Sunday, July 29, 2018

பொன்மாலைப் பொழுதில் 31


242. நல்லோர் நலமாய் வாழ துணை புரி
நலிந்தோர் வாழ வழி கொடு
நாளைய பயத்தை நீக்கிடு
நானில வாழ்வை இதமாக்கிடு
நிதானம் நிம்மதி அருளிடு
நற்சிந்தனை நலம் தருமென்பதை நிருபித்திடு
நல்லார் இல்லாரை நல்வழிப்படுத்திடு
நஞ்சு விதைக்கும் நீசரை நசுக்கிடு
நம்பினார்க்குத் துணையிருந்திடு
*நாராயணா நாராயணா நாராயணா*


241. திருவிழாவில் தேர்மீதிருந்து என் மீது பூ தூவியது
நீ தானே?
காகிதத்தில் 143 எழுதி என் தம்பியிடம் கொடுத்தனுப்பியது
நீ தானென்று அறிவேன்.
நயனம் அதரம் வதனம் போன்ற வார்த்தைகளில் கவிபுனைந்து
என் கட்டுரைப் புத்தகத்தின் இடையில் வைத்தது நீ தானே?
உனைப்போலவே இருக்கும் உன் கிறுக்கெழுத்து காட்டித் தந்து விட்டது.
உன் சிலபல குறும்புச் செயல்களில் நான் கவரப்பட்டது உண்மையே.
நான் வரும் நேரம் பார்த்துக் கோவிலில் இருக்கிறாய்.
கண் மோதையில் கண்மூடிப் ப்ரார்திக்கிறாய்.
உன் திருட்டுத்தனங்களெல்லாம்
எனக்குத் தெரியுமென்று சொன்ன பிறகும் இன்னும் நீ
*மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?*


240. இருபக்க ஜடை பின்னி கண்மை வழிய
கலர் ரிப்பன் வாங்கித் தர அழுதாலே, அவளா இவள்?
பள்ளி செல்கையில் ஒருமுறை  பின்னால் தட்ட
எனை ஓட ஓட விரட்டினாளே, அவளா இவள்?
பாவாடைக்கு நடுவுல கமார்க்கட் வச்சி
பல்லால பாதி கடிச்சித் தந்தாளே, அவளா இவள்?
தாவணி, தலையில் பூ, காதில் ... என்னவோ சொன்னாளே ... ஜிம்மியா ?
மோர் தரும் போது ... அது சிநேகச் சிரிப்பா,
முறைமாமன் என்பதால் முறைப்பா ?
ஒருநாள் வரப்பு வழுக்கி, விழுந்து தொடையில் சிராய்ப்பு...
இப்போ அதுபத்திக்  கேட்டா தப்பாகுமோ ?
இப்படி ஆவாள் என்றெனக்கு அப்போதுத் தெரியாதே, ஆனால் அப்போதிருந்தே இவள் இப்படித்தானே.
எனக்குப் பிடிச்சிருக்கே
என் நெஞ்சைக் கவர்ந்தவளே
வளர்ந்து நிற்பவளே,
என் *அத்தைக்குப் பிறந்தவளே*

239. ஆகா
பரிமள சுகந்தம் நுகர்கிறேன்
பீதாம்பரத்தின் சரக் சரக் ஓசையும்,
கால்ச் சதங்கையின் ஜல் ஜல்
ஒலியும் துல்லியமாய்க் கேட்கிறது.
உன் நடைவேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது,
உன் பின்னால் ஓடி ஓடி வரும் என் தோழியரின்
முக்கல் முனகலை உணர்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னருகில் நான்
என்று நினைக்கையிலேயே நெஞ்சு உவகை கொள்கிறது.
உன் புல்லாங்குழலிசையை முதலில் கேட்டு
ரசித்து சிலிர்க்கப் போகிறேன்.
நேரம் தாழ்த்த மாட்டேன்
இதோ கிளம்பி விட்டேன்
உனக்காகத் தானே தவமிருந்தேன்.
*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்*


238. உனைப் பார்த்ததும் புத்துணர்ச்சி,
நெஞ்சில் பரவுமொரு பரவசம்,
பார்க்குமெல்லாவற்றிலும் பரிவு தோன்றுகிறது
ஆசை பாசம் எல்லாம் அளவுக்கு அதிகமாய்ச் சுரக்கிறது.
சிலசமயம் என்னுளெழும் வெட்கம் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் என்றெண்ணி சிரித்துக்கொள்கிறேன்.
இவை எல்லாம் உன்னைப் பார்த்ததிலிருந்து தான்.
மெல்ல எனைப் பார்த்து நீ சிரித்தாயே அன்றிலிருந்து தான்.
இது அதுதானோ ?
அப்போ  *காதல் நீ தானா ?*

237. புடவை அணிந்தக் கர்ணியோ?
பூ வாங்கியவள் மீதிப்பணத்தை பூக்காரியிடமே தந்துவிட்டாயே.
அந்தக் காட்டன் சேலை, தலையில் பூ, சிரித்த முகம் ... தேவதையே.
என் சந்தேகமெல்லாம் அழகான ஆடையே உடுத்துவாயா
இல்லை நீ உடுத்தும் எல்லாமே அழகானதா?
இத்தனை நீளக்கூந்தலா ? நடக்கையில் ஜதி பிசகாது
இருபுறமும் தொட்டுச் செல்லும் பாங்கு அருமை.
சந்நிதியில் பாடினாயே, வாரணம் ஆயிரம் ...
வாவ் கனவு பழிக்கும்.
ப்ரசாதக் கடையில் வாங்கி பூனைகளுக்கு உண்ணத் தந்தது,
அடடடடா அருமை.
இத்தனையையும் நீயறியாமல்,
உனக்கேத் தெரியாமல் நேற்று *முன்தினம் பார்த்தேனே*

236. சுரம் பிசகாது பாடுகிறாய்.
சுவாரஸ்யமாய் சிரிக்க வைத்துப் பேசுகிறாய்
குழல் ஊதி எமை ஈர்த்து நிழலாய் உனைத் தொடரச் செய்கிறாய்.
அருகிலமர்ந்து அளவாடுகையில் அழகாய் வரைந்து அசத்துகிறாய்.
பாசம் காட்டி ஆசை வார்த்தை சேர்த்து ஆளை மயக்கிவிடுகிறாய்.
அழகு தமிழில் எளிய சொற்களில் எழுதி எமை சொக்க வைக்கிறாய்.
சுந்தர வதனம் காட்டி எங்கள் சொப்பனங்களில் சுற்றுகிறாய்.
உனக்குத் தெரியாக் கலை எது ?
அன்பனே, என் உயிர் நண்பனே,
சகலமும் அறிந்தவனே
*சகல கலா வல்லவனே ...*

235. கவலை எதற்கு உனக்கு ?
காதலில் இல்லையே பிணக்கு
காணாமல் பிரிந்திருக்கிறோமே அதற்கா?
காரணமில்லாமல் காரியம் இருக்கா?
கரைந்து கிடந்தால் கலக்கம் மாறுமா?
கவலை தான் தீருமா?
காலத்தின் கட்டாயத்தால் கலம் மாறிப் பயணம்.
கரைகள் வேறானபோதும் மனம் மாறாது என்றும்.
காதலைச் சுமப்பவள்
கவலை மறந்து சிரிக்க வேணும்
கமலம் போன்றுன்
*கண்ணில் என்ன கார் காலம் ?*

Monday, July 16, 2018

பொன்மாலைப் பொழுதில் 30

234. காலை மூச்சுப்பயிற்சி ஓட்டம் எல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி நேரம்.
இமை உருட்டி எமை மிரட்ட, புரியும் அது இயற்பியல் பயிற்றுவிக்கும் நேரம்.
கூந்தலை இழுத்து முத்தானையைச் சொருகி  ம்ம்ம் உனக்கேப் புரியாத கணக்கை எனக்கு சொல்லித் தரும் நேரம். 
'அது ஒன்னுமில்லேடா தம்பி' என்றால் அடுத்து கெட்ட வார்த்தையால் நீ எனைத் திட்டும் நேரம்.
சந்தனக்கீற்றுடன் சாய்ந்து ஒயிலாய்ப் பார்த்தாலோ இதழோரம்
*காதல் கவிதைகள் படித்திடும் நேரம்*

233. தினம் உனைப் பார்க்க வேண்டும்.
சினேகப் பார்வை சிந்த வேண்டும்.
தவறாகிப் போகுமோ என்றத் தயக்கம் ஏதுமின்றிப் பேசிப் பழக வேண்டும்.
நட்புச்செடி நாளும் செழித்து வளர வேண்டும்.
விரல் பிடித்து எங்கும் சுற்றித் திரியும் சுதந்திரம் வேண்டும்.
செவ்வானம் சிவக்கும் அழகை உன் கூடவிருந்து ரசிக்க வேண்டும்.
அருகிலேயே ஒரு அருவி, ஓடை ஓட வேண்டும்.
காதல் காமம் இரண்டும் கலந்து வாழ்வு செழிக்க வேண்டும்.
ஆள் ஆரவாரமற்ற
*யாருமில்லாத தீவு ஒன்று வேண்டும்*

232. ஏனோ உன்னோடு, கொஞ்சநாள் தான் என்றபோதிலும், பழகியபிறகு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
விடுமுறைக்குச் சென்ற நீ எப்போது வருவாய் என்று ஏங்கித் தவிக்கிறேன்.
எப்போதாவது என் நினைவு வருமா உனக்கு  என்றறிய ஆசைப்படுகிறேன்.
வந்ததும் வராததுமாய் நீ எனைக் காண ஓடிவரணும் என்று விரும்புகிறேன்.
'என்னடி செய்தாய்?' என்றெனை நீ  கேட்கணுமென்றுத் தவிக்கிறேன்.
உன் நினைவில் வாடுவதை வெளியே சொல்ல ஏழாதிருக்கிறேன்.
தயவுசெய்து  உன் பணியை சீக்கிரம் முடித்துக் கொண்டு ...எனக்காக ...
*முன்பே வா, என் அன்பே வா*


231. ஹூம் இதெல்லாம்...என்னென்பது.
வரவர உன்னை அதிகம் அழகுபடுத்திக் கொ(ல்)ள்கிறாய்.
கண்ணாடி முன்னாடி நொம்ப நேரம் நிற்கிறாய்.
பின்னாடி நான் நிற்பதைக் கண்டும் காணாதுப் போகிறாய்.
புரியாத வார்த்தைகளில், புலம்பலோ என்றெண்ண 'கவிதை எப்படி' எனக்கேட்டு எங்களைக் கலவரப்படுத்துகிறாய்.
எதையோ சொல்ல எண்ணி ஏதும் சொல்லாது மெல்ல நழுவுகிறாய்.
ஒருவேளை காதல் வலையில் கன்னி நீ  விழுந்திருக்காயோ ?
உன் நெஞ்சைக் கவர்ந்தவனோடு
தனிமையில் கட்டுண்டு கிடக்காயோ.
கனவிலும் நினைவிலும் காதலனே கதியென்று...ம்ம்ம்
அவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டுச் செல்ல ஏழுமா?
*மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ?*

230. விடிந்தது காலை
சம்மதம் சொன்னது ஓலை
அபலைக்கில்லை இனி தொல்லை
பறந்துபோயிற்று நெடுநாள்க் கவலை
எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை
நெஞ்சில் பொங்கும் இன்பத்திற்கில்லை எல்லை
கண்ணின் திவலைக்குக் கிட்டியது விடுதலை
சொல்லமுடியாத சுகம் இந்நிலை
வாடியிருந்த நிலத்தில் பெய்தது வான்மழை
வெகு விரைவில் *மாலை சூடும் வேளை*

229. கோதையோடு நீ கொட்டமடித்தது பற்றிப் பேசேன்.
என் வேறுசில தோழியரோடு ஒளிந்துப் புரண்டு நீ ஆடிய ஆட்டம் பற்றி அளவாடேன்.
சுந்தர வதனம் காட்டி சுந்தரியரோடு சுகித்திருந்ததைப்  பற்றிக் கேட்கேன்.
நேற்று வருவதாய்ச் சொன்னாய், வரவில்லை; அதைப் பற்றி வாய் திறக்க மாட்டேன்.
அரக்கரையே அழிக்கும் ஆற்றல் படைத்தவனுக்கு இந்த அம்மாச்சிப் பெண்டியரை வசப்படுத்துவது அரிதா என்ன?
ஆயிரம் வேலைகள் உனக்குண்டு; அபலை எனக்கோ உன்னை எண்ணிக் கிடப்பதே வேலையாம்.
என்னருகிலும் ஒருமுறை வாராயா?  நெஞ்சின் வேதனை தீராயோ?
இன்னும் *கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா*

228. எப்போதும் போல் குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் காத்திருந்தேன்.
என் புஜ்ஜிக்குட்டி ஆளைக்காணேம்.
வராது கம்பி நீட்டி விடுவாளே என்று என்னுளொரு சம்சயம்.
அலைபேசியில் முயற்சிக்க அவளோ அழைப்பை நிராகரித்தாள்.
கொஞ்ச நேரத்தில் வேகவேகமாய் வந்தாள், கோபமாய்த் தெரிந்தாள்.
கொஞ்ச எத்தனிக்க கொடூரப் பார்வையில் எனைத் தடுத்தாள்.
'பேசாதே' என்றாள். 'தொடதே' எனச் சொல்லி தள்ளி நின்றாள்.
'எனக்கெதற்கு வாழ்த்து ? எருமை' என்றெறிந்து விழுந்தாள்.
எனக்கெல்லாம் புரிந்தது. சினத்திற்குக் காரணம் தெரிந்தது.
அருகில் அழைத்து அமர வைத்தேன்.
அன்றைய நாளின் மகத்துவத்தை புரியும்படி எடுத்துரைத்தேன்.
'அப்படியா' என்றாள், ஆச்சரியம்
ஆனந்தம் கொண்டாள்.
கையில் ஒரு சிறு பூ தந்து வாழ்த்த, வெட்கத்தோடு *மெல்லச் சிரித்தாள்*

227. இதமான மாலை நேரம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீ எனைக் காண வரும் நேரம்.
கதிரவனின் கதிர்கள் நமைக் காட்சிப் பொருளாக்க முடியா நேரம் .
நாமிருவரும் மனம் விட்டுப் பேசிச் சிரித்து மகிழும் நேரம்
நான் கேட்க கதைகளை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் நேரம்.
கன்னங்கள் உரச காதினுள் நீ கவிதைகள்  சொல்லும் நேரம்.
கைகளை இணைத்து கவலை மறந்துக் கலித்திருக்கும் நேரம்.
மெல்ல நீ இடை வருடி எனை உசுப்பிடும் அந்நேரம்
*என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்*

Monday, July 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 29

226. பகலினில் நினைவாய்
இரவினில் கனவாய்
நடக்கையில் துணையாய்
வெயிலினில் நிழலாய்
பாடலில் ஸ்வரமாய்
ஆடலில் ஜதியாய்
பார்க்கையில் இமையாய்
மார்கழியில் அனலாய்
பங்குனியில் பனியாய்
உணவினில் சுவையாய்
உறங்கிட துணையாய்
நினைக்க நினைக்க இனிமை
நேரில் இல்லாததே கொடுமை
நிஐத்தில் *எப்போ வருவாரோ?*


225. காலை விடிந்து விட்டது
கண்ணெதிரில் கதிரவன் கிளம்ப
பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி
மலர்ந்து மணம் வீசும் பூக்கள்
தேனுறிஞ்சப் பறக்கும் வண்டுகள்
இதோ நானும் கிளம்பிவிட்டேன்
உன்னை ஈர்க்கும் மஞ்சள் நிறத்தில் உடுத்திக்கொண்டேன்.
உன் மனதை மயக்கும் மல்லிகைப்பூ சூடிக்கொண்டேன்.
வெண்ணையிலும் எண்ணையிலும் உண்ண ஏராளமாய் உள்ளன.
கூடவே பருக பானகம்.
செரிக்க ததியன்னம்.
உன் எல்லாவற்றையும் ரசிக்க அருகில் நான்.
காத்திருக்கிறேன், நீ வரும் பாதை பார்த்திருக்கிறேன்.
இன்றாவது எனை ஏமாற்றாது
*கண்ணா வருவாயா?*

224. மதுரை மீனாஷி, நீல நிற ஆடையில் நல்ல திவ்ய தரிசனம்.
இதே நிறத்தில் உன்னிடமொரு சேலை இருந்த ஞாபகம்.
கொஞ்சமாய் வாசனைக்காக முல்லைப்பூ, ஒருசிலமுறை என் விரல்களைக் காயப்படுத்திய உன் சின்னச் சின்னப் பற்கள் ஞாபகம்.
சுடச்சுட இட்லி கூடவே சிகப்பாய்த் தக்காளி சட்னி, உன் தேனிதழ் ஞாபகம்.
திந்நேலி அல்வா பார்க்கையில் 'சட்டி, மாவு இல்லாமலேயே கிண்டுவியே' என்று நீ நக்கலடிப்பாயே, அந்த ஞாபகம்.
கடைத்தெருவில் பலவிதமாய் சட்டைகள், 'எப்பவும் ப்ளைனா (கிழவ மாதிரி) ?' என்று நீ சொன்னது ஞாபகம்.
விற்பனைக்கு வைத்திருந்த சந்தனத்தைக் கையிலப்பிக்கொள்கையில் நீ ரசித்த 'சந்தன இடையாளே' கவிதை ஞாபகம்.
இன்னும்...இன்னும் நான் எது செய்திடினும்
*எப்போதும் உன் மேல் ஞாபகம்*


223. எத்தனைப் பெண்களை இதுவரை ரசித்திருக்கிறேன்.
இவளைப் பார்க்கும்போது மட்டும் நெஞ்சிலொரு பயம் தோன்றுதே.
விழி போதுகையில் முதுகுத்தண்டிலொரு சிலிர்ப்பு.
பார்ப்பதே முறைப்பதாய்ப் பட என்ன தவறு செய்தேன் என்றெண்ண வைக்கிறது.
எத்தனைப் பேரோடு எளிதாய் இதுவரை ~கட~ பேசியிருக்கிறேன்.
இவளிடம் மட்டும் பேச எண்ணும் போதே வாய் குரளுதே.
இவள் தாய் எனக்குப் பேய் போல் தெரிகிறாளே, ஒருவேளை ...
இவளின் தங்கையைக் கண்டவுடன் ஒரு பூரிப்பு, கூடவே புன்சிரிப்பு
ஒருவேளை ...ஒருவேளை... ஐயோ
*எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ ?*

222. தவறு தான், துண்டித்தது போதும்; இனியாவது மன்னித்திடு.
கண்கள் முறைத்தாலும் எனை நீ காணத் துடிப்பது தெரியும்.
காணும் வரை உன நெஞ்சிலொரு பரபரப்பு இருப்பது எனக்குப் புரியும்.
பாராதிருப்பதும் பேசாதிருப்பதும் ஊடலின் வகையென்பதை உணர்கிறேன்.
கோபத்தில் நீ திட்டும் போதும் திவ்யமாய்த் தெரிவதை ரசிக்கிறேன்.
காலம் முடியும் வரை காத்திருப்பேன், என்ற போதிலும் ... நீயும் கொஞ்சம் ...
இன்னும் கொஞ்சம் இறங்கி வாயேன்,
மயிலே குயிலே மானே தேனே
*பொன்மானே கோபம் ஏனோ ?*

221. கோசலை உதரத்தில் உதித்தவன் கோதண்டம் கையிலேந்தியவன்.
போகம் துறந்து தேகம் நோக யாகம் காத்து யோகம் பெற்றவன்.
மைதிலி மைவிழி கசிய மாயமான் பின் ஓடி மனையாளை இழந்தவன்.
சுக்ரிவனுக்கு அடைக்கலம் வாலிக்கு மோட்சம் அளித்தவன்.
அனுமன் துணையேற்று ஆரண்யம் கடந்து  இலங்கை சென்றவன்.
இராவணன் இரா வண்ணம் அதம் வதம் செய்து வெற்றி கண்டவன்.
*
அவனை எண்ண தீய எண்ணங்கள் நெஞ்சில் நுழையாதே.
அவன் பெயர் சொல்ல நற் சிந்தனைகள் நாளும் வசப்படுமே.
அவன் பாதம் பணிய நீங்கும் நம் பாவமே
*ராம நாமம் ஒரு வேதமே*



220. குளித்தபின் கண்ணாடியில் உன் பெயர் ஏன் எழுதுகிறேனோ ?
சாப்பிடும் தட்டில் பருக்கையால் உன் முகம் ஏன் வரைகிறேனோ ?
நிற்கையிலும் நடக்கையிலும் உன் ஞாபகம் ஏன் வருதோ ?
இப்போதென்ன செய்வாய் என்று எப்போதும் ஏன் சிந்திக்கிறேனோ ?
என் கற்பனைகளெல்லாம் உனைச் சுற்றியே ஏன் சுழலுதோ ?
கண்ணாடி முன் நிற்கையில் உன் முகம்  பின்னால் ஏன் தெரியுதோ ?
*மாலை கருக்கலில்  சோலைக் குயிலொன்னு ஏன் பாடுதோ ?*

219. பார்த்ததும் பற்றிக்கொண்டதெல்லாம் பழைய கதை
பிடித்துப் போய் சுற்றி வந்ததெல்லாம் அப்போது
இப்பொழுதெல்லாம் நிறைய முறைத்துக் கொண்டாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதே பழக்கமாகிவிட்டது.
எதுகை மோனைப் பேச்சு மறைந்து  ஏட்டிக்குப் போட்டி ஆகிவிட்டது..
சரி சரி சண்டையெல்லாம் போதும்
சமாதானம் செய்து கொள்வோம்
இனியெல்லாம் சுகமே
இது *நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரமே*


218. தேனிதழ்
சிரித்த முகம்
மைதடவியக் கருவிழி
அடர்கூந்தல், இடையில் வாசப்பூக்கள்
மெல்ல வெளிப்படும் புன்னகை
உருண்டுத் திரண்ட உன் பெண்மை
அதைச்  சுமக்க முடியாதுக் குழையும் உன் சிற்றிடை
இன்னும்.. இன்னும்
எனைக் கட்டியிழுக்கிறாய்
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*