Tuesday, November 8, 2011

உத்தவ கீதை - 5

அக்னி, தன்னை
அண்டியோரையெல்லாம்
எரித்துச் சாம்பலாக்கும்;
அதனதன் வடிவேடுத்தே
அக்னி அவைகளைக் கரிக்கும்;
அதுபோல் ஆன்மாவும்
ஆக்கையின் வடிவமே கொள்கிறது;
அவரவர் எண்ணம் போல் வளர்ந்து
அந்தியில் அழிக்கிறது;
அக்னி எனக்கு அளித்த பாடமிது;

சந்திரன்
சில காலம் வளர்கிறது,
சில காலம் தேய்கிறது,
இது
நிலவு காரணமில்லாமல்
நிகழும் மாற்றம்;
சூரியஒளி படும்அளவே கொண்டே
அந்த நிலவின் தோற்றம்;
அதுபோல் ஒளிர்வது, மறைவதெல்லாம்
ஆக்கையின் குணங்களே அன்றி
ஆன்மாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை
இது
நிலவு எனக்கு
சொல்லித் தந்தப் பாடம்;

சூரியன் நீரைச்
சுட்டு மேகமாய் மாற்றுகிறது;
பின் அதைக் குளிர்வித்து
மழையாய்ப் பெய்கிறது;
அதுபோல் ஞானியர்
கல்வி கற்று, ஞானம் பெற்று
மற்றவர்க்கு மழை போல் வழங்க வேண்டும்;
சூரியன் எனக்குச்
சொல்லித் தந்தது;

பந்த பாசத்தில் ஒட்டாது
பழகி விலக வேண்டுமென்பது,
பந்த பாசத்தால் ஒட்டி உறவாடி
உயிரிழந்த புறா ஒன்று எனக்கு
உணர்த்தியப் பாடம்;

உணவு தேடித் தான் செல்லாது,
கிட்டிய உணவை உண்டு வாழும்
மலைப் பாம்பு;
உணவு கிட்டாது போனால்
உண்ணாது வாழும்;
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு,
கிட்டாதது பின் செல்லாதிருக்கும் ஞானம்
மலைப் பாம்பு சொல்லித் தந்தது;

கடல்,
பரந்து விரிந்து உள்ளது;
மழைக் காலத்தில் ஆறுகள்
கலப்பதினால் அளவு நீள்வதில்லை;
வெயில்காலத்தில் ஆறுகள்
காய்வதினால் அளவு குறைவதில்லை;
அதுபோல் ஞானியர்
இன்பம் வருகையில் துள்ளாது,
துன்பம் வருகையில் துயலாது,
இருக்கவேண்டுமென்பது
கடல் தந்த பாடம்.

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment