Tuesday, March 31, 2020

கம்பராமாயணம் 81


6023.
‘குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ ?
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை ?
   பெற்றியோய் !’

குறிப்பிட்டுக் கூறிய நாட்கள் நகர்ந்தன, 
தெற்குத் திசையில், நறு மணம் வீசும்
கரிய கூந்தலை உடைய சீதையை
தேடிச் சென்றவர் இன்னும் திரும்பவில்லை;
இறந்துவிட்டார்களோ ? வேறு ஏதும்
துன்பம் நேர்ந்திருக்குமோ அவர்கட்கு;
நற்பண்புடைய சுக்ரீவ !'
என்று தன் மனத்துயரைத்
தெரிவித்தான் இராமன்.



6028.
எய்தினன்அனுமனும்; எய்தி, 
   ஏந்தல் தன்
மொய் கழல்தொழுகிலன்; 
   முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், 
   கையினன்,
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி, 
   வாழ்த்தினான்.

இராமன் இருக்கும் இடத்தை அனுமன்  
வந்தடைந்தான்;
வந்ததும் அவன் திருவடிகளை 
வணங்க மறந்தான்.
தாமரை மலரை விட்டகன்று 
பூமியில் அவதரித்த பிராட்டியை, 
அவள் இருக்கும் தென் திசையை 
நோக்கி, தலைமேல் கைகளைக் குவித்து 
நிலத்தில் விழுந்து வணங்கி, வாழ்த்தினான்.




6031.
‘கண்டனென், கற்பினுக்கு அணியை, 
   கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் 
   தென் நகர்;
அண்டர் நாயக ! இனி, துறத்தி, 
   ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் 
   பன்னுவான்.


'பார்த்தேன், 
கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற பிராட்டியை
என் கண்களாலேயே பார்த்தேன், 
அலைகளோடு கூடிய கடல் சூழ்ந்த இலங்கையில் 
தெற்கில் உள்ள நகரத்தில்,
சீதையைப் பார்த்தேன்.
தேவர்களுக்குத் தலைவனே! இனிமேல், 
சந்தேகத்தையும், துன்பங்களையும் நீக்கிக்கொள்'
என்று அனுமன் நடந்தவைகளைத் 
தொகுத்துக் கூறத்தொடங்கினான்.



6036.
‘கண்ணினும்உளை நீ; தையல் 
   கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணினும் உளை நீ; கொங்கை 
   இணைக் குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலர் 
   அம்பு தொளைத்த ஆறாப் 
புண்ணினும் உளை நீ; நின்னைப் 
   பிரிந்தமை பொருந்திற்று ஆமோ ?


நீ, பிராட்டியின் கண்களில் இருக்கின்றாய்,
மனத்திலும் எண்ணத்திலும் இருக்கின்றாய்,
அவள் வாயினின்றும் தோன்றும் 
ஒவ்வொரு சொற்களிலும் நீ இருக்கின்றாய்;
இரண்டு தனங்களின் முகட்டிலும், 
மன்மதன் ஏவிய மலரம்புகள் ஊடுருவிய 
ஆறாத புண்களிலும் நீ தங்கியிருக்கின்றாய்; 
உன்னைப் பிரிந்திருக்கின்றாள் என்பது 
பொருத்தமான செய்தி ஆகுமோ ? 


6052.
‘வைத்தபின், துகிலின் வைத்த மா 
   மணிக்கு அரசை வாங்கி,
கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; 
   தாமரைக் கண்கள் ஆர,
வித்தக ! காண்டி!’ என்று, கொடுத்தனன்
   வேத நல் நூல்
உய்த்துள காலம்எல்லாம் புகழொடும் 
   ஒக்க நிற்பான்.

(சீதை சொன்னவைகளை அனுமன் சொன்னபின்)
'தன் ஆடையில் முடித்து வைத்திருந்த 
உயர்ந்த சூடாமணியை அவிழ்த்து எடுத்தாள், 
அன்போடு எனது கையில் கொடுத்தாள், 
மலர் போன்றுன் கண்கள் மகிழ பார்த்தருளுக' 
என்று கூறி, இராமபிரானிடம் கொடுத்தான்,
வேதங்களும் சாத்திர நூல்களும் சொல்லும் 
காலக் கணக்குகள் உள்ள மட்டும் 
புகழோடு கூடியிருக்கும் அனுமான்.



6056.
‘எழுக, வெம் படைகள் !’ என்றான்; 
   ‘ஏ’ எனும் அளவில், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் 
   முடுக்க, முந்தி,
பொழி திரை அன்ன வேலை புடை 
   பரந்தென்னப் பொங்கி,
வழுவல் இல் வெள்ளத் தானை, 
   தென் திசை வளர்ந்தது அன்றே !

'சேனைகள் யாவும் உடனே புறப்படுக' 
என்று சுக்கிரீவன் கட்டளையிட்டான்; 
பெரிய முரசுகளை அடிக்க உத்தரவிட்டான். 
எல்லா இடத்திலும்  உள்ள சேனைகளை 
விரைவுபடுத்தினான்.
பாய்கின்ற அலைகளை உடைய அந்தக் கடல்
தன் நிலையை மாற்றி வெளியே பரவியது போல்,
எதற்கும் பின்னடையாத வானரச் சேனைகள் 
எழுந்து தெற்குத்திக்கை நோக்கிப் பரவலாயிற்று.

சுந்தர காண்டம் முற்றிற்று 

( தொடரும் )

Monday, March 30, 2020

கம்பராமாயணம் 80



5980.
நீரை வற்றிடப் பருகி, மா நெடு
   நிலம் தடவி,
தாருவைச் சுட்டு, மலைகளைத்
   தழல் செய்து, தனி மா
மேருவைப் பற்றி எரிகின்ற கால
   வெங் கனல் போல்,
ஊரை முற்றுவித்து, இராவணன்
   மனை புக்கது உயர் தீ.

நீர் நிலைகளை வற்றிப் போகும்படி உறிஞ்சி,
பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரவி அழித்து
மரங்களை எரித்து, மலைகள் யாவையும்
தணல் போல் எரிய வைத்து,
மா மேரு பற்றி எறிவது போன்று 
இலங்கை நகர் முழுவதையும் எரித்து,
இராவணனுடைய அரண்மனையுள் புகுந்தது,
அனுமான் இட்ட அந்தத் தீ.



5987.
கரங்கள் கூப்பினர், தம் கிளை 
   திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது 
   இயம்பின்; ‘இறையோய் !
தரங்க வேலையின் நெடிய தன் 
   வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது ஈது’ என்றலும், 
   இராவணன் கொதித்தான்.

(தீ ஏற்பட்ட காரணத்தை இராவணன் வினவ)
சுற்றத்தாரையும் செல்வத்தையும் இழந்து,
ஏங்கிக்கொண்டிருக்கின்ற அரக்கர் கரம் கூப்பினர்,
பின்வரும் செய்தியைக் கூறினர்,
'அரசே - கடலினும் நீண்ட வாலிலே 
நாம் வைத்த நெருப்பாலே 
அக் குரங்கு எரித்தது இது' என்றனர்,
அதைக் கேட்டதும் 
இராவணன் கோபம் கொண்டான். 



6004.
வந்தவர்சொல்ல மகிழ்ந்தான்;                    
வெந் திறல்வீரன் வியந்தான்;
‘உய்ந்தனென்’என்ன, உயர்ந்தான்,
பைந்தொடிதாள்கள் பணிந்தான்.

(அனுமன் வைத்த தீ, அசோகவனத்தைத் 
சேதப்படுத்தவில்லை என்று)

வானவர் சொன்னர், அதனை
வாயு புத்திரன் கேட்டு மகிழ்ந்தான்,
ஆண்மை மிக்க வீரன் வியந்தான்,
தீயவினையிலிருந்து தப்பினேன் 
என்று எண்ணினான்.
உடன் அவ்விடம் விட்டு எழுந்து, 
சீதா பிராட்டியின் திருவடி பணிந்து 
விடை பெற்றுச் சென்றான்.


திருவடி தொழுத படலம்


6010.
அழுதனர் சிலவர்; முன் நின்று 
   ஆர்த்தனர் சிலவர்; அண்மித்
தொழுதனர் சிலவர்; ஆடித் 
   துள்ளினர் சிலவர்; அள்ளி
முழுதுற விழுங்குவார் போல் 
   மொய்த்தனர் சிலவர்; முற்றும்
தழுவினர் சிலவர்; கொண்டு 
   சுமந்தனர் சிலவர், தாங்கி.

(அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்)
சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; 
சிலர் முன் நின்று ஆரவாரித்தார்கள்; 
சிலர் நெருங்கி வந்து வணங்கினார்கள்; 
சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; 
சிலர் அனுமனை விழுங்குபவர் போன்று 
அவனை நெருங்கிச் சூழ்ந்து  கொண்டனர்; 
சிலர் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்;
சிலர் தூக்கிச் சுமந்து கொண்டார்கள். 


6017.
‘யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது
                          இறையும் இல்லை;
சேவகன்தேவி தன்னைக் கண்டமை விரைவின்
                          செப்பி,
ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர்
                             ஆற்றலே ஆம்;
போவது புலமை’ என்னா, பொருக்கென எழுந்து
                             போனார்.

இனி வேறெதையும் 
எண்ணிப் பார்க்கத் தேவையில்லை;
நாம் செய்யத்தக்கது, தேவியைப்  
பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; 
அண்ணல் மனத்தில் உள்ள துன்பத்தைத் 
தணியச் செய்தலே ஆகும்;
எனவே இனி இராமபிரானிடம் செல்வதே 
அறிவுள்ள செயலாகும் என்று அனைவரும் 
கருதி, விரைந்து கிளம்பினர்.

( தொடரும் )

Sunday, March 29, 2020

கம்பராமாயணம் 79



5927.
வேந்தன் கோயில் வாயிலொடு
   விரைவில் கடந்து, வெள்ளிடையின்
போந்து, புறம் நின்று இரைக்கின்ற
   பொறை தீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடு வால்கிழி சுற்றி, முற்றும்
   தோய்த்தார், இழுது எண்ணெய்;
காந்து கடுந்தீக் கொளுத்தினார்;
   ஆர்த்தார், அண்டம் கடி கலங்க.

(அனுமனைக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு)
இராவணனது அரண்மனை வாயிலைக் கடந்தனர்,
திறந்த வெட்ட வெளியை அடைந்தனர்,
எல்லாப்பக்கமிருந்தும் அனுமனைச் சுற்றி
நின்று கொண்டனர்.
நீண்ட வாலில் துணி சுற்றி, நெய் எண்ணையில்
தோய்த்தெடுத்தனர். எரியும் தீயை வைத்து,
அண்டம் கலங்கும்படி பெருமுழக்கமிட்டனர்.


5931.
‘தாயே அனைய கருணையான் துணையை,
   ஏதும் தகைவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலியக்
   கண்டால், நல்காயோ ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
   நிற்கே தெரியும் கற்பு; அதனில்
தூயேன் என்னின்,தொழுகின்றேன்,
   எரியே! அவனைச் சுடல் !’ என்றாள்.


'தாய் போன்று அனைவர்க்கும் அருள் புரியும்
இராமபிரானின் துணைவன் அனுமனை,
சிறிதும் நற்குணம் இல்லாத,
நாய் போல இழிந்த, கொடிய அரக்கர்கள்
துன்புற்றுவதை நீ பார்த்தால்;
அவனுக்கு அருள் செய்ய மாட்டாயோ ?
நீதான், உலகம் அனைத்துக்கும்
ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன்;
உனக்கு எனது கற்பு நிலை தெரியும்;
அந்தக் கற்புத் திறத்தில் நான்
தூய்மை உடையவள்
என்பது உண்மையானால்,
உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்;
அந்த அனுமனை நீ சுடாதே'
என்று சீதை பிரார்த்தித்தாள்.



5937.
முழுவதும் தெரிய நோக்கி, முற்றும்
   ஊர் முடிவில் சென்றான்,
‘வழு உறு காலம் ஈது’ என்று எண்ணினன்,
   வலிதின் பற்றித்
தழுவினன், இரண்டு நூறாயிரம் புயத்
   தடக் கை தாம்போடு
எழு என நால,விண்மேல் எழுந்தனன்;
   விழுந்த எல்லாம்.

(அரக்கர்களோடு)
இலங்கை நகர் முழுவதையும்
நோட்டம் விட்டுக் கொண்டே நடந்தான்,
நகர் முழுவதும் சுற்றி  எல்லை வந்து சேர்ந்தனர்;
தப்பிப் போவதற்கு இதுதான் ஏற்ற சமயம்
என்று எண்ணினான் அனுமான்.
(இரு புறத்துக் கயிறுகளையும்)
வலியப் பிடித்து இடுக்கிக் கொண்டு
இரண்டு இலட்சம் தோள்களும் பெரிய கைகளும்
இரு புறத்துக் கயிற்றுடனே தூண் போலத் தொங்க
வானின் மேல் உயர எழும்பினான்,
அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே விழுந்தனர்.






5939.
துன்னலர் புரத்தை முற்றும் சுடு தொழில்
   தொல்லையோனும்,
பன்னின பொருளும், நாண, ‘பாதகர்
   இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி
   மடுப்பென்’ என்னா,
பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப்
   போக விட்டான்.

அனுமான்,
திரிபுரத்தை எரித்த முன்னோன் சிவபெருமானும்
வெட்கப்படும்படி
பாவிகளின் இருப்பிடமாகிய இலங்கை நகர் முழுதும்
தீப்பற்றி எரியுமாறு,
இராமபிரானைத் துதித்து, பிறகு,
நெருப்பை மூட்டுவேன் என்று தீர்மானித்தான்.
தனது நீண்ட வாலை
பொன்மயமான இலங்கை நகரின் மீது
படரவிட்டான்.



இலங்கை எரியூட்டு படலம் 

5949.
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடித்
தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்த கரியவன் மேனியின்,
போய் எழுந்து பரந்தது-வெம் புகை.

அக்காலத்தில்
வாமன வடிவாகச் சென்று,
(மாவலி) மூன்றடி தர சம்மதிக்க, 
மூவுலகங்களையும் தாவி அளக்கும் பொருட்டு
மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின் 
திரு மேனியைப் போல, வெப்பமான புகை, 
மேல் எழும்பி எங்கும் பரந்தது.



( தொடரும் )

Saturday, March 28, 2020

கம்பராமாயணம் 78




5834.
‘இறுத்தனன்கடி பொழில்,
   எண்ணிலோர் பட
ஒறுத்தனன்’ என்றுகொண்டு
   உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள்சோர்வுற,
   வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல்சிந்தையாள்
   கவன்று கூறினாள்.


அசோகவனத்து மரங்களை ஒடித்தானாம்,
மணம் மிக்க சோலையை அழித்தானாம்,
அளவிறந்த அரக்கர்களைக் கொன்றானாம்,
என்று அவ்வப்போது, களங்கமில்லாத
மனதுடைய திரிசடை சொல்ல,
கேட்டு மகிழ்ந்த சீதை,
வாழ வெறுப்புற்றவளாய்
தளர்ச்சி அடையும்படி;
அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையையும்
மனக்கவலையுடன் சொன்னாள்.


5873.
அன்ன ஓர்வெகுளியன், அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர்துணுக்கம் சுற்றுற,
‘என் இவண் வரவு? நீ யாரை ?’
    என்று, அவன்
தன்மையைவினாயினான்-
   கூற்றின்  தன்மையான்.

கொடுங் கோபம் கொண்டவனானான்
இராவணன்.
தேவர்கள் மற்றும் சூழ்ந்திருந்தவர்கள்
அச்சம் கொள்ளும் விதம் பேசினான்.
'நீ இங்கு வந்து நோக்கம் என்ன?
யார் நீ?' என்று கேட்டான்.
யமன் போன்ற கொடுந்தன்மை
உடையவன் வினவினான்.



5878.
‘சொல்லிய அனைவரும் அல்லென்;
   சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல்
   பூண்டிலேன்;
அல்லி அம்கமலமே அனைய
   செங் கண் ஓர்
வில்லிதன் தூதன்யான்;
   இலங்கை மேயினேன்.

(நீ அவனா ? இல்லை இவனா ? என்று
பலரைக் கூறிக் கேட்ட இராவணனிடம் ...)

'நீ சொன்ன யாரும் இல்லை, உன்னால்
சொல்லப்பட்ட அற்ப வலிமையுள்ளவர்களின்
கட்டளையை ஏற்று வந்தவனும் இல்லை;
அழகிய செந்தாமரை மலர் போன்ற
கண்களை உடைய
ஒப்பற்ற ஒரு வில் வீரனது தூதனாக
நான் இலங்காபுரிக்கு வந்தேன்'
என்றான் அனுமான்.



5886.
‘அன்னவற்கு அடிமை செய்வேன்;
   நாமமும் அனுமன் என்பேன்;
நன்னுதல் தன்னைத்தேடி
   நாற் பெருந் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு
   மன்னன், வாலி-
தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென்,
   தனியேன்’ என்றான்.

'சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரானுக்கு
அடிமைத் தொழில் செய்பவன்;
அனுமன் என்று அழைக்கப்படுபவன்.
நீண்ட நெற்றியை உடைய சீதையைத் தேடி
நான்கு திசைகளிலும் சென்ற தலைவர்களுள்
தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன்
வாலியின் மகனாகிய அங்கதன்.
நான் அவனது தூதன்
தனியாளாய் வந்திருக்கிறேன்'
என்று அனுமன் கூறினான்.



5910.
' "ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும்,
ஓது பல் கிளையும், உயிரும் பெற,
சீதையைத் தருக" என்று, எனச் செப்பினான்,
சோதியன் மகன், நிற்கு' எனச் சொல்லினான்.

(அனுமான் பலவேறு அறிவுரைகளைக் கூறி)

' 'எனவே, நீ பெற்ற செல்வத்தையும்,
சொந்த பந்தங்களையும், உயிரையும்
இழக்காதிருக்க
சீதையைத் திருப்பித் தர வேண்டும்'
என்று உன்னிடம் சொல்லச் சொன்னான்,
சூரியன் மைந்தன் சுக்ரீவன்'
என்றான் அனுமான்.


5921.
'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே 
   செய்தான் ஆனாலும் 
கொல்லல் பழுதே', 'போய் அவரைக் கூறிக் 
   கொணர்தி கடிது' என்னா 
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு,
   நகரைச் சூழ்போக்கி 
எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்,
   நின்றார் இரைந்து எழுந்தார்.


('கொல்வேன் இவனை' என்று எழுந்த 
இராவணனை, தடுத்தான் வீடணன்)

'நல்லதே சொன்னாய் தம்பி, 
தவறையே இவன் செய்திருந்தாலும்  
தூதுவனைக் கொல்லுதல் தவறு' என்றான்.
பின் அனுமனை நோக்கி,
'நீ சென்று, அவர்கட்கு எனைப் பற்றிச் சொல்லி,
போருக்கு அழைத்து வா' என்றான்.
அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து 
'தொல்லை தரும் இவன் வாலில் தீ வையுங்கள்,
நகரைச் சுற்று இழுத்துச் செல்லுங்கள்,
எல்லை கடந்து போகும்படி துரத்திவிடுங்கள்'
என்று கட்டளையிட்டான்.
அருகே நின்றிருந்தவர்கள் 
ஆரவாரம் செய்தபடி எழுந்தனர்.


( தொடரும் )




Friday, March 27, 2020

கம்பராமாயணம் 77


5728.
ஆயினும், ஐய ! நொய்தின்,
   ஆண் தொழில் குரங்கை, யானே,
“ஏ” எனும்அளவில் பற்றித் தருகுவென்;
   இடர் என்று ஒன்றும்
நீ இனிஉழக்கற்பாலை அல்லை;
   நீடு இருத்தி’ என்னா,
போயினன்-அமரர்கோவைப்
   புகழொடு கொண்டு போந்தான்.

(யாரிடமும் எதையும் கலந்தாலோசிப்பதில்லை
என்று சினந்து, பின் மேகநாதன்)

எனினும், ஐயனே!
வீரச் செயல் புரியும் அந்தக் குரங்கை
மிகச் சிறிய காலத்தில், எளிதில் பிடிப்பேன்
உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்,
நீ துன்பப்பட்டு வருந்தவேண்டியதில்லை;
நீண்ட காலம் இருந்து ஆட்சி செய்' என்றான்,
தேவர்க்கரசனான இந்திரனை, அவன் பெற்றிருந்த
புகழ்களோடு சிறைப்பற்றிக் கொண்டு போனவன்.


5795.
ஏறு தேர்இலன்; எதிர் நிற்கும் உரன் 
   இலன்; எரியின்,
சீறு வெஞ் சினம் திருகினன், 
   அந்தரம் திரிவான்,
வேறு செய்வது ஓர்வினை பிறிது 
   இன்மையின், விரிஞ்சன்
மாறு இலாப்பெரும் படைக்கலம் 
   தொடுப்பதே மதித்தான்.


(அனுமான், போரில் படைகள் அனைத்தையும் 
தோற்கடித்தான், இந்திரஜித்தின் தேரை 
பொடிப்பொடி ஆக்கினான்)

ஏறி நின்று போர் புரிய 
இன்னொரு தேர் இல்லாதவனானான்.
அனுமனின் எதிரே நின்று போர் புரிய 
வலிமை அற்றவன் ஆனான்.
தீப் போலச் சீறுகின்ற கொடிய சினம் 
தலைக்கேறி நின்றான். 
வானில் சஞ்சரித்தான். அடுத்தென்ன செய்வது 
என்று தெரியாது முழித்தான்.
பிரம்மாத்திரத்தை ஏவுவதே சரி 
என்ற முடிவுக்கு வந்தான்.



5800.
சாய்ந்தமாருதி, சதுமுகன் படை 
   எனும் தன்மை
ஆய்ந்து, ‘மற்றுஇதன் ஆணையை 
   அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று’ என எண்ணினன், 
   கண் முகிழ்த்து இருந்தான்;
‘ஓய்ந்தது ஆம்இவன் வலி’ என, 
   அரக்கன் வந்துற்றான்.

மேகநாதன் எய்திய அம்பு தாக்க,
கீழே விழுந்தான் அனுமன்; 
தன் மேற் செலுத்தப்பட்டது பிரம்மாத்திரம் 
என்னும்உண்மையை உணர்ந்து கொண்டான்.
பிரம்மாத்திரத்தின் வலிமையை இகழ்வது
முறையன்று என்று என்றெண்ணினான்.
கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் 
கட்டுப்பட்டவன் போல் கிடந்தான்; 
அரக்கன் மேகநாதன், அனுமனின் வலிமை 
ஒழிந்தது என்று எண்ணினான்.
அருகில் வந்து நின்றான்.



பிணி வீட்டு படலம்

5805.
‘எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;
கொய்யுமின்குடரினை; கூறு கூறுகள்
செய்யுமின்;மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;
உய்யுமேல்,இல்லை நம் உயிர்’ என்று ஓடுவார்.

(இந்தக்கொடிய குரங்கை) 
'அம்பு கொண்டு எய்யுங்கள்;
வாள் கொண்டு வெட்டுங்கள்; 
ஈட்டியால் குத்துங்கள்;
கோடாலியால் பிளவுங்கள்; 
இதன் குடலைப் பறித்திடுங்கள்; 
இதனைத் துண்டு துண்டுகளாக செய்யுங்கள்; 
தரையில் தேய்த்து அழியுங்கள்; 
இதன் உடல் தசையைத் தின்னுங்கள்; 
இது பிழைத்துப் போகுமானால், 
நாம் பிழைக்கமாட்டோம்'
என்று கத்தியபடியே ஓடி வந்தார்கள். 



5832.
எல்லை இல்உவகையால் இவர்ந்த 
   தோளினன்,
புல்லுற மலர்ந்தகண் குமுதப் 
   பூவினன்,
‘ஓல்லையின் ஓடி, நீர் உரைத்து, 
   என் ஆணையால்,
“கொல்லலை தருக”எனக் கூறுவீர்’ 
   என்றான்.

(குரங்கு அகப்பட்ட செய்தி வந்ததும்)
அளவற்றமகிழ்ச்சி கொண்டான்,
பூரித்த தோள்களை உடையவனானான்,
நான்றாக கண்களை விரித்துத் திறந்து,
'நீங்கள் விரைவாக ஓடிச் சென்று, 
அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் 
கொண்டு வருக, 
இது எனது கட்டளை என்று 
இந்திரசித்துவிடம் சொல்லிடுக'
என்று கூறினான் இராவணன்,

( தொடரும் )


Thursday, March 26, 2020

கம்பராமாயணம் 76


சம்புமாலி வதைப் படலம்

5550.
கூம்பினகையன், நின்ற குன்று எனக்
   குவவுத் திண் தோள்,
பாம்பு இவர்தறுகண், சம்புமாலி
   என்பவனைப் பாரா,
‘வாம் பரித்தானையோடு வளைத்து,
   அதன் மறனை மாற்றி,
தாம்பினின்பற்றி, தந்து, என் மனச்
   சினம் தணித்தி’ என்றான்.

கைகளைக் குவித்து வணங்கியவனாய்
மலை போல் திரண்ட வலிய
தோள்களை உடையவனாய்
பாம்பைப் போன்று அஞ்சாதவனாய்
சம்புமாலி என்னும் அரக்கன் வந்து நின்றான்.
'தாவிச் செல்லும் குதிரைகளோடு செல்,
அந்தக் குரங்கை வளைத்துப் பிடி,
அதன் வலிமையை அடக்கு,
கயிற்றினால் கட்டு, என்னிடம் கொண்டு வா,
என் கோபத்தை ஆற்று, போ'
என்று இராவணன் கூறினான். 



5569.
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு 
   அணி வகுத்து, அனிகம்தன்னை 
மூண்டு இரு புடையும் முன்னும் 
   முறை முறை முடுக ஏவி 
தூண்டினன் தானும் திண் தேர்;
   தோரணத்து இருந்த தோன்றல்,
வேண்டியது எதிர்ந்தான் என்ன, 
   வீங்கினான், விசயத் திண் தோள்.


சம்புமாலி தனது சேனையை வெவ்வேறு 
அணிகளாகப் பிரித்தான்
அனுமனது இரண்டு பக்கங்களிலும் எதிரிலும் 
விரைய ஆணையிட்டான்.
அவனும் தனது தேரில் ஏறிப் புறப்பட்டான்.
அனுமான் அவ்வமயம் தோரணத்தின் மீது 
அமர்ந்திருந்தான்.
அரக்கர் வருகையை எதிர்நோக்கியிருந்தான்.
தான் எண்ணியது வருகின்றது என்று 
தோள்கள் புடைக்க நின்றான்.



5573.
இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், 
   உயர்ந்தான் 
திரிந்தனன், புரிந்தனன், என நனி 
   தெரியார்;
விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர், 
   கலந்தார்,
பொருந்தினர், நெருங்கினர், களம் படப் 
   புடைத்தான்.

தோரண வளைவில் அமர்ந்திருந்தவன்
எழுந்தான், இறங்கினான். நிமிர்ந்தான்,
யார் என்ன என்றேதும் பார்க்காது 
பரவி நின்றவரையும், 
நெருங்கி நின்றவரையும்  
விலகிச் சென்றவரையும், ஒன்றுபடக் 
கலந்து நின்றவரையும்,
போர்க்களத்தில் வந்த அனைவரையும் 
அழிந்து போகும்படி, ஒரு சேர 
அடித்துக்கொன்றான் 


5596.
சலித்தான் ஐயன்; கையால் எய்யும் 
   சாரத்தை உகச் சாடி 
ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப,
   தேரினுள் புக்கு,
கலித்தான் சிலையைக் கையால் வாங்கி,
   கழுத்தினிடை இட்டு,
வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல் 
   தலை மண்ணிடை வீழ.

( அயராது போரிடும் சம்புமாலியால் )
சலித்துப் போனான் அனுமான்,
கையாலேயே அவன் எய்தும் அம்புகளைத் 
தடுத்தான்,
மாலை அணிந்த தேவர்கள் ஆர்ப்பரிக்க 
சம்புமாலியின் தேரினுள் பாய்ந்தான்.
வில்லைக் கையினாலேயே பற்றினான்.
தன் திறந்த வாயை மடித்து 
மலை போன்ற அவன் தலை மண்ணில் விழ,
அவ்வில்லை அவன் கழுத்தில் மாட்டி இழுத்தான்.



பாசப் படலம்

5717.
அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை 
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் 
எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.

(அனுமனோடு நடந்த போரில் 
சேனாபதிகள் தோற்று இறக்க, 
அக்ககுமரன் இறக்க)

அந்த சமயத்தில், 
அங்கு நடந்த போர்ச் செய்திகளைக் கேட்ட
ஆண்மை மிகுந்த, மேகநாதன்,
கண்களிலிருந்து கனல் தெறிக்கக் 
உலகம் யாவும் நடுங்கிட 
இந்திரனின் சேனையை அழித்து 
வெற்றி கொண்டவன்,   
கோபம் மிக்கவனானான்.

( தொடரும் )


Wednesday, March 25, 2020

கம்பராமாயணம் 75


பொழில் இறுத்த படலம்


5434.
‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்;
   இறுத்தால்,
அப் பெரிய பூசல்செவி சார்தலும்,
   அரக்கர்
வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்;
   வந்தால்,
துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல்,
   இது சூதால்.

'இந்தச் சோலையை விரைந்து அழிப்பேன்;
அழிக்கும் ஆரவாரம் அரக்கர் காதில் விழும்.
அவர்கள் உடனே கோபம் கொள்வர்,
என்னை எதிர்த்துப் போர் புரிவர்;
அவ்வமயம் வலிமை கொண்டு போரிடுவேன்,
அவர்களை அழிப்பேன், உயிரை எடுப்பேன்;
இதுவே நான் செய்யத்தக்கது'
என்று எண்ணினான், அனுமான்.



5458.
பறவைஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக்குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்துஎழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும்கைம்மிகப் போயதே.

பெருங்கூச்சலிட்டு பறவைகள் பறக்கும் ஓசையும்,
பலமரங்கள் ஓடிபட, இடி போன்று எழம் ஓசையும்,
அறத்தின் உருவான அனுமன் ஆரவாரித்து,
அதனால் உண்டான ஓசையும்
இவ்வுலக உருண்டை கடந்து வெளியேறிற்று.



5484.
அரி படுசீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின்
                                    வீழ்ந்தார்;
‘கரி படு திசையின் நீண்ட காவலாய் ! காவல்
                                  ஆற்றோம் !
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை
                                 கிழித்து வீச,
எரி படுதுகிலின், நொய்தின் இற்றது கடி கா’
                                  என்றார்.

கோபமான சிங்கம் போன்ற இராவணன் 
அருகில் சென்றான் அரண்மனைக் காவலன்.
பாதத்தில் பணிந்தான்,
'எல்லா திசைகளிலும் நீண்டு பரந்த 
ஆட்சியை உடையவனே' என்று புகழ்ந்தான்.
'சோலையைப் பாதுகாக்கத் தவறினோம்' 
என்று தொடர்ந்தான்.
'வலிய தோள்களை உடைய குரங்கு ஒன்று 
சோலையினிடையில் புகுந்தது,
மரங்களை ஒடித்து வீசியது, அதனால் 
அச்சோலை நெருப்புப்பட்ட ஆடை போல, 
விரைந்து அழிந்தது' என்றான்.



கிங்கரர் வதைப் படலம்


5490.
புல்லிய முறுவல் தோன்ற, 
   பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல்ஆற்றல் மாக்கள் 
   எண் இறந்தாரை ஏவி,
‘வல்லையின்அகலா வண்ணம், 
   வானையும் வழியை மாற்றி,
கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர்,
   கொணர்திர்’ என்றான்.


(இராவணன்) 
அற்பப் புன்னகை புரிந்தான், 
சிறிதளவு பொறாமையும் கொண்டான்,
அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்களை ஏவினான்.
'தப்பித்து செல்ல முடியாதவாறு, 
வான் வழியையும் தடுத்து,
அந்தக் குரங்கைக் கொல்லாது பிடித்து வருக' 
என்று கட்டளையிட்டான்.



5514.
பறை புரைவிழிகள் பறிந்தார்; 
   படியிடை நெடிது படிந்தார்;
பிறை புரை எயிறும் இழந்தார்;
   பிடரொடு தலைகள் பிளந்தார்;
குறை உயிர் சிதறநெரிந்தார்; 
   குடரொடு குருதி குழைந்தார்;
முறை முறை படைகள்எறிந்தார்;
   முடை உடல் மறிய முறிந்தார்.

(அனுமன் மரங்கொண்டு தாக்க) 
அடிபட்டு, தோற்பறை போன்ற 
அகன்ற கண்களை இழந்தனர், சிலர்.
தரையின் மீது நீள விழுந்தனர், சிலர்.
பிறை போன்று வளைந்த பற்களைப் 
பிரிந்தனர் சிலர்; 
பின் கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டு 
இறந்தனர் சிலர்.
உயிர் சிதறும் படி மிதிபட்டு அழிந்தனர் சிலர்.
குடலோடு இரத்தமும் வெளியேற அழிந்தனர் சிலர்.
மீதமிருந்தோர் வரிசையில் நின்று 
ஆயுதங்களை வீசினர்;  
முடை நாற்றமுள்ள உடம்புகள் 
முறிய மரித்தனர்.



5546.
‘சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர்; செருக்களத்து அஞ்சினார் அலர்;
புலம் தெரிபொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின், அவிந்தனர், குரங்கினால்’ என்றார்.

'சினம் மிக்குக் கிங்கரர்கள் வருந்தி ஓடவில்லை;
சண்டையிட முடியாது பயந்து ஓடவில்லை,
அறிவுக்குப் பொய் என்று புரிந்தும், 
போரில் அழிந்து ஒழிந்தனர், 
அந்தக் குரங்கினால்'
என்று காவலர் இராவணனிடம் கூறினார்.

( தொடரும் )

Tuesday, March 24, 2020

கம்பராமாயணம் 74




5361.
‘பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?

பொன் மலை போன்ற இலங்கை மாநகரம்
அரக்கர்களின் எலும்பு மலையாக வேணாமா ?
அவ்வாறு ஆகாது போனால், என் பிறப்பையும்
ஒழுக்கத்தையும், சிதைவு இல்லா கற்பையும்
உலக மக்கட்கு நான் எங்ஙனம் தெரிவிப்பேன்?


5366.
‘அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும்மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான்.

(விரும்பாத பெண்ணைத் தொட்டால் 
தலை சிதறும் என்ற ... )
அந்த சாபம் இராவணனுக்கு உண்டு என்று,
ஆண்மை நிறைந்த, 
ஒளிவீசும் முடியை அணிந்த,
உண்மையையே பேசும் வீடணனின் பெண் 
என் மேல் இரக்கம் கொண்டு, 
சொன்னது உண்டு,
என் நடுக்கம் குறைப்பதற்கென்று'
என்று சீதை அனுமனிடம் சொன்னாள்.



5373.
‘இன்னும்,ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னைநோக்கிப் பகர்ந்தது, நீதியோய் !
பின்னை ஆவிபிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை;இதனை மனக் கொள் நீ.


இன்னும் ஒரு மாதம் தான் நான் காத்திருப்பேன் 
நீதிமானே, உன்னிடம் சொல்லிவிட்டேன்;
(ஒரு மாதத்திற்குள் இராமன் வராவிட்டால்)
அதன்பின் என் ஆவியை பிடித்து வைத்திருக்க
முடியாதவளாவேன்; 
அந்த மன்னன் மேல் ஆணை; 
நினைவில் கொள்ள வேண்டும் நீ இதனை.
(என்று சொல்லி அனுப்பினாள் சீதை)



5421.
‘நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.

'முன்னம் ஒரு நாள், 
வானளவு வளர்ந்த சித்திரக்கூட மலையில்,
காகம் ஒன்று வந்தது, தன் கூரான நகத்தினால் 
என் உடலைக் கீறியது.
இராமன் கோபம் கொண்டான். 
கல்லின் பக்கத்தில் இருந்த புல்லை எடுத்தான்.
அதையே பிரம்மாஸ்த்திரமாய்க் கொண்டு 
எறிந்தான்.
இந்த செய்தியை மெல்லச் சொல்வாய்'
என்று சொல்லி அனுப்பினாள் சீதை. 



5422.
‘ “என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு 
     யார் பெயர் ஈகேன் ?
மன்ன !”என்றலும், “மாசு அறு 
     கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர்ஆக” என 
   அன்பினொடு, அந் நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-
   மெய்ம்மை தொடர்ந்தோய் !

'நான் அன்போடு வளர்த்து வரும் இக் கிளிக்கு 
என்ன பெயர் வைத்து அழைக்கட்டும், அரசே?'
என்று ஒருமுறை கேட்டேன்.
'குற்றமற்ற, என் தாய்,  கேகேயன் புதல்வி, 
கைகேயி பெயரையே வை' என்று சொன்னான்.
அந்த மெய்யான வார்த்தைகளைச் சொல்லிடு,
உண்மை நெறியில் இயங்கும் அனுமனே!'
என்றும் சொன்னாள்.




5427.
‘சூடையின்மணி கண் மணி ஒப்பது, 
   தொல் நாள்
ஆடையின்கண்இருந்தது, பேர் 
   அடையாளம்;
நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, 
   நல்லோய் !
கோடி’ என்றுகொடுத்தனள், 
   மெய்ப் புகழ் கொண்டாள். 
 
'சூடாமணி இது,
என்னுடைய கண்ணின் மணி போன்றது,
இத்தனை நாள், என் ஆடையிலேயே 
முடிந்து வைக்கப்பட்டிருந்தது.
பெரிய அடையாளமாய் நான் தருவது,
விரும்பி வந்தாய், என் உயிர் காத்தாய்.
இதனைக் கொள்வாய்' என்று கூறி 
அதனைத் தந்தாள்,
உண்மையான புகழைக் கொண்டாள்.


( தொடரும் )



Monday, March 23, 2020

கம்பராமாயணம் 73



5261.
‘புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள்,
                   பொதிந்து தூசில்
குன்றின் எம்மருங்கின் இட்ட அணிகலக்
                    குறியினாலே,
வென்றியான்அடியேன்தன்னை வேறு கொண்டு
                    இருந்து கூறி,
“தென் திசைச்சேறி” என்றான்; அவன் அருள்
                    சிதைவது ஆமோ ?

அற்பத் தொழில் செய்த இராவணன், உன்னை
அபகரித்துக் கொண்டு செல்கையில்
ஆபரணங்களை அவிழ்த்து எங்கள் மலையருகில்
ஆடையில் கட்டி வீசினாயே, நாயகன் இராமன்
அதையே அடையாளமாகக் கொண்டு,
அடியவன் எனை தனியே அழைத்து, சில 
அடையாளங்களை உரைத்து,
'அனும! நீ தென் திசை சென்று தேடு' என்றுரைத்தார்.
அவர் அருள் செய்து உரைத்தது பிழையாகுமோ ?



(அனுமன், இராமனின் குணாதிசயங்களையும் 
சீதையிடம் சொல்லச் சொன்னவைகளையும் 
ஒவ்வொன்றாய்ச் சொன்னான்)


5290.
‘ “மீட்டும் உரை வேண்டுவன இல்லை” 
   என, “மெய்ப் பேர்
தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; 
   செவ்வே,
நீட்டு இது” என,நேர்ந்தனன்’ எனா, 
   நெடிய கையால்,
காட்டினன் ஓர்ஆழி; அது வாள் 
   நுதலி கண்டாள்.


'இன்னும் நான் என்ன சொல்வது,
இராமன் நாமம் தீட்டியது, யாராலும் 
மீண்டும் செய்ய முடியாத அரியவேலைப்பாடு 
நிறைந்தது, உங்களிடம் தரச்சொல்லி, 
இராமன் என்னிடம் தந்தது'
என்று சொன்னான்,
தன் நீண்ட கையால் அந்த மோதிரத்தைக் 
காண்பித்தான்,
சீதை தன் கூரிய கண்களைத் திறந்து 
அதைக் கண்டாள்.



5299.
‘பாழிய பணைத் தோள் வீர ! 
   துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே ! யான் மறு 
   இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் 
   யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும், 
   இன்று என இருத்தி’ என்றாள். 

'பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய 
வீரனே!
துணையின்றித் தவித்த என் துயர் தீர்த்த 
கொடையாளனே, நீ வாழ்க !
நான் களங்கமற்ற மனதுடையவள் என்பது 
உண்மையெனின்,
ஒரு யுகத்தை ஒரு பகல் என்று கருதும் 
பதினான்கு உலகங்களும் அழியும் 
பிரளய காலத்திலும் 
இன்று போல் நீ என்றும் இருப்பாயாக'
என்று ஆசி வழங்கினாள்.





5326.
சுட்டினன், நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர்தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடுமுகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று,உருவொடு வளைந்த மூர்த்தியான்.


('நீ எப்படி கடல் கடந்தாய்?' என்று சீதை கேட்க)
தன் வடிவத்தை சீதைக்கு சுட்டிக் காட்டினான்,
கூப்பிய கைகளோடு நின்றான்,
தன் சுயஉருவை மாற்றினான்,
உயர்ந்த தோள்களோடு, ஆகாயத்துக்கும் 
மேலே வளர்ந்து நின்றான்.
அணுக முடியாத  அண்ட முகம் இடிக்கும் 
என்பதால் வளைந்து, 
தலையைத் தாழ்த்தி நின்றான்.



சூடாமணிப் படலம் 

5347.
‘பொன் திணி பொலங்கொடி ! 
   என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க;
   துயர் விட்டாய்,
இன் துயில்விளைக்க; ஓர் இமைப்பின், 
   இறை வைகும்
குன்றிடை, உனைக்கொடு குதிப்பென்;
   இடை கொள்ளேன்.

'நிறைந்த அழகுடைய தங்கக்கொடி போன்றவளே,
மென்மையான முடி படர்ந்த என் தோள்களில் 
அமைதியாக நீ அமர்ந்திருக்க,
துன்பத்தை மறக்க, நிம்மதியாய் உறங்க, 
உன்னைத் சுமந்து கொண்டு பறப்பேன்,
இராமன் தங்கியிருக்கும் மலையில் குதிப்பேன்,
நடுவில் தாமதம் செய்யேன்'
என்று அனுமன் கூறினான்.


5358.
‘அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என் ? பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை,நீயும் நினைத்தியோ ?

அதுமட்டுமன்றி இன்னொரு காரணமும் உண்டு.
(நீ  எனைத் தூக்கிக்கொண்டு சென்றால்)
இராமனின் வெற்றி வில் களங்கம் அடையும்.
சோற்றை ஏமாற்றி உண்ணும் நாய்களைப் போல,
எனை வஞ்சித்துக் கவர்ந்த அரக்கனிடமிருந்து 
நீ எனை, வஞ்சித்து கவர்ந்துபோக வேண்டும் என்று 
ஏன் எண்ணுகிறாய் ?'

என்று சொல்லி, அனுமன் கருத்தை மறுத்தாள் சீதை.

( தொடரும் )



Sunday, March 22, 2020

கம்பராமாயணம் 72




5222.
'வையம் தந்த நான்முகன் மைந்தன்,
   மகன் மைந்தன்
ஐயன், வேதம் ஆயிரம் வல்லான்,
   அறிவாளன்,
மெய் உன்பால் வைத்துளது அல்லால்,
   வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்?' என்றார்,
   சிலர் எல்லாம்.

உலகைப் படைத்த பிரம்மன் மகன் (புலத்தியன்)
மகனின் (விச்சிரவசு) மகன் இராவணன்,
அழகன், தன்னிகரற்றத் தலைவன்,
ஆயிரம் வேதங்களை அறிந்தவன்
அறிவு நிறைந்தவன், செய்யும் செயல்
யாவிலும் வெற்றி காண்பவன், உன்னிடம்
உண்மையான அன்பைக் கொண்டவன்,
இழி செயல்  வேறு ஏதும் செய்தானில்லை'
என்று சில அரக்கியர் சீதையிடம் சொன்னர்.


உருக்காட்டுப் படலம்


5241.
' 'பிறன் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது' என்று, உயிர்க்கு இறைவன் தீர்த்தனன்;
புறன் அலர், அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன்?'

'இன்னொருவர் வீட்டில் இருந்த பெண்ணை
ஏற்றுக்கொள்ளுதல், ஒழுக்கமற்ற செயல்'
என்று எண்ணியே கைவிட்டுவிட்டான்
என் தலைவன் இராமன், அதனால்
வெளியே அவன் பழிச்சொல் பெற்றிருப்பான்.
அறம் இல்லாத செயலைச் செய்துகொண்டு,
காலம் தாழ்த்தி இன்னும் வாழ்கிறேனே, நான் எதை
ஆதாரமாகக் கொண்டு உயிரை வைத்திருப்பேன் ?'
என்று சீதை எண்ணத்தொடங்கினாள்.



5249.
கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா 
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான்.

அனுமான் சீதையைக் கண்டான்,
அவள் எண்ணத்தையும் அறிந்தான், அதிர்ந்தான்,
அருகில் சென்று நிற்கப் பயந்தான்,
'தேவர் தலைவன் இராமன் திருவருள் பெற்றத் தூதுவன்'
என்று சொல்லிக்கொண்டே,
சிவந்த வாய் உடைய, மயில் போன்ற சீதையின் 
எதிரில் நின்றான், வணங்கினான்.



5255.
என நினைத்து, எய்த நோக்கி,
   'இரங்கும் என் உள்ளம்; கள்ளம் 
மனன் அகத்து உடையர், ஆக 
   வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் 
   நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்' என்னா,
   'வீர! நீ யாவன்?' என்றாள்.

(அரக்கனோ, தேவனோ, 
என் தலைவன் நாமம் சொன்னானே?)
என்று பலவாறு எண்ணினாள்,
வந்தவனை நோக்கினாள்,
'இவனால் என் மனம் அமைதியடைகிறது,
இவன் கபடம் இல்லாதவன், வஞ்சகம் 
செய்பவனில்லை என்றே தெரிகிறது,
மனம் வருந்தி, கண்ணீர் நிலத்தில் சிந்த 
பேசுகின்றான், நம்பத்தகுந்தவனே'
என்று எண்ணினாள்.
'வீரனே, நீ யார்?' என்று வினவினாள்.


5258.
'அன்னவன்தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் 
   ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் 
   பிடித்தான் எங்கள் 
மன்னவன்தனக்கு; நாயேன், மந்திரத்து 
   உள்ளேன், வானின் 
நல் நெடுங் காலின் மைந்தன், நாமம் 
   அனுமன் என்பேன்.


வாலியினை, உன் தலைவன் அம்பு ஒன்றை 
எய்தி உயிரை நீக்கினான்.
அதன்பின், வாலியின் தம்பி சுக்ரீவனுக்கு 
அரச பதவி வழங்கினான்.
இராமனைத் தன் தோழனாகவே  
பற்றிக்கொண்டான் எங்கள் அரசன் சுக்ரீவன்.
நான் அவன் ஆலோசனைச் சபையில் இருப்பவன்,
வாயு தேவனின் புதல்வன்,
அனுமன் என்றே அழைக்கப்படுபவன்'
என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.



( தொடரும் )


Saturday, March 21, 2020

கம்பராமாயணம் 71



5169.
அவ் இடத்து அருகு எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்து எனக்கு இன் அருள் ஈவது?
நொவ் இடைக் குயிலே! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான்.

(சீதை இருக்கும்)
அந்த இடத்துக்கு அருகில் வந்தான் அரக்கன்.
'எப்பொழுது எனக்கு அருள் செய்யப்போகிறாய்,
சிறிய இடைபெற்ற குயிலே' என்றான்.
கொடிய நஞ்சினை அமுதம் என்று எண்ணி
வேண்டினான்.



5176.
'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய;
வேண்டு நாள் வெறிதே விளிந்தால், இனி 
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ?'

இவ்வுலகத்தில் ஆயுளும் இளமையும் 
திரும்ப வராது,
அழிந்து அழிந்து வேறு இயல்பைப் பெறும் 
தன்மை உடையது.
நான் விரும்பும் உன் இளமையை நீ 
வீணாக அழிக்கிறாய் இப்போது,
எனில் வாழ்க்கை நடத்துவது எப்போது ?
பருவம் கடந்து துன்பத்தால் உழன்று 
வருந்தி அழிவாயே, அப்போது ?
என்று இரைந்தான்.


5189.
'பெற்றுடை வாளும் நாளும்,
   பிறந்துடை உரனும், பின்னும் 
மற்றுடை எவையும் தந்த மலர் 
   அயன் முதலோர் வார்த்தை 
வில் தொடை இராமன் கோத்து 
   விடுதலும், விலக்குண்டு எல்லாம் 
இற்று இடைந்து இருதல் மெய்யே;
   விளக்கின் முன் இருள் உண்டாமோ?

நீ பெற்றுள்ள வாளும், ஆயுட்காலமும் 
பிறப்பினால் அமைந்த வலிமையையும்,
வேறு பல சக்திகளும், மலரின் மேல் 
அமர்ந்திருக்கும் பிரமன் தந்த வரங்களும், 
இராமன் வில்லில் அம்பைத் தொடுத்து விட,
எல்லாம் விலகும்.
உன் அழிவு உண்மையாகும்.
விளக்கின் முன் இருள் எங்ஙனம் நிற்கும்?
என்று பதில் உரைத்தாள் சீதா.


5202.
'உன்னையும் கேட்டு, மற்று உன் ஊற்றமும் 
   உடைய நாளும் 
பின்னை இவ் அரக்கர் சேனைப் பெருமையும் 
   முனிவர் பேணிச் 
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் 
   தோளும் தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை 
   நீ சிந்தியாயோ?


'உன்னைப் பற்றிச் சொன்னர், மற்றும் 
உன் வலிமை பற்றியும் சொன்னர்,
உன் ஆயுள் நீளம் குறித்தும் சொன்னர்,
பின் உன் அரக்கச் சேனை பற்றியும் 
விரிவாய்ச் சொன்னர், பல முனிவர்கள்.
இவை எல்லாம் கேட்டறிந்த பின்னர்,
உன் தங்கை மூக்கையும் 
உன் தம்பியர் தோள், கால் ஆகியவற்றை
சிதைத்த செயலை சிந்தித்து 
நீ செயல்படமாட்டாயோ ?' என்று கேட்டாள்.



5219.
'அஞ்சுவித்தானும் ஒன்றால் 
   அறிவுறுத் தேற்றியானும் 
வஞ்சியின் செவ்வியாளை வசித்து
   என்பால் வருவீர்; அன்றேல் 
நஞ்சு உமக்கு ஆவென்' என்னா 
   நகை இலா முகத்து பேழ் வாய்,
வெஞ்சினத்து அரக்கிமார்க்கு,
   வேறு வேறு உணர்த்திப் போனான்.


'பயமுறுத்துங்கள், இல்லை 
அறிவுறுத்துங்கள்,
வஞ்சிக்கொடி போன்றவளை 
மயக்கி என்னிடம்  அழைத்து வாருங்கள்,
அவ்வாறு செய்யாவிடில் உங்கட்கு 
நானே விடமாவேன், மறவாதீர்கள்' என்று 
சிரிப்பறியாத முகமுடைய
பெரிய வாயுடைய 
கொடுங்கோபம் நிறைந்த 
அரக்கியரிடம் தனித்தனியே 
கட்டளையிட்டு அங்கிருந்து அகன்றான்.


( தொடரும் )

Friday, March 20, 2020

கம்பராமாயணம் 70




5080.
'கண்டிலன்கொலாம் இளவலும்?
   கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்?
   உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம் ?'
   எனக் குழையா,
புண் திறந்ததில் எரி
   நுழைந்தாலெனப் புகைவாள்.

(மானின் பின்னே சென்ற இராமன்
திரும்பாததுபோல்)
'தம்பியையும் காணவில்லையோ ?
ஆரவாரிக்கும் கடலின் நடுவில்
இலங்கை இருப்பதை அறியவில்லையோ ?
எல்லா உலகையும் வருத்தும் இராவணன்
என்னை அபகரித்துக்கொண்டு வந்ததை
அறியவில்லையோ ?'
என்று எண்ணினாள், மனம் வருந்தினாள்,
திறந்த புண்ணில் தீ நுழைந்தது போல்
துடித்தாள்.


 5098.
இருந்தனள், திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய, மற்று இருந்த தீவினை
அருந் திறல் அரக்கியர், அல்லும் நள் உறப்
பொருந்தலும், துயில் நறைக் களி பொருந்தினார்.

சீதை இருந்த இடத்தில் இருந்தாள்,
திரிசடை என்னும் திருநாமம் கொண்டவள்,
இனிய சொற்களையே பேசினாள்,
மற்ற, சுற்றியிருந்த பேராற்றல் நிறைந்த,
கொடிய அரக்கியர் அனைவரும்,
இரவு நடுசாமத்தை எட்டிய பொழுதில்,
கள்ளின் மயக்கத்தில்,
உறக்கத்தில் ஐக்கியமாக,
(திரிசடை மட்டும்
சீதையின் மன வருத்தத்தை தணித்தாள்)



5113.
'திரியுமால், இலங்கையும் மதிலும்; திக்கு எலாம் 
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும் 
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின 
விரியுமால்; விளக்கினை விழுங்குமால், இருள்;

(திரிசடை தான் கண்ட கனவை, 
சீதைக்கு உரைத்தல்)

இலங்கை மாநகரும் மதில்களும் சுழன்றன,
எல்லா திசைகளிலும் தீ படர்ந்தன,
கந்தர்வ நகரம் எல்லா இடத்திலும்^ காட்சி தந்தன,
மங்கள கலசங்கள் விழுந்து சிதைந்தன,
ஒளியை விழுங்கும் இருள் எல்லாவிடத்திலும் படர்ந்தன;

^ - empty sky; bad sign to the empire;





5122.
இவ் இடை, அண்ணல் அவ் இராமன் ஏவிய 
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்,
அவ் இடை எய்தினன், அரிதின் நோக்குவான்,
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான்.


இதற்கிடையில், இதே சமயத்தில் 
இராமனால் அனுப்பப்பட்டவன்,
ஆற்றல் மிக்கக் காளை போன்றவன்,
போர் வீரம் நிறைந்தவன், தூதுவன்,
சீதை இருந்த இடத்தை அடைந்தான்.
அடர்ந்த சோலையினிடையில் 
கூர்ந்து கவனித்தான்.
வருந்தும் இடையை உடைய சீதை,
அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.


5135.
'வீடினது அன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென் கண்டனென்; தேவியே !' எனா 
ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து 
ஓடினன்; உலாவினன்; உவகைத் தேன் உண்டான்.

'தருமம் தோற்காது, நானும் தோற்கமாட்டேன்;
தேடிக் கண்டுகொண்டேன், தேவியை' 
என்று தன்னுள் கூறினான்.
ஆடினான், பாடினான்,
இங்கும் அங்கும் பாய்ந்து ஓடி உலாவினான் 
மகிழ்ச்சியில் தேன் குடித்தான் - அனுமான்.

( தொடரும் )

Thursday, March 19, 2020

கம்பராமாயணம் 69




5057.
இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம்
   என்னோடும் முடிந்திடுக;
கற்றைப் பூங் குழலாளைச்
   சிறைவைத்த கண்டகனை
முற்றாய் போர் முடித்தது ஒரு
   குரங்கு என்றால், முனைவீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக்
   குறைவு உண்டாம்! எனக் குறைந்தான்.


இன்றே இவனோடு போர் புரியவேண்டும்
என்ற கோபம் என்னுள்ளேயே  அடங்கட்டும்.
மலரணிந்த அடர்ந்த கூந்தலையுடைய
சீதையை சிறைபிடித்த, முள் போன்றவனை
ஒரு குரங்கு சண்டையில் வென்றது
என்று சொல்லப்பட்டால்,
இராமனின் வில்லிற்கு களங்கம் உண்டாகும்
என்பதனாலே, தன் கோபத்தைக்
கட்டுப்படுத்திக் கொண்டான், அனுமான்.



5068.
எள் உறையும் ஒழியாமல் 
   யாண்டையுளும் உளனாய்த்தான் 
உள்உறையும் ஒருவனைப் போல் 
   எம்மருங்கும் உலாவுவான் 
புள் உறையும் மானத்தை 
   உறநோக்கி அயல் போவான் 
கள் உறையும் மலர்ச்சோலை 
   அயல் ஒன்று கண்ணுற்றான்.


எள் கிடக்கும் சிற்றிடத்தையும் விடாது,
ஆராய்ந்தான் அனுமான்.
தன் இதயத்தில் இருக்கும் இராமனைப் போல் 
எல்லா இடத்திலும் உலாவித் தேடினான்.
பறவைகள் சுற்றித்திரியும் வானத்தைப் 
பார்த்தபடி, அரண்மனையிலிருந்து வெளியேறினான்.
தேன் நிறம்பிய மலர்கள் பூத்த 
சோலை ஒன்றை அருகில் கண்டான்.


காட்சிப் படலம் 





5071.
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென் மருங்குபோல், வேறு உலா அங்கமும் மெலிந்தாள்.

பருத்த இடை உடைய,
கொடிய அரக்கியர் துன்புறுத்த  அந்த இடத்தில்,
கல்லின் இடையில் எக்காலத்திலும் ஒரு துளி கூட
நீர் இல்லாது வளர்ந்த மூலிகைச் செடி போல்,
உடலும் உள்ளமும் வாடியவளாய்,
மெலிந்த இடையோடு, உடல் மெலிந்த சீதை,
அங்கு, அந்த இடத்தில் இருந்தாள்.



5073.
விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் 
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல் 
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.

எழுந்தாள், பூமியில் விழுந்தாள்,
தேம்பித் தேம்பி அழுதாள்,
உடல் சூடாவதை உணர்ந்தாள்,
அஞ்சினாள், ஏங்கினாள், வருந்தினாள்,
இராமனை மனதுள் துதித்தாள், தளர்ந்தாள்,
உடல் நடுக்கம் கொண்டாள்,
துன்பத்தால் வருந்தி பெருமூச்சு கொண்டாள்,
புலம்பினாள், இதைத் தவிர 
வேறெதையும் அறியாதவளாய் இருந்தாள்.


5077.
'அரிது போகவோ, விதி வலி கடத்தல்?' என்று அஞ்சி 
'பரிதிவானவன் குலத்தையும், பழியையும் பாரா,
சுருதி நாயகன், வரும் வரும்' என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அழைக்கின்ற கண்ணாள்.


விதி வலிமையைக் கடந்து, சிறை தப்பிப் செல்லுதல் 
முடியாதது என்று அஞ்சினாள்.
சூரிய வம்சத்தின் குலத்தைக் காக்க,
தனக்கு நேர்ந்த நேர்ந்த பழியை நீக்க, 
வேதத்தின் நாயகன் வருவான் என்று நம்பினாள்.
அவன் வருகையை எதிர்பார்த்து, எல்லா திசைகளையும் 
துழாவும் கண்களையுடையவளானாள்.

( தொடரும் )


Wednesday, March 18, 2020

கம்பராமாயணம் 68



4935.
ஆத்துறு சாலை தோறும்,
   ஆனையின் கூடம் தோறும்,
மாத்துறு மாடம் தோறும்,
   வாசியின் பந்தி தோறும்,
காத்துறு சோலை தோறும்,
   கருங்கடல் கடந்த தாளன்,
பூத்தொறும் வாவிச் செல்லும்
   பொறிவரி வண்டின் போனான்.

பசுக்கள் கட்டப்பட்டிருந்த இடங்களைப்
பார்த்தான்.
யானைக் கொட்டாரங்களைக் கண்டபடிக் 
கடந்தான்.
பலவகை விலங்குகளின் இடங்களை
வியந்து நோக்கியபடி நகர்ந்தான்.
குதிரைச் சாலைகள் வழியே,
பாதுகாப்பு நிறைந்த சோலைகளை ரசித்தபடி
கடலையே தாண்டிய அனுமான்,
பூக்கள் தோறும் பறந்துத் திரியும்
புள்ளிகளும் வரிகளும் கொண்ட
வண்டினைப் போலச் சென்றான்.



(இலங்கையில், ஒவ்வொரு இடமாக 
பார்த்துக்கொண்டே வந்த அனுமான்,
கும்பகர்ணனின் அரண்மனையை அடைந்தான்)

4965.
குறுகி, நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும் குறித்த 
இறுகு திண்புயம் இருபதும், 'இவற்குஇலை' என்னா,
மறுகி ஏறியமுனிவு எனும் வடவைவெங் கனலை 
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால், அவித்தான்.

அரக்கனை நெருங்கி நோட்டம் விட்டான்.
இராவணனுக்கு அடையாளமான 
பத்துத் தலையும், இருபது தோள்களும் 
இவனுக்கு இல்லை என்பதைக் கண்டு கொண்டான்.
உள்ளம் கலங்க, கோபத் தீ வளர,
(அக் கோபத்தால் வந்த காரியம் 
கெட்டுவிடும் என்பதால்)
அறிவை நீராக்கி கோபத்தீயை அணைத்தான்.


4971.
உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான் 
'குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான் 
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான் 
பொற்றை மாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான்.

(அடுத்து, வீடணன் வாயிலை அடைந்தான்)
இவன் யாராயிருக்கும் என்று உற்று நோக்கினான்.
உறக்கத்தில் இருப்பவன் உள்ளுணர்வை ஆராய்ந்தான்.
'இவன் குற்றமற்றவன்' என்று அறிந்துகொண்டான்.
பகையுணர்ச்சி கொள்ளாது, அனுமான், 
வேறொரு வழியில் தன் வேலையைத் தொடர்ந்தான்.
மலை போன்ற மாடங்கள் பலவற்றை 
ஒரு நொடிப்பொழுதில் புகுந்து வெளிப்பட்டான்.



4975.
வளையும் வாள்எயிற்று அரக்கனோ?
   கணிச்சியான் மகனோ?
அளையில் வாள்அரி அனையவன் 
   யாவனோ? அறிவேன்;
இளைய வீரனும், ஏந்தலும், 
   இருவரும் பலநாள் 
உளைய உள்ள போர் இவனோடும் 
   உளது என உணர்ந்தான்.


வளைந்த பற்களுடைய அரக்க இனத்தவனோ?
மழுப்படை ஏந்திய சிவன் மகன் முருகனோ ?
குகையில் உறங்கும் சிங்கம் போன்று இருக்கானே, 
இவன் எவனோ ? தெரியவில்லையே;
இலக்குவனும், இராமனும், மன உளைச்சலடைய 
பல நாள் போர் புரியக் கூடியவன் இவன்,
என்று மனதுள் குறித்துக்கொண்டான்.



5040.
நூல் பெருங்கடல் நுணங்கிய கேள்வியன் 
   நோக்கினன்; மறம் கூரும் 
வேல் பெருங்கடல் புடைபரந்து ஈண்டிய 
   வெள்ளிடை வியன்கோயில் 
பால் பெருங்கடல் பல்மணிப் பல்தலைப் 
   பாப்புடைப் படர்வேலை 
மால் பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் 
   வனப்பினன் துயில்வானை.


பல நூல்களைப் படித்தும், நுட்பமான  
கேள்வி அறிவும் நிறைந்த அனுமான்,
பெரிய அரண்மனையில் 
வீரம் நிறைந்த, கையில் வேலேந்திய  
கடல் போன்ற வீரர்களின் காவலினிடையில்,
பாற்கடலில், 
பாம்பு மெத்தையில் 
பள்ளி கொண்ட திருமாலைப் போன்று,
அழகான இராவணன் உறங்குவதைப் பார்த்தான். 



( தொடரும் )






Tuesday, March 17, 2020

கம்பராமாயணம் 67




4899.
மடங்கல் அரியேறும், மதமால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி, நனிமூதூர்
அடங்குஅரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந்திசையின் வாய்அனைய வாயில் எதிர்கண்டான்.

ஆண் சிங்கமும், மதங்கொண்ட யானையும்
வெட்கமடையும்படி
தனி ஆளாய் பழைய இலங்கையினுள்
பாதம் வைத்தான் அனுமான்.
பிறருக்கு அடங்கா சேனையையும்,
சூலாயுதத்தையும் ஏந்தி,
யமனின் கட்டளைகளை முடிக்கும் தென் திசையின்
கொடுமையான வாய் போன்ற
நுழைவாயிலைக் கண்ணெதிரில் கண்டான்.





4915.
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகழ்மூதூர்
நல்லாள்; அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்;
'நில்லாய்! நில்லாய்! என்று உரை நேரா நினையாமுன்
வல்லே சென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான்.


எல்லா உயிர்க்கூட்டங்களும் பயந்து நடுங்கிட,
இலங்கையின் பழைய நகரைக் காவல் காப்பவள்,
(இலங்கை மாதேவி என்றழைக்கப்படுபவள்)
பெரிய கண்களை உடையவள்,
அனுமான் உள்நுழைவதைக் கண்டாள்.
'நில்! நில்!' என்று இரைந்தாள்.
அனுமானின் முன் சென்று நின்றாள்.
அனுமனும் அவளைக் கண்டான், வரவேற்றான்.



('ஓடிப்போ' என்று மிரட்டியும், 
விலகாது நிற்கிறானே, 'இவன் யாரோ ?' 
என்று எண்ணத் தொடங்கினாள் இலங்கா தேவி)

4921.
கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல் கொண்டாள்;
'வெல்வாய், நீயேல் வேறி' என, தன் விழிதோறும் 
வல்வாய் தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில் 
'செல்வாய்' என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்.

கொல்வோம் இவனை, இல்லையேல் 
இலங்கைக்கு இடர் வரும் என்றுணர்ந்தாள்.
'முடிந்தால் எனை வெற்றி கொள்' என்று சொன்னாள்.
கண்கள் மற்றும் வாயிலிருந்து கொடிய நெருப்பு 
எழுப்பினாள்.
சந்திரன் ஒளிரும் வானின் வழியே செல்வாய் 
என்று சொல்லி, 
தன் சூலாயுதத்தை அனுமன் மேல் வீசினாள்.



(அனுமன் அவளை எதிர்கொண்டான்,
தன் கையால் ஒரு அடி அடித்தான்,
மலைபோல் பூமியில் சரிந்தாள்)


4929.
அன்னதே முடிந்தது ஐய!
   'அறம் வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈது இயம்ப வேண்டும் 
   தகையதோ? இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம் முற்றும்,
   உனக்கு முற்றாதது உண்டோ?
பொன்நகர் புகுதி என்னாப் புகழ்ந்து 
   அவள் இறைஞ்சிப் போனாள்.

ஐயனே, பிரம்மன் முன்னர் சொன்னதுபோலவே 
நடந்தது,
அறம் வெல்லுது, பாவம் தோற்குது,
இதை நான் சொல்லவும் வேண்டுமா ?
இனி நீ எண்ணும் எல்லாம் ஈடேறும், 
உன்னால் முடியாதது என்று 
எதுவும் இல்லாது போகும்,
என்று சொல்லிப் புகழ்ந்தாள், 
இலங்கையினுள் செல் என்றும் சொன்னாள்,
அனுமானை வணங்கித் தன் வழி சென்றாள்.


( தொடரும் )

Monday, March 16, 2020

கம்பராமாயணம் 66



4807.
தீயே எனல்ஆய பசிப்பிணி
   தீர்த்தல் செய்தாய்
ஆயே விரைவிற் றெனை அண்மினை
   வண்மை யாள!
நீயே இனி வந்துஎன் நிணம்கொள்
   பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழிமற்றிலை
   வானின் என்றாள்.

'கொடைப்பண்புடையோனே,
பசி நெருப்பு நிறைந்திருக்கும்
என் வயிற்றை நிரப்பிடி;
விரைவாய் என்னருகில் வந்திடு;
நீயாகவே, கூராயிருக்கும்
என் பற்களினிடையில் நுழைந்திடு;
வானில் வேறு வழியில்லை என்பதை
உணர்ந்திடு' என்றாள்.







4811.
நீண்டான் உடனே சுருங்கா
   நிமிர்வாள் வயிற்றின்
ஊண்தான் என உற்று ஓர் உயிர்ப்பு
   உயிராத முன்னர்
மீண்டான் அது கண்டனர் விண்உறை
   வோர்கள் எம்மை
ஆண்டான் வலன்என்றுஅலர் தூஉய் நெடிது
   ஆசி சொன்னார்.


உயர்ந்து வளர்ந்து நின்றான் அனுமான்.
(தன் வாயை அகன்று திறந்தாள் சுரசை)
சடக்கென தன்னைச் சுருக்கிக் கொண்டான்.
ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில்
உணவு போன்று விரைந்தான்.
அவள் ஒரு மூச்சு விடும்முன் வெளிப்பட்டான்.
தேவர்கள் அனுமனின் சாதுரியத்தை கண்டனர்.
உள்ளம் மகிழ்ந்தனர்.
நம்மைக் காக்க வந்தவன் வல்லமை உடையவன்
என்று புரிந்துகொண்டனர்.
மலர் தூவி ஆசி வழங்கினர்.



4829.
தகம்புடைக் கனக நாஞ்சில் 
   கடிமதில் தணித்து நோக்கா 
அசும்புடைப் பிரசத்  தெய்வக் 
   கற்பக நாட்டை அண்மி 
விசும்பிடைச் செல்லும் வீரன் 
   விலங்கி வேறு இலங்கை மூதூர்ப் 
பசும்சுடர்ச் சோலைத்து ஆங்கோர் 
   பவளமால் வரையில் பாய்ந்தான்.
 
ஆகாயமார்க்கமாய்ச் செல்லும் அனுமன்,
வேகம் குறைத்து,
இலங்கையின் பழைய ஊரான,
குடம்குடமாய்த் தேன் கசியும்,
தேவலோகத்தை எட்டும் அளவு உயர்ந்து,
கற்பக மரங்கள் வளர்ந்த,
பசுமை நிறைந்த சோலையின்,
ஒரு பக்கத்தில் அமைந்த  
பவளமலையில் குதித்தான்.



ஊர் தேடு படலம் 


4835.
பொன்கொண்டு இழைத்த? 
   மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? 
   வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய 
   எனத்தெளிவு இலாத 
வன்கொண்டல் விட்டுமதி 
   முட்டுவன மாடம்.

பொன்னால் செய்யப்பட்டனவா ? 
மாணிக்கங்களால் மூடப்பட்டனவோ ?
மின்னலைக் கொண்டு செய்திருப்பார்களோ ?
வெயிலால் முலாம் பூசியிருப்பார்களோ ?
எதைக் கொண்டு இதை இப்படி செய்திருப்பார்கள் 
என்ற முடிவுக்கு வர முடியாது, உயர்ந்து  நிற்கும்  
மேகமண்டலங்களைப் பின்னே தள்ளிவிட்டு
நிலவை முட்டும் மாடிவீடுகள்' 
என்று அனுமான்  எண்ணத் தொடங்கினான்.


4869.
காயத்தால் பெரியர்; வீரம் 
   கணக்கு இலர்; உலகம் கல்லும் 
ஆயத்தார்; வரத்தின் தன்மை 
   அளவற்றார்; அறிதல் தேற்றா 
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் 
   வரம்பும்உண் டாமோ? மற்று ஓர் 
தேயத்தார் தேயம் சேறல் 
   தெருவிலோர் தெருவில் சேறல்.


பெரிய உடம்பு கொண்டவர்கள்,
அளக்கமுடியாத வீரம் உள்ளவர்கள்,
உலகத்தைத் தோண்டியெடுக்கும் 
வல்லமை உள்ள சேனை உடையவர்கள்,
அவர் பெற்ற வரத்தின் தன்மை 
அளக்க முடியாதவர்கள்.
பிறரால் அறிந்துகொள்ள முடியாதவர்கள்;
மாயை நிறைந்தவர்கள்,
இப்படிப்பட்டவர்கட்கு எல்லை என்று 
ஏதேனும் இருக்கமுடியுமா?
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு 
செல்வது போன்றது, 
அவர் வாழும் ஒரு தெருவிலிருந்து 
அடுத்த தெருவிற்குப் போவது.


( தொடரும் )



Sunday, March 15, 2020

கம்பராமாயணம் 65


சுந்தர காண்டம்


கடல் தாவு படலம்


4756.
வால்விசைத்து எடுத்து, வன்தாள்
   மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத் துணைகள் பொங்கக்
   கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால்விசைத் தடக்கை நீட்டி
   கண்புலம் கதுவா வண்ணம்
மேல்விசைத்து எழுந்தான், உச்சி
   விரிஞ்சன்நாடு உறிஞ்ச - வீரன்.


வாலை வேகமாக உயர்த்தினான்.
வலிமையான திருவடிகளை மடக்கினான்.
மார்பைச் சுருக்கினான்.
பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற
இரண்டு புஜங்கள் பூரிக்க நின்றான்.
கழுத்தை ஒடுக்கி,
தூண்டும் காற்றைப் போன்று கைகளை நீட்டி,
கண் பார்வை காண முடியாதபடி,
தலை பிரம்ம லோகத்தை உராயுமாறு
விண்ணில்  வேகமாக எழும்பினான், வீர அனுமான்.



4765.
விண்ணவர் ஏத்த, வேத
   முனிவரர் வியந்து வாழ்த்த,
மன்னவர் இறைஞ்ச செல்லும்
   மாருதி மரம்உள் கூர
'அண்ணல் வாள்அரக்கன் தன்னை
   அமுக்குவென்' இன்னம் என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும்
   கைலைஅம் கிரியும் ஒத்தான்.


தேவர்கள் போற்றினர்,
வேதமறிந்த  முனிவர்கள் வியந்து வாழ்த்தினர்.
மண்ணுலகத்தவர் வணங்கினர்,
அனுமன், உள்ளத்தே கோபத்தோடு
'கொடிய அரக்கன் தன்னை இன்னொருமுறை
அழுத்துவேன்' என்று எண்ணியபடி
சிவபெருமான் இல்லாது தனியே பறக்கும்
கைலை மலையை ஒத்திருந்தான்.



4795.
அன்னான் அருங்காதலன் ஆதலின் 
   அன்பு தூண்ட 
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு 
   உரித்தாயது இன்மை 
பொன்னார் சிகரத்து இறை ஆறினை 
   போதி என்னா 
உன்னா உயர்ந்தேன் - உயர்விற்கும் 
   உயர்ந்த தோளாய்!

(வாயுதேவனால் முன்னம் ஒருமுறை காக்கப்பட்ட 
மைந்நாகமலை ...)
'உயர்ந்த அனைத்தையும் விட உயர்ந்தவனே,
வாயுதேவனின் மைந்தனே,
அவன்பால் நான் அன்பு கொண்டிருப்பதால்,
என்னால் உனக்கு செய்யக்கூடிய உபகாரம் 
வேறு ஒன்றும் இல்லை எனினும் 
பொன் போன்ற சிகரத்தில் 
கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்,
அதன்பொருட்டே நான் 
நீரிலிருந்து மேலெழும்பி வந்தது;
என்றுரைத்தான்.



4801.
ஈண்டே கடிது ஏகி இலங்கை 
   விலங்கள் எய்தி 
ஆண்டான் அடிமைத் தொழில்  
   ஆற்றலின் ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வென் நல் விருந்தென 
   வேண்டி மெய்ம்மை 
பூண்டானவன் கட்புலம் பிற்பட 
   முன்பு போனான்.

இப்பொழுதே வேகமாகச் செல்வேன்.
இலங்கைத் தீவை விரைவாய் அடைவேன்.
இராமபிரான் இட்ட பணியை 
இனிதே முடிக்கும் ஆற்றல் கொண்டேன்.
திரும்ப வந்தபிற்பாடு, நீ 
தரும் விருந்தை ஏற்பேன் என்றான்,
மைநாக மலையின் பார்வை பின் தொடர 
முன்னே சென்றான், உண்மையையே 
ஆபரணமாய் அணிந்திருந்த அனுமான்.




4805.
மூன்றுற்ற தலத்திடை முற்றிய 
   துன்பம் வீப்பான் 
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை 
   உணர்த்து நீ என்று 
ஆன்றுற்ற வானோர் குறை நேர 
   அரக்கி ஆகித் 
தோன்றுற்று நின்றாள் சுரசைப் பெயர்ச் 
   சிந்தை தூயாள்.

மூன்று உலகத்தின் துயர் யாவும் துடைப்பேன் 
என்று ஏற்றுக்கொண்டு வந்துள்ள அனுமான்
வீரம் கண்டு எங்கட்கு உணர்த்து என்று 
தேவர்கள் வேண்ட,
சுரசை என்ற பெயர் கொண்டவள்,
நல்லவள்,
அரக்கி வடிவில் நின்றாள் 
அனுமான் வழி மறித்தாள்.
 
( தொடரும் )


Saturday, March 14, 2020

கம்பராமாயணம் 64




சம்பாதிப் படலம்

4649.
'விரிந்து, நீர், எண்
   திசை மேவி,நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து'
   என்று போக்கிய
அருந் துணைக் கவிகள்
   ஆம் அளவு இல்சேனையும்
பெருந் திரைக் கடல்
   எனப் பெரிது கூடிற்றே.

'நீங்களனைவரும் பிரிந்து
எட்டு திக்குகளுக்கும் செல்லுங்கள்.
செல்லுமிடங்களிலெல்லாம் சீதையைத் தேடுங்கள்.
பின்னர் மகேந்திர மலைக்கு வந்து சேருங்கள்'
என்று முன்னம் அங்கதன் உரைத்தது போல,
இன்னொரு கடல் போன்ற சேனைகள் யாவும்
பெருந்திரளாக வந்து சேர்ந்தனர்
(அனுமான் இருந்த இடத்திற்கு )



4669.
என்றலும் கேட்டனன் எருவை
   வேந்தன், தன்
பின் துணை ஆகிய
   பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினான் என்ற சொல்;
   புலம்பும் நெஞ்சினன்;
குன்று என நடந்து
   அவர்க் குறுகல் மேயினான.

(சீதையைத் தேடுவோம், கிட்டாதுபோயின்
சடாயு போல் உயிர் துறப்போம்)
என்று சொன்னான் அனுமான்.
அச் சொற்களைக் கேட்டுத் துடித்தான்
கழுகின் அரசன், சம்பாதி என்பான்.
எனக்குப் பின் பிறந்தவன்,
சத்தியத்தைத் தவறாது கடைபிடிப்பவன்
இறந்தான் என்ற செய்தி கேட்டுப் புலம்பினான்.
மலை போல் நடந்து வந்து
அந்த வானர வீரர்களை அணுகினான்.



4707.
'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி 
   கடல் இலங்கை; அவ் ஊர் 
பாச வெங்கரத்துக் கூற்றும் 
   கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் 
   நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள் 
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் 
   பரிசு இயைவது?' என்றான்.

(சடாயு பற்றி அனுமான் உரைத்தான்.
சம்பாதி தன் வரலாறை உரைத்தான்.
சீதையைத் தேடி வந்தது பற்றி 
அனுமான் உரைத்தான்.
இராவணன் அவளைக் கவர்ந்து சென்றதைத் 
தான் கண்டதாய் சம்பாதி உரைத்தான்)

இங்கிருந்து நூறு யோசனை^ தூரம் இருக்கும்.
இலங்கை, ஒலி எழும் கடலால் சூழப்பட்டிருக்கும்.
கொடிய பாசக்கயிறு கொண்டுள்ள யமனுக்கும் 
அந்தப் பக்கம் நோக்க அச்சம்.
அக் கொடிய அரக்கனின் கோபம் 
நெருப்பையும் எரித்திடும்.
நல்ல உள்ளம் கொண்டவர்களே, 
நீங்கள் அங்கே செல்வது எங்ஙனம் ?' 
என்று கேட்டான் சம்பாதி.

^ஒரு யோசனை - 13 KMs


மயேந்திரப் படலம் 

4729.
'ஏகுமின், ஏகி, எம் உயிர் 
   நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் 
   இன்னல் குறைவு இல்லாச் 
சாகரம் முற்றும் தாவிடும் நீர் 
   இக் கடல் தாவும் 
வேகம் அமைந்தீர்!' என்று 
   விரிஞ்சன் மகன் விட்டான்.

'விரைந்து செல்க; அவ்வாறு சென்று, 
எங்களுக்கு உயிர் தந்த பெருமை கொள்க;
நல்ல செய்தியைக் கொண்டு வருக;
உம் தலைவன் இராமனின் 
துன்பம் முழுவதையும் நீக்க வழி செய்க;
இந்தக் கடலைக் கடந்து செல்லும்  
வலிமை பெற்றவரே, கிளம்புக' 
என்று பிரம்மகுமாரன் சாம்பவான் 
அனுமானைத் தூண்டிவிட்டான்.

4739.
மின் நெடுங் கொண்டல் தாளின் 
   வீக்கிய கழலின் ஆர்ப்ப 
தன் நெடுந் தோற்றம் வானோர் 
   கட்புலத்து எல்லை தாவ 
வல் நெடுஞ் சிகர கோடி  
   மயேந்திரம் அண்டம் தாங்கும் 
பொன் நெடுந் தூணின் பாத 
   சிலை என, பொலிந்து நின்றான்.


(இலங்கை செல்ல ஒத்துக்கொண்ட அனுமான்)
மின்னலொடு கூடிய மேகங்கள் 
காலில் கட்டப்பட்ட கழல் போல் ஒலிக்க,
பேருருவம் எடுத்தத் தோற்றம், தேவர்களின் 
பார்வை படும் தூரம் தாண்டிச் செல்ல,
சிகரம் பல உடைய மகேந்திர மலை 
அண்டத்தையே தாங்கி நிற்கும் தூண்களின் 
அடியிலிட்ட கல்லைப் போலத் தெரிய  
மலை உச்சியில் அனுமான் நின்றான்.


கிட்கிந்தா காண்டம் முற்றிற்று

(  தொடரும் )