான்;
இன்னொரு கை அவல் எடுத்தான்;
அதற்குள் மனைவி ருக்மணி
கண்ணனைத் தடுத்தாள்;
ஒரு கை அவலுக்கே சுதாமாவிற்கு
அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டி விடுமே;
இன்னொரு கைப்பிடி அவல் எதற்கு ?
இன்னும் அவருக்குத் தர என்ன இருக்கு ? என்றாள்;

சிரித்துக் கண்டான் சிரீதரன்;

புலர்ந்தது காலை;
மலர்ந்தது புதிய வேளை;
புறப்பட்டார் சுதாமா தன் மனை நோக்கி;
பரந்தாமனின் அன்பைத் தன் மனதில் தேக்கி;
பிரியா விடை தந்தான் கண்ணன்;
பிரிய மனமில்லாப் பள்ளித் தோழன்;

சுதாமா
கண்ணனை எண்ணியப்படியே,
கண்ணனின் கருணையை நினைத்தப்படியே,
கண்ணன் காட்டிய அன்பை அசைபோட்டுக்கொண்டே
தன் ஊருக்கு வந்து சேர்ந்தார்;
தன் வீட்டருகே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி;
அங்கே அவர் மனை இருந்த இடத்தில்
அரண்மனை போன்றோர் மாளிகை இருந்தது;
என் மனை எங்கே ?
என் மனைவி, மக்கள் எங்கே ?
என்றவர் குழம்ப,
அதற்குள் சுதாமா வருகையை
அறிந்த அவ்வூர் மக்கள்,
மேல தாளத்துடன் அவரை வரவேற்க வந்தனர்;
சுதாமாவின் மனைவி
சூரிய ஒளிபோல் பிரகாசிக்குமந்த அரண்மனையிலிருந்து
வெளிப்பட்டாள்;
உங்கள் வீடு, உங்கள் மனை என்று
ஊரார் தெரிவித்தனர்;
எல்லாம் அந்தக் கண்ணனின் கருணையால்
நிகழ்ந்தது என்றுணர்ந்தார் சுதாமா;
மரகதம்,தங்கம், வெள்ளி எல்லாம்
மின்னியது அந்த
மாளிகையில்;
சுதாமாவின் வறுமை ஒழிந்தது;
வளமை மிகுந்தது;

சுதாமா -
பணம் வந்திடினும்
பழமை மறக்காது இருந்தார்;
பரந்தாமன் மேல்
பக்தி செய்து வந்தார்;

பரம ஏழை சுதாமாவின் இந்தக் கதையைப்
படிப்பவர்க்கு அந்தப்
பரந்தாமன் அருள்
பாலிப்பான்;

                                    கிருஷ்ணார்ப்பணம்


                                                                        ( சரித்திரம் முடிவுற்றது )

Tuesday, October 18, 2011

சுதாமா சரித்திரம் - 5

                                    சுதாமா கண்ணன் சந்திப்பு

சுதாமாவைக் வருவதை அறிந்ததும்,
ஜல் ஜல் ஜல் என்று தன் சலங்கை சப்திக்க
சுதாமாவை வரவேற்கக் கண்ணன் ஓடினான்;


அங்கிருந்து சுதாமா வர,
இங்கிருந்து கண்ணன் வர,
இருவரும் வழியில் சந்திக்க, கண்ணன்
இறுக்கிக் கட்டிக் கொண்டான்
சுதாமாவை, தன் பள்ளித் தோழனை;

     


இருவர் கண்களிலிருந்தும்
கண்ணீர் கொட்டியது;
இவர் கண்ணீரை அவர் துடைக்க,
அவர் கண்ணீரை இவர் துடைக்க,
இதையெல்லாம் கண்டோர் ஆனந்தித்து மகிழ,
கண்ணா உன்னை தரிசிக்க
என்ன பேறு செய்தேன் நான்
என்று சுதாமா கண்ணனை வணங்கித் துதிக்க,
கண்ணன் அவரை அணைத்து
அழைத்துச் சென்று
அவர் கால் சுத்தம் செய்து,
அந்த நீரைத் தன் தலையில்
அள்ளித் தெளித்துக் கொண்டார்;


பள்ளித் தோழர்கள்
படிக்கையில் நடந்த சுவாரஸ்யமான
பல நிகழ்வுகளைப்
பகிர்ந்துகொண்டனர்;
பேசிப் பேசிச் சிரித்துக் கொண்டனர்;

அன்று நடந்தது முதல்
அன்றாட நிகழ்ச்சி வரை
அனைத்தும் பேசினார்;

உலகளந்த உத்தமன்
உயிர்த்தோழன் சுதாமாவை
உணவு உண்ண அழைத்துச் சென்றான்;
வேலை செய்வோர்
வியந்து நோக்க தானே தன் கையால்
உணவு பரிமாறினான்;
உண்ணப் பணிந்தான்;



     

கோசும்பிரி, பச்சடி,
கூட்டு,
அவரை கீரைப் பொரியல்,
கிழங்கு வகைகள்,
முறுக்கு, பஜ்ஜி,
மெது வடை, ஆமை வடை,
தயிர் வடை,
பச்சரிசி சோறு,
பருக இளநீரு,
தக்காளி ரசம்,
மல்லி ரசம்,
பூண்டு ரசம்,
பல வித இனிப்பு வகைகள்,
ரவா லாடு, பேசின் லாடு,
ஜாங்கிரி, ஜிலேபி, போலி,
பால் பாயசம், பருப்புப் பாயசம்,
சேமியாப் பாயாசம்,
ஜவ்வரிசி பாயாசம்,
கெட்டித் தயிரு,
சுண்டக் காய்ச்சிய மாட்டுப் பால்
இன்னும் பல பலகாரங்கள்;

சுதாமா திகைக்கத் திகைக்கப் பரிமாறினான்;
தின்னச் சொல்லி வற்புறுத்தினான்;
போதும் என்றார் சுதாமா,
போதாது இன்னும் போடு என்றான் கண்ணன் ருக்மணியை;

வயிறு வெடித்துவிடும் என்றார்;
உடல் இளைத்திருக்கிறதே என்றான்;
முடியாது கண்ணா என்றார்;
முடியும் தின்ன என்றான்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Monday, October 17, 2011

சுதாமா சரித்திரம் - 4

                                    துவாரகையில் சுதாமா

குருகுலம் விட்டு வந்த பின்
எசொதைக் கண்ணன்
என்னை எப்பொழுதாவது
எண்ணியிருப்பானா ?
என்னை இன்னும்
மறக்காது இருப்பானா ?
அவனைக் காணும் பாக்கியம்
எனக்குக் கிட்டுமா ?
ஏழை என் சிநேகம்
ஏற்புடையதன்று என்று
எண்ணுவானோ ? இன்னும் இதுபோல்
ஏராளமானக் கேள்விகள்
எழுந்தது சுதாமாவின் மனதுள்;
எழுந்த கேள்விகள்
எதற்கும் பதில் தெரியாது,
எல்லாமே கிருஷ்ணார்ப்பணம்
என்றெண்ணியப்படி
தூவரகை வந்தடைந்தார் சுதாமா;

துவாரகை -
அழகான ஒரு நகரம்;
ஆனந்தம் அங்கு எங்கும் உலவும்;

கம்பீரமானக்
கட்டிடங்கள்;
முகிலை முட்டும்
மாடமாளிகைகள்;
உயர்ந்து நிற்கும்
கோபுரங்கள்;

வளம் கொழிக்கும்
வயல்கள்; நற்
குணம் நிறைந்த
மனங்கள்;
ஆடு மாடு பால் தயிர் என்று
எதற்கும் குறையில்லாது
எங்கும் வளம்;

அழகான மாளிகைகளின் இடையே
அரசனின் மாளிகை எது என்றறிவது
அத்தனை சுலபம் இல்லாது போனது;
ஊர் மக்கள்
உதவி செய்தனர்;
உத்தமன் கண்ணன்
உறைவிடம் காண்பித்தனர்;

சுதாமா
அரண்மனையின் உள்ளே நுழைந்தார்,
பரந்தாமனைப்
பார்க்கப்
பலப் பிரதேசத்திலிருந்துப்
புரவலர்கள் பலர் வந்திருப்பதைப்
பார்த்தார், இத்தனைப்
பேர்களுக்கிடையில் இந்த ஏழையைப்
பார்க்கப் பிரியப்படுவானா கண்ணன்,
என்று எண்ணினார்;

நெஞ்சில் கண்ணனை
நினைத்தப்படியே, கண்ணில்
நீர் வந்தபடியிருக்க
தியானத்தில் அமர்ந்தார்
சுதாமா;
சுதாமா வந்ததைச்
சுந்தரன் கண்ணன்
உணர்ந்துக் கொண்டான்;
இக்கணமே அவரை
இங்கே அழைத்துவரத்
தம் பணியாளரைப் பணிந்தான்;

காவலர் வந்தனர்;
கண்ணன் அழைத்ததைச்
சுதாமாவிடம் சொன்னனர்;
கண்ணில் கண்ணீரோடு, நெஞ்சில்
கண்ணனைக் காணும் ஆசையோடு
காவலனோடு சுதாமா
அரண்மனை உள் சென்றார்;
ஆவலோடு கண்ணன்
அங்குக் காத்திருந்தான்;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

Sunday, October 16, 2011

சுதாமா சரித்திரம் - 3

                                    குசேலாவின் யோசனை

பசியால் வாடியப்
பிள்ளைகளின்
முகம் கண்டு வாடியது
அன்னையின் முகம்;
பொங்கியது துக்கம்;
தோன்றியது ஓர் உபாயம்,
அதற்குத் தேவை கணவனின் சகாயம்;

சுதாமாவிடம் சென்றாள்; ஒரு
சூட்சுமம் சொல்வேன்,
செவிமடிக்க வேண்டுமென்றாள்;
'சொல்' என்றார்,
சொன்னாள்;
'பிரிய பர்த்தா,
பரந்தாமனை ஒருமுறை
பார்த்து வாருங்கள்,
பரந்த
உள்ளம் படைத்தவன், எளியவர்க்கு
உதவும் தயாளன், உங்கள் நண்பன்,
உங்கள் சொல்லுக்கு செவி மடிப்பான்,
உதவி கேட்டால் நாம்
உய்ய வழி சொல்வான்,
உலகுக்கே படி அளப்பவன்
உங்களுக்கு இல்லை என்ற சொல்வானா என்ன ?
உரைத்தாள் பாரியாள்;

அகமுடையாளின் யோசனையை
அவர் ஆமோதித்தாலும்
ஆருயிர் நண்பனிடம்
உதவி கேட்பது
உத்தமம் ஆகாது
என்று எண்ணினார்;
எனினும்
எசொதை மைந்தன் கண்ணனைப்
பார்த்துவிட்டு வர ஒப்புக் கொண்டார்;

அரசன் அவன்,
அவனைக் காணச் செல்கையில்
கையில் என்ன கொண்டு செல்ல ?
எனக் கேட்டார்; உடனே
அவர் மனைவி
அக்கம் பக்க வீடுகளிலிருந்து
அவல் கொஞ்சம் வாங்கி,
அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி,
அவர் கையில் கொடுத்தார்;


பசி ஒரு பக்கம் தள்ள, கண்ணன் மீது
பாசம் ஒரு பக்கம் இழுக்க,
புறப்பட்டார் சுதாமா,
துவாரகை நோக்கி;
கண்ணனோடு தானிருந்த
காலத்தின் நினைவுகளை
மனதில் தேக்கி;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Saturday, October 15, 2011

சுதாமா சரித்திரம் - 2

                                    சுதாமா என்ற குசேலர்
சுதாமா -
பணம் பொருள் மேல்
பற்றிலாதவர்;
மனதை அடக்கி
வாழ்பவர்; பணம்
வந்தபோது மகிழார்,
வராதபோது வருந்தார்;

இருப்பதைக் கொண்டு
இல்லறம் செய்வார்;
இதயத்தில் கண்ணனை
இருத்திவைத்து மகிழ்வார்;

அழுக்காடை அணிந்திருப்பார்
அரையில்;
அதைத் துவைத்தால் காயும்வரை
அம்மணமாய் அமர்ந்திருப்பார்
அறையில்;

அணிவது அழுக்காடை என்பதால்
ஆனது அவர் பெயர் 'கு சேலன்*' என்று;
குசேலன் மனைவி குசேலி ஆனாள்;
மண் நிறம் பெரும் நீரானாள்;
அவரோடு ஒன்றி வாழ்ந்தாள்;

தனக்கென ஏதும்
தள்ளிவைத்துக் கொள்ளது
தன் தலைவனுக்கே எல்லாம்
என்றெண்ணி வாழ்ந்தாள்;
தலைவனின் நலம் தவிர வேறேதும்
எண்ணாது வாழ்ந்தாள்;

ஒவ்வொருமுறையும்
சுதாமா தன் துணைவியை அழைப்பார்;
அழைத்த அக்கணத்திலேயே
அவரெதிரில் அவள் வந்து நிற்பாள்;
'ஆர் தெரியுமா உன் ஆளன்,
அந்தப் பரந்தாமனின் பிரியத் தோழன்'
பெருமையாய்ச் சொல்வார்,
பொறுமையாய்க் கேட்பாள்;


நாட்கள் நகர்ந்தது;
பிள்ளைகள் பிறந்தது;
வறுமையும் வளர்ந்தது;
                                                                        ( சரித்திரம் தொடரும் )

___________________________________________________________
*சேலம் என்றால் ஆடை என்று பொருள்

Friday, October 14, 2011

சுதாமா சரித்திரம் - 1

                                    முன்னுரை - என்னுரை

சுதாமா -

சுத்தமான ஒரு ஆத்மா,
பரந்தாமனோடு கூடப் படித்தவர்,
பள்ளித் தோழர்,
பண்பு நிறைந்தவர்,
பிரம்ம நுணுக்கங்களை அறிந்தவர்; ஆனால்
பரம ஏழை;

வேதம் கற்றவர், வாழும்
விதம் கல்லாது போனார்; காசு
பண்ணத் தெரியாது வாழ்ந்தார்;


உண்ண உணவில்லாது,
பிழைக்க வழி தெரியாது
திண்டாடினார்;
அன்போடு அண்டியவரை
அரவணைத்துக் கரைசேர்க்கும்
அந்தக் கண்ணன்
அவல நிலையிலிருக்கும் தன் நண்பனை
அப்படியிருக்க விட்டுவிடுவானா ?
அவன் பால்
அன்பு செய்யாது போய்விடுவானா ?

கஷ்டத்திலிருக்கும் நண்பன் மேல்
கருணை வைத்தான்,
காப்பாற்றினான்;
கரை ஏற்றினான்;
கண்ணன், அந்தக்
கதை இனி அனுதினமும்;

                                                                        ( சரித்திரம் தொடரும் )

Thursday, October 13, 2011

பக்த பிரகலாதன் - 10

                                    நரசிம்மம்

அரியை நம்பும்
அவனை என் வாளால்
அரிவேன் என்றான்;
எடுத்தான் வாளை;

'எங்கே உன் அரி,
அதை இப்பொழுதே அறிவி,
எனக்குத் தெரிவி'
'அப்பா, அரி எங்கும் இருக்கிறான்'
'எங்கும் இருக்கிறான் எனில்
என் கண்ணுக்கு தெரியவில்லையே'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'எனக்குத் தெரியவில்லையடா, அவன் இல்லையடா'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'இங்கு இருக்கிறானா ?'
'ஆம்'
'இந்தத் தூணில் ?'
'அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்'
'பிரகலாதா, இப்பொழுதே இந்தத் தூணிலிருந்து
அந்த உன் அவன் வெளிப்படாவிட்டால்
உடனே உன் தலை துண்டிக்கப்படும்
'

ஆக்ரோஷமாய்க் கத்தினான்
ஆத்திரம் கொண்டுதைத்தான் அத் தூணை;
வாள் எடுத்து வெட்டினான்;

அண்டமே அதிரும்படி ஒரு சத்தம்;
அரண்மனையிலிருந்தோர்
அனைவரும்
அதிர்ந்து சிலையாகும்படி எழுந்த
அந்த ஓசையில்,
தூணை இரண்டாகப் பிளந்து,அதன்
இடையிலிருந்து எழுந்தது
நரசிம்மம்;
சிம்மத் தலை,
மனித உடல்,
தங்கம் போன்று ஜொலிக்கும் கண்கள்,
நேர் நேராய் நிற்கும் முடி,
கூர்மையான பற்கள்,
நீண்ட நாக்கு,
குகை போன்று வாய்,
மலை போன்று உடல்,
எண்ணற்ற கைகள்,
ரோமம் அடர்ந்து வளர்ந்த உடல்;

கண்டோர் கலங்கினர்;
எதிர்த்து போரிட
எவருக்கும் துணிவில்லாது மிரண்டனர்;
தனித் தனியே தள்ளி நின்றனர்;




இரண்யகசிபு சுதாரித்துக்கொண்டான்;
'ஒஹோ !
இவன் தான் மகா விஷ்ணுவா ? என்
இளையவனைக் கொன்றவனா ?
இதோ இப்பொழுதே இவனை கொல்கிறேன்;
இவனைக் கொன்றால் தேவர்களுக்குதவ
வேறு யாரும் இல்லாது போகும், அவர்கள் நிலைமை
வேர் இல்லா மரம் போல் ஆகும்,
இப்பொழுதே என் வாளால்
இவனைக் கொல்கிறேன்' என்று தன்
இடைவாளோடு பாய்ந்தான்
இரண்யகசிபு;

என்னதான் வலிமை
இரண்யகசிபுவிற்கு இருந்தாலும்
நரசிம்மம் முன் அவன்
பாறாங்கல்லை நோக்கிப்
பாய்ந்துவரும்
பறவை போலானான்;
பாம்பைக் கவ்விப் பிடிக்கும்
கருடன் போல்,
அரக்கன்
அகப்பட்டான் நரசிம்மனிடம்;

பலத்த ஓசையுடன்
நரசிம்மர் இரண்யகசிபுவைத் தூக்கினார்;
வாசலில் வந்தமர்ந்தார்;
மடியில் இரண்யகசிபுவை வைத்துக்கொண்டார்;
தன் விரல் நகத்தாலே அவன் உடலைக் கிழித்தார்;
குடலை மாலையாக மாட்டிக்கொண்டார்;

அரண்மனைக் காவலர்கள்
அத்தனையும் கண்டும் ஏதும் செய்ய முடியாது
அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்;

எதிரியைக் கொன்று அவன்
அரியாசனத்தில்
அமர்ந்தார், சுற்றும் முற்றும் பார்த்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்து
வாழ்த்தி வணங்கி நின்றனர்;

பிரகலாதன்
பணிந்தான் நரசிம்மரின்
பாதத்தில்;
பரவசமடைந்தார் நரசிம்மர்;

வேண்டுவதென்ன கேள் என்றார் நரசிம்மர்;
உன் சிந்தனை தவிர
வேறேதும் என் நெஞ்சில் நுழையாதிருக்க வேண்டும்
என்றான் பிரகலாதன்;
நரசிம்மர் மனமகிழ்ந்தார்;

உன் புகழை
உணர்ந்து படிப்போர் அனைவருக்கும்
இந்த நரசிம்மமூர்த்தியின்
அருள் கிட்டும் என
ஆசிர்வதித்தார்;

நாராயணன் நாமம்
நாவில் கொள்வோர் வாழ்வில்
நலமே இன்றும்;

வாழ்க வளமுடன் !

                                                                        ( பக்தி முடிந்தது )

Wednesday, October 12, 2011

பக்த பிரகலாதன் - 9

                                    பக்திக்குப் பரிசு

'பிரகலாதா,
புரிந்து கொண்டு
பதில் சொல்;
பெரியவன், பெரும் புகழ் கொண்டவன்
பெயரைச் சொல்'
பிதா கேட்டான்;

'தந்தையே,
பெரியவனும் அவனே,
பெரும் புகழெல்லாம் அவனுக்கே'
பிள்ளை சொன்னான்;

'எவன் அவன் ?'
என்று கேட்க
'நாராயணன்' என்றான்
அச்சம் ஏதுமின்றி
அரக்கனின் எச்சம்;

கண்கள் சிவந்தான்,
'பிரகலாதா, இந்தப்
பிதற்றல் பேச்சுக்களை இன்னும் நீ
விடவில்லையா ?
அரக்கக் குலத்திற்கு நீ
அவமானச் சின்னம்';

காவலரை அழைத்தான்,
பிரகலாதனைக்
கொல்லப் பணிந்தான்;

அரச கட்டளைக்கு
அடிபணிந்தனர்
அரக்கர்கள்;
பிரகலாதனை
அழைத்துச் சென்றனர்;


பாறையில் அமர்ந்து
பரந்தாமனை எண்ணிப்
பிரகலாதன் தியானித்திருக்கும் வேளையில்,
காவலர்கள் வாளால் வெட்டினர்;
வாள் முறிந்தது, எந்த விதத்திலும்
பாதிக்கப்படாது
பிரகலாதன் கண் மூடி அமர்ந்திருந்தான்;

     




     

நஞ்சு நிறைந்த பாம்பைக் கொண்டு
கடிக்க வைத்தனர்;
பாம்பின் விடம்
பிரகலாதனைத் தொடாதது கண்டு
பதறிப்போயினர் காவலர்கள்;


பட்டத்து யானையின்
பாதத்தில் மிதிபட
பிரகலாதன்
பிணமாவான் என்றெண்ணி,
யானை வரும் பாதையில்
படுக்க வைத்தனர்;
பட்டத்து யானை
பிரகலாதனை தன் துதிக்கையால் ஆசிர்வதித்து
வந்த வழி திரும்பிப் போனது;

     




     

மலையிலிருந்து கீழே
தள்ளிவிட்டு காவலர் திரும்பினர்
அரண்மனைக்கு;
ஆனால் அவர்கள் வரும் முன்
அரண்மனைக்கு வந்தடைந்தான் பிரகலாதன்;


நெருப்பில் அவனை
நிறுத்திவைத்தனர்;
நெருப்பு அவனை
நெருங்காது எரிந்தது கண்டு
அதிசயித்தனர்;

     


நாடாளும் வேந்தனிடம்
நடந்ததெல்லாம்
தெரிவித்தார்கள்,
எரியும் நெருப்பில்
எண்ணையுற்றினார்கள்;

                                                                        ( பக்தி தொடரும் )

Tuesday, October 11, 2011

பக்த பிரகலாதன் - 8

மீண்டும் பள்ளிக்கு வந்தான்
பிரகலாதன்,
பண்புகள் நிறைந்த
பாலகன், நாடு
ஆள்பவனை
ஆட்டிவைத்தவன்;
அரசனுக்கு
ஆகாத வார்த்தையை
அச்சமின்றிச் சொன்னவன்;

அரச தர்மம் பற்றியும்,
அரசாலும் முறை பற்றியும், எதிரிகளை
அடையாளம் காணும் முறை பற்றியும் இன்னும் பல
அவன் ஆசிரியர்கள் இம்முறை
அவனுக்குக் கற்பித்தனர்;
ஆனால் பிரகலாதனுக்கு இதிலெல்லாம்
ஆர்வம் இல்லை; இருந்தாலும்
அவன் அதை வெளிகாட்டிக்கொள்ளாது,
ஏன்
எதற்கு
என்று
ஏதும் கேட்காது,
எல்லாம் நாராயணன் சித்தம்
என
எண்ணிக் கிடந்தான்;

இவ்வாறிருக்கையில் ஒருநாள்
ஆசிரியர்கள் இல்லாத பொழுது மாணவர்கள்
அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கையில்
பிரகலாதன் வந்தான்;
பேசத் தொடங்கினான்;
'நண்பர்களே, மனித வாழ்க்கை மகத்துவமானது;
நமக்குக் கிடைத்த இந்த வாழ்வை வீணடிக்காது
நாராயணன் நாமம் ஓதி வாழ்வதே உசிதமானது;
அவனை எண்ணாது வாழ்வது அவலமானது'.

'பிரகலாதா, எங்கள்
தலைவா,
நாராயணன் பற்றியெல்லாம்
நம் ஆசிரியர்கள்
நா திறந்து பேசியதில்லையே, இதுபற்றி
நீ அறிந்தது எங்கனம் ?
அதை அங்ஙனமே
எங்கட்குச் சொல்லவேணும் இக்கணம்' எனக் கேட்க




     

நாராயணன் பெருமைகளை
நாரதர் தனக்கு
நவின்றதை எல்லாம்
நவின்றான் பிரகலாதன் தன்
நண்பர்களுக்கு;

அரியே சரணம்;
அரியே முதல்வன்;
அரியே எல்லாம்;
அரியை அறிவதே நாம்
அறியவேண்டியவற்றுள்
அரிய ஒன்று; இதை
அறிவீர் எல்லோரும்;
அறியாதார்
அறிவிலர்;

பகவானை அடைய
பாகவத தர்மமே சிறந்த வழி;
அவனே எல்லாம் என்றறிதல்
அவனை முழு மனதுடன் நம்பி இருத்தல்,
அவனையே எந்நேரமும் எண்ணி இருத்தல்,
அவன் இல்லாது எதுமில்லை என்றுணர்தல்,
அவனை அடைய இவையே வழிகள்;

எடுத்துரைத்தான், ஏற்றுக்கொண்டனர்;
கற்பித்தான், கற்றுக்கொண்டனர்;

பிரகலாதன்
பாடத் தொடங்கினான்; அவன்
பள்ளித் தோழர்கள் அவனைத் தொடர்ந்து
பாடினர்;


          வனமாலி ராதா ரமணா
          கிரிதாணி கோவிந்தா
          நீலமேக சுந்தரா
          நாராயணா கோவிந்தா
          நந்த நந்த
          ராகவேந்திர
          நாராயணா கோவிந்தா
          நாராயண
          நாராயண
          நாராயண
                    (www.youtube.com/watch?v=Vb-FIwiKxIQ)



அங்கே நடந்தேறிய
உரையாடல்களை எல்லாம்
கேட்டனர், அப்படியே
உரைத்தனர் அரசனிடம்,
பிரகலாதனின் ஆசிரியர்கள்;

மன்னனுக்கு ஆத்திரம் வந்தது;
மகனுக்கு அழைப்பு வந்தது;

                                                                        ( பக்தி தொடரும் )

Monday, October 10, 2011

பக்த பிரகலாதன் - 7

                                    பிரகலாத பாடம்

கல்வி கற்க
குருகுலம் சென்றான் பிரகலாதன்;
அரசனின் பிள்ளை மற்ற
அரக்கர்களின் பிள்ளையோடு
ஆணவமின்றிப் பாடம் கற்றான்
சுக்ராச்சாரியாரின் பிள்ளைகளிடம் ;


இரண்யகசிபுவின்
பராக்ரமமே
பாடமாயிற்று
பிள்ளைகளுக்கு;
எவன் நண்பன்,
எவன் எதிரி
எல்லாம் சொல்லித்தரப்பட்டது;
எப்படி அரசன் சொன்னானோ
அப்படியே செய்யப்பட்டது;
ஒப்பிக்கச் சொன்னதெல்லாம்
ஒப்பிக்கப்பட்டது;

பாடம்
புரியாது
பிரகலாதன்
பரிதவித்தான்;
எல்லாம் அரி
எனில்
எதிரியை அறிவது அரிவது
எதற்கு ?
எதிரி என்பவன்
எவனுமில்லை;
இதைத் தவிர வேறெதுவும்
உண்மையில்லை;

தேவையில்லாததெல்லாம்
கற்பதெதற்கு ?
தேவையில்லாதது எனத்
தெரிந்தும்
கற்பிப்பதெதற்கு ?

கேள்விகள் தினம் எழுந்தது;
படமோ தினம் நடந்தது;
பதில் தெரியாதே
பள்ளியும் தினம் முடிந்தது;

அரசன் ஒருநாள் ஆசைப்பட்டான்
அரசாளப்போகும் தன் பிள்ளை
அறிந்ததென்ன இதுவரை என்று
அறிந்துகொள்ள;

அழைத்தான் பிள்ளையை;
ஆசையில் அணைத்துக்கொண்டான்,
அவனைத் தன் மடியில்
அமர்த்திக்கொண்டான்;

'பிரகலாதா, நீ
படித்ததில்
பிடித்தது எது'
பதில் கேட்டான் தந்தை;
'பிறக்கும் முன்,
பிறந்த பின், எல்லாப்
பொழுதிலும் எனக்குப்
பிடித்தது அந்தப்
பரந்தாமன் நாராயணனின் நாமம்'
பதில் தந்தான் பிள்ளை;

கடுஞ்சினம் கொண்டான் அரசன், எனினும்
சிறுவன் முன் சிரித்து வைத்தான்;
விளையாட அனுப்பிவைத்தான்;
ஆசிரியர்களை
அழைத்தான்;
ஆர் இப்படியெல்லாம்
அவனுக்கு போதித்தது என
அதட்டிக் கேட்டான், கொதித்தான், கோபித்தான்;
அடுத்த முறை இதே பதில்
அவன் தந்தால்
அவர்கள் தலை
அவர்களிடம் இருக்காது என்று சொல்லி மிரட்டி
அனுப்பி வைத்தான்;

தலைகுனிந்தப்படியே
தம் இருப்பிடம் வந்தனர்;
தவறு நடந்தது எங்கு எனத்
தெரியாது தவித்தனர்,
பிரகலாதனுக்குப் பாடப்
பயிற்றுவிக்கும் சுக்ராச்சாரியாரின்
பிள்ளைகள்;

                                                                        ( பக்தி தொடரும் )

Sunday, October 9, 2011

பக்த பிரகலாதன் - 6

                                    பிரகலாதன்

பிரகலாதன் -

பண்புள்ளம் படைத்த சிறுவன்;
அரக்கக் குளத்தில் பிறந்தும்
இரக்க குணம் நிறைந்த ஒருவன்;
சேற்றில் முளைத்த செந்தாமரை இவன்;

இரண்யகசிபுவின் பிள்ளை;
இவனைப் போல் பக்தி செய்ய
இன்னொருவன் இல்லை;

நாராயணன் நாமம் எப்பொழுதும்
நாவில் கொள்வான்;
நாராயணனைத் தவிர வேறேதும்
நெஞ்சில் கொள்ளான்;

அரக்கனின் செல்வன்
அற வழியில் செல்வதெப்படி ?

பிரகலாதன் கருவில்
இருக்கையில்,
இரண்யகசிபு தவம் செய்துகொண்டு
இருக்கையில், யாருமறியாது
இந்திரன்
இரண்யகசிபுவின் பத்தினியைக் கவர்ந்து
இழுத்துச் செல்கையில்,
இதனைக் கண்ட நாரதர்
'இந்திரா உன் தகுதிக்கு ஒவ்வாத செயல்
இது, இவளை விட்டு விடு
இக்கணமே' என்கிறார்;

'நாரதரே,
நாலும் அறிந்தவரே,
இரண்யகசிபு வே இவ்வளவு
இடுக்கு எமக்கு அளிக்கையில்
இரண்யகசிபு விற்கு பிறக்கும் பிள்ளை
இன்னும் எவ்வளவு துன்பம் செய்வான்; எனவே
இவளைச் சிறையிலடைத்து
பிள்ளை பிறந்ததும் அப்
பிள்ளையைக் கொல்லப் போகிறேன்'
பதிலுரைத்தான்; தன் செயலை
நியாயப்படுத்தினான் இந்திரன்;

நாரதர் நகைத்தார்;
நடக்கப்போவதை இந்திரனுக்கு
நவின்றார்;
'பிறக்கப் போகும் பிள்ளை
பரந்தாமனுக்குப் பிடித்த பிள்ளை;
அப் பிள்ளை எவருக்கும் தீங்கு
செய்வான் இல்லை;
நெஞ்சில் கொள் என் சொல்லை;
நீ கவலை கொள்ள
தேவை இல்லை;

இரண்யகசிபுவின் மனைவியை விடு,
நீ புறப்படு';

அறிவுரை சொல்லி
அனுப்பி வைத்தார் தேவர்களின் தலைவனை;
அழைத்துச் சென்றார் தன்னோடு
இரண்யகசிபுவின் துணைவியை;

இரண்யகசிபு வரும் வரை தன்
இருப்பிடத்தில் தங்க வைத்தார்,
நாராயணன் மகிமையை
நாளும் ஓதினார்
நங்கையின் காதினுள்;

காதினுள் நுழைந்தது
கருவிலிருக்கும் பிள்ளையின்
நெஞ்சினுள் சென்றமர்ந்தது;

மண்ணை ஆளப் பிறந்தவன்
மனதை ஆண்டது நாராயணன்
மந்திரம்;

                                                                        ( பக்தி தொடரும் )

Saturday, October 8, 2011

பக்த பிரகலாதன் - 5

                                    வரத்தால் வந்த வலிமை

தர்ம காரியங்கள்
தலை தூக்கினால்
தெய்வ பலம் கூடுமென்பதால்
தர்ம காரியங்கள் அனைத்தையும்
தடுத்து நிறுத்தினான்;
தெய்வ சக்தி குறைய
வழி பண்ணினான்;

நாராயணனை
நமஸ்கரிப்பவர்களை எல்லாம்
நசுக்கினான்;
ஏன் என்று கேள்வி கேட்டவர்களை
எல்லாம்
எரியும் நெருப்பில் எரித்து பொசுக்கினான்;
நல்லவர்களை எல்லாம்
சிறைபடுத்தினான்;


எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை
தனக்குண்டு என்று
பறை சாற்றினான்;

நானே இறைவன்,
எனக்கே ஆராதனை, அபிஷேகம்
என் மந்திரமே எங்கும் முழங்கவேண்டும்
என்று அறிவித்தான்;


     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;
     இரண்யகசிபே
     இறைவன்;
     இல்லை
     இவனுக்கு இணை
     இன்னொருவன்;
     
     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;
     எல்லா வல்லமையும் நிறைந்தவன்;
     எதையும் செய்து முடிப்பவன்;
     அனைத்தும் அறிந்தவன்;
     அவனை வெல்பவன் எவன்;
     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;



பாவச் செயல் எங்கும் பரவ,
பசுக்கள் உயிரோடு எரிக்கப்பட,
வயல் வாழ் நிலங்கள் எல்லாம் பாழ்படுத்தப்பட,
ஆசிரமங்கள் தீயில் வெந்து நாசமாக,
நல்லோர் எல்லோரும் பயத்தில் அலற,

அச்சம் கொண்டு தேவர்கள் நாராயணனைத் தஞ்சமடைய,
அத்தனிடமிருந்து
அபயம் தருவான் பிரகலாதன் என்று
அறிவித்தான் பரந்தாமன்;

                                                                        ( பக்தி தொடரும் )

Friday, October 7, 2011

பக்த பிரகலாதன் - 4

                                    இரண்யகசிபு வரம்

தம்பியின் மரணத்திற்கு
காரணம்
விஷ்ணுவின் விவேகம்;

அந்த விவேகத்திற்கு
ஈடு கொடுக்க
வேண்டும் வேகம்;

உணர்ந்து கொண்டான் அண்ணன்;


வேகம் வேண்டி
வேள்வி செய்தான்;
மந்தார
மலை சென்றான்;
வரம் பெற
தவம் செய்தான்;

பிரம்மனைப் பணிந்தான்;
விஷ்ணுவைப் பகையென எண்ணினான்;
அவன் பலியே தன் பணியெனக் கருதினான்;

    



கட்டை விரலைக்
கீழ் பதித்து
ஒரு காலில் நின்று கொண்டான்;
இரு கையையும் தலை மேல் கூப்பினான்;
முக்காலமும் முகத்தை பிரமலோகம் நோக்கி
நான்முகனை எண்ணித் தவம் புரிந்தான்;
ஐம்புலனும் அடக்கி அவன் புரிந்த தவம்
ஆறு போல் அனலைப் பொழிந்தது தேவலோகத்தில்;
ஏழேழு ஜென்மத்திலும் எவரும் செய்யமுடியாத தவம்
எட்டியது பிரம்மன் செவிக்கு;
கிட்டியது கெட்ட நேரம் புவிக்கு;



     

எதிர் வந்து நின்றான்;
என்ன வேண்டுமென்று கேட்டான்;
சாவதிருக்க வரம் கேட்டான்;
சாத்தியமில்லை; மாற்றி யோசி என்றான்
நன்றாய் யோசித்து வரம் தர வந்தவன்;

அப்படியெனில்
மனிதனோ, மிருகமோ
உன்னால் படைக்கப்பட்டது எதனாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
வீட்டின் உள்ளே, வெளியே
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
காலையில் காரிருளில்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
எந்த ஆயுதத்தாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
தரையில் நான் சாகக் கூடாது,
ஆகாயத்திலும் அதுபோல்
எனக்கு அழிவு கூடாது;

தவம் செய்தேன் உனக்கு
வரம் தா எனக்கு;
கேட்டான் அரக்கன்;
கொடுத்தான் பிரம்மன்;

கொடியவன் மகிழ்ந்தான்;
கொடுத்தவன் மறைந்தான்;

                                                                        ( பக்தி தொடரும் )

Thursday, October 6, 2011

பக்த பிரகலாதன் - 3

                                    இரண்யாக்சன்


இரண்யாக்சன்
அக்கிரமம் பல
அநுதினம் செய்யும்
அரக்கன்;
அன்பென்ற ஒன்று
கொஞ்சம் கூட
நெஞ்சில் கொள்ளாக்
கிறுக்கன்; நல்லோர்
சொல் கேளா
செருக்கன்;

இமையோர் எல்லோரையும்
இரண்யாக்சன் சண்டைக்கு
இழுத்தான்;
இரண்யாக்சனுக்கு பயந்து
இமையோர் எல்லோரும்
இல்லாது போயினர்; தலை
மறைத்து வாழ்ந்தனர்; தம்
நிலைமை நினைத்து நொந்தனர்;

     


மாயை புரி;
மக்களைக் காப்பாற்று என்று
மன்றாடினார் அந்தத் திரு
மாலிடம்;

இரண்யாக்சன்
பூமிப்பந்தை ஆழ்கடலில் அழுத்தி வைத்தான்;
தன்னையே காவலுக்கு அருகில் வைத்தான்;

பரப்பிரம்மம்
பன்றி உருவமெடுத்தார்;
பக்தியோடு தமை அண்டியவர்களைப்
பாதுகாக்க முடிவெடுத்தார்;

சிறிய உருவத்தில் இருந்தது,
சிறிது சிறிதாய் வளர்ந்தது,
பெரிய மலை ஆனது;

வராக
வடிவத்தில்
வந்தவன்
விஷ்ணுவே என்று
உணர்ந்து கொண்டான்;
உடன் கோபம் கொண்டான்;

தண்ணீரில் நுழைந்தது பன்றி;
தன் கூரான பல்லால் பூமிப்பந்தைத்
தள்ளி தண்ணீர் மேல் கொண்டுவந்தது;


     

இரண்யாக்சன் கத்தினான்;
'முட்டாள் பன்றியே,
இருந்த இடத்தில்
இந்தப் பந்தை
எறிந்து விட்டு
இங்கிருந்து சென்று விடு'
எச்சரித்தான்;
'இல்லை தலையில் அடித்து
உன்னைக் கொன்றுவிடுவேன்'
கர்ஜித்தான்;

இரண்யாக்சனின் மரணம்
சம்பவிக்க தக்க தருணம்
இதுவே என்று எண்ணினார்
திருமால்;
இருவரும் சண்டையிட்டனர்;
இரவாகும் முன்னமே
இராக்கனை வீழ்த்திட வேண்டுமென்று
எடுத்துரைத்தார் பிரம்மா;
இரவானால்
இராக்கன் பலம் பெறுவான்
என்று எச்சரித்தார்;



திருமால்
தன் திருக்கரத்தில் இருக்கும்
சக்ராயதத்தை எடுத்தார்;
அரக்கனை நோக்கி வீசினார்;
அது அவன்
ஆயுதத்தை எல்லாம்
அழித்தது;
ஆக்ரோஷமாய்
அரக்கன் எதிர்த்து வர, மகாவிஷ்ணு
அவன் நெஞ்சில் ஒரு அடி தர,
அடியின் வேகம் தாங்க முடியாது
அக்கணமே அரக்கன்
தரை மேல் விழுந்தான்;
உயிர் நீத்தான்;

தம்பியைக் கொன்ற விஷ்ணு மீது
தாளாத பகை கொண்டான் அண்ணன்;

                                                                        ( பக்தி தொடரும் )

Wednesday, October 5, 2011

பக்த பிரகலாதன் - 2

                                    இரண்யகசிபு


இரண்யகசிபு -

இராட்சசர்களுக்கெல்லாம்
இராட்சசன்;
அரக்கர்களுக்கெல்லாம்
அரசன்;

அந்தப் பரந்தாமனை எந்நேரமும்
அவதூறாய்
அர்சிப்பவன்;
அவன் பெயரைக் கேட்டாலே
அண்டம் அதிரப் பெரிதாய்க் கர்ச்சிப்பவன்;

விஷ்ணுவை
வெறுப்பவன்;
விடாது
வசை மொழி பல
வழங்குபவன்;

தர்ம காரியம் எங்கு
தலை தூக்கினாலும்
தானே வலியச் சென்று
தடுத்து நிறுத்தி
அதர்மம் செய்பவன்;


அந்த அரி
அல்ல தெய்வம்; தானே
அனைவர்க்கும் தெய்வம் என்று
அறிவித்தான்;
அவ்வாறு அவனைத் துதிக்காதார் தலையை
அரிந்தான்;

பலமுறை தேவர்களைப்
போர் செய்து தோற்கடித்து
புறமுதுகு காட்டி ஓடச் செய்தவன்;
பாவம் செய்வதற்கென்றே
பிறவி எடுத்தவன்;
நல்லவர்களை
நசுக்கினான்;
கெட்டவர்களுக்குக்
கொட்டிக் கொடுத்துக்
குசிபடுத்தினான்;

இவ்வாறு
இரண்யகசிபு
இயற்கைக்கு மாறாக
இயங்குவதற்குக் காரணம் அவன்
இளையவன்
இரண்யாக்சனின் மரணம்,
தம்பியின் மரணம்
தந்த ரணம்;


                                                                        ( பக்தி தொடரும் )

Tuesday, October 4, 2011

பக்த பிரகலாதன் - 1

                                    முன்னுரை - என்னுரை


     

பிரகலாதன்;
பக்த பிரகலாதன்; தன்
பக்தியினாலேயே
பாவம் செய்தவனைப்
பரலோகம்
அனுப்பியவன்;

அகிம்சையினாலேயே,
அட்டூழியம் செய்தவனை
அழித்தவன்;

அவன் கதையை இனி
அனுதினமும்
படித்து ரசிப்போம்;

பக்த பிரகலாதனின்
பக்தியில் திளைத்து
பரவசமடைவோம்,
வாரீர்;

                                                                        ( பக்தி தொடரும் )

Monday, October 3, 2011

அருள் தரும் அய்யப்பன் - 9

                                    சபரிமலை

'மன்னிக்கும் அளவுக்கு
தவறேதும் நிகழவில்லை;
எல்லாம் தன் விருப்பத்தாலே நிகழ்ந்தது;
எதற்காகப் பிறந்தேனோ
அவ்வேலை முடிய
வேளை வந்தது;
அனைத்தும் நடந்தேறியது;
இனி நான் தேவலோகம்
செல்வேன்' என்றுரைத்தான் மணிகண்டன்;

தாங்கள் எங்களோடு இருந்ததுக்கு நினைவாக
தங்களுக்கு ஒரு கோவில்
தான் கட்ட விரும்புவதை எடுத்துரைத்தான்
தந்தையான அரசன்;
தன்
வில்லிலிருந்து ஒரு அம்பு
விடுத்தான்,
வீர மணிகண்டன்; அவ்வம்பு
விழும் இடத்தில் ஒரு கோவில்


அமைக்கச் சொல்லி
அங்கிருந்து மறைந்தான்;
அந்த அம்பு சபரிமலையில்
போய் விழுந்தது;

மணிகண்டன் கட்டளைப்படியும்,
அகத்திய முனியின்
ஆலோசனைப்படியும்,
அரசன் பதினெட்டு படியோடு ஒரு
ஆலயம் அமைத்தான்;
ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான
அன்பர்கள்,
பூஜை சாமான்கள் ஒரு முடியும்,
பாதையில் தாம் சாப்பிடப்
பலகாரங்கள் ஒரு முடியும்,
ஆக இருமுடியோடு
அய்யப்பன் நாமம் சொல்லி பம்பை
ஆற்றில் நீராடி,
ஐயனை வழிபட்டு வருகின்றனர்;


ஆண்டு தோறும் மகர சங்கராந்தி
அன்று, அந்த அய்யன் ஜோதி வடிவில்
அன்பர்களுக்கு காட்சி
அளித்து
அருள் செய்கிறான்;

அய்யப்பன் அருள் நாமும் பெற்று
அநுதினமும் நலமுடன் வாழ்வோம்;


          ஹரி சிவன் மைந்தனே,
          பம்பையில் பிறந்தவனே,
          பந்தளத்து ராஜனே,
          குருகுலத்தில் வளர்ந்து,
          குருவின் துயர் துடைத்தவனே,
          அரக்கர்களை அழித்தவனே,
          புலியின் பால் கொணர்ந்தவனே,
          தாயின் துயர் தீர்த்தவனே,
          சபரிமலை சாஸ்தாவே,
          சரணம் ஐயப்பா
          சரணம் உன் பாதம்.


                                                                        ( முற்றும் )

Sunday, October 2, 2011

அருள் தரும் அய்யப்பன் - 8

                                    புலிப்பால்

மகிஷியைக் கொன்ற
மணிகண்டனை வாழ்த்தி பூ
மாறிப் பொழிந்தனர் தேவர்கள்;
மகேஸ்வரன் தன்
மகன் முன் தோன்றி வாழ்த்தினான்;

ஆண் புலியாக இந்திரன் உருமாறி வர,
பெண் புலியாக மற்ற தேவர்கள் தொடர்ந்து வர,
ஆண் புலி மீது
அமர்ந்து
அரண்மனை வந்தடைந்தான் மணிகண்டன்;
அரசிளங்குமரன்
ஆண் புலி மீது
அமர்ந்து வருவதைப் பார்த்த
அவ்வூர் மக்கள் பயந்து வியந்து
அங்கும்,இங்கும் ஓடினர்;


புலி மீது அமர்ந்து தன்
புதல்வன் வருவதைப்
பார்த்த மன்னன்
புரிந்து கொண்டான், தன்
புதல்வன் அந்த சிவனின் அருள்
பெற்றவன் என்று அறிந்துகொண்டான்;

'சூது செய்தவர்களை
உணர்ந்து கொண்டேன்;
அய்யன் என்னை மன்னிக்கவும்;
புலிகளைத் திருப்பி அனுப்பிவிடவும்' என்றே
பணிந்தான்
புரவலன்;


                                                                        ( அருள் தொடரும் )

Saturday, October 1, 2011

அருள் தரும் அய்யப்பன் - 7

                                    புலிப்பால்

திவானின்
திட்டப்படி அரசி
தனக்குத்
தீராத
தலைவலி இருப்பதாய்த்
தெரிவித்தாள்;



அரசு வைத்தியரும்
அந்த திவானின்
அடிமை ஆனதால்
'அரசே, அரசியாரின்
அடாத வலி தீர
அடவியிலிருந்து புலிப்பால்
அவசியம்
ஆரேனும் கொண்டுவரவேண்டும்' என்றே
அரற்றினார்;

புலிப்பால் கொண்டுவந்தால்
பாதி ராஜ்யமே
பரிசாய்க் கிடைக்குமென்று
பறைசாற்றப்பட்டது; ஆனாலும்
பயம் காரணமாய்
புலிப்பால் கொணர ஒருவராலும் முடியாது
போயிற்று;


கவலை கொண்டான்
காவலன்;
கவலை எதற்கு, தான்
கண்முன் இருக்கையில் என்றான்
கடவுளருளால் கிடைத்த புத்திரன்;

தான் சென்றுத்
தாய்க்கு புலிப்பால் கொணர்ந்து
தருவதாய்ச் சொல்லி அத்
தருணமே கிளம்பினான் மணிகண்டன்;
தனக்கும் வேறு வழி இல்லாததால்
அரை மனதோடு
அதற்கு சம்மதித்தான்
அரசன்;

                                    மகிஷி மரணம்

புலிப்பாலுக்காக மணிகண்டன் கானகம்
புக, பரமசிவனின் கட்டளைப்
படி, மணிகண்டனைக் காக்க வேண்டி
பஞ்ச பூதங்கள் அவன் பின் கானகம்
புக,
அந்நேரம்
அமுதம் உண்ட தேவர்கள் மேல்
ஆத்திரம் கொண்ட மகிஷி
அவர்களை துன்புறுத்த
அவ்விடம் நோக்கி வர, மணிகண்டனை
ஆர் என்று அறியாது
அவனோடு சண்டையிட எத்தனிக்க,
அக்கணமே அவளைக் கொன்று தான்
அவதாரம் எடுத்த பணி முடித்து,
புலிப் பால் தேடிப்
பயணம் தொடர்ந்தான்;

                                                                        ( அருள் தொடரும் )