Saturday, February 8, 2020

கம்பராமாயணம் 31



2190.
ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்,
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ!

ஆணழகன் பரதன் கைகேயி யின் இருப்பிடம் விட்டகன்று
கோசலை இருக்குமிடம் வந்தான்.
தரை பிளவுபடும்படி கீழே விழுந்து,
நிறம் மிக்க நீண்ட கைகளால்
கோசலையின் தாமரைப் பாதங்களைப் பற்றினான்.
கீழேயே கிடந்து அழுது புலம்பினான்.



2218.
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால், அழுது புல்லினாள்.

தன் மனத் தூய்மையை எடுத்துச் சொன்ன பரதனை,
அரச போகத்தைத் துறந்து
கானகம் நோக்கிப் போன இராமன்
திரும்பி வந்தது போன்று எண்ணி மகிழ்ந்தாள்.
அந்த இராமனிடத்தே வைத்த அன்போடு,
பரதனை அழுது தழுவிக்கொண்டாள்.


2231.
என்னும் வேளையில் எழுந்த வீரனை 
'அன்னை தீமையால் அரசன் நின்னையும் 
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே' என முனிவன் கூறினான்.

ஈமக் கடன் செய்யும் பொருட்டு எழுந்த பரதனை 
'உன் அன்னை செய்த தீமையால்,
துன்பம் மிகுதியால்,
அரசன் உன்னையும் துறந்து,
மகன் இல்லை என்று கூறிவிட்டு இறந்தான்'
என வசிட்டன் சொன்னான்.


ஆறு செல் படலம் 

2255.
'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச் 
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும் 
'நஞ்சினை நுகர்' என நடுங்குவாரினும் 
அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணினான்.

'இந்த உலகம் உன் அடைக்கலம்,
அரசபாரம் இனி நீ சுமக்கணும்'
 என வசிட்டன் சொன்னதும் 
'விடத்தை அருந்து' எனச் சொல்ல, 
அதைக் கேட்டவரை விட 
அதிகம் நடுங்கினான்,
பயந்து சோர்ந்தான்.
அருவி போல் கண்ணில் நீர் ஒழுக நின்றான் (பரதன்).


2264.
குரிசிலும் தம்பியைக் கூவி 'கொண்டலின் 
முரசு அறைந்து, 'இந் நகர் முறைமை வேந்தனைத் 
தருதும் ஈண்டு' என்பது சாற்றி, தானையை 
'விரைவினில் எழுக!' என விளம்புவாய்' என்றான்.

பரதன், தம்பி சத்ருக்கனனை அழைத்தான்.
மேகம் போன்று இடியென முழங்கும் 
முரசு அடிக்கச் சொன்னான்.
'இந்நகரின் மரபு படி வேந்தனாக வேண்டிய இராமனை 
அழைத்து வரப்போகிறோம்' என அறிவிக்கவும் சொன்னான்.
'சேனைகளை விரைவாகப் புறப்படும்படி சொல்'
என்றும் சொன்னான்.

( தொடரும் )





No comments:

Post a Comment