Saturday, October 8, 2011

பக்த பிரகலாதன் - 5

                                    வரத்தால் வந்த வலிமை

தர்ம காரியங்கள்
தலை தூக்கினால்
தெய்வ பலம் கூடுமென்பதால்
தர்ம காரியங்கள் அனைத்தையும்
தடுத்து நிறுத்தினான்;
தெய்வ சக்தி குறைய
வழி பண்ணினான்;

நாராயணனை
நமஸ்கரிப்பவர்களை எல்லாம்
நசுக்கினான்;
ஏன் என்று கேள்வி கேட்டவர்களை
எல்லாம்
எரியும் நெருப்பில் எரித்து பொசுக்கினான்;
நல்லவர்களை எல்லாம்
சிறைபடுத்தினான்;


எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை
தனக்குண்டு என்று
பறை சாற்றினான்;

நானே இறைவன்,
எனக்கே ஆராதனை, அபிஷேகம்
என் மந்திரமே எங்கும் முழங்கவேண்டும்
என்று அறிவித்தான்;


     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;
     இரண்யகசிபே
     இறைவன்;
     இல்லை
     இவனுக்கு இணை
     இன்னொருவன்;
     
     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;
     எல்லா வல்லமையும் நிறைந்தவன்;
     எதையும் செய்து முடிப்பவன்;
     அனைத்தும் அறிந்தவன்;
     அவனை வெல்பவன் எவன்;
     ஓம் நமோ இரண்யகசிபோ நமக;



பாவச் செயல் எங்கும் பரவ,
பசுக்கள் உயிரோடு எரிக்கப்பட,
வயல் வாழ் நிலங்கள் எல்லாம் பாழ்படுத்தப்பட,
ஆசிரமங்கள் தீயில் வெந்து நாசமாக,
நல்லோர் எல்லோரும் பயத்தில் அலற,

அச்சம் கொண்டு தேவர்கள் நாராயணனைத் தஞ்சமடைய,
அத்தனிடமிருந்து
அபயம் தருவான் பிரகலாதன் என்று
அறிவித்தான் பரந்தாமன்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment