Wednesday, August 3, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 2

அழகான கண்ணன்

காதல் தேவா, உன்
கையாள் தானோ ராதை ?
வளைந்த அவள் புருவங்களே
வில்லோ ?
அழகாய் உடுருவிப் பார்க்கும்
அவள் பார்வையே
அம்போ ?
காதுகளின் ஓரத்தில் மலர்களாலான
மாலை அணிந்திருப்பாலே
வில்லின் நாணோ அவை ?
சத்தமில்லாது
சம்சரித்துக்கொள்ளும்
சாதுர்யம் நிறைந்தவர்கள் இருவரும்;

அழகான என்
ராதையே,
உன் ஒரு பார்வை
உடலெங்கும்
உடுருவிச்செல்லும்;
அங்கம் எல்லாவற்றையும்
ஆட்டிவிக்கும்;
வளைந்து நெளிந்து
வளர்ந்திருக்குமுன் கூந்தல்,
வெள்ளரி போன்றுன் இதழ்கள்,
அழகாய் அளந்து அமைக்கப்பட்ட
உன் மார்பகங்கள்;
ஐயகோ, எனைத் துன்புறுத்துகின்றன;

இதமாயுன் தீண்டல்கள்
இன்னும் என் நெஞ்சில்;
கனிந்த உன்
காதல் பார்வை
என்றும் தொடரும் என்னை;
தாமரை மணம்
ததும்புமுன் முகம்;
வெள்ளரி போன்றும் இதழிலிருந்து
வெளிப்படும் இனிமையான
வார்த்தைகள் இன்றும் மறையாது
என் நினைவில்;
ராதே உன்னால் இன்புறாத
எந்த பாகமும்
என்னிடமில்லை;
உனக்காகவே ஏங்கிக்
காத்திருக்கிறேன்;
இல்லாத ஒன்றையே
என்றும் எண்ணி
ஏங்கிக் கிடக்கும்
இதயம்
இருக்கும் உன்னை எண்ணி
இன்று ஏங்கிக் கிடக்கிறதே;

கண்ணன் தன்
குழலெடுத்து மெல்ல
வாசிக்கத் தொடங்கினான்;
மனதில் ராதையைக் கொண்டு,
அவள் அழகிய முகத்தை
மனக்கண்ணில் கண்டு
குழலிசையில் மயங்கி வந்த
கோபியர் பால் மனம் சிதையாது
ராதையை எண்ணியே
வாசித்துக் கிடந்தான் கண்ணன்;

No comments:

Post a Comment