Sunday, August 7, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 6

பிறர் துன்பம் பாராக் கண்ணன்

கண்ணனைக்
காண விரும்பாது
தானிருந்த இடத்திலேயே
தனித்திருந்தால் ராதை;
தோழி இதனையுணர்ந்து
தூது சென்றால் மீண்டும்
துவாரகை மன்னனிடம்;

தந்திரக் கண்ணா,
மான் விழி மங்கை ராதை,
சோகம் சூழ்ந்த நிலையில்
சோர்ந்திருக்கிறாள்;
உன்னோடிருந்த எல்லநேரங்களையும்
உள்ளத்தில் இருத்தி மகிழ்கிறாள்;
கற்பனையிலேயே வாழ்ந்து,
எவரோடும் பழக
எண்ணாது,
உன்னாலே தனிமையாக்கப்பட்டாள்
உன் எண்ணங்களையே
உறுதியாகப் பற்றிக்கொண்டு, ஆனால்
உயிரோடுதான் இருக்கிறாள்;

எல்லா வித ஆபரணங்களும் அணிந்து
எடுப்பாய்த் தோன்றும் ராதை,
மலர்ந்த மலர்களிலெல்லாம் உன்னை
மட்டுமே கண்டு
மகிழ்ந்து, உன்னை மட்டும்
மனதார நினைத்து
உள்ளன்போடு
உருகி, நீ இல்லாது
உறக்காது
உனக்காகவே காத்துக்கிடக்கிறாள்,
உன் ராதை;

No comments:

Post a Comment