Sunday, March 1, 2020

கம்பராமாயணம் 51


3494.
மடல் உள் நாட்டிய தார்
   இளையோன் சொலை மதியா
மிடலுண் நாட்டங்கள் தீ உக
   நோக்கினன் விரைவான்
உடலுள் நாட்டிய குருதி அம்
    பரவையின் உம்பர்
கடலுள் நாட்டிய மலை அன்ன
   தாதையைக் கண்டான்.


பூவிதழ்கள் உள்ளே வைத்துக் கட்டப்பட்ட
மலர்மாலை அணிந்த இலக்குவன்
சொன்ன கருத்துக்களை ஏற்று,
கொஞ்ச தூரத்தில் எதையோ கண்டு,
அவ்விடம் விரைவாகச் சென்று,
வலிமை மிக்க விழிகளிலிருந்து
கோபத்தீ கக்கியபடி,
கடலிலிருந்து வெளிப்பட்ட மந்தரமலை போன்று
இரத்தக் குருதியின் இடையே கிடந்த
தந்தை  போன்ற சடாயுவைக் கண்டான்.





3515.
'வடுக் கண் வார் கூந்தலாளை
   இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து
   எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து
   அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது
   இன்று பட்டது' என்றான்.

மாவடு பிளந்தது போன்ற கண்களையும்,
நீண்ட கூந்தலையும் உடைய சீதையை,
இராவணன் நிலத்தோடு பெயர்த்துக்கொண்டு
பறக்கப் பார்த்தான்.
என்னால் முடிந்தவரை தடுத்து நிறுத்தினேன்,
எதிர்த்துப் போரிட்டேன்;
இறுதியில் அவன்,
தவம் செய்து, சிவம் தந்த சந்திரகாச வாளால்
என் இறகை வெட்டி வீழ்த்தினான்.
இவ்விடத்தில் விழுந்து கிடக்கிறேன்.
இது இன்று நடந்தது'
என்று சடாயு இராம இலக்குமணர்களிடம்
எடுத்துரைத்தான்.




3535.
அவ் வழி இளவல் கூற அறிவனும் 
   அயர்வு நீங்கி 
'இவ் வழி இனைய எண்ணின் 
   ஏழைமைப்பாலது' என்னா 
வெவ் வழி பொழியும் கண்ணீர் 
   விலக்கினன், 'விளித்த தாதை 
செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்;
   சிறுவ!' என்றான்.

(சடாயு உயிர் நீங்க)
இலக்குவன் எடுத்துக்கூற, இராமனும் 
அதைக்கேட்டு சோகம் நீங்க
'இவ்விடத்தில் இத்தகைய எண்ணங்களை 
எண்ணியிருப்பது அறியாமை போன்றது'
என்று முடிவெடுத்து
கண்ணீரைத்  துடைத்துக்கொண்டு 
'இறந்த தந்தைக்கு நல்லமுறையில் 
இறுதிக்கடனை செய்துமுடிப்போம், தம்பி'
என்று சொன்னான்.



அயோமுகிப் படலம் 


3556.
நின்று பல் உயிர் காத்தற்கு 
   நேர்ந்த யான் 
என் துணைக் குல மங்கை 
   ஓர் ஏந்திழை 
தன் துயர்க்குத் தகவு 
   இலென் ஆயினேன்;
 நன்று நன்று என் 
   வலி!' என நாணுமால்.

அரக்கர்களை எதிர்த்து, அழித்து
மற்ற உயிர்களைக் காப்பதற்கு 
உடன்பட்ட நான்,
என் மனைவியை, குலப்பெண்ணை
அணிகலன்கள் அணிந்தவளை 
காக்க முடியாது போனேன், 
அவள் துன்பத்தை 
நீக்க முடியாதவன் ஆனேன்,  
என்னே என் வலிமை' 
என்றெண்ணி நாணினான் இராமன்.



3579.
எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை
அங்கு, அவ் வனத்துள் அயோமுகி என்னும் 
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.


(இராமன் தண்ணீர் கேட்க)
எல்லா இடத்திலும் தேடினான்,
தண்ணீர் எங்கும் கிடைக்காது தவித்தான்,
சிங்கம் போல இங்குமங்கும் ஓடித் திரிந்தான்.
அங்கு, அந்தக் காட்டில் வசிப்பவள்,
கொடிய கண்களை உடையவள், 
அயோமுகி என்னும் பெயர் கொண்டவள் 
அரக்கி, அவன் மேல் காதல் கொண்டாள்
ஆசையாய்ப் பார்த்தாள்.

( தொடரும் )

No comments:

Post a Comment