Sunday, May 10, 2020

கம்பராமாயணம் 121



விடை கொடுத்த படலம்

10332.
பூமகட்கு அணி அது என்னப் பொலி
   பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம்
   அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும்
   மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன்
   சார்ந்தான்.


நிலமகளுக்கு இது ஓர் அணிகலன்
போல் விளங்கும்,
பொன்னைக் கொண்டு சிறந்த
மணிக் கற்களால் செய்த தூண்கள் அமைந்த
திருவோலக்க மண்டபத்தின் நடுவில்,
பல்லக்கின் மேல் அமர்ந்து
மேகமும்   மின்னலும் போல
தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளாகிய சீதாபிராட்டியோடு
தசரத  ராமன்  வந்து சேர்ந்தான்.


 10351.
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது
   அருளின் நோக்கி,
'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்?
   அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது
   இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப்
   புல்லுக!' என்றான்.


இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு
அருட்பார்வை பார்த்தான்;
'உன்னையல்லால் வேறு யார் உதவி
செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்'
என்று கூறினான்.
'அன்று இராவண யுத்தத்தின் போது
நீ ஆற்றிய  உதவிகளுக்கு நான்
செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் இல்லை'
என்று புகழ்ந்தான்.
'பூணுல் அணிந்த போர்க்குத் தகுதியாக
வலிய தோளை உடையவனே!
என்னை நன்கு  தழுவிக் கொள்வாயாக'
என்று அழைத்தான்.


10353.
பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில்
   மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள்
   முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை
   கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தான், அந்நாள், இடர் அறிந்து
   உதவினாற்கே.

தாமரை மலரை விட்டு எழுந்து
பொன் மதில் சூழ்ந்த மிதிலையில் தோன்றிய
தேன் மொழியுடைய திருமகள் சீதையை
இராமன் திருவருளோடு பார்க்க,
அன்று, அசோக வனத்தில், தன் இன்னல்
உணர்ந்து உதவிய அனுமனுக்கு
வேதத்தலைவி சரஸ்வதி தேவி தனக்களித்த 
முத்து மாலையை இன்பமுறக் கொடுத்தாள்,



10365.
பரதனை, இளைய கோவை, சத்துருக்
   கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை,
   மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி,
   வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம
   பதியைச் சார்ந்தார்.

பரதனை, இலக்குவ சத்ருகனனை,
மூன்று தாயாரையும்,
மிதிலைப் பொன் சீதை யையும்
இராமபிரானையும்,
வலம் வந்து வணங்கினர்,
விடை பெற்றுக் கொண்டனர்,
தங்கள் தங்கள் நகரங்களுக்குக் கிளம்பினர்.




10368.
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர்
   ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி
   நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும்,
   தரணி காத்தான் -
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில்
   வந்த வள்ளல்.

தேவர்கள் தொடங்கி மக்கள் வரை
பதினான்கு உலகங்களும்,
'எம்பெருமான்' என்று வணங்கித் துதித்து,
சொன்ன கட்டளையை நிறைவேற்ற,
தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும்
ஒன்றாகும்படி நின்று,
இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.
திருப்பாற்கடலில், அறிதுயிலிலிருந்து விலகி
அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து
பலர்க்கும் அருள் செய்த இராமபிரான்;




( முற்றும் )

Saturday, May 9, 2020

கம்பராமாயணம் 120




10305.
ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை,
   அருளின் நோக்கி,
'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன்
   மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும்,
   பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம்
   தெரித்தி' என்றான்.

எல்லோரும் அரண்மனை வந்தடைந்தனர்,
'உளந்தூய வீடணனுக்கும்,
கதிரவன் மைந்தனான சுக்கிரீவனுக்கும்,
மற்ற வானர  வீரர்களுக்கும்,
நம்முடைய அரண்மனையின் சிறப்புக்கள்
எல்லாவற்றையும் விளக்கிடு'
என்று இராமன் பரதனிடம் கூறினான்.



10311.
'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி 
   பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு 
   அருமைத்து ஓர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், 
   அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், 
   காலின் தோன்றல்.

(இராமனுக்கு மகுடம் சுட்டுவது எப்போது 
என்று சுக்ரீவன் கேட்க)
ஏழு கடல்களிலிருந்து கொண்டு வரும் 
புனித நீரும் 
பெரிய நதிகளிலிருந்து கொண்டு வரும் 
தீர்த்தங்களும் 
இங்கு வந்து சேருதற்கு, தாமதமாகிறது 
என்று பரதன் கூறினான்;
ஒற்றைச் சக்கரத் தேரினனான 
சூரியன் புதல்வன் சுக்கிரீவன்
அனுமனை விரைந்து பார்த்தான்.
காற்றின் மைந்தனாகிய அனுமன்
கடல் சூழ் உலகத்தின் தொலைவை
உடன் கடந்து சென்றான்.


10313.
அரியணை பரதன் ஈய, அதன் கண் 
   ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, 'பெரு 
   நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உகந்தனர் 
   ஒருவு இல் செல்வம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் 
   நாளை' என்றான்.

(குலகுரு வசிட்டன் வந்ததும்)
பரதன் அவருக்கு அமர இடம் தந்தான்.
வசிட்டன் அதன் மீது அமர்ந்தான்,
பரதனைப் பார்த்தான்,
'பூமிப் பிராட்டியோடும்,
பொருந்திய திருமகளோடும் 
அழியாப் பெருஞ்செல்வங்களோடும் 
கரு நிறத்து இராமன் ஆட்சி நடத்த
இசைந்த காப்பு அணியும் நன்னாள்
நாளைய தினமாகும்' என்று கூறினான்.


10327.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் 
   உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் 
   கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் 
   சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே
   புனைந்தான், மௌலி.

சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்கவும்.
அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கவும், 
வெண் கொற்றக் குடையைப்
பரதன் பிடித்து நிழற்றவும், 
இலக்குவ சத்துருக்கனன் இருவரும்
சாமரை ஏந்தவும்
மணம் கமழ்கிற கூந்தலை உடைய பிராட்டி
பெருமிதமாய் விளங்கவும்
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பர்  
வழியின் முன்னோராக உள்ளோர்
மகுடத்தை எடுத்துக் கொடுக்க, 
பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே 
இராமனுக்கு மகுடம் சூட்டினான்.



10331.
விரத நூல் முனிவன் சொன்ன விதி 
   நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா 
   மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் 
   பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள்
   இருந்தான் மன்னோ.

விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்டன் 
சொல்லிய விதி முறைகளைத் தவறாது,
அருளாளன் இராமன், கடைபிடித்தான்.
தன் தம்பியர் மூவர்க்கும் 
உயர்ந்த மகுடம் அணிவித்தான். 
பரதனை தன் செங்கோலாட்சி நடத்துமாறு
கட்டளையிட்டான். 
எல்லையற்ற இன்ப மகிழ்ச்சியில் 
திளைத்திருந்தான்.


( தொடரும் )

Friday, May 8, 2020

கம்பராமாயணம் 119


10260.
ஊனுடை யாக்கை விட்டு உண்மை
   வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான்.

பரதன் பார்த்தான்,
உடம்பை உதறிவிட்டு சத்தியத்தை விரும்பி
வானுலகு சென்ற தந்தையார்
திரும்பி வருவதைப் பார்ப்பது போலப்
பார்த்தான்.
காட்டிற்குச் சென்ற
தாமரை மலர்  போன்ற  கண்களை  உடைய
இராமனைப் பார்த்தான்.
தன்னுடைய உயிராக உள்ளவனைத்
தம்பி பரதன் பார்த்தான்.



10270.
தாயருக்கு அன்று சார்ந்த கன்று 
   எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் 
   மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு 
   இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் 
   புகுந்தாலும் ஒத்தான்.

 
இராமன், தாய்மார்களுக்கு 
பிரிந்து வந்தடைந்த கன்றின் தன்மையை 
ஒத்தவனாக ஆனான்; 
அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு
மனம் லயிக்க பரப்பிரம்மம் வந்து 
சேர்ந்தாற்போல ஆனான்; 
தன் பிரிவால் மெலிந்து நுணுகிய 
பரத சத்துருக்கனருக்கு 
கண்ணிற் கருமணி போலானான். 
மற்றவர்க்கு நோய் வாட்டிய உடம்பிற்குள்
மீண்டும் உயிர்வந்து புகுந்தாற் போலானான்.



10276.
கைகயன் தனயை முந்தக் கால் 
   உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் 
   முறைமையின் வணங்கு செங் கண்
ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் 
   தழுவி, தம் தம் 
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் 
   தொழிலும் செய்தார்.

  
முதலில் கேகயன் மகள் தாய் கைகேயியின் 
திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அதன்பின் கோசலை, சுமித்திரை ஆகிய 
இருவர் திருவடிகளையும் வணங்கினான்.
சிவந்த கண்களை உடைய இராகவனை
தாய்மார்கள் அன்பினால் அணைத்து, 
தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற
கண்களிலிருந்து வருகின்ற கண்ணீரினால் 
நீராட்டினர்.


திருமுடி சூட்டு படலம் 

10292.
ஊழியின் இறுதி காணும் வலியினது 
   உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் 
   கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் 
   கவரி பற்ற, 
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் 
   கோல் கொள்ளப் போனான்.

 
யுக  முடிவின் எல்லை காணவல்ல 
உறுதியான உயர்ந்த பெரிய தேரில்,
ஏழு முழ உயரமுள்ள யானை போன்ற 
இலக்குவன் வெண் கொற்றக் 
குடையைப் பிடித்து  நிற்க, 
வல்லமை மிக்க இன்னொரு தம்பி 
சத்துருக்கன் வெண் சாமரையை ஏந்த, 
புவியையே மறைக்கவல்ல 
ஆனந்தக் கண்ணீர் சிந்தும் பரதன், 
குதிரைகளை ஏவி தேரைச் செலுத்த, 
இராமபிரான் அயோத்தி சென்றான்.



( தொடரும் )

Thursday, May 7, 2020

கம்பராமாயணம் 118


10174.
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு
   வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங் கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, 'அவன் இங்குத்
   தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின்
   இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும்
   அரசு; எரி போய் அமைக்க' என்றான்.


முத்து வடிவம் போன்ற வெண்மை
நிற மேனியை உடைய தாமரை போலும்
கண்ணை உடைய சத்துருக்கனைப் பார்த்து,
'இராமன் நாடு வரத் தாமதிக்கின்ற காரணம்
நான்  இங்கு  அரசாட்சி செய்வதால் அல்லவா?
நான் இறந்தபிறகு இந்த உலகத்தை வருந்த
விடமாட்டான்;
அந்த மாறுபட்ட நினைவும் அவனை விட்டகலும்;
உடனே வந்து அயோத்திக்குள் நுழைந்து
அரச பொறுப்பை ஏற்பான்;
ஆதலால் சத்துருக்கனா !, நீ  சென்று
நெருப்பை மூட்டு' என்று பரதன் சொன்னான்.


10189.
'அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா,
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.

 'தலைவன் இராமன் வந்துவிட்டான்.
எல்லார்க்கும் மேலோனவன் வந்துவிட்டான்;
சத்தியத்திற்கு வடிவான நீ அழித்துவிட்டால்
இராமன் உயிர் வாழ்வானா?'
என்று கூறிக்கொண்டே
அனுமன் அங்கு வந்துசேர்ந்தான்.
இடையில் நுழைந்து, தன் கரங்களாற்
எரியும் நெருப்பை அணைத்துக்
கரியாக்கினான்.



10196.
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன; 
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின; 
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன; 
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 

(அனுமன் பரதனிடம் கணையாழியைக் 
காண்பித்தான்)
 
இதுவரை அழுது கொண்டிருந்த வாய்கள் 
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன;
நீர் விழுகின்ற அழுத கண்களில் 
வெள்ளநீர் பெருகத் தொடங்கின;
வருந்தி கீழே சாய்ந்த தலைகள் எல்லாம் 
மேல் உயர்ந்தன, நிமிர்ந்தன; 
கைகள் எல்லாம் காற்றின் மகனாகிய 
அனுமனைத் தொழுத் தொடங்கின. 


10210.
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம் 
பத்து உடையவனுடன் விளைந்த 
   பண்பும், தான் 
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, 
   போர் 
வித்தகத் தூதனும் விரிக்கும் 
   சிந்தையான். 


இராமனை, பரதன் சித்திர கூட மலையில் 
சந்தித்த பிறகு 
பத்துத் தலைகளை உடைய இராவணனுடன் 
நடந்த  போர்ச் செயல்களையும்,  
முடிவாக தான் அயோத்திக்கு வந்து 
சேர்ந்ததையும் 
இடையில்  நடந்த  செய்திகளையும் 
போர்த் திறமை மிகுந்த அனுமன்  
விரித்துக் கூறினான்.


10256.
அன்னது ஓர் அளவையின், விசும்பின் 
   ஆயிரம் 
துன் இருங் கதிரவர் தோன்றினார் என, 
பொன் அணி புட்பகப் பொரு இல் 
   மானமும், 
மன்னவர்க்கு அரசனும், வந்து 
   தோன்றினார். 

 
அந்த சமயத்தில் ஆகாயம் 
ஆயிரம் சூரியன் தோன்றியது போல் 
ஒளிர்ந்தது;
பொன்னால் அழகு பெற்ற ஒப்பற்ற 
புட்பகம் விமானம் வானில் தெரிந்தது;
அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி இராமனும்
வந்து அநுமன் கண்முன்னே நின்றனர்.

( தொடரும் )

Wednesday, May 6, 2020

கம்பராமாயணம் 117


10066.
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு
   அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது
   ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும்,
   பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை
   விழுந்தான்.


சிவபெருமான் அருளைப் பெற்று
சக்கரவர்த்தி தயரதன்,
தன் அன்பு மகனைக் காண ஆசைப்பட்டு
மண்ணுலகத்தில் நுழைந்தான்,
இராமன் இருக்கும் பூமிக்கு வந்தான்,
ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும்
அத்தயரதனது மலர்போலும் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினான்.



10072.
''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு
   நாட்ட,
அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது
   மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு;
   அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக்
   கருதேல்.


சீதையே! உனது கற்பின் சிறப்பை
உலகிற்கு உணர்த்த விரும்பினான்.
அதனாலேயே 'நெருப்பில் புகு'
என்று இராமன் கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதை
மனதுள் கொள்ளாதே;
சந்தேகம் உற்றவர்கள் இவ்வாறு
நெருப்பின் மூலமாக பிறவற்றின் மூலமாக
மெய்ப்பிக்கச் செய்து ஐயம் நீங்குதல்
உலகில் இயல்பாக நடைபெறுவதே;
இதனால், கங்கையை ஆள்பவனை
கோசல நாட்டிற்கு அரசனான உன்
கணவனை வெறுக்க எண்ணாதே'
என்று தசரதன் சீதையிடம் கூறினான்.


10079.
'ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
   உரை' என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும்
   மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!' எனத்
   தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர்
   எலாம், வழுத்தி.


தயரதன் இராமனைப் பார்த்து,
'உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக் கேள்'
என்று கூற
இராமன்  அதற்கு, 'நீ தீயவள் என்று
துறந்த என் தெய்வமாகிய  கைகேயியும்,
அவள் மகன் பரதனும்; எனக்குத் தாயும்
தம்பியும் ஆகும்படி வரம் தருக'
எனக் கேட்டு வணங்கினான்;
அது கேட்டு அவன் அருள் திறத்தை எண்ணி,
உயிர்கள் எல்லாம் அவனை வணங்கின;
வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.


10096.
'அனைய புட்பக விமானம் வந்து அவனியை
   அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு,
   'இனி நம்
வினையம் முற்றியது' என்று கொண்டு
   ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள்
   புகன்றே.

(புட்பக விமானம் உள்ளது என்று வீடணன் கூற)
அத்தகைய புட்பக விமானமானது வந்து
தரையிறங்கியதை
நற்சிந்தனைகளை உடைய இராமன் கண்டான்;
'அயோத்தியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற நம் எண்ணம் சீக்கிரம் ஈடேறிவிடும்'
என்று மனத்திற்   கொண்டு  ஏறினான்;
தேவர்கள் வாழ்த்துரைத்து மலர்களைத் தூவி
மகிழ்வொலி செய்தனர்.


10117.
'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல 
   கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் 
   துணையாக நட்ட 
பின்னை, மாருதி வந்து, உன்னைப் 
   பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது 
   இச் சேது கண்டாய்.

'அழகிய நெற்றியுடையாளே!
உன்னைப் பிரிந்து பலநாள் கழித்த பிறகு
வானர அரசன் சுக்கிரீவன் 
சிறந்த துணை ஆன பிறகு,
அனுமன் தூது வந்து, உன் கலக்க  
நீக்கிய பிறகு,
உனது இருப்பிடத்தை என்னிடம் 
தெரிவித்த பிறகு
வானரச் சேனை கட்டியதே இவ்வணை'
என்று இராமன் சீதைக்குக் காட்டினான்.


(பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில்
தரை இறங்கியது புட்பக விமானம்)

10151.
'இன்று நாம் பதி வருதுமுன், மாருதி! 
   ஈண்டச் 
சென்று, தீது இன்மை செப்பி, அத் 
   தீமையும் விலக்கி 
நின்ற காலையின் வருதும்' என்று 
   ஏயினன், நெடியோன்
'நன்று' எனா, அவன், மோதிரம் கைக் 
   கொடு நடந்தான்.


நாம் அயோத்திக்கு வந்து சேரும் முன்,
அனுமனே! நீ விரைந்துஅங்கு செல்; 
எனக்கு ஒரு தீமையும் இல்லை 
என்பதை பரதனுக்குச் சொல்;
தீப்புக எண்ணியிருக்கும் அவனைத் 
தடுத்து நிறுத்து;
நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன்
என்று ஏவி அனுப்பினான்; 
'நல்லது' என்று அனுமனும் கூறினான்;
இராமன் அளித்த கணையாழியை 
கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். 



( தொடரும் )

Tuesday, May 5, 2020

கம்பராமாயணம் 116




10036.
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்.


வெள்ள நீரிலே மேலே உயர்ந்துத்
தோன்றும் தாமரை மலர்
தன் வாழுமிடத்தை அடைவது போல
சீதை நெருப்பில் புகுந்தாள்.
பாய்ந்தவுடன்
பால்  போன்று, பஞ்சு  போன்று,
அந்த நெருப்பு
பிராட்டியின் கற்பு என்னும்
நெருப்பால் தீய்ந்துப் போனது.


10042.
'அங்கி, யான்; என்னை இவ் அன்னை
   கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப்
   பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை
   நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும்
   சான்றுளாய்?

('யார் நீ?' என்று இராமன் கேட்டதும்,
தீயிலிருந்து எழுந்தவன் பேசினான்)

'நான் தீக்கடவுள்;
என்னை இந்தத் தாயின்
கற்பு என்னும் தீ சுட
அதனைத் தாங்க முடியாது
எழுந்து வந்தேன்;
எனக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகும்
இவளைச் சந்தேகிக்கிறாயா?
இல்லை என்னையே சந்தேகிக்கிறாயா?
எல்லார்க்கும் அகத்தே சாட்சியாக
நிற்கும் பரம்பொருளே!' என்றான்.



10046.
'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வய்யுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.'

மழை பொழியாது,
பூமி வெடிக்கும்,
பொருளைத் தாங்காது விலகும்,
அறம் நேரான வழியில்
நடைபெறாது போகும்,
உலகம் பிழைக்குமா? தெய்வக் கற்பினளாய்
இவள் உணர்வு திரிந்து கோபம் அடைந்தால்;
இவள் சபித்தாலோ,
மலர் மேல் வீற்றிருக்கும் நான்முகனும்
இறந்துவிடுவான் அன்றோ.



10048.
'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு;
   ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, '
   'யாதும் ஓர்
பழிப்பு இலள்'' என்றனை; பழியும்
   இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன் - கருணை
   உள்ளத்தான்.

'நீ இந்த உலகத்துக்கு நீக்க முடியாத
சாட்சி ஆவாய்;
இகழ்ச்சிக்கு இடம் இல்லாத
உயர்ந்த வார்த்தைகளாற்
இவளை பாராட்டியிருக்கிறாய்;
யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள்
என்று உறுதி கூறியிருக்கிறாய்;
இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை;
எனவே இனி என்னால் இவள்
நீக்கத் தக்கவள் அல்லள்'
என்று கூறினான்,
அருள் உள்ளம் வாய்ந்த இராமன்;



10064.
'துறக்கும் தன்மையள் அல்லளால், 
   தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் 
   பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் 
   திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் - 
   வரதர்க்கும் வரதன்.

'உன்னால் கைவிடப்படக்கூடியவள் 
இல்லை இவள்;
எல்லா உலகங்களும் தோன்றுதற்கு 
அழகிய உதரத்தையுடைய மகாமாதா இவள்;
இவள் பிழை செய்வாளானால் 
எல்லா உயிர்களும்  இறந்துவிடும்;
இராமா, நீ  இவள் விஷயத்தில் 
அலட்சியம் காட்டுவது மறந்து விடத்தக்கது'
என்று கூறினான் வரம் தரும் கடவுளர்க்கு 
வரம் தரும் சிவபெருமான்.



( தொடரும் )



Monday, May 4, 2020

கம்பராமாயணம் 115


10007.
சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் கற்பு?' என்றாள்.


'என்னுடைய கற்பொழுக்கத்தை என்
கணவற்கு இயம்பி
என்  கணவனின் போர்க்கோலக் காட்சியை
யான்  பார்க்கும்படிச்  செய்து
நான் பிறந்த குலத்தையும் புகுந்த
குலத்தையும்  நிலைநிறுத்தி
இவ்வுலகத்தையும் இராவணனால்
அழியாதபடி  காத்த இவ்வனுமனுக்கு
வாழ்நாள் கரைந்து போகாது என்றும்
வாழ்வதாகிய சிரஞ்சீவித் தன்மையைத்
தரட்டும் என் கற்பு'
என்று சீதை ஆசி கூறினாள்.



10011.
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்.


கற்பிற்குக் காவலாக இருப்பவளை,
பெண்மைக்குக் காப்பிடமாக உள்ளவளை
அழகிற்கு அழகாய் விளங்குபவளை
புகழை இவ்வுலகில் நிலை நிறுத்தியவளை
தனியே நின்று தன்னைப் பிரிந்த உயிர்கட்கு
நல்லருள் செய்யும் தருமம் போன்றவளை
அன்பாய், தலைவன் நாயகன் இராமனும்
நன்றாகப் பார்த்தான்.


10013.
'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் 
   பாழ்பட, 
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் 
   மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் 
   தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ''எனை விரும்பும்''
   என்பதோ?

 
'அரக்கர் ஊரின் உணவு வகைகளை 
உண்டுக் கொண்டு நெடுநாள் இருந்தாய்;
ஒழுக்கம் அழிந்து போகும்படி 
சாகாமல் உயிருடன் இருந்தாய்; 
நீதிநெறியும் அறமுறையும் இல்லாத 
அரக்கனது இலங்கை நகரில் 
அவனுக்கு  அடங்கியிருந்தாய்;
பயம் இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது 
திரும்பி  வந்தது எதை எண்ணி ?
'என்னை இராமன் விரும்புவான்' 
என்பது உன் நினைவா?'
என்று இராமன் சீதையிடம் கேட்டான்.



10017.
'பெண்மையும், பெருமையும், பிறப்பும், 
   கற்பு எனும் 
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், 
   சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி 
   தோன்றலால், 
வண்மை இல் மன்னவன் புகழின், 
   மாய்ந்தவால். 

 
'பெண்மைக் குணங்களும் 
பெருமை குன்றாச் சிறப்பும் 
நற்குடிப் பிறப்பும், கற்பின் வலிமையும் 
சீரிய ஒழுக்கமும், அறிவுத்தெளிவும்,
மேன்மையும், சத்தியமும் ஆகிய எல்லாம்
சீதை என்னும் நீ ஒருத்தி தோன்றியபடியால்
கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் 
கெடுவது போல அடியோடு அழிந்தன'
என்று கூறினான்.



10028.
'ஆதலின், புறத்து இனி யாருக்காக என் 
கோது அறு தவத்தினைக் கூறிக் 
   காட்டுகேன்? 
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; 
   தக்கதே, 
வேத! நின் பணி; அது விதியும்' 
   என்றனள். 

'உலகியல்பு இவ்வாறு இருக்க 
நான் என்ன செய்ய முடியும்?
இனிமேல் யாருக்காக 
என் குற்றமற்ற தன்மையை  
நான் நிரூபிக்க வேண்டும் ?
சாவதைக் காட்டிலும் எனக்கு 
நற்பயன் வேறு எது தரக்கூடும்.
நீ இட்ட கட்டளையும் எனக்குத் 
தகுதியானதே, அப்படியே செய்யும்,
வேத வடிவினன் ஆகிய பெருமானே!
என் விதியும் இதுவாகவே 
இருக்கக்கூடும்' என்று சீதை கூறினாள்.



10029.
இளையவன் தனை அழைத்து, 'இடுதி
   , தீ' என 
வளை ஒலி முன் கையாள் வாயின் 
   கூறினாள்; 
உளைவுறு மனத்தவன் உலகம் 
   யாவுக்கும் 
களைகணைத் தொழ, அவன் கண்ணின் 
   கூறினான். 

ஒலிக்கின்ற வளையல் அணிந்த சீதை
இலக்குவனை அழைத்தாள்,
'நெருப்பை உண்டாக்கித் தருக' 
என்று சொன்னாள்,
வருந்துகின்ற மனத்தோடு இலக்குவன்
உலக துன்பம் நீக்க பற்றுக் கோடாக
உள்ள தமயன் இராமனை 
வணங்கி நின்றான்.
இராமன் தன் கண்ணின் குறிப்பினாலேயே 
நெருப்பிடக் கூறினான். 



( தொடரும் )

Sunday, May 3, 2020

கம்பராமாயணம் 114



மீட்சிப் படலம்

9953.
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.'*

சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடும்,
காற்றுக் கடவுள் மகனாகிய அனுமனோடும்
மற்றுள்ள குரங்கு வீரர்களோடு சென்று
முதற்கடவுளாகிய நாராயணன் தந்த
வேத  விதிப்படி
அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு
சிறந்த கிரீடத்தைச் சூட்டி அரசனாக்குவாய்'
என்று இராமன் இலக்குவனிடம் சொன்னான்.


9963.
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம் 
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது, 
இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத் 
தரும சீல!' என்றான் - மறை தந்துளான்.

உனக்கு உரிமையான இந்த அரசை,
மூன்று உலகத்தில் உள்ளாரும்  
உன்னை மதித்து வணங்குமாறு,
தேவர்களுடைய பெருமைக்கும்,
அரச நீதிக்கும், தரும வழிக்கும்
சிறிதும் மாறுபடாது 
இம்மைக்குப் புகழும் 
மறுமைக்குப் புண்ணியமும் 
தரத்தக்கதாக ஆள்வாயாக' என்று 
நான்கு வேதங்களையும் அருளிய
இராமபிரான் வீடணனுக்கு ஆசி கூறினான்.



9967.
'ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்! 
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச் 
சூழி யானை துகைத்தது, சோபனம்!' 


'மிக்க மங்களம் உண்டாகட்டும்,
அணிகலன்கள் அணிந்தவளே, மங்களம்;
நீ வாழ்க, வாழ்கவே, மங்களம்;
எல்லாம் இனி மங்களம்;
தீமைக்கு வரம்பாகிய இராவணனை,
மேன்மை மிக்க இராமன் என்ற யானை
அழித்   தொழித்தது,
இனி, எல்லார்க்கும் மங்களம் உண்டாகட்டும்'
என்று சீதையிடம் அனுமன் கூறினான்.


9988.
என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான் 
தன் துணைப் பெருந் தேவி தயா' எனா 
நின்ற காலை, நெடியவன், 'வீடண! 
சென்று தா, நம தேவியை, சீரொடும்.

'அரக்கியரை இம்சிக்காதே, விட்டுவிடு' 
என்று பிராட்டி கூறிய அளவில், 
அனுமன், 'இராமபிரானது ஒப்பற்ற 
பெருந்தேவி பிராட்டியின் கருணைத் 
தன்மையை வணங்கி  நின்ற  பொழுது;
அங்கே, இராமன், 'வீடணா, சீதையை 
சென்று  சிறப்போடும்  அழைத்து வருக' 
என்று கூறினான்.



9991.
'யான் இவண் இருந்த தன்மை, இமையவர் 
   குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், 
   குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், 
   காண்டல், மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது 
   அன்று - வீர!' 

(அலங்கரித்துக் கொண்டு வருக என்று 
வீடணன் கூற)

நான் இந்தச் சிறையில் இருந்த இயல்பினை
தேவர்கள் கூட்டம் காணவேண்டும்,
எம் தலைவன் இராமனும் காணவேண்டும்,
அங்குள்ள முனிவர்களுடைய குழுவும்
காணவேண்டும்,
தம் குலத்துக்கு ஏற்றவாறு உயர்ந்த கற்பின் 
மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்
காணவேண்டும்,
இதுவே சிறப்புடையதாகும்;
இதைவிடுத்து ஆடை அணிகலனோடு 
அலங்கரித்துக் கொண்டு வருதல் 
சிறந்தது அன்று, வீடணனே' 
என்று சீதை பதில் கூறினாள். 



 9992.
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு 
   இறைவன், நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் 
   குறிப்பு இது' என்றான்;
'நன்று' என நங்கை நேர்ந்தாள், நாயகக் 
   கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை 
   முதலோர், சேர


'அணிகலன் வேண்டாம்' என்று 
சொன்னாள் சீதை;
அது கேட்ட அரக்க அரசனாகிய வீடணன்,
'நீலமலை போன்ற தோள்களை உடைய
இராமபிரானது கட்டளையின் குறிப்பு, 
இக் கோலம் பூணுதல்' என்று சொன்னான்; 
அது  கேட்ட  பிராட்டி, 'நல்லது' என்று கூறி 
உடன்பட்டாள்; 
தேவர் உலகத்துள்ள திலோத்தமை 
முதலாகிய தெய்வ மகளிர் ஒன்று சேர்ந்து 
பிராட்டிக்கு அழகிய அலங்காரம் செய்ய 
அவள்பால் சென்றனர்.


( தொடரும் )

Saturday, May 2, 2020

கம்பராமாயணம் 113



9923.
''அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;
   உலகுக்கு ஓர் அன்னை'' என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்;\
   அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில்
   படக் கண்டும், உறவு ஆகாதே,
பொன்றினையே! இராகவன்தன் புய வலியை
   இன்று அறிந்து, போயினாயோ!''


முன்னொரு காலத்தில், உன்னைச் சபித்து
தீயில் விழுந்த வேதவதி,
அவளே உலகத்துக்கெல்லாம் தாயாகி
சீதையாக வந்துள்ளாள் என்று சொன்னேனே,
மலை போன்ற பெருந்தோள் உடையவனே,
அவ்வுரையை மனத்துட் கொள்ளாது
எனை இகழ்ந்தாயே,
உன்னுடைய குலம் முழுவதும் அழிந்தும்,
போரில் சினந்து, மடிதலைக் கண்டும்,
இராமபிரானோடு நட்பு கொள்ளாதிருந்தாயே,
இறுதி வரையில் அவனைப் பகையாகக்
கொண்டு அழிந்து ஒழிந்தாயே,
இராமனுடைய தோள்வலியை, இன்று
சாகும்போது அறிந்துகொண்ட
போயிருக்கிறாயோ!'
என்று கூறி வீடணன் அழுதான்.


9939.
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு
   அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த
   கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ?
   படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார்
   முடிந்த பரிசு! இதுவோ பாவம்!


'அம்ம! கொடியவளான எனக்கு வந்துள்ள
நிலைமையை என்னென்று சொல்வேன்;
இராக்கதர் தலைவனாகிய இராவணன்
இறந்த பிறகா நான் இறப்பேன் ?
முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து வந்த
கொள்கைகளில் இதையும் கைவிட்டேன்?
என் கண்கள் எதிரிலேயே என் கணவரின்
மகுடத் தலைகள் விழுந்தனவோ?
மண் மேல் கிடப்பவை
என் உயிர்க் கணவனின் தலைகள் தானோ?
இல்லை வேறெதுவோ ?என்னென்பேன்,
உலகைக் கலக்கிய இராவணனார் வாழ்வு
இத்தகையதாகவா முடியவேண்டும்?
பாவம்! பாவம்!' என்று கூறிக்
கதறி அழுதாள் மண்டோதரி.


9946.
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.


பலவாறு கூறி, கூவி அழுதாள்;
ஏக்கமுற்று எழுந்தாள்;
அந்த இராவணனின் பொன் அணிகள்
கிடக்கும் ஒப்பற்ற வீர மார்பினைத், தன்
தளிர் போன்ற கரங்களால் தழுவினாள்;
தனித்து நின்று அவன் பெயரைச் சொல்லி
அழைத்தாள்; பெருமூச்சு விட்டவளாய்
உயிர் நீத்தாள் மண்டோதரி.



9949.
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு 
உடைந்து போன மயன் மகளோடு உடன் 
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - 
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 
இறுதிக் கடன்களையெல்லாம்
செய்து முடித்த வீடணன் 
கணவனுடனே,  நெஞ்சம் உடைந்து மாண்ட 
மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; 
(இராவணன் உடல் அடங்குமாறு 
கொடுந்தீக்கு உணவாக்கினான்.
குடம் கொண்ட  நீரை விட மிகுதியாகக்  
கண்ணீர் சிந்தினான்.



( தொடரும் )

Friday, May 1, 2020

கம்பராமாயணம் 112


இராவணன் வதைப் படலம்


9706.
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும்,
   'அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய்
   மடித்து எயிறு தின்றான்;
பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப்
   பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன்
   மேல் விடுதி' என்றான்.

இராமன் ஏறி வந்தத் தேரைத் தன்
கண்களால் இராவணன்  பார்த்தான்;
'பெரிய  தேரைத்  தேவர்கள்
கொடுத்திருப்பர்' எனக் கருதினான்;
உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
'அது கிடக்கட்டும்' என்று அலட்சியம் செய்தான்;
தன்னுடைய பெரிய வலிமையான தேரை
வில்லை ஏந்திய இராமனை நோக்கிச்
செலுத்து என்று கட்டளையிட்டான்.


9712.
'அம்புயம் அனைய கண்ணன் தன்னை
   யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத்
   தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை
   கொற்றம்' என்றான்;
வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்'
   என்று, அவனின் மீண்டான்.


'செந்தாமரை போன்ற கண்களை உடைய
இராமனை
ஆண் சிங்கம் யானையை அழித்தது என்று
சொல்லும்படியாக
நான் அழித்தொழிப்பேன்;
இணை பிரியாது நிற்கும் தம்பியை
நீ போரிட்டுத் தடுப்பாயானால்
வெற்றி தேடித் தந்தவனாவாய்' என்று
இராவணன் தளபதி மகோதரனிடம் கூறினான்;
அரக்கன் மகோதரனும் 'அவ்வாறே செய்வேன்'
என்று கூறி, திரும்பிச் சென்றான்.


9837.
'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்;
   திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம்
   அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன்
   அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?'
   என்றான்.

'இந்த இராமன் சிவபெருமானோ? இருக்காது,
திருமால் தானோ இவன், இருக்காது,
என்னுடைய மிகச்சிறந்த ஆயுத பலங்களை
எல்லாம்  அழிக்கின்றான்;
தவம் செய்து ஆற்றல் பெற்றிருப்பானோ ?
ஆனால் இத்தகைய பேராற்றலைத் தவத்தால்
செய்து முடிக்கும் தகுதியுடையவன்
ஒருவனும் இல்லை;
வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான
ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?'
என்று கூறி வியந்து நின்றான் இராவணன்.



9869.
மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், 
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய 
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 


மேகம் போன்ற நிறத்தை ஒத்த 
மார்பிலும் தோளிலும்;
விடம் போன்ற கண்களிலும் நாவிலும்
வஞ்சகன் இராவணன் உடம்பினை 
அம்புகளை விடுத்து, 
நீண்ட அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற
தூணி என்று கூறும் படி செய்தான்.



9876.
'படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் 
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ? 
கடை துறந்தது போர், என் கருத்து' என்றான். 


'போர்க் கருவிகளை இழந்தான், 
நினைவிழந்து கிடக்கின்றான், 
அழிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றான்,
இந்த சமயத்தில், போர் நீதியின் 
ஒழுக்கத்திலிருந்து விலகி;
உயிரைக் கொள்வது அறம் ஆகுமோ? 
கொஞ்ச நேரம் விலகியிருப்பது தான் 
போர் நெறியாகும், இதுவே நான் எண்ணுவது'
என்று இராமன் கூறினான்.



9899.
முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
   பெருந் தவமும், முதல்வன், முன்நாள், 
என் கோடியாராலும் வெலப்படாய்' 
   எனக் கொடுத்த வரமும், ஏனைத் 
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் 
   கடந்த புய வலியும், தின்று, மார்பில் 
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று 
   இராகவன்தன் புனித வாளி. 


இராவணனுடைய மூன்று  கோடி ஆயுளையும்
தவம் செய்துப் பெற்றிருந்த பயனையும்; 
நான்முகன் முன் காலத்தில், 
தேவர்களில் எந்த வரிசையைச் சேர்ந்தோர் 
ஆனாலும் அவர்களால் நீ வெல்லப்பட 
மாட்டாய் என்று தந்த வரத்தையும் 
மற்றும் திசைகளையும்,
தோள் ஆற்றலையும்; தோற்கடித்து விட்டு,
இராவணனுடைய மார்பில் நுழைந்து, 
உடல் எங்கும் சுழன்று உயிரைக் குடித்து 
வெளியே சென்றது.
இராமபிரான் செலுத்திய தூய்மை
நிறைந்த பிரம்மாத்திரம்; 



( தொடரும் )

Thursday, April 30, 2020

கம்பராமாயணம் 111


9480.
அய் - இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
'எய்' எனும் மாத்திரத்து, அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே.

பத்துக் கோடி அரக்க அரசர்களும்
வலிமை செறிந்த அரக்க வீரர்களும்
முழுமையாக அழிந்திட
எய் என்று சொல்லும் நொடி அளவில்
சிறந்த தவம் பல செய்த இராவணனது
மூல பலப் படை அழிந்துவிட்டது
என்று சொல்வார்கள்.


9526.
தாய், 'படைத்துடைய செல்வம் ஈக!' என,
   தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர்
   தவத்தின் மேவி,
தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர்
   துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம்
   வாழ்த்தினார், வணக்கம் செய்தார்.


தாய் கைகேயி, 'உனக்கு உரியதாக வந்த
செல்வத்தைக் கொடுத்துவிடு' என்று
சொல்ல தம்பி பரதனுக்குத் தந்தவனை,
மூங்கில்கள் வளர்ந்துள்ள காட்டுக்கு
தேவர்கள் செய்த தவத்தால் வந்தவனை,
தன் போர்த்திறத்தால் எல்லாருடைய
துயரையும் போக்கியவனை,
வாய் உள்ளோர் அனைவரும்
வாழ்த்தி வணங்கினர்.


இராவணன் தேர் ஏறு படலம்

9642.
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச்
   செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை
   முறையின் நோக்கி,
' ''ஏது உளது இறந்திலாதது இலங்கையுள்
   இருந்த சேனை
யாதையும் எழுக!'' என்று ஆனை மணி முரசு
   எற்றுக!' என்றான்.


மலை  போன்ற உடலை உடையவனை,
கரிய புருவங்களையுடையவனை ,
செந்தீ போன்றவனை,
மகோதரன் எனும் பெயருள்ள ஒருவனை
அழைத்தான் இராவணன்.
'சாவாத சேனை எது உள்ளது? இலங்கைக்குள்
இன்னும் மீதி இருக்கும் படை அனைத்தும்
எழுக' என யானை மீது ஏறி முரசை அடிக்க
ஆணையிட்டான்.



9676.
'எழுந்து வந்தனன் இராவணன்; 
   இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தி வந்து உற்றது; 
   கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் 
   அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், 
   விரைவான்.
 
'இராவணன் தன் படையுடன் புறப்பட்டு 
வந்திருக்கிறான்;
அரக்கர் படையின் முன்னணிப்படை 
வந்தடைந்தது; 
வெற்றி கொண்ட இராமா !
நம்படை எதிரிகளைக் கண்டு 
நடுங்குகிறது;
தேவர்களும் பயம் கொள்கின்றனர்'
என்று விரைந்து வந்த வீடணன், கூறினான். 



இராமன் தேர் ஏறு படலம்

9681.
'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; 
   இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் 
   அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் 
   தேர்
ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் 
   இசைத்தான்.

'தொடங்கிய இந்தப் போர் இன்றோடு 
முடிந்துவிடும்; 
இனிமேல் வெற்றி ஆண்மையாளனான 
இராமனுக்கே உரியது; 
இனிமேல் நீங்கள் அச்சம் கொள்ள
அவசியமில்லை ;
மணிகள் கட்டிய, வலிமை கொண்ட 
குதிரைகள் பூட்டிய, உயர்ந்த தேரினை,
விரைவில் 
இராமனுக்கு அனுப்புங்கள், தேவர்களே!'
என்று சிவபெருமான் கூறினான். 


( தொடரும் )

Wednesday, April 29, 2020

கம்பராமாயணம் 110


இராவணன் சோகப் படலம்


9188.
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார், -
'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச்
சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார்.

(போர்க்களத்திலிருந்து கெட்ட செய்தி
கொண்டுவந்த தூதுவர்களுக்கு,)
பற்களும், வாயும் மனமும் பாதமும்
நடுக்கமுற்றன
உயிர் பயம் உண்டாகின;
அச்சம் சூழ்ந்து கொள்ள கலங்கினர்;
நிலைதடுமாறினர்;
(இறந்து விட்டான் என்று கூறப் பயந்து)
'உன் மகன் இன்று இல்லாமற் போனான்'
என்று இராவணனிடம் கூறினர்.


9219.
கண்டிலன் தலை; 'காந்தி, அம் 
   மானிடன்
கொண்டு இறந்தனன்' என்பது 
   கொண்டவன், 
புண் திறந்தன நெஞ்சன், பொருமலன், 
விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 
 
(இந்திரசித்தின்  கையையும் உடம்பையும் 
கண்ட இராவணன்) 
தலையைக் காணாது மனம் எரிந்தான். 
இலக்குவன் எடுத்துச் சென்றனன் என்று 
அறிந்து கொண்டான்.
புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு 
பொருமுனான். 
விண்முகடு பிளக்குமாறு விம்மி விம்மி 
வாய்திறந்து அழத் தொடங்கினான்.


9230.
தலையின் மேல் சுமந்த கையள், 
   தழலின்மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளன், 
   நேசத்தால் நிறைந்த நெஞ்சள்,
கொலையின் மேல் குறித்த வேடன் 
   கூர்ங் கணை உயிரைக் கொள்ள,
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன, 
   மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.

 
தலையின் மேல் கையை வைத்தவளாய், 
நெருப்பின் மேல் நிற்பவள் போல 
நிலையாக உள்ள தரையின் மேல் 
நிலையில்லாது பதைபதைக்கும் 
பாதங்களை உடையவளாய் 
மகன் மேல் வைத்த பேரன்பினால் 
துக்கத்தால்  நிறைந்த நெஞ்சுடையவளாய், 
கொலை செய்தவர்க்கென்று எய்திய 
கூரிய அம்பு உயிரை வாங்க
ஒரு மயில் மலையின் மேல் வீழ்ந்தாற்போல
மகனது உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள்,
மண்டோதரி. 
 


மூலபல வதைப் படலம்

9299.
'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு 
   வழி சென்று,
ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; 
   நீயிர் போய், ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறிர் 
   என்று அறைந்தான் -
தானவப் பெருங் கரிகளை வாள் 
   கொண்டு தடிந்தான்.

'நான் ஒரு பக்கம் போகிறேன்; 
வானரப்  பெரும்படைகளை, உடல்கள் 
சிதையும்படி வெட்டி உயிர் குடிக்கிறேன்;
நீங்களனைவரும் ஒன்றாகச் செல்லுங்கள்;
வானரர் தவிர இராம இலக்குமனர் 
இருவரையும் கொல்லுங்கள்' 
என்று கட்டளையிட்டான் இராவணன்.
 

9359.
'மாருதியோடு நீயும், வானரக்கோனும், 
   வல்லே, 
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் 
   தனிமை  பேணிச்
சோருதிர்என்னின், வெம் போர் தோற்றும், 
   நாம்' என்னச்சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் 
   விளம்பலுற்றான்:

 
'அனுமனோடு சேர்ந்து சுக்கிரீவனும் நீயும்
வானரப் படையைக் காப்பதற்கு 
விரைவாகப் புறப்படுங்கள்; 
மூலப் படையை நான் பார்த்துக் 
கொள்கிறேன்;
என் தனிமையைப் பெரிதாக எண்ணி 
தளர்வீர்களானால், 
நாம் இந்தப் போரிலே தோற்க நேரிடும்'
என்று இராமன் சொன்னான்; 

( தொடரும் )

Tuesday, April 28, 2020

கம்பராமாயணம் 109


8932.
‘இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென்,
   என் கண் ஆர;
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு
   உண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை
   மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற
   முடிக்க மூண்டான்.’


“சீதை அசோகவனத்தில் இருக்கிறாள்,
என் கண்களால் கண்டதையே சொல்கிறேன்;
அருந்ததி போன்ற கற்பினை உடைய
சீதைக்கு அழிவும் வருவதுண்டோ?
இந்திரசித்து மாயங்களைச் செய்து நம்மை
ஏமாற்றியிருக்கிறான்;
நமக்குக் போக்குக்காட்டி விட்டு, நிகும்பலை
கோயிலில் புகுந்திருக்கிறான்;
எல்லாவற்றையும் அழிக்க வல்ல
வேள்வியைச் செய்து முடித்து நம்மை
அடியோடு அழிக்க மூண்டுள்ளான்”
என்று வீடணன் இராமனிடம் கூறினான்.


நிகும்பலை யாகப் படலம்


8935.
என்றலும், இறைஞ்சி, ‘யாகம் முற்றுமேல்,
   யாரும் வெல்லார்
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்;
   இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும்
   சிதைப்பென்’ என்றான்;
‘நன்று அது; புரிதிர்!’ என்னா, நாயகன்
   நவில்வதானான்:


இராமன் வீடணனை பாராட்ட,
அவனும் வணங்கி, இந்த வேள்வி
நிறைவுறுமானால் இந்திரசித்தை
யாரும் அழிக்க முடியாது;
வெற்றியும் அரக்கர் பக்கம் போய்விடும்;
ஆகவே எங்களுக்கு அனுமதி தந்திடு;
இலக்குவனோடும் சென்று அவனது
உயிரை  உண்டு அவ் வேள்வியினையும்
அழிப்பேன் என்று கூறினான்;
தலைவனாகிய இராமனும் ‘நல்லது!
அதனைச் செய்யுங்கள்! என்று கூறினான்.






8977.
மலைகளும், மழைகளும், வான 
   மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த 
   ஆம் என,
உலை கொள் வெங் கனல் பொதி 
   ஓமம் உற்றலால்,
தலைகளும் உடல்களும் சரமும் 
   தாவுவ.

ஊழிக்காலத்துக் கடுங்காற்றில் 
தாக்கப்பட்டது போல,
மலைகளும், மேகங்களும், விண்மீன்களும்
நிலை பெயர்ந்து அழிந்து வீழ,
இலக்குவன் எய்த அம்புகள் பாய, 
அரக்கர்களின் தலைகளும் உடல்களும்
அறுபட்டு,
வெம்மை மிக்க தீ நிறைந்த 
ஓம குண்டத்தில் வீழ்ந்தன.



இந்திரசித்து வதைப் படலம்

9147.
‘தேரினைக் கடாவி, வானில் செல்லினும்
   செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும்
   புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்தும் வஞ்சம், கருதினும்
   கருதும், காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன்
   இருளின், வெய்யோன்.


'தேரினைச் செலுத்திக்கொண்டு
வானில் சென்றாலும் செல்வான் இவன்;
நேரே செய்யும் போரை விடுத்து, மாயச்
செயல்களைச் செய்யக்கூடியவன் இவன்;
விண்ணில் போய் அந்த மேகத்தில் கலந்து
வஞ்சனைச் செயல்கள் செய்வான் இவன்;
வீரனே!  உன் கருத்தில் கொள்,
கொடியனாகிய இந்த இந்திரசித்து
பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்;
இது உண்மை' என்று வீடணன் கூறினான்.


9167.
நேமியும், குலிச வேலும், நெற்றியின்
   நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன்
   படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன்
   சிரத்தைத் தள்ளி,
பூ மழை அமரர் சிந்த, பொலிந்தது-அப்
   பகழிப் புத்தேள்.

(இராமனைத் துதித்து இலக்குவன்
அம்பு தொடுக்க )

திருமாலின் சக்கரப்படையும்,
இந்திரனின் வச்சிரப்படையும்; 
நெற்றியில் நெருப்புக் கண்ணை உடைய
உருத்திரனின் அஞ்சத்தக்க  சூலவேலும்;
பிரமனின் பிரமாத்திரமும் நாணுமாறு;
முனையில் நெருப்பு பற்றி எரியும்
விரைந்து சென்று அந்த இந்திரசித்தின்
தலையை அறுத்துத் தள்ளியது;
தேவர்கள் மலர்மாரி சொரிய நின்றது,
இலக்குவன்  விடுத்த அந்த அம்பு;



9174.
ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் 
   தன் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் 
   தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே 
   தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் 
   இளவல் போனான்.
உடம்பிலிருந்து அறுபட்டு விழுந்த 
இந்திரசித்தின் தலையை,  
மனமகிழ்ச்சி பொங்க அங்கதன் தன் கையில்  
தூக்கிக்  கொண்டு முன்னே செல்ல,
விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் 
கூட்டம், சொரிகின்ற  மலர்ப் பந்தல் நிழலில்,
இலக்குவன் அனுமன் தோள் மேலமர்ந்து,
எல்லோரும் இராமன் இருக்குமிடம் சென்றனர்.



( தொடரும் )

Monday, April 27, 2020

கம்பராமாயணம் 108


மாயா சீதைப் படலம்


8852.
‘அனையது வேறு நிற்க; அன்னது
   பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது
   வீழ்க! வீர!
இனையல் நீ; மூண்டு யான் போய்,
   நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால்,
   முடியும், துன்பம்.

இராமன் தெய்வம் என்ற உண்மை
ஒருபுறம் இருக்கட்டும்;
அத்தகு  உண்மைகளைக்  கூறித்
தயங்குதல் போராண்மை அன்று;
போரில் எதிர்த்து நின்று வீ்ழ்ந்தவர்கள்
வீழட்டும்; வீர! நீ, அது பற்றி வருந்தாதே!
இப்போதே நான் சென்று
நிகும்பலை கோயிலை அடைந்து
ஆற்றலுடைய வேள்வியை விரைந்து
செய்ய, உன் துன்பம் அதனால் தீரும்'
என்று இந்திரசித் இராவணனிடம் கூறினான்.



8854.
‘சானகி உருவமாகச் சமைத்து, அவள்
   தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே, வாளினால்
   கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்தி
   மேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர்
   துயரம் பூண்பார்.

(வேள்விக்கு பகைவர் இடையூறு
இல்லாதிருக்க)

சீதையின் உருவம் போல மாய உருவம்
ஒன்று செய்வோம்;
அவளை ஏற்கனவே ஒருமுறை கண்ட
அனுமன் காணும்படி இந்த மாய சீதையைக்
கொல்வோம்;
கொன்று, பின் நான் நெடிய சேனையோடு
அயோத்தி நோக்கி போகின்றேன்
என்ற செய்தி சொல்வோம்;
அத்திசை நோககிப்  போனதாய்ப் போக்கு
காட்டுவோம்;
நம் எதிரிகள் ஒன்றும் புரியாது துயரம் கொள்ள,
இதற்கிடையில் நான் வேள்வி முடிப்பேன்'
என்று இந்திரசித் தன் திட்டத்தைக் கூறினான்.


8870.
‘கண்டவளே இவள்’ என்பது கண்டான்,
‘விண்டதுபோலும், நம் வாழ்வு’ என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
‘உண்டு உயிரோ!’ என, வாயும் உலர்ந்தான்.


(இலங்கையை எரியூட்ட வந்த வானர வீரரும்,
அனுமனும், இந்திரசித் சீதையைக் கொல்வதைக்
கண்டனர்)

அனுமன், முன்பு அசோகவனத்தில் தான்
கண்ட சீதை இவளே என்று உணர்ந்தான்;
‘நம்வாழ்வு அழிந்ததோ' என்று மனம் வெந்தான்;
சீதையை அரக்கனிடமிருந்து விடுவிப்பது
எப்படி என்று அறியாது திகைத்தான்.
உயிர்  உண்டா எனக் கண்டவர் ஐயுறுமாறு
வாய் உலர நின்றான்..


8926.
 ‘பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன்
   படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய்
   முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல்
   போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம்,
   சிறிது போழ்தின்.


'பத்தினி சீதையைப் பாதகன் இந்திரசித்து
தீண்டிக் கொன்றிருப்பானாயின்,
அக்கணமே மூன்று உலகங்களும் வெந்து
சாம்பல் ஆகியிருக்குமன்றோ?
அந்நிகழ்ச்சி உண்மையாக நடந்தது
என்றாலும்
இந்திரசித்து அயோத்தி போனான்
என்பதெல்லாம்
அதிசயமானது, இதையெல்லாம்  இன்னும்
சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்'
என்று வீடணன் கூறினான்.


8928.
வண்டினது  உருவம் கொண்டான்,
   மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கை தன்னைப்
   பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்
   கருத்தில் ‘ஆவி
உண்டு, இலை’ என்ன நின்ற, ஓவியம்
   ஒக்கின்றாளை.


வண்டினது உருவத்தைக் கொண்டான்.
இராமனது மனத்தைப்  போல் வேகமாய்ப்
பறந்தான்;
அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை
விரைந்து அடைந்தான்
'உயிர்  உண்டு, இல்லை என்று ஐயுறுமாறு
இருக்கின்ற, ஓவியம்  போன்ற சீதையை,
வீடணன் தானே தன் கண்களினால்
கண்டான்.


( தொடரும் )

Sunday, April 26, 2020

கம்பராமாயணம் 107


மருத்துமலைப் படலம்


8704.
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ்
   உலகினைப் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர
   வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை;
   விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான்,
   உணர்வு தீர்ந்தான்


வீடணன் வந்தான்,
போர்களத்துக் காட்சிகளைக் கண்டான்,
வானரவீரர் எல்லோரும் தாக்கப்பட்டுக்
கிடக்கும் நிலையைக் கண்டான்,
இவ் உலகத்தைப் படைத்தவன் சாபத்தால்
மாண்டனரோ என்று சிந்தித்தான்.
தானே விடத்தை எடுத்துக் குடித்தவன்
போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்,
மயங்கி உணர்வு நீங்கினான்.



8713.
கண்டு, தன் கண்களூடு மழை எனக்
   கலுழி வார,
'உண்டு உயிர்' என்பது உன்னி, உடற்
   கணை ஒன்று ஒன்று ஆக,
விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென
   விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல
   முகத்தினைக் குளிரச் செய்தான்


வீடணன் போர்க்களத்தில் அனுமனையும்
கண்டான்,
தன் விழிகளிலிருந்து மழை போன்று
கண்ணீர் பெருக்கினான்.
அனுமான் இறக்கவில்லை, உயிர் உண்டு
என்று அனுமானித்தான்.
உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகாத
இடத்திலிருந்து அம்புகளை நீக்கினான்.
தண்ணீரைக் கொண்டு வந்து
அனுமானின் அழகிய முகத்தைக்
குளிரச் செய்தான்.



8729.
'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
   உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
   படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
   மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்
   தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.


'இறந்தவர்களை எழுப்பும் மருந்து
ஒன்றுண்டு;
உடல் அறுபட்டவர்களை ஒன்றிணைத்து
ஒட்டச் செய்யும் மருந்து ஒன்றுண்டு;
அம்புகள் தைத்திருக்கும் இடங்களை
சரி செய்யும் மருந்து ஒன்றுண்டு;
மீண்டும் உருவை திருப்பித் தரும்
மருந்தும் ஒன்றுண்டு;
அனுமனே, வீரனே, நீ உடனே சென்று
இவற்றைக் கொண்டுவா' என்றான்,
அவற்றின் அடையாளங்களையும் சொல்லி
அனுப்பினான், அறிவு நிறைந்த சாம்பவான்.



8763.
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை 
   பாதலத்துச் 
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, 
   தடுத்து வந்து, 
காய்ந்தது, 'நீதான் யாவன்? கருத்து 
   என்கொல்? கழறுக!' என்ன, 
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு 
   அறியச் சொன்னான்.


நீலமலை தாண்டி மருத்துமலை கண்டான்,
கண்டதும் பாய்ந்தான், பாய்ந்த வேகத்தில் 
அம்மலை பாதாளத்தினுள் சாய்ந்தது,
அதற்கு காவலாக இருந்த தெய்வங்கள் 
கோபம் கொண்டனர்,
அனுமானைத் தடுத்து நிறுத்தினர்,
'யார் நீ? என்ன செய்ய முயலுகிறாய், சொல்'
என்று கேட்டனர்.
அனுமானும் தன் வந்த  காரணத்தை
அவர்களுக்கு புரியுமாறு சொன்னான்.


8802.
காற்று வந்து அசைத்தலும், கடவுள் நாட்டவர் 
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் 
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார், 
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்


அனுமன் மருத்துமலையோடு போர்க்களம் வர 
அந்த மலையின் மேலிருந்து வீசிய காற்று 
இறந்தவர்களை உயிர்ப்பிக்க,
விருந்து  உண்ண வானுலகம் சென்ற 
வானர வீரர்கள் திரும்பி வந்தனர்,
பெரும் வலிமையோடு அழகோடு விளங்கினர்,
எமனை வென்று தம் உருவம் பெற்றனர்.



8817.
'உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார், 
பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்; 
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய் 
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!' 

நீ கொண்டு வந்த மருந்து உதவியது,
இம்மலை இங்கேயே இருந்தால் 
நம் பகைவர்களும் மீண்டும் உயிர் பெறுவர்,
அதனால் இதனை இப்பொழுதே 
பெயர்த்து எடுத்த இடத்தில் வைத்துவிட்டு 
சீக்கிரம் திரும்பிடு! ஆற்றல் மிக்கவனே'
என்று சாம்பவன் அனுமானிடம் சொன்னான்.


( தொடரும் )

Saturday, April 25, 2020

கம்பராமாயணம் 106



8626.
‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று
   இராவணன் இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல்,
   தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன்
   சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’
   என்றான், மதலை.
 
(போர்க்கள நிகழ்ச்சிகளை இந்திரசித் கூற)
‘இராமன் இறக்கவில்லையோ?’  என்று 
இராவணன் கேட்டான்;
‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு
எங்கேயோ சென்று விட்டான்; 
அவ்வாறு செல்லாதிருந்தால்,
அவன் தம்பியைக் கொன்று
அவன் நண்பர்களை எல்லாம் கொன்று
அவனுடைய சேனையையும் சிதைத்த அத்திரம்,
அவனை மட்டும் விட்டுவிடுமா ?'
என்று  மறுமொழி கூறினான்
மைந்தன் இந்திரசித்து.



8638.
பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர்
   முற்றும் புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக்
   குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர,
   சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.

(தன் வழிபாடுகளை முடித்துவிட்டு
வந்த இராமன்)

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் தம்பியையும்
சேனைகளையும் கண்டு மனம் வருந்தினான்;
கோபம் மிகுந்திடக் கண்டான்; 
நீலமணி போன்ற அழகிய உடலும்
உள்ளம் போல நடுங்கக் கண்டான்;
அறக்கடவுள் இராமனின் துன்ப நிலை
கண்டு இரங்கி  தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்த,
இராமன் நிலத்தில் சாய்ந்தான்;
இடியினால்  தாக்கப்பட்டதொரு மராமரத்தை
ஒத்துத் தரையில் வீழ்ந்தான்.



சீதை களம் காண் படலம்


8672.
அந்த நெறியை அவர் செய்ய,
     அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
     முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
     சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
     அடங்கக் கடலினுள் இட்டான்.

வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று
இராவணன்  இட்ட பணியில்
ஒரு சாரார் ஈடுபட, இதனிடையில்
மருத்தன் என்னும் அரக்கனை அழைத்தான்;
"முதலில் நீ சென்று, இறந்து  கிடக்கும் 
அரக்க உடல்கள் அனைத்தையும் கடலில் வீசு";
இந்த விசயத்தை வேறு யாரேனும் அறிந்தால்
உன் தலை, தவப்பயன் அனைத்தையும்
அழித்து விடுவேன்' என்று கூறி அனுப்பினான்;
அந்த மருத்தனும் சென்று அரக்கர் உடல்
முழுவதையும் கடலில் போட்டான்.


8673.
‘தெய்வ மானத்திடை ஏற்றி
   மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
   கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
   அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும்
   போர்க் களத்தின்மிசை உய்த்தார்.

இராவணன் சீதைக்குக் காவலாய்
இருக்கும் அரக்கியரை அழைத்தான்;
'சீதையைத் தெய்வத்தன்மையை
உடைய புட்பக விமானத்தில் ஏற்றி,
இராம இலக்குமனர்க்கு நேர்ந்த கதியை
காட்டுங்கள்;
தன் கண்ணால் காணாது ஐயப்பாடு 
நீங்காள்' என்று கூறினான்;
அரக்கியர்கள் ஆரவாரித்தனர்;
இவ்வுலகில் வாழ ஆசையற்ற  சீதையை
போர்க்களத்துக்கு வான் வழியே
அழைத்துச் சென்றார்கள்,



8679.
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
     வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
     நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
     கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
     சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;

விழுந்தாள்; புரண்டாள், உடல் முழுதும்
வியர்த்தாள்; பெருமூச்சு விட்டாள், மனம்
வெதும்பினாள்; எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
தனது கரங்களை நெரித்துக் கொண்டாள்,
தன் நிலையை எண்ணிச் சிரித்தாள்,
ஏங்கினாள்;  இலக்குவனைப்  பார்த்துக்
‘கொழுந்தா!’ என்று கூவினாள்; இராமனைப்
பார்த்து, ‘அயோத்தி நகரத்தவரின்  அரசே!’ 
என்றாள். ‘எவ்வுலகத்தவரும் வந்து
தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ 
என்று அழைத்தாள்; சோர்ந்தாள்,  பின்பு வாய்
திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!


8695.
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு 
   ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் 
   வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; 
   உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-
   மண்ணில் வந்தாய்!

பூமியிலிருந்து தோன்றியவளே!  
சக்கரப்படைக்கு உரியவனாகிய இராமனது
உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை 
என்பதை மென்மையான உள்ளமுடைய நீ 
காண்கிறாயல்லவோ?
அம்புபட்டிருந்தாலும், இலக்குவனின் முகம்
இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும் 
சூரியன் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; 
எனவே நிறைய நாள் வாழப்போகும் 
அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; 
அவர்கள் இறந்தார்கள் என்று வீணாக நீயே 
நினைத்துக்கொள்ளாதே !' என்று திரிசடை 
சீதைக்கு ஆறுதல் கூறினாள்.



( தொடரும் )


Friday, April 24, 2020

கம்பராமாயணம் 105


பிரமாத்திரப் படலம்


8443.
வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர்
   மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு
   குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர்
   பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும்
   காண்பர்' என்றான்

வணங்கினான்,
உன் மக்கள் மாண்டனர் என்று நீ
மன வருத்தம் கொள்ள வேண்டாம்
என ஆறுதல் கூறினான்,
இன்று பார், குரங்குச் சேனையை
பிணக்குவியல் ஆக்குகிறேன் என்றுரைத்தான்,
அந்த இராம இலக்குமார்களின்
உயிரற்ற உடலை சீதையும் தேவர்களும்
காணும்படி செய்கிறேன்
என்று இராவணனிடம் கூறிவிட்டுப்
போருக்குக் கிளம்பினான் இந்திரசித்.


8458.
மாருதி அலங்கல் மாலை மணி அணி
    வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு
   சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்;
   அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர்,
   இடைவிடாமல்.

அனுமனின் மாலையும் மணியும் அணிந்த
தோள் மேல் இராமன் ஏற
வாலி மகன் அங்கதனின் சிகரம் போன்ற
தோள் மேல் இலக்குவன் ஏறிக்கொள்ள
தேவர்கள் அதைக் கண்டு வாழ்த்தினர்,
மலர்களை மழையாகப் பொழிந்தனர்.



8521.
ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை 
   வழா தாய்! 
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், 
   இவ் உலகம் 
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது' 
   என்றான், 
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் 
   தம்பி.


பிரம்மாத்திரத்தை எய்துகிறேன் என்று 
இலக்குவன் சொல்ல,
'தருமத்தின் வழி தவறாதவனே,
பிரம்மாத்திரத்தை நீ ஏவினாய் எனில், 
இந்திரசித்தை மட்டும் கொல்லாது,
அது மூன்று உலகையும் சுட்டழிக்கும் 
ஆற்றல் உள்ளது' 
என்று அறிவுறுத்தினான் இராமன்;
நல்லுணர்வு நிறைந்த இலக்குவனும் 
பிரம்மாத்திரத்தை ஏய்தாது தவிர்த்தான்.



8522.
மறைந்துபோய் நின்ற வஞ்சனும், 
   அவருடைய மனத்தை 
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் 
   தொடுப்பதற்கு அமைந்தான், 
'பிறிந்து போவதே கருமம், இப்பொழுது' 
   எனப் பெயர்ந்தான்; 
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், 
   சிரித்தார். 

மேகத்தினிடையிலிருந்து போர் செய்த   
வஞ்சகன் மேகநாதன்,
இராம இலக்குமணர் மனக்கருத்தை 
அறிந்து கொண்டான்.
பிரம்மாத்திரத்தை தான் ஏவுதற்கு 
தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.
'இப்போதைக்கு இடம் பெயர்கிறேன்,
அதுவே நல்லது' என்று எண்ணி 
மறைந்துகொண்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த 
தேவர்கள் சிரித்தனர்.



8610.
இன்ன காலையின் இலக்குவன் மேனி 
   மேல் எய்தான், 
முன்னை நான்முகன் படைக்கலம்; 
   இமைப்பதன் முன்னம், 
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் 
   மொய்ப்பது போல, 
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் 
   கணை பாய்ந்த.

இலக்குவன் அனுமனோடு 
பேசிக்கொண்டிருக்கையில் 
பிரம்மாத்திரத்தை இமைப்பொழுதில் 
இந்திரசித் ஏவினான்.
பொன் மயமான மலை மீது 
குருவிக்கூட்டங்கள் மொய்ப்பது போல 
ஒளிமிக்க அம்புகள் 
இலக்குவன் உடல் மீது பாய்ந்தன.



8612.
அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், 
   ஈது அமைந்தான்? 
இனி என்? எற்றுவென் களிற்றினோடு 
   எடுத்து' என எழுந்தான்; 
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் 
   கணை தைக்க, 
நினைவும் செய்கையும் மறந்துபோய், 
   நெடு நிலம் சேர்ந்தான். 


வந்தவன் இந்திரனோ ? 
இப்போது நான் என்ன செய்வேன் ?
என்று அனுமன் எண்ணினான்.
அவனை யானையோடு பிடித்துத் 
தள்ளுவேன் என்று எழுந்தான்.
எழுந்தவன் உடம்பில் ஆயிரம் கோடி 
அம்புகள் பாய தரையில் விழுந்தான்,
நினைவிழந்தான்.



( தொடரும் )

Thursday, April 23, 2020

கம்பராமாயணம் 104


8238.
தான் விடின் விடும், இது ஒன்றே;
   சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம்
   மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்;
   வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன்
   செய்கை’ என்றான்.

'ஒப்பற்ற நாகக் கணை இது;
தானே விட்டால் தான் உண்டு;
பிரமனை முதல்வனாகக்  கொண்ட
தேவர்களாலும் விடுவித்தல் முடியாதது;
அவ்வாறிருக்கையில் இவ் உலகத்தவர்
இதிலிருந்து விடுவிப்பர் என்று எண்ண
என்ன உள்ளது;
உயிர் போன உடன் தானே நீங்கும் இது;
பிழைக்கும் வழி வேறு இல்லை.
எனக்குத் தெரிந்து;
துளசி மாலை அணிந்த இராமா,
இதுவே இந் நாகக் கணையின் செயல்'
என்று வீடணன் கூறினான்.


8265.
பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
     அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
     உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
     அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
     வடு ஆன, மேனி வடுவும்.
பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி முடியாத
இறகுகளை உடைய கருடன் 
அங்கு தோன்றினான்.
இரண்டு சிறகுகளும் அடித்துக் கொள்ள 
காற்று அங்கு எங்கும் பரவ, 
இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய 
உடலில் குத்தி நின்ற அம்புகள் 
சிதறிப் போயின;
அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட 
தழும்புகளும் நீங்கின.



8271.
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், 
   ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; 
   அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ 
   என்று உணர்த்தி, ‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் 
   பெயர்ந்து போனான்.
'பறவைக் கூட்டங்களைப் 
பாதுகாக்கின்ற கருடன்; 
உன்னோடு எனக்குப் பழைய உறவு உள்ள 
தன்மைகளை எல்லாம்,
இராவணனோடு நீ போர்த்தொழிலை 
முடித்த பின்பு வந்து உணர்த்துவேன்; 
இப்போது  நீ எனக்கு  விடை  கொடு,
மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைவனே'
என்று கூறி விட்டுத் திரும்பிப் போனான்.


(கருடனின் காற்று பற்று 
கட்டுப்பட்டவர்கள் கண்விழித்ததைக் கேட்டு 
கோபம் கொண்டான் இராவணன்)

8301.
‘இன்று  ஒரு பொழுது  தாழ்த்து, என் இகல்  
   பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் 
   படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் 
   மீட்பென்’ என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் 
   கோயில் புக்கான்.
இன்று ஒரு நாள் அவகாசம் கொடு, 
போரினால் ஏற்பட்ட துன்பத்தை 
போக்கிக்கொள்ள நேரம்  விடு;
நாளை ஒரு கண நேரத்தில், 
போர்க்களம் செல்வேன்,
பிரமன் தந்த, தெய்வத்தன்மை வாய்ந்த,
வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
பகைவர்களைக் கொன்று உன்  மனத்தில் 
ஏற்பட்டுள்ள  துன்பத்தைப் போக்குவேன் 
என்று உறுதி கூறினான் இந்திரசித்.
சரி என்று ஒப்புக்கொண்டு மலர் 
மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த 
தன் அரண்மனைக்குத் திரும்பினான் 
இராவணன்.


( தொடரும் )

Wednesday, April 22, 2020

கம்பராமாயணம் 103


நாக பாசப் படலம் 


8005.
கண்டான், இறை ஆறிய நெஞ்சினன்,
   கைகள் கூப்பி,
'உண்டாயது என், இவ்வுழி?' என்றலும்,
   'உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப
   நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்
   வீர!' என்றான்.


இந்திரசித்து வந்தான்,
இராவணனைக் கண்டான்,
நெஞ்சம் ஆறினான்,
தன் இரு கைகளைக் கூப்பி வணங்கினான்,
இவ்விடத்தில் சூழ்ந்திருக்கும் துயரத்திற்கு
என்ன காரணம் என்று வினவினான்,
'உன் தம்பியரைக் கொன்றான் காலன்,
கும்பன் நிகும்பன்  இருவரோடும்
அதிகாயனும் இறந்தான், வீரனே'
என்றான் இராவணன்.


8010.
'என், இன்று நினைந்தும், இயம்பியும்,
    எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக்
   கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை
   நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்;
   வாழ்வும் வேண்டேன்.


நடந்தவற்றை நினைத்துப்பார்த்தும்
உன் மீது பழி சொல்லியும்,
என்ன பயன் இப்போது ?
கொல்லும் படைக்கலன்கள் ஏந்திய
என் தம்பியைக் கொன்றவனை,
அந்த இலக்குமனை, அவன் உடம்பை,
அந்த போர்க்களத்திலேயே கொல்லுவேன்,
அவ்வாறு கொல்லாவிட்டால், இந்த
இலங்கை நகருக்கு திரும்ப வரமாட்டேன்,
உயிர் வாழவும் விரும்பமாட்டேன்,
என்றான் இந்திரசித்து.


8029.
'யார், இவன் வருபவன்? இயம்புவாய்!' என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
'ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்'
   என்றான்.

'இதோ இங்கு வருகின்றானே,
இவன் யார் ?' என்று இலக்குவன் கேட்டான்.
'தேவர்களின் தலைவன் இந்திரனை
வென்றவன்,
அதனால் இந்திரஜித் என்ற
பெயர் பெற்றவன்,
இன்றைய போரை மிகக் கடுமையானதாய்
ஆக்க வல்லவன்'
என்று வீடணன் உரைத்தான்.


8190.
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை;
   விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து
   இரியஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு
   இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை
   உளைய வாங்கி.


(கடும் சண்டை நடக்கும் வேளையில்
வானரரும், அரக்கர் பலரும் இறந்த பொழுதினில்)

இந்திரசித் நாகாபானத்தை எய்தினான்.
எய்திய உடனே எல்லா திசையிலும்
இருள் சூழ்ந்தது, அனைவரையும்
நிலை கெட்டு ஓடச் செய்தது.
காளை போன்ற இலக்குவனின்
மலை போன்ற தோள்களை
வளைத்துக் கட்டியது.



8207.
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள 
   தன்மை எல்லாம் 
சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர் 
   நீ; எந்தாய்! 
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, 
   மேல் நுவல்வென்' என்னா, 
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் 
   கோயில் புக்கான்.

தந்தை இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
போர்க்களத்தில் நடந்தவைகளை 
எடுத்துரைத்தான்.
'தீர்ந்தது உன் துயர், கவலை விடு' என்றான்.
'நானும் தளர்ந்து விட்டேன், கொஞ்சம் 
இளைப்பாறிக் கொள்கிறேன், அடுத்து 
என்ன என்று நாளை உரைக்கிறேன்' என்றான்.
துன்பம் போக்கிக்கொள்ள தன் இருப்பிடம் 
போய்ச் சேர்ந்தான் இந்திரசித்.



( தொடரும் )