Friday, February 7, 2020

கம்பராமாயணம் 30



பள்ளிபடைப் படலம்

(இதற்கிடையில் இராமனின் முடிசூட்டு விழா செய்தியோடு
தூதுவர் பரதனை சந்தித்தனர்)

2109.
'எழுக சேனை' என்று ஏவினன்; எய்தினன்
தொழுது; கேகேயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியோடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.

'தன்னுடன் வந்த சேனை யாவும் அயோத்தி கிளம்புக'
என்று கட்டளையிட்டவனாய்,
கேகேய மன்னன் யுதாசித்தை வணங்கி தொழுது
அவர் சொன்ன செய்தியோடு,
குதிரைகள் பூட்டிய தேரில்
நல்ல நாள், நேரம் என்றெதைப் பற்றியும் சிந்திக்காது,
தம்பி சத்ருக்கனனோடு கிளம்பினான், பரதன்.

2120.

ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோல்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே.

வயல்களில் கலப்பைகள் இல்லை;
இளைய ஆடவர் தோள்களில்
மலர்மாலைகள் இல்லை;
குளிர்ந்த வயல்களில் நெற்கதிர்கள் இல்லை;
நீர் இல்லாததால் தாமரை இல்லை;
தாமரை இல்லாததால், திருமகள்
கோசல நாட்டை விட்டகன்றாள்.


2145.
ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,
'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கை தொழ
வானகம் எய்தினான்; வருந்தல் நீ' என்றாள்.

(கோசலநாடு களையிழந்து இருப்பது கண்டு)
பரதன் வினவ,
எதற்கும் கலங்காத திட சித்தம் கொண்ட கைகேயி
'அசுரர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய சேனை உடைய,
தேன் சொட்டும் மலர்மாலை அணிந்த தசரதன்,
தேவர்கள் கை கூப்பித் தொழ
விண்ணுலகத்தை அடைந்தான்,
நீ இதைக் கேட்டு வருந்த வேண்டாம்' என்றாள்.



2160.
அவ் உரை கேட்டலும், அசனிஏறு என 
வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
'தெவ் அடு சிலையினாய்! தேவி தம்பி என்று 
இவ் இருவோரோடும் கானத்தான்' என்றாள்.

(இராமனைக் காண வேண்டும் என்று பரதன் கூற)
பரதன் சொன்னதைக் கேட்டதும் 
பேரிடி போல இருந்ததை உணர்ந்து,
கொடுஞ்சொற்களைக் கூற வல்ல கைகேயி 
தொடர்ந்து  பேசினாள்,
'பகைவரைக் கொல்லும் வில்லுடைய பரதா!
தன்  மனைவி, தம்பி இருவரோடும் 
இராமன் காட்டில் இருக்கிறான்' என்றாள்.



2167.
சூடின மலர்க் கரம் சொல்லின் முன் செவி 
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று 
ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் 
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!

(கைகேயி தான் பெற்ற வரங்களைக் கூற)
தலை மேல் குவித்து வணங்கிய கைகள் 
காதினைப் பொத்திக்கொண்டன;
புருவங்கள் வளைந்து ஏறி இறங்கி கூத்தாடின;
மூச்சிலிருந்து நெருப்புக் காற்று வெளி வந்தன;
கண்கள் இரத்தத்தைக் கக்கின;

2187.
'ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித் 
 தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர 
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம் 
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன்'. 

'உடன்பட்டு, பாவியான உன் வயிற்றில் பிறந்த 
தீராப் பாவம் நீங்க,
என் துயரம் போக்கிக்கொள்ள,
அந்த அறக்கடவுளே சாட்சியாகும்படி 
மூன்று லோகங்களும் காணும்படி 
நான் அருந்தவம் செய்ய இருக்கின்றேன்'
என்றான் பரதன். 

( தொடரும் )




No comments:

Post a Comment