Monday, September 12, 2011

ஆடை அபகரணம் - 8

"கண்ணா,
குளத்திலிருக்கும் தாமரை எங்கள்
கால்களைக்
கட்டிப்படர்கிறது; அது
விடம் நிறைந்த
தேள் எங்களைச்
சுற்றுவது போல்
தோன்றுகிறது"
என்றே கூவினர்
கன்னியர்.

"குளம் விட்டு
மேலேற வேண்டியதுதானே"
என்றான் கண்ணன்.

"தண்ணீரிலிருக்கும்
தாமரை மலரிலிருந்து
தப்பிக்க எண்ணி
தரை ஏறினால்
தாமரை போன்றுன் கண்ணிலிருந்து
தப்பிக்க முடியாது
தாமோதரா"

"நீங்கள் வந்ததிலிருந்து
நானும் இந்த மரத்தில்
வந்தமர்ந்திருக்கிறேன்;
வண்டுகள் பூச்சி புழு இந்த
வன மரத்தில் ஏராளம்; அவையெல்லாமென்
உடலைக் கடிக்கிறதே; அவ்
வலியை எங்கே போய் நான் சொல்ல"

"எங்கள்
ஆடைகளை எடுத்துக்கொண்டு
அங்கு போய் அமர்ந்ததினாலே
அவ்வாறு கடி பட நேருகிறது கண்ணா,
அது உன் தவறே, எங்கள்
ஆடைகளை எங்கட்கு
அளித்து மரம் விட்டு இறங்கிவிடேன்"

"சரி சரி, என் வேதனையை நான்
சகித்துக்கொள்கிறேன்; ஆனால் உங்கள்
சங்கடங்களை என்னால்
சரி செய்ய இயலாது"

கண்ணனே தொடர்ந்தான்
"வேண்டுமென்றால் என் ஆடைகளை
எடுத்துத் தருகிறேன்,
எல்லாரும் ஏற்றுக்கொள்வீரா ?"
என்றே வினவினான்.

"உன் ஆடை
உடுத்திக் கொண்டு சென்றால்
கண்ணனின் ஆடை
கன்னி உன் இடையில் வந்தது
எங்கனம் என்று
ஏழாயிரம் கேள்விக்கணை
எடுப்பாள்
என் அன்னை"
என்றுரைத்தனர் எல்லாரும்.
தம் துணியையே
தமக்குத்
தரக் சொல்லி வேண்டினர்;

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment