Thursday, January 16, 2020

கம்பராமாயணம் 10


தாடகை வதைப் படலம்

362.   சூடக அரவு உறழ்  சூலக் கையினள்;
          காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்
          ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் !
          தாடகை என்பது அச் சழக்கி நாமமே;

பாம்பை அணிகலனாய் சூடியிருப்பாள்
கையில் சூலம் வைத்திருப்பாள்;
இக்காட்டில் வசிப்பவள்;
ஆண்கள் உனைக் கண்டால்
பெண்தன்மை விரும்பத் தகுந்த தோளாற்றலுடையவனே,
தாடகை என்ற பெயர் கொண்டவள் அந்தக் கொடியவள்;


372.  'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும் 
         கெட, கருவறுத்தனென்; இனி சுவை கிடக்கும் 
         விடக்கு அரிது எனக் கருதியோ? விதிகொடு உந்த
         படக் கருதியோ? - பகர்மின் வந்த பரிசு !' என்றே.

எனை வெல்வது அரிது, 
என் காவலுக்குட்பட்ட இடம் இது 
இங்கு எல்லாம் கெட நாசப்படுத்திவிட்டேன்; 
சுவையாய் வேறேதும் கிட்ட வழியில்லாது செய்துவிட்டேன்; 
அதனால் தான் இங்கு வந்தீர்களோ,
இல்லை விதி உங்களை இங்கு கொணர்ந்து சேர்த்ததோ?
எனக்குப் பரிசாக வந்தவர்களே, சொல்லுங்கள் - என்றாள் தாரகை.


374.  அண்ணல் முனிவற்கு அது
                    கருத்து எனினும், 'ஆவி
          உண்' என வடிக் கணை
                    தொடுக்கிலன்; உயிர்க்கே
          துண்ணெனும் வினைத்தொழில்
                    தொடங்கியுளளேனும்
           'பெண்' என மனத்திடை
                     பெருந்தகை நினைத்தான்.

ஆற்றல் நிரம்பிய அம் முனிவர்க்கு
அவளைக் கொல்லும் எண்ணம் இருந்தாலும்,
அரக்கி இறக்கும் வண்ணம் கூரிய கணை விட
முயற்சிக்கவில்லை இராமன்.
உயிர்கள் அஞ்சி நடுக்குமாறு
தொழில் தொடங்கியுள்ளாள் எனினும்
'பெண்' ஆயிற்றே என்று எண்ணினான் இராமன்.



382. ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
         சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
         ஆறி நின்றது அரன் அன்று; அரக்கியைக்
         கோறி' என்று எதிர் அந்தணன் கூறினான்.

அழிவில்லாத நல்லறமே உனக்கு எடுத்துரைத்தேன்.
இவள் மேல் உள்ள கோபத்தில் சொல்லவில்லை.
இவ்வாறு நீ தயங்கி நிற்பது தருமம் அல்ல;
இந்த அரக்கியைக் கொல் என்று முனிவன் கூறினான்.



390.  பொடியுடைக் கானம் எங்கும்  
              குருதிநீர் பொங்க வீழ்ந்த 
          தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்
              தாடகை, தலைகள்தோறும் 
          முடியுடை அரக்கற்கு, அந் நாள் 
               முந்தி உற்பாதம் ஆக,
           படியிடை அற்று வீழ்ந்த 
                வெற்றிஅம் பாதகை ஒத்தாள்.


புழுதி நிறைந்த அந்த காடு முழுவதும் 
ரத்த ஆறு ஓடுமாறு,
தடித்த உடல், கோரைப் பற்கள்,
குகை போன்ற வாய் கொண்ட 
தாடகை விழுந்தாள்.
தலைகள் தோரும் கிரீடம் உடைய அரக்கன் (ராவணன்)
பின்னால் அழிவதற்கு அறிகுறியாக 
ஒடிந்து விழுந்த வெற்றிக் கொடியை 
ஒத்திருந்தாள்.


( தொடரும் )

No comments:

Post a Comment