Thursday, September 8, 2011

ஆடை அபகரணம் - 4

கேள்வி கேட்டு
கேசவனை வீழ்த்த
முடியாதென்று அறிந்த ஆண்டாள்
பாசத்தால்
பரந்தாமனைப்
பணிய வைக்க எண்ணினாள்;

“ஆயர்பாடியின்
அணிகலனே,
அனைவராலும்
ஆராதிக்கப்படுபவனே,
அழகிய மாலை பல
அணிந்தவனே,
உன்போல் புகழ் பெற்றோர்
யாரும் இல்லை இங்கு;
சிறியப் பிள்ளைகள் நாங்கள்;
எங்கள் பிழை பொறுத்தருள்வாய்;
எங்கள் ஆடைகள்
எமக்களித்தால்
விரைந்து நாங்கள்
விரதம் செய்து எங்கள்
வழி செல்வோம்,
காப்பாற்று
கேசவா”
கோதை கெஞ்சினாள்.

"என்னைப் பற்றி
எல்லாம் அறிந்திருக்கிறாய், இருந்தும்
ஏன் என்னைத் தொட அஞ்சுகிறாய் ?"

"உலகளந்த உத்தமா,
உன்னோடு இணைய
நேரம் இன்னும்
வரவில்லை".

"சரி, அந்நேரம்
வரும்வரை நான் ஆடையைத்
தரப்போவதில்லை" என்றே
மீண்டும்
மரத்தின்
மீது ஏறினான்
மாதவன்.

"கையிலிருக்கும் ஆடைகளைக்
கொடுத்துவிடு கண்ணா".

ஆடைகளை மரக்
கிளையில் வைத்துவிட்டு
என்னிடம்
எங்கிருக்கு உங்கள் ஆடை
என்றே வினவினான்
ஏதுமறியாதவன் போல்
எசோதை மைந்தன்.

"கிளையிலிருக்கும்
எங்கள் ஆடைகளை
எல்லாம் எடுத்துத் தா"
என்றே கெஞ்சினர்
எல்லோரும்;

                                                                        ( லீலை தொடரும் )

No comments:

Post a Comment