Tuesday, January 28, 2020

கம்பராமாயணம் 20


1253.   கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
            தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா
            ஆய தன் அன்னை அடித் துணை சூடி
            தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

கேகயன் மகளான கைகேயி யின்
ஒளிமிகுந்த பாதங்களை
தாய் கோசலை யிடம் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும்
அன்போடு தாழ்ந்து வணங்கி,
அன்னை கோசலையின் அடிகளை தலையில் சூடி,
உள்ளத்தில் ,தூயவளான சுமித்திரையை வணங்கினர்
இராமனும் சீதையும்.


1259.    வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
             எள்ளல் இல் கொற்றவன் 'எம்பி அளித்த
             அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
             கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான்.

அள்ளித் தரும் வள்ளல் இராமனின் தம்பியர்க்கு 
தவறேயிழைக்காத ஜனகன்
'என் தம்பியரின், செந்தாமரை மலரொத்த மங்கையரை 
மணம் செய்துகொள்ளும்' என்று
தசரதன் முதலிய உறவினர்களோடு நிச்சயித்தான்.


பரசுராமப் படலம் 

1266.   முன்னே நெடு முடி மன்னவன் 
                முறையில் செல, மிதிலை
            நன் மா நகர் உறைவார் மனம்
                நனி பின் செல, நடுவே
            தன் ஏர் புரை தரு தம்பியர்
                தழுவிச் சேலை மழைவாய்
            மின்னே புரை இடையாளொடும்
                இனிது ஏகினன் வீரன்.

முறைப்படி மகுடம் சூடிய தசரதன் முன்னே செல்ல,
மிதிலை நகர் மக்கள் மனம் பின்னே தொடர,
நடுவில், தன் அலகையொத்த தம்பியர் அருகில் தொடர
மின்னலிடையாள் ஜானகியோடு
மாவீரன் இராமன் அயோத்தி நோக்கி புறப்பட்டான்.


 1280.  'இற்று ஒடிய சிலையின் திறம் 
                  அறிவென்; இனி யான் உன் 
             பொன் தோள் வலி நிலை சோதனை 
                   புரிவான் நசை உடையேன்;
              செற்று ஓடிய திரள் தோள் உறு 
                    தினவும் சிறிது உடையேன்;
             மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது 
                  என் வரவு' என்றனன் உரவோன்.

ஏற்கனவே உடைந்த பழைய வில் அது என்பதை அறிவேன்;
உன் தோள் வலிமையை சோதிக்க விரும்புகிறேன்;
பல அரசர்களை வென்று கொன்ற திமிர் உடையவன்;
வேறு வேலை ஏதுமில்லை, இங்கு வந்ததற்கு இதுவே நோக்கம்,
என்றுரைத்தான் வலிமை நிறைந்த பரசுராமன்.


1297.   என்றனன் என்ன, நின்ற 
                   இராமனும் முறுவல் எய்தி 
             நன்று ஒளிர் முகத்தன் ஆகி     
                  'நாரணன் வலியின் ஆண்ட 
             வென்றி வில் தருக!' என்ன 
                 கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத் 
            துன்று இருஞ் சடையான் அஞ்ச 
                  தோளுர வாங்கி, சொல்லும்:

பரசுராமன் போருக்கு சூளுரைக்க  
அத்தனையும் கேட்டு, 
இராமன் ஒரு புன்னகை பூக்க  
முகம் பொலிவு பெற,
'நாராயணன் தன் வலிமையினால் பயின்றந்த 
வில்லைத் தருக' எனக் கேட்க,
பரசுராமனும் தர,
அதனை வாங்கிக்கொண்டு 
சடைமுடி அணிந்த பரசுராமன் அஞ்சுமாறு 
தோள் வரை இழுத்து, வளைத்து 
இலக்கு கேட்டான்.


1307.   பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
            வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை 
            சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ 
            நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்.

(பரசுராமன் அங்கிருந்து அகன்றதும்)
பூ மழை பொழிந்தனர் அங்கு வந்த தேவர்கள் அனைவரும்.
அழகிய வேற்படையுடைய வருண தேவனை நோக்கி 
'பெருமையுடைய இந்த வில்லை பாதுகாத்திடு' என்று இராமன் கூறி,
சேனைகளின் ஆரவாரத்திற்கிடையில் 
தூய நீர் வளம் நிறைந்த அயோத்தி மாநகரம் வந்து சேர்ந்தான்.


பாலகாண்டம் நிறைவுற்றது 

( தொடரும் )

No comments:

Post a Comment