Friday, December 9, 2011

வள்ளித் திருமணம் - 6

                                    கந்தனும் கலகப் பிரியனும்

கந்தா,
காலை வேளை
தங்கள் வேலை முடித்து வர விரைந்தேன்;
கண்டேன் குறத்தி மகளை, இந்தக்
குமரன் மனம் கவர்ந்தவளை;
அடையர்க்கறியக் கனி அவள்;
ஆறுமுகனுக்கேற்றவள்;

என் சொல் ஏதும் எடுபடவில்லை
ஏந்திழையாளிடம்;
எம்பெருமான் செல்ல வேண்டும்;
அவளை வெல்ல வேண்டும்;
வள்ளி முருகனாய்
விரைந்திங்கு வர வேண்டும்;

‘நாரதரின் சொல் எடுபடாதுபோனதா ?’
வினவினான் வேலன்;
‘பொல்லாப் பெண் அவள்;
யாரும் எளிதில் நெருங்க முடியாதவள்;’
விளக்கினார் நாரதர்;
முருகன் கிளம்பினான்; தான்
முன் தந்த வாக்கை
நிறைவேற்ற விரும்பினான்;

                                    முருகனும் வள்ளியும்

முருகன்
வள்ளியின் இருப்பிடம்
வந்தடைந்தார்;
வேடவப் பெண்ணைப்
பார்க்க செல்கையில்
வேடவனாய்த் தன்
உருவத்தை மாற்றிக்கொண்டார்;

'வேடவப் பெண்ணே,
வேல் போன்ற கண்ணே'

'அதென்னையா, கண்ணே என்று
அழைக்கிறீர்'

'சரி, வேல் போன்ற கண் கொண்டப் பெண்ணே'

'என்ன வேண்டுமுமக்கு ? யார் நீர் ?'

'பாதை மாறி வந்ததே மான்,
என் மான்,
துள்ளித் துள்ளி வந்தப்
புள்ளி மான்,
பார்த்தாயா பாவையே'

'மானைத் தேடித் தேடியே ஸ்ரீமான்
பெருமான் தன் மட* மானைத் தொலைத்தார்;
நீ எம்மாத்திரம்; எப்படியிருக்கும் உம்மான் ?'

தான் தேடி வந்த
மானைப் பற்றிப்
பெண் மானிடம் சொன்னார்
முருகப் பெருமான்.
____________________________________________________
*மட - வீடு

                                                                        ( இன்னும் வருவாள் )

No comments:

Post a Comment