Tuesday, January 7, 2020

கம்பராமாயணம் 3



35.   தண்டலை மயில்கள் ஆட
           தாமரை விளக்கம் தாங்க
        கொண்டல்கள் முழவின் ஏங்க,
           குவளை கண் விழித்து நோக்க,
        தெண் திரை எழினி காட்ட, தேம்
           பிழி மகர யாழின்
        வண்டுகள் இனிது பாட
           மருதம் வீற்றிருக்கும் மாதோ.


மயில்கள் ஆடுது 
தாமரை விளக்கு ஏந்தி நிற்குது 
மேகங்கள் மத்தள சத்தம் எழுப்புது 
குவளை மலர்கள் கண் விழித்துப் பார்க்குது 
நீரில் அலைகள் திரைச்சீலையாய்த் தெரியுது 
மகர யாழிலிருந்து தேனிசை ஒலிக்குது 
வண்டுகள் இனிமையாய்ப் பாடுது 
இவை எல்லாவற்றுமிடையில் 
மருத நாயகி வீற்றிருப்பதாய்த் தோன்றுது 

37.    நீரிடை உறங்கும் சங்கம்; 
            நிழலிடை உறங்கும் மேதி; 
        தாரிடை உறங்கும் வண்டு; 
           தாமரை உறங்கும் செய்யாள்;
        தூரிடை உறங்கும் ஆமை;
           துறையிடை உறங்கும் இப்பி;
        போரிடை உறங்கும் அன்னம்;
           பொழிலிடை உறங்கும் தோகை.

நீரில் மிதந்தபடி உறங்கும் சங்கு
மர நிழலில் உறங்கும் எருமை
மலர் மாலைகளில் உறங்கும் வண்டு 
தாமரை மேல் உறங்கும் திருமகள் 
சேற்றில் உறங்கும் ஆமை 
நீர் நிலைகளில் உறங்கும் சிப்பி 
நெற்போர்களில் உறங்கும் அன்னப்பறவை;
சோலைகளில் உறங்கும் மயில்;

(எந்தத் தொந்தரவுமின்றி 
எல்லாம் உறங்க,
ஏதுவான கோசலநாடு)

69.    கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா
         நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
         பிலம் சுரக்கும்; பெறுவதற்கு அரிய தம்
         குலம் சுரக்கும், ஒழுக்கம் - குடிக்கு எலாம்.

கோசல நாட்டு மக்கட்கு 
கப்பல் வாணிபம் காசு ஈட்டித் தரும்,
கணக்கில்லா செல்வம் நிலம் தரும்,
நல்ல வகை ரத்தினம் சுரங்கம் தரும்,
பெறுதற்கு அரிய ஒழுக்கம் குலம் தரும்;

( தொடரும் )


No comments:

Post a Comment