Tuesday, March 3, 2020

கம்பராமாயணம் 53


கவந்தன் படலம்


3643.
ஐ-ஐந்து அடுத்த யோசனையின்
   இரட்டி, அடவி புடையுடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும் வானின்
   நாப்பண் வந்துற்றான்;
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று
   இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்றின் அடக்கும்
   கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

(ஐ-ஐந்து - 25, இரட்டி - 50)
ஐம்பது யோசனை தூரம்#,
காடு காடு சார்ந்த நிலம் என்று அலைந்து
சூரியன் வானின் மையப் பகுதி
வந்து .நின்ற வேளையில்
அம்பை எய்தும் வில்லை கையில் ஏந்திய
இராம இலக்குவனன் இருவரும்,
இருந்த இடத்தில் இருந்தபடியே கையை நீட்டி,
அகப்படும் உயிர்கள் அனைத்தையும்
வாயில் இட்டுக்கொள்ளும் கவந்தன்
வாழும் கானகத்தைக் கண்டார்கள்.


* 615 KMs

3653.
வெயில் சுடர் இரண்டினை
   மேரு மால் வரை
குயிற்றியதாம் எனக்
   கொதிக்கும் கண்ணினன்;
எயிற்று இடைக்கு இடை
   இரு காதம்; ஈண்டிய
வயிற்றடை வாய் எனும்
   மகர வேலையான்.

கவந்தன் -
வெப்பம் மிக்க இரண்டு சூரியனை
பெரிய மலை மேல் பதித்தது போல்
கொதிக்கும் கண்களை உடையவன்.
இரண்டு பற்களுக்கு இடையில்
இரண்டு காத தூரம் இடைவெளி உள்ளவன்.
மீன்கள் வாழும் கடல் போன்ற வாயை,
வயிற்றிலே கொண்டவன்.





3678.
'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை'
   என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப்பொறி
   மயிர்ப்புறம் பொடிப்ப
'விழுங்குவேன்' என வீங்கலும்
   விண் உற வீரர்
எழுந்த தோள்களை வாள்களால்
   அரிந்தனர், இட்டார்.

'எனைக் கண்டு அஞ்சவில்லை இவர்கள்,
அஞ்சாது என் எதிரே தைரியமாக நின்று
என்னை அவமதித்து விட்டனர்'
என்று எண்ணி சினம் கொண்டான் கவந்தன்.
கோபம் மயிர்க்கால்கள் வரை பரவ கொதித்தான்.
'உங்களை விழுங்கிடுவேன்' என்று கத்தியபடி
எழுந்தான்.
ஆகாயம் வரை எழுந்த அவன் தோள்களை
தம் வாளால் வெட்டி வீழ்த்தினர், வீரர்கள்.


3682.
'ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை 
   தீர் நல் அறத்தின் 
சான்றவனோ? தேவர் தவத்தின் 
   தனிப் பயனோ?
மூன்று கவடு ஆய் முளைத்து 
   எழுந்த மூலமோ?
தோன்றி, அரு வினையேன் சாபத் 
   துயர் துடைத்தாய்!

'பொருட்கள் எல்லாவற்றையும் படைத்தவன் 
நீதானோ?
எல்லை இல்லாத நற்செயல்களுக்கு 
சாட்சியாய் இருப்பவன் நீதானோ?
தேவர்கள் செய்யும் தவத்தின் பயன் 
நீதானோ?
மூன்று தேவர்களுக்கும் மூலப் பொருள் 
நீதானோ?
நான் இருக்கும் இடத்திற்கே வந்து 
தீராத என் பாவத்தை தீர்த்தவனே,
சாபத்தை அழித்தவனே !'
என்று கூறி வணங்கி நின்றான் கவந்தன்.



3697.
'கதிரவன் சிறுவன் ஆன கனக 
   வாள் நிறத்தினானை 
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து 
   அவனின் ஈண்ட 
வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் 
   விழுமிது' என்றான் 
அதிர் கழல் வீரர்தாமும் அன்னதே 
   அமைவது ஆனார்.

(அன்னை போன்ற சபரியை சந்தித்தபின்)
'சூரியனின் மகன், பொன்னிற சுக்கிரீவனை
சந்தித்து நட்பு கொண்டு,
அவன் உதவியோடு, விரைவாக 
மூங்கில் போன்ற தோளை உடைய சீதையை 
தேடுதல் நலம் பயக்கும்'
என்றான் கவந்தன்.
வீரக்கழல் அணிந்த இராமனும் இலக்குவனும் 
அவன் சொன்னதற்கு இசைத்தனர்.

( தொடரும் )

No comments:

Post a Comment