மழை தரும்
வருணனே !
எங்களைக்
கைவிடாய்;
கடலுள் புகுந்து
நீர் முகர்ந்து 
கண்ணனின் கருத்த நிறம் போல்
கருமேகமாய் மாறி,
பத்மநாபன் கைச்சக்கரம் போல்
மின்னி,
வலம்புரிச்சங்கு போல்
சத்தமெழுப்பி,
சாரங்கன் வில் போல்  
தாமதிக்காது 
சரமழையாய்ப்
பூமியில் பெய்து
உலகில் எல்லாரும் வாழ்ந்திட 
வழி செய்வாய்,
நாங்களும் மார்கழி 
நீராடி 
மகிழ்ந்திடுவோமே !!!
மாயவித்தை பல செய்யும் நம்
மன்னவனை,
மதுரை வாழ் மைந்தனை,
தூய்மையான யமுனையின் தலைவனை,
ஆயர்குலத்தின்
அணி விளக்காய் 
அமைந்தவனை,
தாய்க்குச் சேயாய்ப் பிறந்த
தாமோதரனை,
தூய்மையாய் நீராடி வந்து
தூய மலர் தூவித் தொழுது,
புகழ் பாடி, சிந்தித்திருந்தால் - நம் 
பிழை எல்லாம் 
பொருத்தருள்வான்,
பின்னாளில் தோன்றும்
தீயவைகளைத்
தீயில் 
தீய்த்து
துன்பம் நேராது 
துணையிருப்பான்.
இதை உன் 
எண்ணத்தில்
கொள்வாய் !!!
பறவைகள்
புறப்பட்டன கூவியே,
பார்க்கவில்லையோ நீ ?
பிள்ளாய் எழுந்திடு;
பேயாய் வந்தவளைக்
கலங்கடித்து 
வீழ்த்தி,
பாம்பே பாயாய்ப்
பாற்கடலில் 
படுத்துறங்கும்
பரமனைத் தன்
உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும் 
அரி என்ற அவன் நாமத்தை
மெல்ல ஓதுவது
உள்ளம் குளிர்விக்கும் - இதை
உணர்ந்து நீ 
எழுந்து வாராய் !!!
No comments:
Post a Comment