Monday, March 2, 2020

கம்பராமாயணம் 52



3592.
பேசினன்; அங்கு அவள்
   பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
   சிந்தையளும்தான்;
'நேசம் இல்
   அன்பினளாயினும் நின்பால்
ஆசையின் வந்த
   அயோமுகி' என்றாள்.

'யார் நீ?' என்றவளை இலக்குவன் கேட்டான்.
ஆசையில் அகப்பட்டு உழன்று அழியும்
மனத்தைக் கொண்ட அவள்,
தன் இச்சையை நாணாது சொன்னாள்,
'நேசம் வைக்க ஆருமில்லாதவள்,
நெஞ்சில் நிறைய அன்புடையவள்,
உன்மேல் ஆசை கொண்டு வந்தவள்,
பெயர் அயோமுகி' என்றாள்.



3599.
மோகனை என்பது
   முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி 
   போலியை வவ்வா
ஏகினள், உம்பரின்
   இந்துவோடு ஏகும்
மேகம் எனும்படி
   நொய்தினின் வெய்யாள்.


மயக்கத்தை உண்டாக்கும் மாயம் செய்தாள்.
மலை போன்ற இலக்குவனனை
தூக்கிக்கொண்டாள்.
வானத்தில், நிலவுடன் உலவும் மேகம் போன்று
விரைவாகப் பறக்கத் தொடங்கினாள்,
அந்தக் கொடியவள்.



3608.
தள்ளா வினையேன் தனி 
   ஆர் உயிர் ஆய் 
உள்ளாய்! ஒரு 
   நீயும் ஒளித்தனையோ ?
பிள்ளாய்! பெரியாய்!
   பிழை செய்தனையால்
கொள்ளாது உலகு உன்னை 
   இதோ கொடிதே!

(இலக்குவன் திரும்பி வர தாமதமாக)
'மாற்ற முடியாத கொடிய வினைகளைச் 
செய்தவன் நான்.
ஒப்பில்லாத, என் உயிருக்கு உயிரான நீயும்  
எங்கோ ஒளிந்துவிட்டாயே, ஏன்?
என் பிள்ளையே, அறிவில் பெரியவனே,
தனியே என்னை இங்கு தவிக்க விட்டு 
தவறு செய்துவிட்டாய்,
இக் கொடிய செயலை, உலகம் மன்னிக்காது
இதை உணர்ந்துகொள்வாய்'
என்று இராமன் எண்ணினான்.



3618.
பேர்ந்தான், நெடு 
   மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி 
   பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் 
   செவித் துளையில் 
சேர்ந்து ஆர்தலுமே 
   திருமால் தெருளா,

இலக்குவன் மயக்கத்திலிருந்து தெளிந்தான்,
தெளிந்து, அயோமுகியின் மூக்கை அறுத்தான்.
மூக்கு அறுபட, வேகம் தளர்ந்து போனாள்,
இடியோசை போன்ற ஒலி எழுப்பினாள்.
அவ்வோசை கேட்டதும், இராமனும் 
கலக்கம் நீங்கி அமைதியடைந்தான்.





3631.
'துளைபடு மூக்கொடு செவி
   துமித்து உக,
வளை எயிறு இதழோடு
   அரிந்து, மாற்றிய
அளவையில் பூசலிட்டு
   அரற்றினாள்' என
இளையவன் விளம்பிநின்று
   இரு கை கூப்பினான்.

('அரக்கியைக் கொல்லலை?'
என்று இராமன் கேட்க)
மூக்கை அறுத்தேன்,
காதுகளையும், வளைந்த பற்களையும்,
இதழ்களையும்
துண்டுபட்டு விழும்படி அறுத்தேன்.
இதற்கே வலி தாங்காது அவள் கதற
பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்'
என்று விளக்கி,
இருகை கூப்பி நின்றான் இலக்குவன்.

( தொடரும் )

No comments:

Post a Comment