Friday, March 6, 2020

கம்பராமாயணம் 56



3787.
மேலவன் திருமகற்கு உரை
   செய்தான், 'விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா
   வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தான்; இடர்க்
   கடல் கடந்தனம்' எனா,
ஆலம் உண்டவனின் நின்று
   அரு நடம் புரிகுவான்.

வானில் உலவும் சூரியனின் புத்திரன் சுக்ரீவனுக்கு
இராமன் இலக்குவனரைப் பற்றிச் சொன்னான்.
'வாசனை மிக்க மலர்களை அணிந்த,
அளவிடமுடியா வலிமை உடைய வாலியின்
உயிரை எடுக்க எமன் வந்துவிட்டான்;
துன்பக்கடலிலிருந்து நாம் தப்பித்தோம்' என்றான்.
விடம் உண்ட சிவனின் நாட்டிய முத்திரையில்
நின்றான் அனுமான்.



3796.
'ஆய மால் நாகர் 
   தாழ் ஆழியானே அலால் 
காயமான் ஆயினான் 
   யாவனே? காவலா!
நீ அம் மான் நேர்தியால் 
   நேர் இல் மாரீசன் ஆம் 
மாய மான் ஆயினான் 
   மா யமான் ஆயினான்'.

'தேவர்கள் வணங்கித் தொழ,
திருப்பாற்கடலில் யோக முத்திரை 
செய்தருளும் திருமாலே அல்லாது,
மானிட உருவில் தோன்றிய இந்த இராமன் 
வேறு யார் ?
அரசே! நீ இவர்களோடு நட்பு கொள்,
நிகரில்லா வலிமையுடைய மாரீசன் 
மாய மானாய் வந்தபொழுது, 
மா யமனாய் நின்று அவனை அழித்தவன் 
இந்த இராமன்'
என்று சுக்ரீவனுக்கு எடுத்துரைத்தான் அனுமான்.


3812.
'மற்று இனி உரைப்பது என்னே?
   வானிடை மண்ணில் நின்னைச் 
செற்றவர் என்னைச் செற்றார்;
   தீயரே எனினும் உன்னோடு 
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் 
   கிளை எனது; என் காதல் 
சுற்றம், உன்சுற்றம்; நீ என் 
   இன் உயிர்த் துணைவன்' என்றான்.


(கவலை வேண்டாம், உன் துயர் துடைப்பேன் 
என்று சொன்ன இராமன் ... )
'வேறு என்ன நான் சொல்ல;
விண்ணுலகிலும் மண்ணுலகில், உனக்குத் 
துன்பம் தந்தவர் எனக்குத் தந்தவர் ஆவார்;
தீயவர்கள் எனினும் உனக்கு நண்பர் என்றால் 
எனக்கும் நண்பர் தான்;
உன் உறவினர் இனி என் உறவினர்; இனி
என் அன்புச் சொந்தங்கள், உனக்கும் சொந்தம்;
நீ என் உயிர் நண்பன் ஆகிவிட்டாய்' 
என்றான் இராமன்.



3826.
'கால்செலாது அவன் முன்னர்;
   கந்த வேள் 
வேல்செலாது அவன் 
   மார்பில்; வென்றியான் 
வால் செலாத வாய் 
   அலது இராவணன் 
கோல் செலாது; அவன் 
   குடை செலாது அரோ'.

'காற்று அவன் வேகத்தை மிஞ்ச முடியாது;
கந்தன் முருகனின் வேல் அவன் நெஞ்சை 
துளைத்துப் புக முடியாது;
வெற்றியையே உடைய 
அவன் வால் படாத இடம் தவிர வேறெங்கும் 
இராவணன் ஆட்சி செல்லாது,
வெற்றி பெறவும் முடியாது'
என்று வாலியைப் பற்றி அனுமான் சொன்னான்.



3855.
'உலகம் ஏழினோடு ஏழும் வந்து 
   அவன் உயிர்க்கு உதவி 
விலகும் என்னினும், வில்லிடை 
   வாளியின் வீட்டி,
தலைமையோடு நின் தாரமும் 
   உனக்கு இன்று தருவென்;
புலமையாய்! அவன் உறைவிடம் 
   காட்டு' என்று புகன்றான்.

'பதினான்கு உலகிலுள்ளோரும் திரண்டு நின்று 
அவன் உயிரைக் காக்க உதவிபுரிந்து 
எனைத் தடுக்க முயன்றிடினும் 
என் அம்பினை எய்து அவனை அழிப்பேன்;
உன்னை வானரர்கட்கு அரசனாக்குவேன்;
உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்;
அறிவில் சிறந்தவனே, 
அவன் எங்கிருக்கிறான், எனக்குக் காட்டு' 
என்று இராமன் சுக்ரீவனிடம் சொன்னான்.

( தொடரும் )

No comments:

Post a Comment