Wednesday, March 4, 2020

கம்பராமாயணம் 54


சவரி பிறப்பு நீங்கு படலம்


3700.
அன்னது ஆம் இருக்கை நண்ணி
   ஆண்டுநின்று அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
   தலைப்பட்டு அன்னாட்கு
இன்னுரை அருளி, 'தீது இன்று
   இருந்தனைபோலும்' என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
   ஓர் மூலம் இல்லான்.

இராம இலக்குமனர்,
அழகுற அமைக்கப்பட்ட மதங்கரின் ஆசிரமத்தை
அடைந்தனர்.
நெடுங்காலம் அங்கேயே தங்கி,
இராமனையே எண்ணி,
தவம் செய்யும் சவரியை சந்தித்தனர்.
இனிய சொற்களைப் பேசி மகிழ்வித்தனர்.
'இத்தனை காலம் துன்பம் ஏதுமின்றி இருந்தாயா?'
என்று கேட்டான்,
எல்லாவற்றுக்கும் மூலப்பொருளான இராமன்.



3701.
ஆண்டு அவள் அன்பின் 
   ஏத்தி அழுது இழி அருவிக்கண்ணள் 
'மாண்டது என் மாயப் பாசம்; 
   வந்தது வரம்பு இல் காலம் 
பூண்ட மா தவத்தின் செல்வம்;
   போயது பிறவி' என்பாள்;
வேண்டிய கொணாந்து நல்க 
   விருந்துசெய்து இருந்த வேலை,

அவ்வேளையில் சவரி இராமனை 
அன்பினால் புகழ்ந்து, அழுது, 
அருவியாய்க் கண்ணில் நீர் வழிய நின்றாள். 
'பொய்யான இவ் உலகப் பற்று போனது,
இதுவரை நான் செய்து வந்த தவத்தின்  
அருந்தவப் பயன் 
எனக்குக் கிட்டும் காலம் வந்தது.
பிறப்பு ஒழிந்தது' என்று பேசினாள்.
ஏராளமான கனி வகைகளைக் கொண்டுவந்து 
விருந்து தந்தாள்.
இராம இலக்குவனர் அதை ஏற்றுக்கொண்டனர்.



3704.
அனகனும் இளைய கோவும் அன்று 
   அவண் உறைந்தபின்றை 
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் 
   நோக்கி, வெய்ய 
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த 
   அத் துளக்கு இல் குன்றம் 
நினைவு அரிது ஆயற்கு ஒத்த 
   நெறி எலாம் நினைந்து சொன்னாள்.


குற்றமிலாத இராமனும், இலக்குவனும் 
அன்று மதங்காசிரமத்திலேயே தங்கினர்.
பொல்லா வினைகளை நீக்க தவம் செய்த சபரி, 
மெய்யான அன்போடு நோக்கி,
வெப்பம் கொண்டு, 
விரைந்து செல்லும் குதிரையை உடைய 
சூரியனின் மைந்தன் சுக்ரீவன் வாழும் 
அழிதல் இல்லாத ருசியமுகம் மலைக்கு  
செல்லும் வழியை, ஆராய்ந்து தெளிந்து 
தான் அறிந்ததை எண்ணிப் பார்த்து 
விவரமாய்ச் சொன்னாள்.



3706.
பின் அவள் உழந்து பெட்ரா 
   யோகத்தின் பெற்றியாலே 
தன் உடல் துறந்து, தான் அத் 
   தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம் 
   அளவின்று எய்தி 
பொன் அடிக்க கழல்கள் ஆர்ப்ப 
   புகன்ற மா நெறியில் போனார்.

அதன்பின்,
அறிய முயற்சியால் வருந்திப் பெற்ற 
யோக  நெறியின் சிறப்பால் 
தன் உடலை விட்டு உயிரைப் பிரிந்தாள்;
பெறுதற்கரிய அந்த பெரு நிலையைப் 
போய்ச் சேர்ந்தாள். 
அந்த அதிசயக் காட்சியைக் கண்டு 
இராம இலக்குமனர் ஆனந்தம் அடைந்தனர்.
காலில் கட்டிய கழல்கள் ஓசை எழுப்ப 
சபரி சொன்ன வழியில் செல்லத் தொடங்கினர்.


ஆரணிய காண்டம் முற்றிற்று 
( தொடரும் )

No comments:

Post a Comment