Thursday, November 17, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 3

மிருகங்களின் தோல்
மற்றும் இதர பாகங்களைக் கொண்டே
சீராக அலங்கரிக்கப்பட்டான்
சிறுவன் திண்ணன்;
காட்டுப் பன்றிகளையும்
காட்டு நாய்களையும்
ஓடிப் பிடித்து
விளையாடி மகிழ்ந்தான்;
வில் வித்தையும் மற்ற கலைகளையும்
விவரித்தான் கற்றுத்தந்தான்
திண்ணனுக்கு அவன் அப்பன்;

கலையாவும் கற்றத் திண்ணன்
காவலாய் நின்றான் அவன் குலத்திற்கு;

நாலு திசைகளிலும் பறை அறிவித்தான்
நாகன்,
திண்ணனே
தனக்கடுத்து நாடாளும்
தலைவன் என்று; அதனை நிரூபித்தான்
திண்ணனும் பல மிருகங்களைக் கொன்று;

விலங்குகளின் தொல்லை மிகும்
வேளைகளிலெல்லாம்
வேட்டைக்குக் கிளம்புவதே
வீரன் திண்ணனின் வேலை;

ஒருநாள் அதுபோல்
ஒருசில வேடவரோடு
வேட்டையாடப் புறப்பட்டான்
திண்ணன்;
வேடவர்களின்
மன்னன்;

காட்டு மிருகங்கள்
கரடி புலி
காட்டுப் பன்றி எனக்
கண்ணில் கண்டவற்றையெல்லாம்
கொன்று குவித்தனர்;
அம்புகளிலிருந்துத் தப்பிப் பிழைக்க
அனைத்து மிருகங்களும்
ஓடி ஒளிந்தன;

ஒரு காட்டுப் பன்றி,
ஓடியது ஓடியது ஒளிந்து ஒளிந்து ஓடியது;
திண்ணனும் வேறு இருவரும்
துரத்தினர் துரத்தினர் விடாது துரத்தினர்;

திண்ணன் துரத்த
பன்றி ஓடிய அந்த இடம்
காலஹஸ்தி மலை ஆகும்.
மலையில் ஒரு மரத்தின் கீழ்
அந்தப் பன்றி வந்து நின்றது;
அம்பு விட்டான்;
அந்தப் பன்றியைக் கொன்றான்;
அகோர பசி ஏற்பட்டதால்
அந்தப் பன்றியைச் சமைக்க
ஆணையிட்டான்; மலையின்
அடுத்தப் பக்கத்தில் பொன்முகலி
ஆற்றில் நீர் எடுத்து வர திண்ணனும்
அவனோடு இன்னொருவனும் வந்தனர்;

நீர் எடுக்க வந்தவன்
விழியில் விழுந்தது, மலையில்
உச்சியில் இருந்த
குடுமித்தேவர் ஆலயம்;
குடுமித்தேவன் என்ற பெயரில் அங்கு
குடிகொண்டவன் அந்தப் பரமசிவன்;

ஏதோ ஒரு உணர்வு
எங்கிருந்தோ உந்த
எழுந்து நடந்தான் திண்ணன்,
சிவாலயம் இருந்த திசை நோக்கி,
எம்பெருமான் சிவனை தரிசிக்க வேண்டி;

                                                                        ( கதை தொடரும் )

No comments:

Post a Comment