Monday, July 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 29

226. பகலினில் நினைவாய்
இரவினில் கனவாய்
நடக்கையில் துணையாய்
வெயிலினில் நிழலாய்
பாடலில் ஸ்வரமாய்
ஆடலில் ஜதியாய்
பார்க்கையில் இமையாய்
மார்கழியில் அனலாய்
பங்குனியில் பனியாய்
உணவினில் சுவையாய்
உறங்கிட துணையாய்
நினைக்க நினைக்க இனிமை
நேரில் இல்லாததே கொடுமை
நிஐத்தில் *எப்போ வருவாரோ?*


225. காலை விடிந்து விட்டது
கண்ணெதிரில் கதிரவன் கிளம்ப
பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி
மலர்ந்து மணம் வீசும் பூக்கள்
தேனுறிஞ்சப் பறக்கும் வண்டுகள்
இதோ நானும் கிளம்பிவிட்டேன்
உன்னை ஈர்க்கும் மஞ்சள் நிறத்தில் உடுத்திக்கொண்டேன்.
உன் மனதை மயக்கும் மல்லிகைப்பூ சூடிக்கொண்டேன்.
வெண்ணையிலும் எண்ணையிலும் உண்ண ஏராளமாய் உள்ளன.
கூடவே பருக பானகம்.
செரிக்க ததியன்னம்.
உன் எல்லாவற்றையும் ரசிக்க அருகில் நான்.
காத்திருக்கிறேன், நீ வரும் பாதை பார்த்திருக்கிறேன்.
இன்றாவது எனை ஏமாற்றாது
*கண்ணா வருவாயா?*

224. மதுரை மீனாஷி, நீல நிற ஆடையில் நல்ல திவ்ய தரிசனம்.
இதே நிறத்தில் உன்னிடமொரு சேலை இருந்த ஞாபகம்.
கொஞ்சமாய் வாசனைக்காக முல்லைப்பூ, ஒருசிலமுறை என் விரல்களைக் காயப்படுத்திய உன் சின்னச் சின்னப் பற்கள் ஞாபகம்.
சுடச்சுட இட்லி கூடவே சிகப்பாய்த் தக்காளி சட்னி, உன் தேனிதழ் ஞாபகம்.
திந்நேலி அல்வா பார்க்கையில் 'சட்டி, மாவு இல்லாமலேயே கிண்டுவியே' என்று நீ நக்கலடிப்பாயே, அந்த ஞாபகம்.
கடைத்தெருவில் பலவிதமாய் சட்டைகள், 'எப்பவும் ப்ளைனா (கிழவ மாதிரி) ?' என்று நீ சொன்னது ஞாபகம்.
விற்பனைக்கு வைத்திருந்த சந்தனத்தைக் கையிலப்பிக்கொள்கையில் நீ ரசித்த 'சந்தன இடையாளே' கவிதை ஞாபகம்.
இன்னும்...இன்னும் நான் எது செய்திடினும்
*எப்போதும் உன் மேல் ஞாபகம்*


223. எத்தனைப் பெண்களை இதுவரை ரசித்திருக்கிறேன்.
இவளைப் பார்க்கும்போது மட்டும் நெஞ்சிலொரு பயம் தோன்றுதே.
விழி போதுகையில் முதுகுத்தண்டிலொரு சிலிர்ப்பு.
பார்ப்பதே முறைப்பதாய்ப் பட என்ன தவறு செய்தேன் என்றெண்ண வைக்கிறது.
எத்தனைப் பேரோடு எளிதாய் இதுவரை ~கட~ பேசியிருக்கிறேன்.
இவளிடம் மட்டும் பேச எண்ணும் போதே வாய் குரளுதே.
இவள் தாய் எனக்குப் பேய் போல் தெரிகிறாளே, ஒருவேளை ...
இவளின் தங்கையைக் கண்டவுடன் ஒரு பூரிப்பு, கூடவே புன்சிரிப்பு
ஒருவேளை ...ஒருவேளை... ஐயோ
*எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ ?*

222. தவறு தான், துண்டித்தது போதும்; இனியாவது மன்னித்திடு.
கண்கள் முறைத்தாலும் எனை நீ காணத் துடிப்பது தெரியும்.
காணும் வரை உன நெஞ்சிலொரு பரபரப்பு இருப்பது எனக்குப் புரியும்.
பாராதிருப்பதும் பேசாதிருப்பதும் ஊடலின் வகையென்பதை உணர்கிறேன்.
கோபத்தில் நீ திட்டும் போதும் திவ்யமாய்த் தெரிவதை ரசிக்கிறேன்.
காலம் முடியும் வரை காத்திருப்பேன், என்ற போதிலும் ... நீயும் கொஞ்சம் ...
இன்னும் கொஞ்சம் இறங்கி வாயேன்,
மயிலே குயிலே மானே தேனே
*பொன்மானே கோபம் ஏனோ ?*

221. கோசலை உதரத்தில் உதித்தவன் கோதண்டம் கையிலேந்தியவன்.
போகம் துறந்து தேகம் நோக யாகம் காத்து யோகம் பெற்றவன்.
மைதிலி மைவிழி கசிய மாயமான் பின் ஓடி மனையாளை இழந்தவன்.
சுக்ரிவனுக்கு அடைக்கலம் வாலிக்கு மோட்சம் அளித்தவன்.
அனுமன் துணையேற்று ஆரண்யம் கடந்து  இலங்கை சென்றவன்.
இராவணன் இரா வண்ணம் அதம் வதம் செய்து வெற்றி கண்டவன்.
*
அவனை எண்ண தீய எண்ணங்கள் நெஞ்சில் நுழையாதே.
அவன் பெயர் சொல்ல நற் சிந்தனைகள் நாளும் வசப்படுமே.
அவன் பாதம் பணிய நீங்கும் நம் பாவமே
*ராம நாமம் ஒரு வேதமே*



220. குளித்தபின் கண்ணாடியில் உன் பெயர் ஏன் எழுதுகிறேனோ ?
சாப்பிடும் தட்டில் பருக்கையால் உன் முகம் ஏன் வரைகிறேனோ ?
நிற்கையிலும் நடக்கையிலும் உன் ஞாபகம் ஏன் வருதோ ?
இப்போதென்ன செய்வாய் என்று எப்போதும் ஏன் சிந்திக்கிறேனோ ?
என் கற்பனைகளெல்லாம் உனைச் சுற்றியே ஏன் சுழலுதோ ?
கண்ணாடி முன் நிற்கையில் உன் முகம்  பின்னால் ஏன் தெரியுதோ ?
*மாலை கருக்கலில்  சோலைக் குயிலொன்னு ஏன் பாடுதோ ?*

219. பார்த்ததும் பற்றிக்கொண்டதெல்லாம் பழைய கதை
பிடித்துப் போய் சுற்றி வந்ததெல்லாம் அப்போது
இப்பொழுதெல்லாம் நிறைய முறைத்துக் கொண்டாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதே பழக்கமாகிவிட்டது.
எதுகை மோனைப் பேச்சு மறைந்து  ஏட்டிக்குப் போட்டி ஆகிவிட்டது..
சரி சரி சண்டையெல்லாம் போதும்
சமாதானம் செய்து கொள்வோம்
இனியெல்லாம் சுகமே
இது *நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரமே*


218. தேனிதழ்
சிரித்த முகம்
மைதடவியக் கருவிழி
அடர்கூந்தல், இடையில் வாசப்பூக்கள்
மெல்ல வெளிப்படும் புன்னகை
உருண்டுத் திரண்ட உன் பெண்மை
அதைச்  சுமக்க முடியாதுக் குழையும் உன் சிற்றிடை
இன்னும்.. இன்னும்
எனைக் கட்டியிழுக்கிறாய்
*கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்*

No comments:

Post a Comment