Tuesday, February 4, 2020

கம்பராமாயணம் 27




தைலம் ஆட்டு படலம்

1857.
'பூண்ட பேர் அன்பினாரைப்
     போக்குவது அரிது; போக்காது
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது;
     எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை
     ஓர்ந்து என்னை, "அங்கே
மீண்டனன்" என்ன மீள்வர்; இது
     நின்னை வேண்டிற்று' என்றான்.

(தமைப் பின்தொடர்ந்து வந்த நகர மக்கள் இரவில் உறங்குகையில்)
'நம்மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களை
திரும்பப் போகச் சொல்வது கடினம்,
இவர்கள் இன்னும் தொடர்ந்து வனத்தினுள் வர,
ஏதேனும் நேரும் துயரம்;
என் தந்தை போன்ற சுமந்திரனே,
நீ இப்பொழுதே தேரைத் திருப்பவேணும்.
தேர் சக்கரம் திரும்பின தடம் பார்த்து
நாம் நாட்டிற்குத் திரும்பிவிட்டோம் 
என்றிவர்கள் எண்ணக்கூடும்.
அதனால் இவர்களும் நாடு திரும்பக்கூடும்;
இந்த உதவியை நீங்கள் செய்யவேணும்'
என்றான் இராமன்.



1898.
நாயகன் பின்னும் தன் தேர்ப் 
   பாகனை நோக்கி, 'நம்பி
சேயனோ? அணியனோ?' என்று
   உரைத்தலும், தேர் வலானும்,
'வேய் உயர்  கானம், தானும்,
   தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன் என்றான்; என்ற
   போழ்தத்தே ஆவி போனான்.

தசரதன் தன் சாரதி சுமந்திரனைப் பார்த்தான்.
'இராமன் தூரத்தில் வருகிறானா, இல்லை அருகில்
வந்துவிட்டானா?' என்று கேட்டான்.
'மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்குள்
தம்பியோடு, மைதிலையோடு சென்று விட்டான்'
என்று சுமந்திரன் சொன்னான்.
அந்நிமிடமே மன்னன் உயிர் நீத்தான்.


1914.
'செய்யக் கடவ செயற்கு உரிய   
    சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது 
    இகவா' என்ன, இயல்பு எண்ணா 
'மையற் கொடியாள் மகன் ஈண்டு 
    வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து அவனைத் 
    தயிலக் கடலின்தலை உய்த்தான்.

(தசரதன் இறந்தபின்)
செய்தற்குரிய கடமைகளைச் செய்வதற்கு 
உரிமை உள்ள குமாரர்கள் இங்கு இல்லை;
வர வேண்டியது வராது போகாது என்ற 
இயல்பைக் கருத்தில் கொண்டு,
மன மயக்கம் கொண்ட 
கொடியவள் கைகேயி யின் மகன் வந்தபின் 
செய்யவேண்டியவைகளை செய்து முடிப்போம்
என்று எண்ணி, அதுவரை 
பெண்கள் கடலில் கிடந்த தசரதனை 
தயிலக்கடலில் இட்டு பத்திரப்படுத்தினான் வசிஷ்டன்.


கங்கைப் படலம் 

1937.
எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்;
வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை 
கதிர் கொள் தாமரைக் கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார்.

(காட்டினுள் வரும் சீதை, இராமன், இலக்குமணனை)
மூங்கிலால் ஆன தண்டத்தையுடைய முனிவர்கள்
எதிர்கொண்டு வரவேற்றனர்,
துதித்து, இனிய இசை பாடி ஆடினர்;
வீரன் இராமனை, 
ஒளி படைத்த தாமரைக் கண்களை உடையவனை,
பாற்கடல் தந்த அமுதத்தை 
தம் கண்களால் பருகினர்.


1945.
வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு 
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன 
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.

அவள் சிற்றிடைக்கு முன் தோற்று 
வஞ்சிக்கொடி நாணி ஒதுங்க,
அழகிய அவள் நடைக்கு அன்னப்பறவை 
தோற்று பயந்து பின்னடைய 
பாதம் போன்ற தாமரை தண்ணீரில் ஒளிந்துகொள்ள 
கயல் மீன்கள் மறைய 
பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய 
சீதை கங்கையில் நீராடினாள்.

( தொடரும் )




No comments:

Post a Comment