Sunday, February 9, 2020

கம்பராமாயணம் 32



கங்கை காண் படலம்


2308.
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
'துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?' என்று எடுத்த சீற்றத்தான்.

பரத சேனை, கங்கைக் கரையை நெருங்கிய பொழுது
'பவளம் உடைய கடலிலிருந்து நீரை முகந்த கரு மேகத்தைப்
போன்ற அண்ணன் இராமனோடு போர் செய்யவோ
இப்படை வந்திருக்கு?' என்று எண்ணி கோபப்பட்டான் - குகன்.


2311.
கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
'கிட்டியது அமர்' எனக் கிளரும் தோளினன்.

குகன் - .இடைக்கச்சில் உடைவாளை சொருகியவன்,
பற்களால் உதட்டை கடித்துக் கொண்டிருப்பவன்;
கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்;
விழியிலிருந்து தீப்பொறி பறக்க, பார்ப்பவன்,
உடுக்கையை உடையவன்,
ஒலி எழுப்ப ஊது குழலை வைத்திருப்பவன்;
'அருகில் வந்தது போர்' என்று எண்ணி மகிழ
எழும்பும் தோள்களை உடையவன்.


2332.
'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்
    அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கிறான்; தவ வேடம்
   தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
   திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
   இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.

'இவன் (பரதன்) என் நாயகன்
இராமனைப் போலவே இருக்கின்றான்,
அவன் அருகில் நிற்பவன் (சத்துருக்கனன்)
இலக்குவனைப் போல் இருக்கின்றான்;
தவ வேடத்தில் வேறு இருக்கின்றான்;
முடிவில்லாத துன்பத்தில் இருக்கின்றான்,
இராமன் சென்ற திசை நோக்கி வணங்குகிறான்.
பெருமான் இராமன் பின் பிறந்த தம்பியர்
தவறு செய்வாரோ ?' என்றெண்ணினான்.


2366.
கற்றத்தார் தேவரோடும் தொழ நின்ற
   கோசலையைத் தொழுது நோக்கி
'கொற்றத் தார்க் குரிசில் இவர் ஆர்?' என்று
   குகன் வினவ, 'கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
   உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றதால் பெறும் செல்வம், யான்
   பிறத்தலால் துறந்த பெரியாள்' என்றான்.

உறவினர்களும் தேவர்களும் வணங்க,
அங்கு நின்றிருந்த கோசலையை நோக்கி
'வெற்றிமாலை சூடிய பரதா, இவர் யார்?' என்று கேட்க,
'அரசர்கெல்லாம் அரசன் தசரதனின் முதல் மனைவி,
மூன்று உலகையும் படைத்த பிரம்மதேவனைப்
படைத்தவனைப் பெற்றெடுத்தவள்;
இவள் பெற்றிருக்க வேண்டிய பெருஞ்செல்வத்தை
நான் பிறந்ததால் இழந்த பெருமையுடையவள்'
(என்று பரதன் கோசாலையை குகனுக்கு அறிமுகம் செய்தான்)


( தொடரும் )

No comments:

Post a Comment