Thursday, March 5, 2020

கம்பராமாயணம் 55



கிட்கிந்தா காண்டம் 

அனுமப் படலம்

3751.
எய்தினார், சவரி நெடிது ஏய
   மால் வரை எளிதின்;
நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை
   சால் கவி அரசு,
செய்வது ஓர்கிலன்; அனையர் தெய்வர்
   ஆம் என வெருவி
'உய்தும் நாம்' என விரைவின்
   ஓடினான், மலை முழையின்.

காடும் மலையும் கடந்து சென்றனர்;
சவரி சிந்தித்துச் சொன்ன வழிகளில் நடந்தனர்;
ருசியமுகம் மலைமீது எளிதாக ஏறினர்;
அம்மலையில் வாழ்ந்த,
வலிமை வாய்ந்த குரங்குகளின் அரசன் சுக்ரீவன்
இவர்கள் வருவதைக் கண்டான்;
வருகின்றவர் பகைவரே என்று எண்ணினான்;
என்ன செய்வது என்று தெரியாது அஞ்சினான்;
'இப்போதைக்கு தப்பித்துக்கொள்வோம்' என்று சொல்லி
அம்மலையிலிருந்த குகை ஒன்றினுள்
விரைந்து ஓடி மறைந்துக் கொண்டான்.



3754.
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் 
   அஞ்சனக் கிரி அனைய 
மஞ்சனைக் குறுகி ஒரு 
   மாணவப் படிவமொடு 
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர்,
   கைச் சிலையர்' என 
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய 
   நின்று, கற்பினின் நினையும்;

அஞ்சனாதேவியின் மகன்,
நீலமலை போன்ற மைந்தனாம் 
இராமனை நெருங்கினான்.
மறைந்து நின்று கொண்டான்.
ஒரு மாணாக்கன் போன்று 
தன் உருவத்தை மாற்றிக்கொண்டான்.
'போர் செய்வதில் வல்லவர், 
தவக் கோலத்தில் உள்ளனர்,
கையில் வில்லை வைத்துள்ளனர்'
என்று தன் கல்வி அறிவால் அவர்களை 
பற்றி யூகித்து மனதில் குறித்துக்கொண்டான்,



3759.
என்பன பலவும் எண்ணி 
   இருவரை எய்த நோக்கி 
அன்பினால் உருகுகின்ற 
   உள்ளத்தான், ஆர்வத்தோரை 
முன்பிரிந்து அனையர்தம்மை முன்னினான் 
   என்ன நின்றான் 
தன் பெருங்குணத்தால் தன்னைத் 
   தான்அலது ஒப்பு இலாதான்.

இருவரையும் கண்டு பலவாறு எண்ணினான்,
அன்போடு உற்றுப் பார்த்து உருகினான்,
முன்னம் பழகி, பிரிந்து 
பின் மீண்டும் கண்டது போல் நின்றான்.
பெருங்குணம் கொண்ட, 
தனக்கு ஒப்பான ஒருவன் இல்லாத அனுமன்.



3765.
'மஞ்சு எனத் திரண்ட கோல 
   மேனிய! மகளிர்க்கு எல்லாம் 
நஞ்சு எனது தகைய ஆகி, நளிர் 
   இரும் பனிக்குத் தேம்பாக் 
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய 
   கண்ண! யான் காற்றின் வேந்தற்கு 
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் 
   அனுமன் என்பேன்'.

('யார் நீ ?' என்று இராமன் கேட்டதும்)
மேகம் போன்ற நீலநிறமுடைய 
அழகிய மேனியை உடையவனே,
பெண்களுக்கு நஞ்சு போன்றவனே^,
குளிர்ந்த பனிக்கும் வாடாத 
தாமரை மலர் போன்ற 
சிவந்த, மலர்ந்த கண்களை உடையவனே,
நான் வாயு புத்திரன், 
அஞ்சனை வயிற்றில் வந்தவன்,
அனுமன் என்ற அழைக்கப்படுபவன்.

^- ஒழுக்கமானவனே ?

3770.
'எவ் வழி இருந்தான், சொன்ன 
   கவிக் குலத்து அரசன்? யாங்கள் 
அவ் வழி அவனைக் காணும் 
   அருத்தியால் அணுக வந்தேம்;
இவ்வழி நின்னை உற்ற எமக்கு 
   நீ இன்று சொன்ன 
செவ் வழி உள்ளத்தோனைக் 
   காட்டுதி, தெரிய' என்றான்.

'எங்கு இருக்கிறான், நீ சொன்ன 
குரங்குக் கூட்டத்து அரசன்?
நாங்கள் அவனிருக்கும் இடத்தில் 
அவனைக் காணவே வந்திருக்கிறோம்;
இவ்விடத்தில் உன்னைக் கண்ட நாங்கள்,
நல்ல உள்ளம் கொண்ட உன் மன்னனை 
எவ்விடத்தில் காணலாம், அவ்விடத்தை 
எங்கட்கு காட்டு' என்றான் இராமன்.

( தொடரும் )



No comments:

Post a Comment