Wednesday, February 5, 2020

கம்பராமாயணம் 28


குகப் படலம்

1953.
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

( இராமன் முனிவர்களோடு அமர்ந்திருக்கையில் )
அந்த நேரத்தில்,
ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்
போர் புரிவதில் வல்லவன்,
குகன் என்ற பெயருடையவன்,
தூய்மையான கங்கையில்
வெகுகாலமாய் படகு செலுத்தும் வேலை செய்பவன்
பகைவர்களை அழிக்கும் வில்லை ஏந்தியவன்;
கல் போன்ற திரண்ட தோள் உடையவன்
( அவன் இராமனைக் காண வந்தான்)


1963.
கூவாமுன்னம் இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

அழைக்கும் முன்னே, குகன் வந்துகொண்டிருக்கும்போதே
இலக்குவன் அவனிடம் 'நீ யார்?' என்று வினவினான்.
குகன் அன்போடு வணங்கினான்.
'தெய்வமே ! உன் திருவடிகளை வணங்க வந்தேன்,
கங்கையைக் கடக்க, ஓடம் செலுத்துபவன்,
வேட்டுவச் சாதியினன்,
நாய் போன்று,   நான் உம் அடிமை' என்றான்.


1964.
'நிற்றி ஈண்டு' என்று,  புக்கு 
     நெடியவன் - தொழுது, தம்பி 
'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
      நிமிர்ந்த கூட்டச் 
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
    தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் 
     ஒருவன்' என்றான்.

'இங்கேயே இரு' என்று குகனிடம் சொல்லிவிட்டு,
இலக்குவன் உள்ளே சென்றான்.
இராமனை வணங்கினான்.
அரசே, உன்னைக் காண ஒருவன் வந்திருக்கிறான்,
நிறைய சொந்த பந்தம் சூழ நிற்கிறான்,
உள்ளத்தால் தூயவன்;
தாயை விட நல்லவன்; 
கரைபுரண்டோடும் கங்கையைக் கடக்க உதவும் 
மரக்கலங்களுக்குத் தலைவன் 
குகன் என்ற பெயருடையவன்'
என்று சொன்னான்.


1967.
'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து 
   அன்பினால் அமைந்த காதல் 
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
   அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய எண்ணின் 
   பவித்திரம்; எம்மனோர்க்கும் 
உரியன; இனிதின் நாமும் 
   உண்டனெம் அன்றோ?' என்றான்.

அருமையானபொருட்கள்,
மகிழ்ச்சி பொங்க,
உள்ளத்து அன்பை உணர்த்துமாறு 
கொண்டுவந்துத் தருகிறாய் எனில்,
அவை அமிர்தத்தையும் விட சிறந்தவையன்றோ?
அன்பினால் தரப்படும் எதுவும் புனிதமானதே.
எம்போன்ற தவநெறி மேற்கொண்டவர்க்கும் ஏற்புடையதே;
நாமும் இதை ஏற்றுக்கொண்டு உண்டோமே, இல்லையா?
என்றான்.


1985.
'துன்பு உளதுஎனின் அன்றோ 
   சுகம் உளது? அது அன்றிப் 
பின்பு உளது; 'இடை மன்னும் 
   பிரிவு உளது' என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்;
   முடிவு உள்ளது என உன்னா 
அன்பு உள, இனி, நாம் ஓர் 
   ஐவர்கள் உளர் ஆனோம்;


'துன்பம் இருப்பதனால் தானே 
அதைத் தொடர்ந்து இன்பம் இருக்கிறது.
அதனால், இப் பிரிவிற்குப் பின்னர் 
இன்பம் இருக்கு;
இப்பிரிவையே மனதில் எண்ணியிருக்காதே;
முன்னர் இருந்தோம் நாங்கள் நால்வர்;
அன்பு இன்னும் தொடர்ந்திட, உன்னையும் சேர்த்து  
இன்றோடு ஐவர் ஆனோம்'
என்றான் இராமன். 



( தொடரும் )



No comments:

Post a Comment